07

E   |   සි   |  

தேர்தலை நடத்துவதற்கான ஒட்டுமொத்த அதிகாரமானது, திருத்தப்பட்டவாறான பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையாளர் நாயகத்திற்கும், அரசியல் யாப்பின்‌ 17 ஆவது திருத்தத்தின்படி தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கும் உரித்தாக்கப்பட்டுள்ளது. இத் திருத்தமானது அதிகாரம். XIV என்று விபரிக்கப்பட்ட புதிய ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு தொகுதியை அரசியலமைப்புக்கு அறிமுகம் செய்துள்ளது. இவ்வதிகாரத்தின் உறுப்புரை 103(1) ஆனது அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணைக்குழுவொன்று இருத்தல் வேண்டும் என்ற ஏற்பாட்டைக் கொண்டுள்ளது. அத்துடன் அத்தகைய உறுப்பினருள் ஒருவரை அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின் பேரில் அவ்வாணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கவும் ஜனாதிபதி அதிகாரம் கொண்டவராய் இருக்கின்றார். அரசியலமைப்பிற்கான 17 ஆவது திருத்தத்தின் பிரிவு 27(2) இல் உள்ளடக்கப்பட்டுள்ள இடைக்கால ஏற்பாடொன்றின் பிரகாரம் தேர்தல்கள் ஆணையாளர் நாயகமானவர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் கடமைகளையும் தொடர்ந்து செயற்படுத்துகின்றார்.

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்குமான தேர்தலை நடத்தும் பொறுப்பு "தெரிவத்தாட்சி அலுவலர்" என நியமனம் செய்யப்பட்ட ஒரு நபரிடம் விடப்பட்டுள்ளது. இத் தெரிவத்தாட்சி அலுவலர் தனது தேர்தல் மாவட்டத்தினுள் வரும் ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையத்திற்கும் பொறுப்பாக இருக்குமாறு "தலைமை தாங்கும் உத்தியோகத்தரை" நியமனம் செய்வார் (பிரிவு 28).

வாக்குகளை எண்ணுதல் மற்றும் முடிவுகளைப் பிரகடனம் செய்தல் என்பன பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் VI ஆம் பகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலர் அம்மாவட்டத்தில் இடம்பெறும் வாக்கு எண்ணும் பணிக்குப் பொறுப்பாக இருப்பதுடன் ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலையத்திற்கும் பொறுப்பாயிருப்பதற்கென வாக்கெண்ணும் உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் கொண்டவராகவும் இருப்பார். (பிரிவு 49). இச் சட்டத்தின் 60 ஆம் பிரிவின்படி தெரிவத்தாட்சி அலுவலர் முடிவுகளைப் பிரகடனம் செய்வார்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks