E   |   සි   |  

2022-06-09

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அரசாங்கத்தின் வரி மறுசீரமைப்பைவிட வாகன இறக்குமதி நிறுத்தம், கொவிட் சூழ்நிலைகள் உள்ளிட்டவை நாட்டின் பொருளாதாரவீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன – நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல

2019 ஆம் ஆண்டின் இறுதியின் புதிய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வரி மறுசீரமைப்புக் காரணமாக ஏறத்தாழ 500 பில்லியன் ரூபா வருமானம் இழக்கப்பட்டது எனக் கூறுவது நியாயமற்றது. வாகன இறுக்குமதி இடைநிறுத்தம் உள்ளிட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையால் ஏற்பட்ட இழப்பு மற்றும் கொவிட் சூழலால் ஏற்பட்ட பொருளாதார சுருக்கம் என்பனவும் இந்த நிலைமைக்குக் காரணம் என நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று (08) நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ 2019 டிசம்பர் 04 ஆம் திகதி முன்வைத்த முதலாவது அமைச்சரவைப் பத்திரத்திற்கு இணங்க வரிக் கொள்கைகள் தொடர்பான இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக ஆட்டிகல மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் (கலாநிதி) பி.பீ.ஜயசுந்தர,  நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும், திறைசேரியின் முன்னாள் செயலாளருமான எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நாணயச் சபையின் முன்னாள் உறுப்பினர்கள், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்ஹ மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்போது அது தொடர்பில் பின்னணிக் குறிப்பு மற்றும் அறிக்கை காணப்பட வேண்டும் என்றும்,  குறிப்பிட்ட விடயத்துக்குப் பொறுப்பான அதிகாரிகளிடமே இதற்கான முழுப் பொறுப்பும் காணப்படுகிறது என்பதும் அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தது. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டதை ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றின் முறையான ஆய்வுக்குப் பின்னரே அத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கொவிட் தொற்றுநோய் சூழல் ஏற்படுவதற்கு முன்னர், அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நிதிக் கொள்கைத் தீர்மானங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து நாணயச் சபையின் தெளிவான முடிவுகள் அடங்கிய அறிக்கையை பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் யாராவது எழுத்துமூலம் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்களா என்றும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மேலும் கேள்வியெழுப்பியிருந்தனர்.

முன்னாள் செயலாளர் (கலாநிதி) பி.பீ.ஜயசுந்தர இதற்குப் பதிலளிக்கையில், இவ்வாறான தீர்மானங்கள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதாகவும், அதன் பின்னர் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அரசியல் அதிகாரிகளால் எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களில் குறைபாடுகள் காணப்படும்போது அப்போது பொறுப்புக்கூறவேண்டி அதிகாரிகள் என்ற ரீதியில் நிபுணர்கள் மற்றும் துறைசார் விற்பனர்களாக அவை குறித்து தமது உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறுவதற்கும் அதுபற்றி தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மீண்டும் வினவினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்ஹ குறிப்பிடுகையில், அரசாங்கத்தில் பொறுப்புக்களை வகிக்கும் அதிகாரிகள் அரசியல் செய்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு உரிய முறையில் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் கூறினார். அரசியல்வாதிகளால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தவாறாக இருக்கும்போது அவற்றைச் சுட்டிக்காட்டவேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு எனவும், அவ்வாறான தீர்மானங்களால் ஏற்படக்கூடிய பிரதிபலன்களுக்கு அரசியல்வாதிகள் மாத்திரம் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களில் நாடு சரியான பாதையில் பயணிக்கவில்லை என்பதுடன், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வரை தாம் அறிந்திருக்கவில்லை என்றும், அரசியல் அதிகாரிகளின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டே கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டன எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது  என்றும் நந்தலால் வீரசிங்ஹ மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான கொள்கைத் தீர்மானங்களால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடமும், அப்போதைய அரசியல் அதிகாரிகளிடமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்தபோதும் எவரும் அவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை என இங்கு கலந்துகொண்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உழைக்கும்போது செலுத்தும் வரியை (PAYE Tax)  நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்தினால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வாறு வரியைக் குறைத்தமையால் 12.5 வீதமாகக் ஆகக் காணப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் 8.7 வீதமாகக் குறைந்தது என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அத்துடன், மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் தொடர்பாடல்களை அதிகரிப்பதற்கு உரிய நடைமுறைகளை உருவாக்கி நாடு தொடர்பில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது உரிய வகையில் செயற்படுமாறும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் கூடவிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர, அமைச்சர் கௌரவ நளின் பெர்னாந்து, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) நாளக கொடஹேவா, கௌரவ. எம்.ஏ.சுமந்திரன், கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ காமினி வலேபொட, கௌரவ அனுப பஸ்குவர், கௌரவ விஜித ஹேரத், கௌரவ பிரமித பண்டார தென்னகோன், கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ இசுறு தொடங்கொட மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

1

3 4

6



தொடர்புடைய செய்திகள்

2025-02-16

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம்

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் இன்று (14) பாராளுமன்றத்தில் கூடிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே  இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், வரையறுக்கப்பட்ட தொலைக் கல்வி நிலையத்தின் 2021 மற்றம் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையும் இங்கு ஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-02-13

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர்

சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள துறைமுகங்களை புனரமைத்தல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சு கவனம் - குழுவின் தலைவர்   இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர்  ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் (பெப். 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர்   ரத்ன கமகேவும் கலந்துகொண்டார். அதற்கமைய, இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழகத்துடனும் இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இந்நாட்டு மீனவர்களைப் பாதித்துள்ள இந்தப் பிரச்சினைக்கு முரண்பாட்டு வழியிலல்லாமல் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்துடன், சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்தல் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு உரையாற்றிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை  விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கமைய, மீன்களை விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய  முடியும் எனத் தெரிவித்தார். சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையா நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அதற்கமைய, நுகர்வோர் எளிதாக சமைக்கும் வகையில், மீன் வகைகளை பொதி செய்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் காணப்படும் கடற்றொழில் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் டைனமைட்டைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், நன்னீர் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நாட்டின் துறைமுகங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்களை புனரமைப்பதில் அமைச்சு  அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குழுவின் தலைவர்  தெரிவித்தார். அத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான கடற்றொழி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை என்பனவும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


2025-02-13

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கௌரவ பிரதமர் தலைமையில் எதிர்காலத் செயற்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியது

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 2025.02.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அவசியம் தொடர்பில் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்தது. பணியிடங்களில் பாலியல் வன்முறையை ஒழித்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) இல்லாமல் செய்வது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மார்ச் 8ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலீ குணசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கலாநிதி கெளஷல்யா ஆரியரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, தீப்தி வாசலகே, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, அம்பிகா சாமிவெல் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-02-07

அரசாங்க சேவையில் தேவையான கொள்கை மாற்றத்தை அடையாளம் காண்பதற்காக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் 08 பேரைக் கொண்ட விசேட உபகுழு

உபகுழுவின் தலைவர் பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத்   அரசாங்க சேவையில் தேவையான கொள்கை மாற்றத்தை அடையாளம் காண்பதற்காகப் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் எட்டுப் பேரைக் கொண்ட விசேட உபகுழுவை அமைக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அறிவுறுத்தல் வழங்கினார். பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (பெப். 05) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த உபகுழு அமைக்கப்பட்டது. கௌரவ பிரதியமைச்சர் பி.ருவன் செனரத் அவர்களின் தலைமையில் இந்த உபகுழு அமைக்கப்பட்டிருப்பதுடன், இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, அஜந்த கம்மெத்தெகே, தர்மப்பிரிய திசாநாயக்க, தினிந்து சமன், (சட்டத்தரணி) கீதா ஹேரத், மொஹமட் பைசல் மற்றும் லால் பிரேமநாத் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உபகுழுவின் ஊடாக அரசாங்க சேவைக்கான நியமனங்கள், போட்டிப் பரீட்சைகளை நடத்துதல், ஓய்வூ வழங்குதல் மற்றும் வெற்றிடங்கள் உள்ளிட்ட அரசாங்க சேவையிலுள்ள பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கைரீதியான மாற்றங்கள் குறித்துத் தேவையான விசாரணைகளை நடத்தி, அடையாளம் காணப்பட்ட முன்மொழிவுகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்வாறான  உபகுழுவொன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி முன்மொழிந்ததுடன், இதற்கு அமையவே குழுவின் தலைவர் இந்த உபகுழுவை நியமித்தார். அத்துடன், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்றங்களில் 8,435 பேரின் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தற்பொழுத பணியாளர் மதிப்பாய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி, இறுதி அறிக்கை 2025 மார்ச் 31ஆம் திகதி கிடைக்கப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நியமனங்களுக்குத் தேவையான தரவுகளை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சில திட்டங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் சேவைகள் உறுதிப்படுத்தப்படாது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கிராம சேவர்களின் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks