அக்டோபர் 22, 2025
பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழற்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி; வரிக் கொள்கை, விவசாய உற்பத்தித்திறன் மற்றும் கடுமையான மதுவரிச் சேகரிப்புக் குறித்தும் அறிவுறுத்தல்
கௌவர பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (ஒக். 21) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில், 2025ஆம் ஆண்டு பெரும் போகத்தில் உள்நாட்டு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2451/10 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
விசேட பண்ட வரியை இரத்துச் செய்வது தொடர்பான திட்டம் இருந்தாலும் ஊழலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து அதைப் பயன்படுத்துகிறது என்பது இங்கு குறிப்பிடப்பட்டது. இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோவிற்கு ரூ. 10 (ரூ. 40 முதல் ரூ. 50 வரை) மற்றும் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் ஒரு கிலோவிற்கு ரூ. 20 (ரூ. 60 முதல் ரூ. 80 வரை) அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஓகஸ்ட் 26, 2025 முதல் அமலுக்கு வருகிறது.
இலங்கையின் வரிக்கட்டமைப்பு ஸ்திரமானதாகவும், எளிமையானதாகவும், வெளிப்படைத் தன்மை மிக்கதாகவும், வர்த்தகர்களால் கணிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வர்த்தக அமைச்சுக்கும், நிதி அமைச்சுக்கும் தற்போதுள்ள சட்டங்களை தேசிய வரிக் கொள்கையுடன் ஒருங்கிணைத்து விரிவாக நடைமுறைப்படுத்துமாறு குழு பரிந்துரைத்தது. 2027 முதல் 2030 வரையிலான கடுமையான நான்கு-வரிசை இறக்குமதி வரி திருத்தம் மற்றும் பாரா கட்டணங்களைப் படிப்படியாக நீக்குதல் உள்ளிட்ட முன்மொழியப்பட்ட வரி மறுசீரமைப்புக்களின் தாக்கங்கள் குறித்த முழுமையான மதிப்பீட்டை நடத்துமாறும் குழு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. 2026 மார்ச் மாத இறுதிக்கு முன்னர் இதன் முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் குழு வலியுறுத்தியது.
பருவகாலத்திற்கான வரிகளில் தங்கியிருக்காது, ஐந்து வருட காலத்திற்குள் ஒட்டுமொத்த பெரிய வெங்காயத்தின் அறுவடையை அதிகரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு, கமநலத் திணைக்களத்திற்குப் பரிந்துரைத்தது. "பிரபாஷ்வர" போன்ற ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் களஞ்சியங்கள் மூலம் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும் விவசாயிகளுக்கு விலைகளை நிலைப்படுத்துவதற்கும் எதிர்கால ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இது இருக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது.
மேலும், மதுவரி உற்பத்திக்கான வரிக் கொடுப்பனவுடன் தொடர்புபட்ட மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான (அத்தியாயம் 52) விதிகள் குறித்தும் குழு மதிப்பாய்வு செய்ததுடன் அனுமதி வழங்கியது. இந்தப் புதிய விதிகள் பணம் செலுத்தாதவர்களின் உற்பத்தியை 30 நாட்களின் பின்னரும், விநியோகத்தை 90 நாட்களின் பின்னரும் நிறுத்தும். புதிய விதிகள் 30 நாட்களுக்குப் பிறகு பணம் செலுத்தாதவர்களின் உற்பத்தியை நிறுத்தும் மற்றும் 90 நாட்களுக்குப் பிறகு அனைத்து விநியோகம் மற்றும் விற்பனையையும் நிறுத்தும். தற்பொழுது காணப்படும் முறைக்கு அமைய பணம் செலுத்தாதவர்களிடமிருந்து 3% வட்டி அபராதம் விதிக்கப்படுகின்றமை போதுமானதாக இல்லையென்பதால் குறித்த விதி பண அறவீட்டுக்கான அமுலாக்கத்தை வலுப்படுத்துவதாக அமைகின்றது.
இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர, அர்கம் இலியாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, சித்ரால் பெர்னாந்து, (சட்டத்தரணி) விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கேன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.எ.விமலேந்திரராஜா, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்ளைககள் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.