பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-11-23
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடிய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சுயாதீன விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைப்பது உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபு குறித்து நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் (நவ. 21) கவனம் செலுத்தியது.
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடியைத் தடுப்பதற்கு உரிய நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கி அதற்குத் தேவையான அதிகாரத்தை வழங்கும் பொறிமுறையை உருவாக்கத் தவறியமையாலேயே, நாட்டில் இடம்பெறுகின்ற அனைத்து இலஞ்ச, ஊழல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்களும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மீது சுமத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபு குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன குழு முன்னிலையில் விளக்கமளித்தார். இந்த சட்டவரைபில் முன்மொழியப்பட்டுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடியதாக இருப்பதுடன், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு தடவை ஆணைக்குழு தனது முன்னேற்றம் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்களாக நீதி, தடயவியல் கணக்காய்வு, பொறியியல், சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திர சேவைகள், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் 20 வருடத்துக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டவர்களை நியமிப்பதற்கும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது. ஆணையாளர்கள் அரசியலமைப்புப் பேரவையின் அனுமதியுடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்கள். அத்துடன், இந்த ஆணைக்குழுவுக்கான நிதி ஒதுக்கீடு என்பன நேரடியாகப் பாராளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக சட்டத்தரணி ஜயமான்ன குறிப்பிட்டார்.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த பிரகடனங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அது தொடர்பான விடயங்களைக் கையாழ்வதற்கும் தனியானதொரு இயக்குனரகமொன்றை அமைப்பதற்கும் இந்த வரைபில் முன்மொழியப்பட்டிருப்பதுடன், அரசாங்கத் துறையில் உள்ள நிறைவேற்று அதிகாரிகளுக்கு அப்பால் ஊழல், இலஞ்சம் இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படும் துறைகளில் உள்ளவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த பிரகடனத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒழுங்குவிதியை வெளியிட முடியும். அரசாங்கத்தின் முக்கியமான திணைக்களங்கள் இந்த அலுவலகத்துடன் ஒன்லைன் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விசாரணைகளை இலகுவாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத் துறையில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகள் மாத்திரமன்றி தனியார் துறையில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகள் மற்றும் விளையாட்டுத் துறையில் இடம்பெறுகின்ற இலஞ்ச, ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் குறித்தும் இந்தச் சட்டமூலத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உத்தேச சட்டமூலம் தொடர்பில் ஜனநாயக ரீதியில் கலந்துரையாடல்களை நடத்தி உரிய திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
இதேவேளை, குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் பற்றியும் இக்குழுவில் அமைச்சர் விளக்கமளித்தார். முறையான நடவடிக்கையின் கீழ் சாதாரண வாடகை மற்றும் வெளியேற்றும் வழக்கு நடவடிக்கைகளின் போது ஏற்படுகின்ற சட்ட தாமதத்தைக் கட்டுப்படுத்தி குறுகிய காலத்திற்குள் குத்தகை கொடையாளருக்கு நிவாரணம் வழங்குவது இச்சட்டமூலத்தின் நோக்கம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குத்தகை கால எல்லையைத் தாண்டி குத்தகை வளவுகளில் தங்கியிருக்கும் குத்தகை குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கு முறையான நடவடிக்கையின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, மேற்படி வளவுகள் வாடகை சட்டத்தின் கீழ் நிர்வாகிக்கப்படுகின்றனவா இல்லையா என்பதைக் கவனத்தில் கொள்ளாது வழக்குகளை நிறைவுசெய்ய பல வருடங்கள் செல்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் குத்தகை கால எல்லையின் இறுதியில் குத்தகைக்குப் பெற்றுள்ளவர் குறித்த வளவிலிருந்து வெளியேறுவதை நிராகரித்துள்ள போதிலும், யாராயினுமொரு குத்தகை கொடையாளி ஆதனத்தைக் குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உத்தேச சட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், 2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 12ஆம் திகதிய 2301/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டளையும் இங்கு ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சாமர சம்பத் தசநாயக, கௌரவ காதர் மஸ்தான், கௌரவ டி.பி.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ அநுர பிரியதர்ஷனயாப்பா, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ ஏ.எம்.எம்.அதாவுல்லா, கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி, கௌரவ டி.வீரசிங்ஹ, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம்.எஸ்.தௌபீக், கௌரவ கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, நீதி அமைச்சின் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இதில் சமூகமளித்திருந்தனர்.
2025-07-28
மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன. கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-07-28
உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-28
பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-21
பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர். பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks