பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-11-23
செய்தி வகைகள் : குழு செய்திகள்
கடந்த இரண்டு கிரிக்கட் போட்டிகளிலும் தொடரின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாமிக கருணாரத்ன கிரிக்கட் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் அவரை தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்காமை தொடர்பில் கிரிக்கட் தேர்வுக்குழுவிடம் எழுத்துமூல விளக்கமொன்றை கோருமாறு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்க அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இலங்கை கிரிக்கட் அணிக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் போது மதசார் குழுவொன்றுக்கு சொந்தமான வீரர்களை மாத்திரம் தேர்ந்தெடுப்பதாக ஒரு கருத்துக் காணப்படுவதாகவும், கடந்த காலங்களில் திறமைகளை வெளிக்காட்டிய கிரிக்கட் வீரர் சாமிக கருணாரத்னவைத் தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்காமை குறித்த மதக் கொள்கைக்கு இணங்காமையே காரணம் என ஒரு கருத்து இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்கவின் தலைமையில் அண்மையில் (நவ. 22) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
கடந்த உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் அனுசரணையில் வெளிநாடு சென்ற அதிகாரிகள் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் என இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வசதிகளுடனும் ஒரு நாளைக்கு 800 டொலர் நிதி ஒருவருக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் அல்லாத தரப்பினரும் இந்த வசதியின் கீழ் சுற்றுலாவில் கலந்துகொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
அதேபோன்று, T20, T10 மற்றும் LPL போட்டிகளை மேற்கொள்ளும் போது நிதிப் பயன்பாடு தொடர்பில் முறையான ஒழுங்குபடுத்தலொன்று விளையாட்டு அமைச்சின் தலையீட்டில் நடைபெற வேண்டும் எனவும் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
பெல்வூட் நுண்கலைக் கல்லூரியை பெல்வூட் ஈஸ்தடிக் அகடமியாக NVQ 6 சர்வதேச அங்கீகாரத்துடன் சான்றிதழ் வழங்க அபிவிருத்தி செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தற்பொழுது காணப்படும் பாடங்களுக்கு மேலதிகமாக நடிப்பு, மாறுவேடம், தொலைக்காட்சி மற்றும் சினிமா தயாரிப்பு தொழிநுட்பம் போன்ற பாடங்களையும் புதிதாக இணைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்கான அனைத்துத் தொழிநுட்ப உபகரணங்களுடன் கூடிய கலையரங்குத் தொகுதியொன்றை நிர்மாணித்து 2023 இல் அதனை ஹொலிவூட் மற்றும் பொலிவூட் நிலைமைக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாவதும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இங்கு, பெல்வூட் நிறுவனத்தின் மாணவர்கள் தற்பொழுது முகங்கொடுக்கும் சிக்கல்கள் பல காணப்பட்டதாகவும், விசேடமாக முழுநேர அதிபர் இல்லாமை, உணவுப் பிரச்சினை, போக்குவரத்து சிக்கல்கள் தொடர்பில் அமைச்சரினால் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் உறுப்பினர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
பெல்வூட் நுண்கலைக் கல்லூரி அமைந்துள்ள 50 ஏக்கர் காணியில் உள்ள 4 மாடிக்கட்டடம் 2015 - 2019 காலப்பகுதியில் இருந்த தலைவரினால் உடைத்து அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் விரைவாகக் கண்டறிந்து அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
இலங்கையில் காணப்படும் சர்வதேச தரம் வாய்ந்த ஒரே ஒரு ஹொக்கி விளையாட்டரங்கின் மைதானத்தை முறையாகப் பராமரிக்காமை காரணமாக உரிய தரத்தில் இல்லாமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அதனைப் புனரமைத்து ஹொக்கி விளையாட்டுக்காக பேணுவதன் அவசியம் குறித்து உறுப்பினர்கள் இதன்போது கருத்துத் தெரிவித்தனர். 50% நிதிப் பங்களிப்பை இலங்கை ஏற்பதன் அடிப்படையில் ஆசிய ஹொக்கி சம்மேளனத்தினால் அதனை அபிவிருத்தி செய்ய இணங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோன்று, தியகம விளையாட்டரங்கின் செயற்கை ஓடுபாதை சேதமடைந்துள்ளமை குறித்தும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், அதனால் சுகததாச விளையாட்டரங்கு அல்லாமல் பயிற்சி பெறுவதற்கு ஓடுபாதையொன்று இல்லை என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளக விளையாட்டரங்கு முறையாகப் பராமரிக்கப்படாமையினால் மழை காலத்தில் நனைவதால் சேதமடைந்துள்ளமை பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. ஜப்பானிய உதவி மற்றும் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தைப் புனரமைப்பு செய்வதற்கு ஜப்பானிய தூதரகத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் குறிப்பிட்டார். அதேபோன்று, இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஈட்டப்படும் வருமானத்தை அதன் பராமரிப்புக்குப் பயன்படுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபைகள் செயற்படாமையால் மாகாண மற்றும் பிரதேச விளையாட்டுக்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பிலும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டதுடன் அது தேசிய ரீதியில் விளையாட்டு வீரர்கள் உருவாகுவதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதனால் இது தொடர்பிலும் அமைச்சரின் கவனத்தை செலுத்துமாறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். நாடு பூராகவும் காணப்படும் பல்வேறு விளையாட்டு சம்மேளனங்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சினால் ஆரம்பிக்க வேண்டும் எனவும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டு சங்கங்களை குழுவில் அழைத்து கலந்துரையாடுவது தொடர்பிலும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை எடுக்குமாறு குழுவின் தலைவர் குழுவின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ ரோஹன திசாநாயக்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, காவிந்த ஜயவர்தன, நலின் பண்டார, குணதிலக ராஜபக்ஷ, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, ஜகத் சமரவிக்ரம, வீரசுமன வீரசிங்க, சம்பத் அத்துகோரல, சிந்தக்க மாயாதுன்ன, வருண பிரியந்த லியனகே, மொஹமட் முசம்மில், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2025-07-28
மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன. கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-07-28
உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-28
பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-21
பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர். பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks