2023-11-03
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சேவையை விட்டுச் சென்றதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இந்நாட்டின் வைத்தியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களிடமிருந்து அரசாங்கத்துக்கு அறவிடப்படவேண்டிய தொகை தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான அறிக்கை வழங்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவினால் சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
சேவையை விட்டுச் சென்றதாக வைத்தியர்களின் பெயர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் முறை குறித்தும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் வினவப்பட்டது.
அரசாங்கக் கணக்குக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு 2023.10.31 ஆம் திகதி அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தc கலந்துரையாடல் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் பணியாளர்கள் முகாமைத்துவம் தொடர்பான கணக்காய்வுப் பத்திகளை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் உபகுழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். சேவையை விட்டுச் சென்ற வைத்தியர்களிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய பணத்தை அறவிடும் நடவடிக்கை திருப்திகரமற்ற மட்டத்தில் அமுல்படுத்தப்படுவதாக இதன்போது கணக்காய்வினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கமைய, வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் மீண்டும் இந்நாட்டில் பணிக்கு திரும்பாத போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டுமென தலைவர் வலியுறுத்தினார்.
இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், கணக்காய்வு மூலம் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களின் பிரகாரம், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை கடுமையாக்கியுள்ளதாகத் தெரிவித்தனர். அதற்கமைய, வைத்தியர் ஒருவர் பணிக்கு சமூகமளிக்காமல் சேவையை விட்டு விலகிய சந்தர்ப்பங்களில், வைத்தியர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது கையொப்பமிட்ட உத்தரவாதத் தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அது போதுமானதல்ல என ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள், ஒப்பந்தத்தை மீறியதற்காக அவர்களிடமிருந்து அறவிட வேண்டிய தண்டப்பணத்தை அறவிடுவது சரியாக இடம்பெறவில்லை எனவும் தற்பொழுது அந்தத் தண்டப்பணத்தை அறவிடுவதற்குத் தேவையான செயற்பாடுகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
அதற்கமைய, வைத்தியர்களுக்கு மாத்திரமன்றி அரச சட்ட திட்டங்களுக்கு இணங்காத ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கும் பொருந்தும் வகையில் முழு அரச சேவைக்கும் பொதுவான முறைமை தேவையென சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உப குழு முன்னிலையில் மேலும் கருத்துத் தெரிவித்தனர்.
பயிற்சியின் பின்னர் வைத்தியர்களாக பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதால், அவர்களுக்காக மாகாண சபைகளுக்கு அமைச்சினால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மீளப் பெறப்படாமை குறித்தும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கணக்காய்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். பயிற்சிக் காலம் முடிவடையும் போதே அவர்களை வைத்தியசாலைகளில் வைத்தியர்களாக நியமிக்க முடியுமானால் இந்த நிலைமை ஏற்படாது என குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைய, பயிற்சி மருத்துவர்களின் பயிற்சிக் காலம் முடிந்த பிறகு, அவர்களை வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களாக நியமிக்க வினைத்திறனான வேலைத்திட்டத்தை அமைக்குமாறு சுகாதார அமைச்சுக்கு கோபா உப குழு ஆலோசனை வழங்கியது.
இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், புதிய வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் போது தொழிற்சங்கங்கள் அழுத்தங்களை பிரயோகிப்பதாகத் தெரிவித்தனர். புதிய வைத்தியர்களுக்கு வழங்கும் நியமனங்களில் 80% கஷ்டப் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கும் நகர்ப்புற வைத்தியசாலைகளுக்கு 20% வீதமும் வழங்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். புதிய வைத்தியர்களை நியமிப்பதில் தொழிற்சங்கங்கள் இவ்வாறு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவர் 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வெளிநாட்டுப் பயிற்சிக்காக விடுமுறை அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் 8 மாதங்கள் இலங்கையிலேயே தங்கியிருந்து குறித்த வெளிநாட்டு பயிற்சி கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கணக்காய்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்
எவ்வாறாயினும், அமைச்சின் விசாரணைப் பிரிவினால் பரிந்துரையைப் பெறாமல் அமைச்சின் செயலாளரினால் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் குறித்த அதிகாரிக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை தயாரித்து குழுவிடம் வழங்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும், அமைச்சின் கீழுள்ள தாதியர் பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சிக்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட தாதியர் மாணவிகள் பயிற்சியை விட்டுச் சென்றமை காரணமாக அறவிடப்பட வேண்டிய பணம் பெறப்படாமை தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கணக்காய்வுத் திணைக்களம் கேள்வி எழுப்பியது. 1999 முதல் 2017 வரையான தரவுகளை முன்வைத்த கணக்காய்வு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காலப்பகுதிக்கான சரியான தகவல்கள் சுகாதார அமைச்சிடம் இல்லை என சுட்டிக்காட்டினர். அதற்கமைய, தற்போது பயிற்சியை கைவிட்டவர்கள், அறவிட வேண்டிய தொகை மற்றும் இதுவரை அறவிடப்பட்டுள்ள தொகை குறித்து ஒரு மாதத்திற்குள் உப குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உப குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வஜிர அபேவர்தன மற்றும் கௌரவ மஞ்சுளா திசாநாயக்க ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-06-02
Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது, வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்திற்காக கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாததால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகியுள்ளது - கோப் குழு 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) புலப்பட்டது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் 2024 ஆம் ஆண்டில் குடியகல்வு சங்கங்களின் 5,000 அங்கத்தவர்கள் கலந்துகொண்ட மாகாண மட்டத்திலான 3 கூட்டங்களுக்கான 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சித்தட்டத்துக்கு 63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களினாலும் வழங்கப்படும் சேவைகளை, அந்த சேவைகளைப் பெறுவோர் தமது வசிக்கும் பகுதிகளையே பெறும் வகையில் நாடு பூராகவும் நடத்தப்பட்ட Glocal Fair வேலைத்திட்டத்துக்கு 1,259 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக கோப் குழுவில் புலப்பட்டன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2022 மற்றும் 2023 ஆம் நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகையை பரிசீலிப்பதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (மே 23) கூடிய போதே இந்த விடயங்கள் புலப்பட்டன. Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன், இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தில் 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 1,259 மில்லியன் ரூபாய் போன்ற பாரிய நிதி செலவு செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாறான நிதியை செலவிடுவதன் நோக்கங்களை அடைய முடிந்துள்ளதா என இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். அத்துடன், Glocal Fair வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், வர்த்தகக் கூடம் ஒன்றை ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் 5 இலட்சம் ரூபாவுக்கு வர்த்தகக் கூடம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் குழுவில் வினவப்பட்டது. எனினும் வினைத்திறனான வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்த இருந்த நிதி நோக்கம் அற்ற முறையாகத் திட்டமிடப்படாத வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் பாரிய நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்தை 5 வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய செயற்படுத்தியில்லை என்றும், அதனால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை என்றும் குழுவில் வெளிப்பட்டது. என்னினும், இலங்கை சமுர்த்தி அதிகாரசபை தற்போது அந்தத் தொகையை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இந்த வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் எத்தனை பேருக்கு சம்பந்தப்பட்ட கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று குழு அதிகாரிகளிடம் வினவியதுடன், அத்தகைய தரவு இல்லை என்று அவர்கள் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மீள் பரிசீலனை இடம்பெற்றில்லை எனத் தெரிவித்த குழுவின் தலைவர் ரடவிரு வீட்டுக் கடன் திட்டம் தொடர்பில் ஆரம்பம் முதல் தற்பொழுது வரையான தகவல்கள் அடங்கிய முழுமையான அறிக்கையொன்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். எவ்வாறாயினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகி செயற்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதுவரை 18 பில்லியனாக உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நிலையான வைப்பை மிகவும் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு திட்டமொன்று தயாரிக்கப்படுவதன் தேவை குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், செயற்பாட்டில் இல்லாத 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 5.1 பில்லியன் நிலுவை காணப்படும் குவைட் இழப்பீடு நிதியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகளிடம் குழு வினவியது. அதற்கமைய, அந்த நிதியத்தை பயன்படுத்தி வீட்டுப் பணிகளுக்காக வெளிநாட்டு செல்லும் பணியாளர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கும், பணியாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்பு தேடும் தொழிலாளர்கள் ஊடாக செய்த நிதி மோசடி குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வேலைவாய்ப்புக்காக முகவர்கள் மூலம் அல்லாமல் வெளிநாடு செல்லும் ஒவ்வொரு பணியாளர்களும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான பதிவுக்கட்டணத்தை பணியகத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், முகவர்கள் மூலம் வெளிநாடு செல்லும் போதும் அவர்களுக்கான பதிவுக்கட்டணம் பணியகத்துக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதில் 70% மீண்டும் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனத்துக்கு செலுத்தப்படுவதாக குழுவில் புலப்பட்டது. எனினும், சுயமாக செல்லும் பணியாளர்களை, முகவர்கள் மூலமாக செல்லும் பணியாளர்களாகக் காண்பித்து மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பில் கண்டறிய உப குழுவொன்றை நியமிப்பதற்கு குழுவின் தலைவர் தீர்மானித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அனுராத ஜயரத்ன, முஜிபுர் ரஹுமான், எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், (வைத்தியர்) எஸ். பவானந்தராஜா, சுஜீவ திசாநாயக்க, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், திலின சமரகோன், சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமன்த மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-05-28
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (மே 27) இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்திற்கான குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் முதலாவது அமர்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது. இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஏற்கனவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணங்கியிருந்தன. இதற்கமைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு கௌரவ அஜித் பி பெரேராவின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்மொழிந்ததுடன், அதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நீண்டகாலமாகக் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கான தீர்வுகளை உள்ளடக்கியதாக இந்தத் திருத்ததச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டதுடன் இதற்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படவேண்டியுள்ள பிரதான மாற்றங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்களான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, தனுஷ்க ரங்கனாத், அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-05-27
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகத் தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (மே 27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் நான்கு குழுக்களின் தலைமைப் பதவி ஆளும் கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்களின் பெயரை, கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க முன்மொழிந்ததுடன், இதனைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹசாரா லியனகே வழிமொழிந்தார். அத்துடன், இத்துறைசார் குழுக் கூட்டத்தில் 03.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ள தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் குறித்துக் கலந்துரையாடப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைய, ஜூன் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ளது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாசன கமகே, சட்டத்தரணி ஹசாரா லியனகே மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2025-05-26
பாராளுமன்ற நிறைவேற்றுத் தரம் மற்றும் நிறைவேற்றுத்தரம் அல்லாத பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் கட்டணத்தை திருத்துவதற்கு 2025 மே மாதம் 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவில் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு அக்குழுவின் கூட்டமொன்று கடந்த 2025.05.23 ஆம் திகதி குழுவின் தலைவர் சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்கான கட்டணத்தை 2025.06.01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பின்வருமாறு திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, நிறைவேற்றுத் தர அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 4,000 ரூபாவும், நிறைவேற்றுத்தரம் அல்லாத அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 2,500 ரூபாவும் அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்ற பொதுமக்கள் உணவகத்தில் உணவைப் பெற்றுக்கொள்ளும் கௌரவ உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடமிருந்து தற்பொழுது அறவிடப்படும் கட்டணத்தை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கும் குழு தீர்மானித்தது. இந்த கட்டணங்களைத் திருத்தம் செய்தல், பாராளுமன்ற பணியாளர்களுக்கு வழங்கும் செலவுகள் தொடர்பில் திறைசேரியினால் வழங்கப்பட்ட பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும். இந்த சபைக் குழு பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.