பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-08-23
செய்தி வகைகள் : குழு செய்திகள்
உணவுப் பாதுகாப்பு (விவாசயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி) தொடர்பான கொள்கை வரைபு தொடர்பான அறிக்கை தேசிய பேரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
தேசிய பேரவை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன தலைமையில் 2023.08.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷவினால் உணவுப் பாதுகாப்பு (விவாசயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி) தொடர்பான கொள்கை வரைபொன்றை தயாரிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அசங்க நவரத்ன தலைமையில் செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்ததுடன், அந்த செயற்குழுவினால் சம்பந்தப்பட்ட அறிக்கை தேசிய பேரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன குறிப்பிடுகையில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை உப குழுவொன்றும் காணப்படுவதாகத் தெரிவித்தார். அதனால் அந்த உப குழுவுடன் கலந்துரையாடி அதன் கருத்துக்களை இதற்காக பெற்றுக்கொள்வது பொருத்தமானது என பிரதமர் தெரிவித்தார். அதற்கமைய, அமைச்சரவை உப குழுவின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இந்தக் கொள்கை வரைபு தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அசங்க நவரத்ன குறிப்பிடுகையில், பெரும் அர்ப்பணிப்புடன் அந்தந்த பங்குதாரர்களின் கருத்துக்களைப் பெற்று இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், பழைமையான சட்டங்கள் திருத்தப்பட வேண்டிய விதம் தொடர்பிலும் இந்த வரைபில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகையில், தேசிய பேரவையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களைச் செயற்படுத்துவது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த கொள்கை வரைபை தயாரிப்பதற்காக குறித்த செயற்குழு 10 மாதங்கள் கூடியுள்ளது. நீர்ப்பாசன அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, கடற்றொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு, வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வடமேல்மாகாண விவசாய அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அமைச்சுக்களின் செயலாளர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உணவு மற்றும் விவசாய அமைப்பு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவுத் திணைக்களத்தின் கருத்துக்களைப் பெற்று இந்தக் கொள்கை வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய கொள்கை ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அமைச்சரவையின் செயலாளரிடம் வினவுவது பொருத்தமானது எனவும் பிரதமர் இதன்போது முன்மொழிந்தார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்ஸ்டன் பிரணாந்து, கௌரவ ரவுப் ஹக்கீம், கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா, கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன், கௌரவ எம். ராமேஸ்வரன் மற்றும் கௌரவ சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-11-22
2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டிய 8 அறிக்கைகளுக்கும் அனுமதி நிதி அமைச்சின் கீழ் முக்கிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் 2025 செப்டெம்பர் மாதம் வரையில் மொத்த நிதிச் செயற்பாடுகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 20) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் இது பற்றி ஆராயப்பட்டது. இதற்கமைய உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை மதுவரித் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாகரிகள் ஒவ்வொரு நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்த விளக்கத்தை முன்வைத்தனர். அத்துடன், அரசாங்க பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி குழுவில் கலந்துகொண்ட அதிகாரிகள், 2026-2030 ஆண்டு காலப்பகுதிக்கான இடைக்கால படுகடன்முகாமைத்துத்துக்கான வழிகாட்டல் மற்றும் 2026-2030 ஆண்டு காலப்பகுதிக்கான படுகடன் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். இலங்கை முதலீட்டுச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் தமது நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். நேரடியான வெளிநாட்டு முதலீடு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 827 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி வெளிநாட்டு முதலீடுகளாகப் பெறப்பட்டுள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதன்படி, எதிர்வரும் ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடு தொடர்ந்து மேம்படுவதை உறுதிசெய்ய இலங்கை முதலீட்டுச் சபையும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குழு வலியுறுத்தியது. அத்துடன், 2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டிய 8 அறிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2025-11-22
எதிர்வரும் காலத்தில் அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து விரிவாகக் கலந்துரையாடின. அந்தக் குழுக்களின் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர மற்றும் சமன்மலீ குணசிங்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் (நவ. 20) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் நீதி அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர். இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இந்த உத்தேச சட்டமூலம் தொடர்பான முதலாவது சட்டமூலம் 2024 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தனர். அதன்போது, சட்டமூலம் மீது உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கமைய உயர் நீதிமன்றத்தினால் உள்வாங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்ட திருத்தங்கள், சட்டமூலத்தின் குழு நிலையின் போது மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சினால் உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் கொள்கை ரீதியாக உள்வாங்கப்படவேண்டிய ஏனைய திருத்தங்கள் சேர்க்கப்பட்டு புதிய சட்டமூலம் வரைபு செய்யப்பட்டு வர்த்தமானி தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தை பத்தாவது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தின் ஊடாக இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவுதல், பணக் கடன் வழங்கும் தொழில் மற்றும் நுண்நிதித் தொழில் என்பவற்றை ஒழுங்குபடுத்தல், அவற்றின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் மற்றும் 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் பணிப்பாளர்கள் சபையின் அமைப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பணிப்பாளர்கள் சபையின் அமைப்பில் நுண்நிதித் தொழில் வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவர் உள்வாங்கப்படாமை பிரச்சினைக்குரியது என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர சுட்டிக்காட்டினார். விசேடமாக நுண்நிதித் தொழிற்துறைக்கு ஒழுங்குபடுத்தல் இல்லாததால் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் இருப்பதன் முக்கியத்துவத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அல்லது மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் பிரதிநிதி ஒருவர் அல்லது அந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் இந்தப் பணிப்பாளர் சபையில் அங்கத்தவராக இருப்பது பொருத்தமாகும் என கௌரவ உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது. அத்துடன், இந்த வரைபு ஆவணத்தில் உள்ளடங்கப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எந்தவொரு ஒழுங்குபடுத்தலும் இன்றி நுண்நிதித் தொழிற்துறை கீழ் மட்டத்தில் செயற்படுவதால் பாரியதொரு சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குழு, அந்த சமூக நெருக்கடியையும் பாதிப்பையும் தவிர்ப்பதே இதன் குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்வரும் காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டமூலத்துக்குத் தேவையான திருத்தங்களை உள்வாங்குமாறு அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தியதுடன், சம்பந்தப்பட்ட திருத்தங்களை சட்டமூலத்தின் குழு நிலையின் போது முன்வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
2025-11-21
மனிதர்கள் என்ற ரீதியில் மனிதர்களுக்குச் சேவை செய்யக் கூடிய சிறந்த மனம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எமது அரசியலின் நோக்கமாகும் என பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். பிரதேச அரசியலில் பிரதிநிதித்துவம் இல்லாத பெண்கள் குழுக்களை அரசியல் ரீதியாக உள்ளடக்கப்படுவதை அதிகரிப்பது குறித்து கடந்த நவ. 17ஆம் திகதி கூடிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் வாழும் சிறப்புக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேட்புமனு செயல்முறையை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு நாட்கள் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான உலகளாவிய செயற்பாட்டுக்கான நாட்களாக அனுஷ்டிக்கப்படும் நிலையில், இதற்கு சமாந்தரமாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இங்கு கலந்துரையாடப்பட்டது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சமன்மலி குணசிங்ஹ, கிருஷ்ணன் கலைச்செல்வி, ஏம்.எம்.எம்.எம் ரத்வத்த, (சட்டத்தரணி) ஹிருணி விஜேசிங்க, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) கீதா ஹேரத், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2025-11-20
இலங்கையிலுள்ள அனைத்துக் காணிகளையும் துல்லியமாக அளந்து, விரைவாக வரைபடமாக்குவது தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்க நிறுவனங்கள், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் சபைகள் ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்காக, சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் கடந்த நவ. 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த நில அளவைத் திணைக்களத்தின் அதிகாரிகள், தற்போதுள்ள கணிப்புகளின்படி இலங்கையில் 16.5 மில்லியன் நிலப் பிரிவுகள் (land plots) இருக்குமென்றும், அவற்றில் 2.5 மில்லியன் நிலப் பிரிவுகள் அளக்கப்பட்டு, வரைபடமாக்கப்பட்டுள்ளன என்றும் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, எஞ்சியுள்ள நிலப் பிரிவுகளை கூடிய விரைவில் அளந்து, வரைபடமாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் குழுவுக்கு அழைத்து, எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டன. மேலும், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் சட்டபூர்வமான ஒப்பந்தங்கள் இன்றி நிலங்களை குத்தகைக்கு விடுவதால் ஏற்பட்டுள்ள குத்தகைவரி நிலுவைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்காலத்தில் முறையான குத்தகை ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு நிலங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர் குத்தகைவரி நிலுவைகளை அறவிடுவதற்கான செயன்முறையைத் தயாரித்து, நிலுவைகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய ஓர் அறிக்கையை குழுவில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், சுசந்த குமார நவரத்ன, சுதத் பலகல்ல மற்றும் (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


