E   |   සි   |  

2023-11-01

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இலங்கையின் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டமொன்று தேவை - மகா சங்கத்தினர் உட்பட தொல்பொருள் துறை தொண்டு அமைப்புகளின் தலைவர்கள் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவிப்பு

  • இந்நாட்டின் தேசிய மரபுரிமையைப் பாதுகாப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன - பேராசிரியர் இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவிப்பு
  • இலங்கையிலுள்ள இடங்கள் உலக மரபுரிமைச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் எதுவும் தேசிய மரபுரிமைகளாக அறிவிக்கப்படவில்லை - தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர்
  • தேசிய மரபுரிமையைப் பாதுகாக்க தேசிய மரபுரிமை முகாமைத்துவ சட்டம்  தயாரிக்கப்பட வேண்டும் - தொண்டு அமைப்புகளின் தலைவர்கள் பாராளுமன்ற ஒன்றியத்தில் வலியுறுத்தல்

 

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் நான்காவது கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த சமரவீர தலைமையில் 2023.10.24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய இந்துராகரே தம்மரதன தேரர், பேராசிரியர் வணக்கத்துக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட தொல்பொருள் துறையில் தன்னார்வ ரீதியாக செயற்படும் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மதுகம செனெவிருவன், வைத்தியர் வசந்த பண்டார, முன்னாள் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் பண்டார திசாநாயக்க, வைத்தியர் காமினி ஜயவீர, மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய, சுனில் சந்திரகுமார மற்றும் எஸ்.கே. சேனாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தேசிய மரபுரிமைகளை இனங்காணல், பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் மூலோபாய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்காக இந்தப் பாராளுமன்ற ஒன்றியம் செயற்படுகின்றது.

கடந்த கூட்டங்களில், அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடலுக்காக இந்த ஒன்றியத்தின் முன்னிலையில் அழைக்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் இலங்கையின் தேசிய மரபுரிமைகளை அடையாளம் காணுதல், பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தொடர்பான முன்மொழிவை தயாரித்து வருவதாகவும் ஒன்றியத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

அதற்கமைய, அரச நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புக்களின் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகள் உள்ளடங்கிய இலங்கையின் தேசிய மரபுரிமைகளை அடையாளங்கண்டு பாதுகாத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதே இறுதி இலக்கு என தலைவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இலங்கையில் 8 இடங்கள் உலக மரபுரிமை  இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எதுவுமே தேசிய மரபுரிமை இடங்களாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். அதற்கமைய, இவ்வாறான செழுமையான வரலாற்றைக் கொண்ட இலங்கையின் தேசிய மரபுரிமைகளை இனங்கண்டு, பாதுகாத்து முகாமைத்துவம் செய்ய  வேண்டியதன் அவசியத்தை தலைவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான பெறுமதி வாய்ந்த தொல்பொருளியல்  பொருட்கள் இருப்பதாகவும் இதுவரை பதினேழாயிரம் தொல்பொருளியல் பொருட்கள் மாத்திரமே  பதிவாகியுள்ளதாகவும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முறையாக ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் வணக்கத்துக்குரிய இந்துராகாரே தம்மரதன தேரர் ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவித்தார். அதற்கமைய, அந்த அறிக்கைகளில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் ஒன்றியத்தின் முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்க தேசிய மரபுரிமை முகாமைத்துவ சட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். அதன்மூலம், இலங்கையின் தேசிய மரபுரிமைகளை முறையான வகையில் அடையாளம் காணவும், பாதுகாக்கவும் மற்றும் முகாமைத்துவம் செய்யவும் வாய்ப்பு ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான நோக்கத்திற்காக நிறுவப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் ஒன்றிணைந்த கண்காணிப்பு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தையும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் ஒன்றியத்தின் முன்னிலையில் வலியுறுத்தினர்.
 
அத்துடன், தொல்பொருளியல் சம்பந்தப்பட்ட தற்பொழுது காணப்படும் வழக்குகளை விரைவில் முடிவுக்குக்  கொண்டு வருவதன் முக்கியத்துவம் குறித்தும், அந்த வழக்குகளைப் பிரத்தியேக நீதிமன்றத்தின் மூலம் விசாரணை செய்து அவற்றை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியம் குறித்தும் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.

தொல்பொருளியல் திணைக்களத்தை அதன் வினைத்திறனற்ற நிலையிலிருந்து விடுவித்து மேலும் வினைத்திறனான நிறுவனமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் தொண்டு அமைப்புக்களின்  தலைவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைகழகங்களிலும் தொல்பொருளியல் துறையைக் கற்று வெளியாகும் பட்டதாரிகளை தகுதியான நிறுவனங்களில் அமர்த்துவதன் முக்கியத்துவம் குறித்தும், பாடசாலைக் கட்டமைப்பில் மாணவர்களுக்குத் தேசிய மரபுரிமைகளின் பெறுமதி மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய அறிவை வழங்குவதன் அவசியம் குறித்தும் ஒன்றியத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கான அறிவை பாடசாலைகள் மற்றும் தம்ம பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு, நாட்டின் தேசிய மரபுரிமையைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் இலங்கையின்  அபிமானத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த முடியும் என்றும், அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்ளுதல் மற்றும் இலங்கைப் பிரஜைகள் தமது நாட்டின் பெருமையை நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்தனர். நாடளாவிய ரீதியில் எந்தவொரு தொல்பொருளியல் பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்கு  உடனடியாகத் தெரிவிக்கக்கூடிய தொலைபேசி அழைப்பு நிலையமொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் தொண்டு அமைப்புக்களின் தலைவர்கள் வலியுறுத்தினர். தன்னார்வ பாதுகாப்பு கூட்டமைப்பை நிறுவுவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக  கிடைக்கும் பங்களிப்புக்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டன.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2025-06-02

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது - கோப் குழுவில் புலப்பட்டது

Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது, வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்திற்காக கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாததால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகியுள்ளது - கோப் குழு   2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) புலப்பட்டது.  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் 2024 ஆம் ஆண்டில் குடியகல்வு சங்கங்களின் 5,000 அங்கத்தவர்கள் கலந்துகொண்ட மாகாண மட்டத்திலான 3 கூட்டங்களுக்கான 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சித்தட்டத்துக்கு 63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களினாலும் வழங்கப்படும் சேவைகளை, அந்த சேவைகளைப் பெறுவோர் தமது வசிக்கும் பகுதிகளையே பெறும் வகையில் நாடு பூராகவும் நடத்தப்பட்ட Glocal Fair வேலைத்திட்டத்துக்கு 1,259 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக கோப் குழுவில் புலப்பட்டன.     இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2022 மற்றும் 2023 ஆம் நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகையை பரிசீலிப்பதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (மே 23) கூடிய போதே இந்த விடயங்கள் புலப்பட்டன. Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன், இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தில் 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 1,259 மில்லியன் ரூபாய் போன்ற பாரிய நிதி செலவு செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாறான நிதியை செலவிடுவதன் நோக்கங்களை அடைய முடிந்துள்ளதா என இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். அத்துடன்,  Glocal Fair வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், வர்த்தகக் கூடம் ஒன்றை ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் 5 இலட்சம் ரூபாவுக்கு வர்த்தகக் கூடம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் குழுவில் வினவப்பட்டது. எனினும் வினைத்திறனான வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்த இருந்த நிதி நோக்கம் அற்ற முறையாகத் திட்டமிடப்படாத வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் பாரிய நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்தை 5 வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய செயற்படுத்தியில்லை என்றும், அதனால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை என்றும் குழுவில் வெளிப்பட்டது. என்னினும், இலங்கை சமுர்த்தி அதிகாரசபை தற்போது அந்தத் தொகையை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இந்த வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் எத்தனை பேருக்கு சம்பந்தப்பட்ட கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று குழு அதிகாரிகளிடம் வினவியதுடன்,   அத்தகைய தரவு இல்லை என்று அவர்கள் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மீள் பரிசீலனை இடம்பெற்றில்லை எனத் தெரிவித்த குழுவின் தலைவர் ரடவிரு வீட்டுக் கடன் திட்டம் தொடர்பில் ஆரம்பம் முதல் தற்பொழுது வரையான தகவல்கள் அடங்கிய முழுமையான அறிக்கையொன்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். எவ்வாறாயினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகி செயற்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதுவரை 18 பில்லியனாக உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நிலையான வைப்பை மிகவும் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு திட்டமொன்று தயாரிக்கப்படுவதன் தேவை குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், செயற்பாட்டில் இல்லாத 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 5.1 பில்லியன் நிலுவை காணப்படும் குவைட் இழப்பீடு நிதியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகளிடம் குழு வினவியது. அதற்கமைய, அந்த நிதியத்தை பயன்படுத்தி வீட்டுப் பணிகளுக்காக வெளிநாட்டு செல்லும் பணியாளர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கும், பணியாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்பு தேடும் தொழிலாளர்கள் ஊடாக செய்த நிதி மோசடி குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வேலைவாய்ப்புக்காக முகவர்கள் மூலம் அல்லாமல் வெளிநாடு செல்லும் ஒவ்வொரு பணியாளர்களும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான பதிவுக்கட்டணத்தை பணியகத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், முகவர்கள் மூலம் வெளிநாடு செல்லும் போதும் அவர்களுக்கான பதிவுக்கட்டணம் பணியகத்துக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதில் 70% மீண்டும் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனத்துக்கு செலுத்தப்படுவதாக குழுவில் புலப்பட்டது. எனினும், சுயமாக செல்லும் பணியாளர்களை, முகவர்கள் மூலமாக செல்லும் பணியாளர்களாகக் காண்பித்து மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பில் கண்டறிய உப குழுவொன்றை நியமிப்பதற்கு குழுவின் தலைவர் தீர்மானித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அனுராத ஜயரத்ன, முஜிபுர் ரஹுமான், எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், (வைத்தியர்) எஸ். பவானந்தராஜா, சுஜீவ திசாநாயக்க, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், திலின சமரகோன், சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமன்த மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-05-28

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவு

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (மே 27) இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்திற்கான குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் முதலாவது அமர்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது. இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஏற்கனவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணங்கியிருந்தன. இதற்கமைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு கௌரவ அஜித் பி பெரேராவின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்மொழிந்ததுடன், அதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நீண்டகாலமாகக் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கான தீர்வுகளை உள்ளடக்கியதாக இந்தத் திருத்ததச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டதுடன் இதற்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படவேண்டியுள்ள பிரதான மாற்றங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்களான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, தனுஷ்க ரங்கனாத், அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2025-05-27

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவு

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகத் தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (மே 27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் நான்கு குழுக்களின் தலைமைப் பதவி ஆளும் கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்களின் பெயரை, கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க முன்மொழிந்ததுடன், இதனைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹசாரா லியனகே வழிமொழிந்தார். அத்துடன், இத்துறைசார் குழுக் கூட்டத்தில் 03.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ள தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் குறித்துக் கலந்துரையாடப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைய, ஜூன் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ளது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாசன கமகே, சட்டத்தரணி ஹசாரா லியனகே மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2025-05-26

பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் விலையில் திருத்தம்

பாராளுமன்ற நிறைவேற்றுத் தரம் மற்றும் நிறைவேற்றுத்தரம் அல்லாத பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் கட்டணத்தை திருத்துவதற்கு 2025 மே மாதம் 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவில் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு அக்குழுவின் கூட்டமொன்று கடந்த 2025.05.23 ஆம் திகதி குழுவின் தலைவர் சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்கான கட்டணத்தை 2025.06.01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பின்வருமாறு திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, நிறைவேற்றுத் தர அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 4,000 ரூபாவும், நிறைவேற்றுத்தரம் அல்லாத அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 2,500 ரூபாவும் அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்ற பொதுமக்கள் உணவகத்தில் உணவைப் பெற்றுக்கொள்ளும் கௌரவ உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடமிருந்து தற்பொழுது அறவிடப்படும் கட்டணத்தை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கும் குழு தீர்மானித்தது. இந்த கட்டணங்களைத் திருத்தம் செய்தல், பாராளுமன்ற பணியாளர்களுக்கு வழங்கும் செலவுகள் தொடர்பில் திறைசேரியினால் வழங்கப்பட்ட பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும். இந்த சபைக் குழு பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks