07

E   |   සි   |  

பாராளுமன்ற பெண் பிரதிநிதித்துவத்தின் வரலாறு

1931 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை பாராளுமன்றத்தில் பெண்கள் சேவையாற்றி வருவதுடன் அடுத்தடுத்து வந்த அனைத்துப் பாராளுமன்றங்களிலும் அவர்கள் இன்றுவரை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். அரசுப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் பிரதிநிதி கௌரவ (திருமதி) அடெலீன் மொலமுரே ஆவார் என்பதுடன் இவர் அரசுப் பேரவையின் இரு உறுப்பினர்களான, கௌரவ ஜே. எச். மீதெனிய அவர்களது மகளும் கௌரவ அல்பிரட் பிரான்சிஸ் மொலமுரே அவர்களின் மனைவியுமாவார்.

பாராளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைவானதாக இருந்தபோதிலும், அவர்கள் பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். இரண்டு பெண்கள் பிரதம அமைச்சர்களாக இருந்துள்ளதுடன் அதில் ஒருவர் இலங்கை ஜனாதிபதியாகுமளவிற்கு உயர்ந்திருக்கிறார். முன்னாள் இலங்கைப் பிரதம அமைச்சரான காலஞ்சென்ற மறைந்த கௌரவ எஸ்.டபிளியு.ஆர்.டீ. பண்டாரநாயக்காவின் பாரியாரான கௌரவ (திருமதி) சிறிமாவோ பண்டாரநாயக்க 1960 ஜுலை 21 அன்று உலகின் முதலாவது பெண் அரச தலைவியாகினார். கௌரவ (திருமதி) சிறிமாவோ பண்டாரநாயக்கவின் மகளான கௌரவ (திருமதி) சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இலங்கையின் முதலாவது பெண் அரச தலைவியாகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகித்த கௌரவத்தினைப் பெற்றுள்ளார்.

ஒரு பெண் பிரதம அமைச்சரைத் தொடர்ந்து நேரடியாக மற்றொரு பெண் பிரதம அமைச்சர் பதவிக்கு வந்ததும் பெண் பிரதம அமைச்சர் ஒருவரையும் பெண் ஜனாதிபதி ஒருவரையும் ஒரு நாடு சமகாலத்தில் கொண்டிருந்தமையும் இதுவே முதல் தடவையாகும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

பாராளுமன்றத்தின் முதல் முஸ்லிம் தேசிய பெண் உறுப்பினர் (திருமதி) பேரியல் அஷ்ரப் ஆவார். இவர், 2000.10.10 அன்று பாரளுமன்றத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பின்னர் அவர் இலங்கையின் முதலாவது முஸ்லிம் தேசிய பெண் அமைச்சரானார்.

இலங்கையின் 15 ஆவது பிரதம அமைச்சரான கௌரவ தினேஷ் சந்திர ரூபசிங்க குணவர்தன அவர்கள், முன்னாள் பெண் பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ (திருமதி) குசுமாசிறி குணவர்தன அவர்களின் புதல்வராவார்.

இலங்கையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவங்கள் பற்றிய விபரங்களைக் கீழுள்ள அட்டவணை காட்டுகின்றது.

இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் (WPC) என்பது பல்வேறு அரசியல் கட்சிகள், புவியியல் அமைவிடங்கள், இன மற்றும் மத குழுக்களைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே குறிக்கோளின் கீழ் – பெண்களை வலுவூட்டுவதுடன் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை ஒழித்தல் - ஒன்றுசேர்க்கும் ஒரு தனித்துவமான பாராளுமன்றப் பொறிமுறையாகும் என்பதுடன் இலங்கையில் பாலினச் சமத்துவத்தை அடைவதற்கான சட்டம் மற்றும் கொள்கை சார்ந்த விடயங்களுக்காகப் பரிந்துரைக்கும் அதே நேரம் பாலினம் தொடர்பான மிக உயர்ந்த முடிவெடுக்கும் குழுவாகவும் செயல்படுகிறது.

அரசியலில் பெண்களின் பங்குபற்றுதலை அதிகரிப்பது, பெண்களின் உரிமைகள் மற்றும் பாலினச் சமத்துவத்தைப் பாதுகாப்பது, பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான மீறல்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளடங்கலாக பெண் தொழிலாளர்களின் நலனோம்புகை மீது கவனம்செலுத்துதல், சலுகை கிட்டாத பெண்கள் மற்றும் விதவைகள் மத்தியில் வறுமை ஒழிப்பு மற்றும் அவர்களுக்கு வாழ்க்கைத்தொழில் பயிற்சி மற்றும் வசதியளிப்பு ஆகியவற்றைப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உபாயமார்க்கங்கள் உள்ளடக்குகின்றன.

பெண்கள் மத்தியில் கல்வியை மேம்படுத்துதல், பெண்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்தல், அவர்களுக்குச் சட்ட உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குதல், பெண்களின் முன்னேற்றத்திற்கான சட்டங்களை இயற்றிப் பொதுவாக நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களித்தல் ஆகியவையும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உபாயமார்க்கங்களாகும்.

பாராளுமன்றத்தில் பரிந்து பேசுதல், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றப் பெண் உறுப்பினர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சிகள் மற்றும் மாநாடுகள் மற்றும் மாவட்ட மட்டங்களில் வெளிக்கள நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அதன் நடவடிக்கைகளை மேறகொள்கிறது.

கடந்த 14 வருடங்களாக ஒன்றியம் அரசியல் வேறுபாடுகள் எதுவுமின்றி மிகவும் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதுடன் நாட்டில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தவும் ஒன்றியத்தினால் இயலுமாகியுள்ளது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றப் பெண் உறுப்பினர்களுடனும் அரசாங்க அமைச்சுக்களுடனும் திணைக்களங்களுடனும் நிறுவனங்களுடனும் ஐக்கிய நாடுகள் முகவராண்மைகள், உள்ளூர் மற்றும் சர்வதேச சிவில் சமூக அமைப்புக்களுடனும் தனிப்பட்ட தொழில் வல்லுநர்களுடனும் ஒன்றியம் ஒரு வலையமைப்பையும் உருவாக்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களாகவுள்ள 12 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றியத்தின் உறுப்பினர்களாவர். ஆரம்பச் சுகாதாரப் பராமரிப்பு, தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்கள் ஒன்றியத்தின் தவிசாளராக இருக்கும் அதேவேளை திறன் விருத்தி, வாழ்க்கைத் தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் கௌரவ (டாக்டர்) (திருமதி) சீதா அரம்பேபொல மற்றும் கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன பா.உ. ஆகியோர் ஒன்றியத்தின் பிரதித் தவிசாளர்களாகக் கடைமையாற்றுகின்றனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks