பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2019-06-24
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இலங்கையில் இன மற்றும் சமய சகவாழ்வை உறுதி செய்வதற்காக அது பற்றி ஆராய்ந்து தமது சிபாரிசுகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் நான்காவது பிராந்திய மாநாடு, பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் மற்றும் அக்குழுவின் தலைவர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களது தலைமையில், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னால் ஜனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, சகல மதங்களினதும் வணக்கத்துக்குரிய சமயத் தலைவர்கள், தெரிகுழுவினை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் (குருணாகல் மாவட்டம்) அத்துடன் சிரேஷ்ட அரச அலுவலர்கள் மற்றும் அப்பிரதேசத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிவில் அமைப்புக்களின் பங்களிப்புடன் 2019 ஜூன் மாதம் 17ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 9.30 முதல் பி.ப. 2.30 வரையில் குருணாகல் கண்டியன் ரீச் ஹோட்டலில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
இத்தெரிகுழுவின் “இன மற்றும் சமய சகவாழ்வின் மூலம் நிலைபேறான இலங்கை” எனும் தொனிப்பொருளின் கீழ், இலங்கையில் இன மற்றும் சமய சகவாழ்வு தொடர்பான பிராந்திய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல தலைப்புக்கள் தொடர்பாக அன்றைய மாநாட்டின் போது விசேட தெரிவுக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
மேலும் குருணாகல் மாநாட்டின் பிரதான தலைப்பாகிய “பன்மைத்துவமே எமது பலம்” என்ற தலைப்பு தொடர்பாக பல விடயங்கள் அன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.
இன மற்றும் சமய சகவாழ்விற்கு உரியதாக தங்களினது அனுபவங்கள் தொடர்பான விடயங்களை முன்வைப்பதற்கு குருணாகல் மாவட்ட செயலாளர்கள், அரச அலுவலர்கள் மற்றும் சிவில் அமைக்களின் பிரதிநிதிகளுக்கு இம மாநாட்டின் போது வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தெரிகுழுவின் காலியில் நடைபெற்ற மூன்றாவது மாநாட்டின் போது முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் சில பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரதான மாணவர் தலைவர்களுக்கு இந்த மாநாட்டில் பங்குபற்ற வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டதோடு இன மற்றும் சமய சகவாழ்வு பற்றிய அனுபவங்கள் தொடர்பான விடயங்களை முன்வைப்பதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.
இத்தெரிகுழுவின் ஐந்தாவது பிராந்திய மாநாடு 2019 யூலை மாதம் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணியிலிருந்து பி.ப 2.30 மணி வரை வவுனியா மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ளது.
2025-11-17
தேசிய உயர்கல்வி கொள்கைக்கான வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உயர்கல்விப் பிரிவு தொடர்பான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தயாரிக்கப்பட்டுவரும் உயர்கல்விக் கொள்கை வரைபு மற்றும் அதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி.த சில்வா அவர்கள் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்தார். நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வரைபைத் தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை மதிப்பாய்வு செய்தல், இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வெளிப்புற பட்டப்படிப்பு திட்டங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக முந்தைய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-15
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கை உப குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி அவர்களினால் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 13) பாராளுமன்றத்தில் கூடியபோதே இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டது. பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், அரச சேவையில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாறியவர்களுக்கு, அந்த உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் சேவையாற்றிய பதவிக்குரிய ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இங்கு முன்மொழியப்பட்டது. அரசாங்க வேலையை விட்டு பாராளுமன்ற உறுப்பினராக வரும் ஒருவருக்கு, உறுப்பினர் ஓய்வூதியமும் கிடைக்காததால், இந்த விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன்படி தனது கவனத்தைச் செலுத்த எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார். சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வு நடைமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வினைத்திறன்காண் தடைதாண்டல் (efficiency bar) மதிப்பெண் வரம்புகளை பொதுச் சேவை ஆணைக்குழு மாற்றியமைத்ததன் காரணமாக அரச சேவைக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தச் சிக்கல் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் குழு கூட்டத்தில் கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், குழுவின் கௌரவ உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-11-15
முழுத் திட்டமும் 548 நாட்கள் தாமதமானதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளமை தெரியவந்தது துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் ஏற்றுக்கொள்வது மற்றும் அகற்றுவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஒட்டுமொத்த திட்டத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் கடந்த நவ. 13ஆம் திகதி கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டு 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டிருந்தது. அன்றையதினம் கலந்துரையாட முடியாத விடயங்கள் குறித்து மீண்டும் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 2021 நவம்பர் மாதம் நிறுவனமொன்றுக்கு ரூ.40,273 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொடுக்க ஆமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 2021 டிசம்பர் மாதம் இது தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதுடன், 2025 ஜனவரி 03ஆம் திகதி இத்திட்டம் பூர்த்திசெய்யப்படவேண்டியிருந்தது. எனினும், சில காரணங்களுக்காக கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தமையால் காலம் நீடிக்கப்பட்டு 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதனைப் பூர்த்திசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு தெரியவந்தது. இதனால் குறித்த அபிவிருத்தித் திட்டம் 548 நாட்கள் காலதாமதம் அடைந்திருப்பதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியதாகவும், இது தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை கோப் குழுவில் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை நிறைவடையும் என்றும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதிகாரசபை ஊழியர்களின் உணவுச் செலவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன், 2023 ஆம் ஆண்டு கோப் குழுவால் இது தொடர்பாக வழங்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் குழு சுட்டிக்காட்டியது. அதன்படி, செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விலைகளைக் குறைக்க போட்டிமுறையிலான கேள்விப்பத்திரங்கள் கோரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் கையகப்படுத்தி அப்புறப்படுத்துவது குறித்து கவனம் செலுத்திய குழுவின் தலைவர், நீதிமன்றத்தால் அப்புறப்படுத்துவதற்கும் கையகப்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்ட காணிகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அதன்படி, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சீதுவை ரந்தொலுவ விளையாட்டுக் கழகத்தின் பெயர் இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டுக் கழகம் எனப் பெயர்மாற்றம் செய்வது, குறித்த கழகத்தில் இணைந்த வீர வீராங்கனைகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களாக ஆட்சேர்ப்பு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, எஸ்.எம்.மரிக்கார், (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, எம்.கே.எம்.அஸ்லம், (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, திலின சமரகோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-11-15
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையும், 2023 ஆம் ஆண்டிற்கான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வருடாந்த அறிக்கையும் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க அவர்களின் தலைமையில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு 2025.11.13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது இடம்பெற்றது. சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை முதலாவதாக குழுவில் பரிசீலிக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த அந்த ஊடக வலையமைப்பின் பிரதானிகள், தற்போதைய நிதி நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்துக் குழுவில் தெரிவித்தனர். 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைக்கு அமைய, அந்த ஆண்டில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு 164 மில்லியன் ரூபாவைத் தாண்டிய நட்டத்தைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நட்ட நிலையை படிப்படியாகக் குறைத்து, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில வருடங்களாக அறவிடப்படவுள்ள, நிறுவனத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகைகளை அறவிடுவது சிறந்த மட்டத்தில் இருப்பதாக அவர்கள் குழுல் தெரிவித்தனர். சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களை அதிக விலைக்கு வாங்கியமை மற்றும் அந்தத் தொடர்களுக்கு மேலும் செலுத்த வேண்டிய பணம் குறித்துக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒளிபரப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பில் உள்ள பிரச்சினைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து 3 மாதங்களுக்குள் குழுவுக்கு அறிவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் குழுவில் பரிசீலிக்கப்பட்டது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிதி நிலைமை உட்பட அதன் செயற்பாடுகள் குறித்துக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். தற்போது அவர்கள் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளில் 48% அபராதத்துடன் செலுத்த வேண்டிய வரிகள் என்று அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் தற்போதுள்ள தொழில்நுட்ப உபகரணங்கள் மிகவும் பழமையான நிலையில் உள்ளதாகவும், சில மின் உபகரணங்களை ஊழியர்கள் உயிர் ஆபத்துடன் இயக்குவதாகவும் அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள காணிக்கான உரிமை இன்னும் கூட்டுத்தாபனத்திடம் இல்லை என்றும், எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு காணியின் உரிமை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திடம் இருப்பது முக்கியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்த இரு நிறுவனங்களையும் மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், முன்வைக்கப்பட்ட இந்த விடயங்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இந்தக் குழு கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் முனீர் முலாபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks







