பார்க்க

E   |   සි   |  

2022-09-26

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மே 09 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசேட குழுவின் அறிக்கை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்

  •  ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து குற்றவாளிகளை அழைத்துவருவதில் காணப்படும் சட்டரீதியான சிக்கல்களை நீக்குவது தொடர்பான கட்டளைக்கும் அனுமதி

 

மே 09ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த தினங்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறையான சம்பவங்கள் தொடர்பான விசேட குழுவின் அறிக்கை கடந்த 08ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை மற்றும் பராளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய கூட்டத்தொடருக்கான பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்துக்குத் தலைமைதாங்கிய போதே இராஜாங்க அமைச்சர் அண்மையில் (23) இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் களடற்படைத் தளபதி அட்மிரல் ஒஃப்த ஃபிளீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் விமானப்படைத் தளபதி மார்ஷல் ஒஃப்த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்னாயக (ஓவ்வுபெற்ற) ஆகியோரை உள்ளடக்கிய குழு இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்திருப்பதாகவும், பாதுகாப்புத் துறையில் ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் எதிர்காலத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

மே 09ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த தினங்களில் இந்நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பில் குறைபாடுகள் ஏதும் ஏற்பட்டிருந்ததா என்றும், இவற்றுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக எடுத்துள்ள சட்ட நடவடிக்கைகள் யாவை என்பது தொடர்பிலும் உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தபோதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன இங்கு தெரிவித்தார்.

அத்துடன், இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள மீள ஒப்படைத்தல் ஒப்பந்தம் தொடர்பான கட்டளை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கும் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு இரு நாட்டுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து குற்றவாளிகள் உள்ளிட்ட கைதுசெய்யப்பட வேண்டிய நபர்களை இந்நாட்டுக்குள் விரைவில் அழைத்துவரும்போது ஏற்படுகின்ற சட்ட ரீதியான தடைகளை நீக்குவது இதன் நோக்கமாகும்.

வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு கடத்தப்படும் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்தல், பொய்யான பிரசாரங்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட் பாதுகாப்பு விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. குழுவின் உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர, கௌரவ (மேஜர்) பிரதீப் உதுகொட உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்க அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

5 1

2 4

 



தொடர்புடைய செய்திகள்

2025-11-17

தேசிய உயர்கல்வி கொள்கை வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி அலுவல்ககள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவில் ஆராய்ப்பட்டது

தேசிய உயர்கல்வி கொள்கைக்கான வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உயர்கல்விப் பிரிவு தொடர்பான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தயாரிக்கப்பட்டுவரும் உயர்கல்விக் கொள்கை வரைபு மற்றும் அதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி.த சில்வா அவர்கள் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்தார். நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வரைபைத் தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை மதிப்பாய்வு செய்தல், இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வெளிப்புற பட்டப்படிப்பு திட்டங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக முந்தைய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-15

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்படும் தாமதம் குறித்து கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது

முழுத் திட்டமும் 548 நாட்கள் தாமதமானதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளமை தெரியவந்தது துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் ஏற்றுக்கொள்வது மற்றும் அகற்றுவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது   கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஒட்டுமொத்த திட்டத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் கடந்த நவ. 13ஆம் திகதி கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டு 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டிருந்தது. அன்றையதினம் கலந்துரையாட முடியாத விடயங்கள் குறித்து மீண்டும் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 2021 நவம்பர் மாதம் நிறுவனமொன்றுக்கு ரூ.40,273 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொடுக்க ஆமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 2021 டிசம்பர் மாதம் இது தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதுடன், 2025 ஜனவரி 03ஆம் திகதி இத்திட்டம் பூர்த்திசெய்யப்படவேண்டியிருந்தது. எனினும், சில காரணங்களுக்காக கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தமையால் காலம் நீடிக்கப்பட்டு 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதனைப் பூர்த்திசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு தெரியவந்தது. இதனால் குறித்த அபிவிருத்தித் திட்டம் 548 நாட்கள் காலதாமதம் அடைந்திருப்பதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியதாகவும், இது தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை கோப் குழுவில் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை நிறைவடையும் என்றும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதிகாரசபை ஊழியர்களின் உணவுச் செலவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன், 2023 ஆம் ஆண்டு கோப் குழுவால் இது தொடர்பாக வழங்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் குழு சுட்டிக்காட்டியது. அதன்படி, செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விலைகளைக் குறைக்க போட்டிமுறையிலான கேள்விப்பத்திரங்கள் கோரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் கையகப்படுத்தி அப்புறப்படுத்துவது குறித்து கவனம் செலுத்திய குழுவின் தலைவர், நீதிமன்றத்தால் அப்புறப்படுத்துவதற்கும் கையகப்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்ட காணிகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அதன்படி, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சீதுவை ரந்தொலுவ விளையாட்டுக் கழகத்தின் பெயர் இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டுக் கழகம் எனப் பெயர்மாற்றம் செய்வது, குறித்த கழகத்தில் இணைந்த வீர வீராங்கனைகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களாக ஆட்சேர்ப்பு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, எஸ்.எம்.மரிக்கார், (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, எம்.கே.எம்.அஸ்லம், (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, திலின சமரகோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-11-15

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வருடாந்த அறிக்கைகள் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையும், 2023 ஆம் ஆண்டிற்கான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வருடாந்த அறிக்கையும் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பரிசீலனை செய்யப்பட்டன. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்க அவர்களின் தலைமையில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு 2025.11.13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது இடம்பெற்றது. சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை முதலாவதாக குழுவில் பரிசீலிக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த அந்த ஊடக வலையமைப்பின் பிரதானிகள், தற்போதைய நிதி நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்துக் குழுவில் தெரிவித்தனர். 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைக்கு அமைய, அந்த ஆண்டில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு 164 மில்லியன் ரூபாவைத் தாண்டிய நட்டத்தைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த நட்ட நிலையை படிப்படியாகக் குறைத்து, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில வருடங்களாக அறவிடப்படவுள்ள, நிறுவனத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகைகளை அறவிடுவது சிறந்த மட்டத்தில் இருப்பதாக அவர்கள் குழுல் தெரிவித்தனர். சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களை அதிக விலைக்கு வாங்கியமை மற்றும் அந்தத் தொடர்களுக்கு மேலும் செலுத்த வேண்டிய பணம் குறித்துக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒளிபரப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பில் உள்ள பிரச்சினைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து 3 மாதங்களுக்குள் குழுவுக்கு அறிவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் குழுவில் பரிசீலிக்கப்பட்டது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிதி நிலைமை உட்பட அதன் செயற்பாடுகள் குறித்துக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். தற்போது அவர்கள் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளில் 48% அபராதத்துடன் செலுத்த வேண்டிய வரிகள் என்று அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் தற்போதுள்ள தொழில்நுட்ப உபகரணங்கள் மிகவும் பழமையான நிலையில் உள்ளதாகவும், சில மின் உபகரணங்களை ஊழியர்கள் உயிர் ஆபத்துடன் இயக்குவதாகவும் அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள காணிக்கான உரிமை இன்னும் கூட்டுத்தாபனத்திடம் இல்லை என்றும், எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு காணியின் உரிமை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திடம் இருப்பது முக்கியம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்த இரு நிறுவனங்களையும் மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், முன்வைக்கப்பட்ட இந்த விடயங்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இந்தக் குழு கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் முனீர் முலாபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-11-15

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கை உப குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி அவர்களினால் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது.  பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 13) பாராளுமன்றத்தில் கூடியபோதே இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டது. பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், அரச சேவையில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாறியவர்களுக்கு, அந்த உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் சேவையாற்றிய பதவிக்குரிய ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இங்கு முன்மொழியப்பட்டது. அரசாங்க வேலையை விட்டு பாராளுமன்ற உறுப்பினராக வரும் ஒருவருக்கு, உறுப்பினர் ஓய்வூதியமும் கிடைக்காததால், இந்த விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன்படி தனது கவனத்தைச் செலுத்த எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார். சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வு நடைமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வினைத்திறன்காண் தடைதாண்டல் (efficiency bar) மதிப்பெண் வரம்புகளை பொதுச் சேவை ஆணைக்குழு மாற்றியமைத்ததன் காரணமாக அரச சேவைக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தச் சிக்கல் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் குழு கூட்டத்தில் கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், குழுவின் கௌரவ உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks