பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-11-03
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சேவையை விட்டுச் சென்றதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இந்நாட்டின் வைத்தியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களிடமிருந்து அரசாங்கத்துக்கு அறவிடப்படவேண்டிய தொகை தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான அறிக்கை வழங்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவினால் சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
சேவையை விட்டுச் சென்றதாக வைத்தியர்களின் பெயர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் முறை குறித்தும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் வினவப்பட்டது.
அரசாங்கக் கணக்குக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு 2023.10.31 ஆம் திகதி அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தc கலந்துரையாடல் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் பணியாளர்கள் முகாமைத்துவம் தொடர்பான கணக்காய்வுப் பத்திகளை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் உபகுழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். சேவையை விட்டுச் சென்ற வைத்தியர்களிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய பணத்தை அறவிடும் நடவடிக்கை திருப்திகரமற்ற மட்டத்தில் அமுல்படுத்தப்படுவதாக இதன்போது கணக்காய்வினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கமைய, வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் மீண்டும் இந்நாட்டில் பணிக்கு திரும்பாத போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டுமென தலைவர் வலியுறுத்தினார்.
இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், கணக்காய்வு மூலம் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களின் பிரகாரம், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை கடுமையாக்கியுள்ளதாகத் தெரிவித்தனர். அதற்கமைய, வைத்தியர் ஒருவர் பணிக்கு சமூகமளிக்காமல் சேவையை விட்டு விலகிய சந்தர்ப்பங்களில், வைத்தியர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது கையொப்பமிட்ட உத்தரவாதத் தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அது போதுமானதல்ல என ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள், ஒப்பந்தத்தை மீறியதற்காக அவர்களிடமிருந்து அறவிட வேண்டிய தண்டப்பணத்தை அறவிடுவது சரியாக இடம்பெறவில்லை எனவும் தற்பொழுது அந்தத் தண்டப்பணத்தை அறவிடுவதற்குத் தேவையான செயற்பாடுகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
அதற்கமைய, வைத்தியர்களுக்கு மாத்திரமன்றி அரச சட்ட திட்டங்களுக்கு இணங்காத ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கும் பொருந்தும் வகையில் முழு அரச சேவைக்கும் பொதுவான முறைமை தேவையென சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உப குழு முன்னிலையில் மேலும் கருத்துத் தெரிவித்தனர்.
பயிற்சியின் பின்னர் வைத்தியர்களாக பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதால், அவர்களுக்காக மாகாண சபைகளுக்கு அமைச்சினால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மீளப் பெறப்படாமை குறித்தும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கணக்காய்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். பயிற்சிக் காலம் முடிவடையும் போதே அவர்களை வைத்தியசாலைகளில் வைத்தியர்களாக நியமிக்க முடியுமானால் இந்த நிலைமை ஏற்படாது என குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைய, பயிற்சி மருத்துவர்களின் பயிற்சிக் காலம் முடிந்த பிறகு, அவர்களை வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களாக நியமிக்க வினைத்திறனான வேலைத்திட்டத்தை அமைக்குமாறு சுகாதார அமைச்சுக்கு கோபா உப குழு ஆலோசனை வழங்கியது.
இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், புதிய வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் போது தொழிற்சங்கங்கள் அழுத்தங்களை பிரயோகிப்பதாகத் தெரிவித்தனர். புதிய வைத்தியர்களுக்கு வழங்கும் நியமனங்களில் 80% கஷ்டப் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கும் நகர்ப்புற வைத்தியசாலைகளுக்கு 20% வீதமும் வழங்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். புதிய வைத்தியர்களை நியமிப்பதில் தொழிற்சங்கங்கள் இவ்வாறு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவர் 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வெளிநாட்டுப் பயிற்சிக்காக விடுமுறை அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் 8 மாதங்கள் இலங்கையிலேயே தங்கியிருந்து குறித்த வெளிநாட்டு பயிற்சி கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கணக்காய்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்
எவ்வாறாயினும், அமைச்சின் விசாரணைப் பிரிவினால் பரிந்துரையைப் பெறாமல் அமைச்சின் செயலாளரினால் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் குறித்த அதிகாரிக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை தயாரித்து குழுவிடம் வழங்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும், அமைச்சின் கீழுள்ள தாதியர் பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சிக்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட தாதியர் மாணவிகள் பயிற்சியை விட்டுச் சென்றமை காரணமாக அறவிடப்பட வேண்டிய பணம் பெறப்படாமை தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடம் கணக்காய்வுத் திணைக்களம் கேள்வி எழுப்பியது. 1999 முதல் 2017 வரையான தரவுகளை முன்வைத்த கணக்காய்வு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காலப்பகுதிக்கான சரியான தகவல்கள் சுகாதார அமைச்சிடம் இல்லை என சுட்டிக்காட்டினர். அதற்கமைய, தற்போது பயிற்சியை கைவிட்டவர்கள், அறவிட வேண்டிய தொகை மற்றும் இதுவரை அறவிடப்பட்டுள்ள தொகை குறித்து ஒரு மாதத்திற்குள் உப குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உப குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வஜிர அபேவர்தன மற்றும் கௌரவ மஞ்சுளா திசாநாயக்க ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-07-28
பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-28
உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-28
மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன. கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-07-21
பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர். பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks