E   |   සි   |  

2023-01-09

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் கருத்துத் தொடர்பில் கோப் குழு கடுமையான அதிருப்தி

  • ஜனாதிபதிக்கு அறிவிக்க முடிவு
  • சபாநாயகரிடம் முறைப்பாடு
  • பராளுமன்றத்தில் விசேட அறிக்கை
  • எதிர்வரும் 17ஆம் திகதி அமைச்சின் செயலாளரை குழு முன்னிலையில் மீண்டும் அழைக்கத் தீர்மானம்

 

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோபா குழு) விசேட கூட்டம் அதன் தலைவர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் (ஜன. 05) நடைபெற்றது. இதில் கீழ்வரும் விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

  1. கோப் குழுவின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது மற்றும் குழுவின் வேலைகளில் அதன் உறுப்பினர்களை தீவிரமாக ஈடுபடுத்துவது என்ற எதிர்பார்ப்புடன் நான்கு உபகுழுக்களுக்கு 12 உறுப்பினர்கள் நியமனம்.
  2. 2023ஆம் ஆண்டில் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட வேண்டிய மற்றும் தற்பொழுது அழைக்கப்பட்டு பின்தொடர்புகளை மேற்கொள்ள வேண்டிய நிறுவனங்கள் யாவை என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டது. இதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் வழிகாட்டலின் கீழ் செயற்பட கோப் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு களப்பயணம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
  3. கௌரவ பிரதமர் தலைமையில் 2022 டிசம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற “தேசிய உற்பத்தித்திறன் விருது” உத்தியோகபூர்வ நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயகார அவர்களினால் கணக்காய்வாளர் நாயகத்தின் செயற்பாடுகள் மற்றும் கோப் குழுவின் அதிகாரம் சவாலுக்கு உட்படுத்தப்படும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துப் பற்றி கலந்துரையாடல்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயகார அவர்களினால் கணக்காய்வாளர் நாயகத்தின் மற்றும் கோப் குழுவின் அதிகாரங்களை சவாலுக்கு உட்படுத்தப்படும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் கோப் குழுவுக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவை அமைச்சர் என்ற ரீதியில் அவர் மேற்குறிப்பிட்ட கருத்தைத் தெரிவித்திருந்த போதிலும், அவர் குறிப்பிட்டதைப் போன்று பாராளுமன்றத்தின் நிதி முகாமைத்துவத்தை பலப்படுத்த பாராளுமன்ற முறைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு தொடர்பில் நிலையியற் கட்டளைக்கு அமைய தமக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மீறப்படவோ அல்லது அவ்வாறு செயற்பட எவ்விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கவில்லையென்றும் கணக்காய்வாளர் நாயகத்தினால் குழுவுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கணக்காய்வாளர் நாயகத்துக்கு அரசியலமைப்பு மற்றும் எழுதப்பட்ட சட்டங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் கடமைகளை நடைமுறைப்படுத்தும்போது செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் அரச துறையினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் பாராளுமன்றத்தின் நிதி நிர்வாகம் தொடர்பான எதிர்பார்ப்புக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது கண்காணிக்கப்பட்டிருப்பதாகவும் கணக்காய்வாளர் நாயகத்தினால் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறாக, இவ்விடயம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பின்வரும் முன்மொழிவுகளும் தீர்மானங்களும் குழுவினால் முன்வைக்கப்பட்டன.

  1. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் கருத்து பிழையான முன்னுதாரணமாக அமைந்திருப்பதுடன், கோப் குழுவை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்திருப்பதால் இது தொடர்பில் குழு கடும் அதிருப்தியை வெளியிட்டது. இது குறித்து கணக்காய்வாளர் நாயகம் மற்றும் அவருடைய பணியாட்தொகுதியிடம் குழுவின் கவலையைத் தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது.
  2. இந்தக் கருத்துத் தொடர்பில் கௌரவ சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தல்.
  3. இந்தக் கருத்தின் ஊடாக சட்டவாக்க செயற்பாடுகளில் நிறைவேற்று அதிகாரம் தலையீடு செய்வது தொடர்பில் எதிர்ப்பினை வெளியிட்டு கௌரவ ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறியப்படுத்தல்.
  4. இதன் நகலை பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கு அனுப்புதல்.
  5. கடந்த கோப் குழுக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்குமாறும், எதிர்வரும் 17ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தல் மற்றும் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் செயலாளரை மீண்டும் வலியுறுத்தல்.
  6. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பில் கடந்த கோப் குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்ட விசேட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.
  7. அத்துடன் தற்பொழுது நிலவும் பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை அழைப்பது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக நிதி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ சாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ நளின் பண்டார, கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத்.சி தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ சாணக்கியன் ராசமாணிக்கம், கௌரவ ராஜிகா விக்ரமசிங்ஹ, கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே மற்றுமு் கௌரவ (கலாநிதி) சரித ஹேரத் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4



தொடர்புடைய செய்திகள்

2025-02-16

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம்

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் இன்று (14) பாராளுமன்றத்தில் கூடிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே  இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், வரையறுக்கப்பட்ட தொலைக் கல்வி நிலையத்தின் 2021 மற்றம் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையும் இங்கு ஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-02-13

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கௌரவ பிரதமர் தலைமையில் எதிர்காலத் செயற்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியது

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 2025.02.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அவசியம் தொடர்பில் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்தது. பணியிடங்களில் பாலியல் வன்முறையை ஒழித்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) இல்லாமல் செய்வது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மார்ச் 8ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலீ குணசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கலாநிதி கெளஷல்யா ஆரியரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, தீப்தி வாசலகே, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, அம்பிகா சாமிவெல் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-02-13

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர்

சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள துறைமுகங்களை புனரமைத்தல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சு கவனம் - குழுவின் தலைவர்   இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர்  ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் (பெப். 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர்   ரத்ன கமகேவும் கலந்துகொண்டார். அதற்கமைய, இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழகத்துடனும் இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இந்நாட்டு மீனவர்களைப் பாதித்துள்ள இந்தப் பிரச்சினைக்கு முரண்பாட்டு வழியிலல்லாமல் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்துடன், சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்தல் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு உரையாற்றிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை  விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கமைய, மீன்களை விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய  முடியும் எனத் தெரிவித்தார். சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையா நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அதற்கமைய, நுகர்வோர் எளிதாக சமைக்கும் வகையில், மீன் வகைகளை பொதி செய்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் காணப்படும் கடற்றொழில் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் டைனமைட்டைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், நன்னீர் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நாட்டின் துறைமுகங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்களை புனரமைப்பதில் அமைச்சு  அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குழுவின் தலைவர்  தெரிவித்தார். அத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான கடற்றொழி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை என்பனவும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


2025-02-07

அரசாங்க சேவையில் தேவையான கொள்கை மாற்றத்தை அடையாளம் காண்பதற்காக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் 08 பேரைக் கொண்ட விசேட உபகுழு

உபகுழுவின் தலைவர் பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத்   அரசாங்க சேவையில் தேவையான கொள்கை மாற்றத்தை அடையாளம் காண்பதற்காகப் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் எட்டுப் பேரைக் கொண்ட விசேட உபகுழுவை அமைக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அறிவுறுத்தல் வழங்கினார். பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (பெப். 05) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த உபகுழு அமைக்கப்பட்டது. கௌரவ பிரதியமைச்சர் பி.ருவன் செனரத் அவர்களின் தலைமையில் இந்த உபகுழு அமைக்கப்பட்டிருப்பதுடன், இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, அஜந்த கம்மெத்தெகே, தர்மப்பிரிய திசாநாயக்க, தினிந்து சமன், (சட்டத்தரணி) கீதா ஹேரத், மொஹமட் பைசல் மற்றும் லால் பிரேமநாத் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உபகுழுவின் ஊடாக அரசாங்க சேவைக்கான நியமனங்கள், போட்டிப் பரீட்சைகளை நடத்துதல், ஓய்வூ வழங்குதல் மற்றும் வெற்றிடங்கள் உள்ளிட்ட அரசாங்க சேவையிலுள்ள பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கைரீதியான மாற்றங்கள் குறித்துத் தேவையான விசாரணைகளை நடத்தி, அடையாளம் காணப்பட்ட முன்மொழிவுகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்வாறான  உபகுழுவொன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி முன்மொழிந்ததுடன், இதற்கு அமையவே குழுவின் தலைவர் இந்த உபகுழுவை நியமித்தார். அத்துடன், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்றங்களில் 8,435 பேரின் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தற்பொழுத பணியாளர் மதிப்பாய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி, இறுதி அறிக்கை 2025 மார்ச் 31ஆம் திகதி கிடைக்கப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நியமனங்களுக்குத் தேவையான தரவுகளை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சில திட்டங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் சேவைகள் உறுதிப்படுத்தப்படாது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கிராம சேவர்களின் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks