பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-01-12
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்கும்போது வெளிப்படைத் தன்மையுடன் அதன் பயனாளிகளை அடையாளம் காண்பதற்கான பட்டியலைத் தயாரிப்பதற்கான தகவல்களை சேகரிப்பதற்கான பணியை சமுர்த்தி அதிகாரிகள் நிராகரித்திருப்பதன் ஊடாக சிக்கல் நிலைமை ஏற்பட்டிருப்பதாக அண்மையில் (ஜன. 10) நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது.
2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் 2302/23ஆம் இலக்க வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளை அனுமதிப்பதற்காக அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் கூடியபோதே இந்த விடயம் புலப்பட்டது.
சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகளைச் செலுத்தும்போது ஊழல் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவு என்றும், இதற்கான பொறுப்பு நலன்புரி நன்மைகள் சபைக்கு உள்ளதாகவும் இங்கு மேலும் தெரியவந்தது. இதற்கமைய இந்தத் தகவல்களைச் சேகரிக்கும் பணிக்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காக இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஒழுங்குவிதி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜேரத்ன குறிப்பிடுகையில், பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய விண்ணப்பதாரிகளால் வழங்கப்பட்ட விபரங்களுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்போது சட்டத்தின் 21 மற்றும் 22வது பிரிவுகளுக்கு அமைய தனது வேலையை இழக்கவேண்டிய நிலை இருப்பதாகவும், இந்தப் பிரிவைத் திருத்தும் வரையில் இது தொடர்பான களப்பணிகளிலிருந்து விலகுவதாக சமுர்த்தி, கிராமசேவகர், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.
இந்த 21ஆம் 22ஆம் பிரிவுகளின் ஊடாக பிழையான தகவல்கள் உள்ளீடு செய்யும் அதிகாரிகள் தண்டனைக்கு உட்படுவார்கள் என்றும், இந்தப் பிரிவு திருத்தப்படும்வரை இந்தத் தகவல்களை சேகரிப்பதை நிராகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி வழங்கிய குழு, நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் அவசரமாக கலந்துரையாடி ஒரு தீர்வை எட்டுமாறும் குழு அறிவுறுத்தியது. இந்த தரவு சேகரிப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வது தொடர்பான முடிவுகளை மாற்று நடவடிக்கையை பின்பற்றி எடுக்குமாறும் குழு பரிந்துரைத்துள்ளது.
அரசாங்க நலன்களைப் பெறுவதற்கான பயனாளிகள்/அதற்குத் தகுதியான குடும்பங்களை ஆரம்ப விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது அண்மையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அத்துடன், நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்குச் சென்று இரண்டாம் நிலைத் தகவல்களை சேகரிக்க கையடக்கத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவித்தார்.
சமுர்த்தி பயனாளிகளில் 40% தகுதி அற்றவர்கள் என உலக வங்கியின் கணக்கெடுப்பில் வெளிப்பட்டிருப்பதாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய தகுதியில்லாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கி, அதில் ஒரு சதவீதத்தைத் தமக்காகப் பெற்றுக்கொள்ளும் ஊழல் அதிகாரிகள் இருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்த நலன்புரித் திட்டத்தை உரிய வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்வதற்கு சரியான தரவுகளைக் கொண்ட ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதன் அவசியம் குறித்து குழுவில் வலியுறுத்தப்பட்டது.
நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்கும்போது தேசிய அடையாள அட்டையைக் கட்டாயப்படுத்துவது அவசியம் என்றும் குழு பரிந்துரைத்தது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருக்கும் பின்னணியில் தேசிய அடையாள அட்டையை சகல குடிமக்களுக்கும் பெற்றுக் கொடுக்க முடியாது எனக் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லையென்றும், மோசடிகளைத் தடுப்பதற்கு இது முக்கியமான முடிவாக இருக்கும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
எனவே, இந்த ஆவணத்தை தயாரிப்பதில் தாமதம் ஏற்படுவதால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்பதால், ஊழல் மற்றும் மோசடி இல்லாத கலாசாரத்தை உருவாக்க இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.
இதன்படி, இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி வழங்கிய குழு, நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நலன்புரி நன்மைகள் சபையின் ஆகியோர் இது தொடர்பில் அவசரமாக கலந்துரையாடி தீர்வொன்றை எட்டுமாறும் குழு அறிவுறுத்தியது.
மேலும், இவ்விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிவிக்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்தார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ சஹான் பிரதீப் விதான மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-11-18
அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 12) பாராளுமன்றத்தில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். அஸ்வெசும திட்டத்திற்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அந்த அளவுகோல்களின் அடிப்படையில் பொருத்தமான சலுகைகளை வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இத்திட்டத்தில், 22 அளவுகோல்களின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த அளவுகோல்களை செயல்படுத்தும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்காக மாத்திரம் பயனாளிகளைப் பதிவுசெய்வதற்குத் தற்பொழுது அனுமதிக்கப்பட்டாலும், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது தகவல்களைக் கட்டமைப்பொன்றில் (Social Registry) பதிவுசெய்வதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், பதிவுசெய்த பின்னர் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதன் மூலம், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று குழு சுட்டிக்காட்டியது. முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கு அஸ்வெசும திட்டத்தை அவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு விரிவாகக் கலந்துரையாடியது. தேசிய அடையாள அட்டை இல்லாததால் நலன்புரித் திட்டத்தின் உதவிகளைப் பெற முடியாத தகுதியுள்ள நபர்கள் தற்போது இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாததால் அந்தச் சலுகைகளைப் பெற முடியாத சில குழுக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அதன்படி, முடிந்தவரை அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதன் மூலம் நலன்புரித்திட்ட உதவிகளை வழங்குவதன் நோக்கத்தை அடைவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது. இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த, கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, கே.சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹன பண்டார, சத்துர கலபதி, திலின சமரகோன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-17
தேசிய உயர்கல்வி கொள்கைக்கான வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உயர்கல்விப் பிரிவு தொடர்பான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தயாரிக்கப்பட்டுவரும் உயர்கல்விக் கொள்கை வரைபு மற்றும் அதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி.த சில்வா அவர்கள் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்தார். நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வரைபைத் தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை மதிப்பாய்வு செய்தல், இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வெளிப்புற பட்டப்படிப்பு திட்டங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக முந்தைய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-15
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கை உப குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி அவர்களினால் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 13) பாராளுமன்றத்தில் கூடியபோதே இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டது. பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், அரச சேவையில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாறியவர்களுக்கு, அந்த உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் சேவையாற்றிய பதவிக்குரிய ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இங்கு முன்மொழியப்பட்டது. அரசாங்க வேலையை விட்டு பாராளுமன்ற உறுப்பினராக வரும் ஒருவருக்கு, உறுப்பினர் ஓய்வூதியமும் கிடைக்காததால், இந்த விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன்படி தனது கவனத்தைச் செலுத்த எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார். சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வு நடைமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வினைத்திறன்காண் தடைதாண்டல் (efficiency bar) மதிப்பெண் வரம்புகளை பொதுச் சேவை ஆணைக்குழு மாற்றியமைத்ததன் காரணமாக அரச சேவைக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தச் சிக்கல் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் குழு கூட்டத்தில் கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், குழுவின் கௌரவ உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-11-15
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பல அமைச்சுக்களுக்கான முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை ஆராய்வதற்காகத் துறைசார் மேற்பார்வைக் குழு இரு நாட்கள் கூடியது பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியது. பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது சிலிசிலி பைகளுக்கு கட்டணம் அறவிடும் தீர்மானம் தொடர்பில் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் பொலிஎதிலின் பயன்பாடு குறைக்கப்படுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது இந்தப் பைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை முடிவு செய்த அதிகாரிகள் யார் என்பதையும் குழுவின் தலைவர் வினவினார். சிலிசிலி பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை என இங்கு ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், குறித்த அமைச்சுக்களின் கீழ் உள்ள பல நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இக்கூட்டத்தில், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்கானி, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, ஜே.சி.அலவத்துவல, (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க மற்றும் உபுல் கித்சிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



