பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-03-20
செய்தி வகைகள் : குழு செய்திகள்
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் 363 நிறுவனங்களை அழைக்க முடியும் என்றாலும், 102 நிறுவனங்கள் குழுவின் முன் இதுவரை அழைக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அவரது தலைமையில் நேற்று (மார்ச் 19) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். குழுக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், கோப் குழுவின் நோக்கங்கள் மற்றும் குழுவின் இதுவரையான செயற்பாடுகள் குறித்து தலைவர் முழுமையான விளக்கமளித்தார். கோப் குழுவின் வரலாற்றில் புதிய தலைவர் ஒருவர் இவ்வாறு தெளிவுபடுத்துவது இதுவே முதல்முறை ஆகும்.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் இன்று கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்படி 27 வருடங்களில் இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம் 4 வருடங்களில் மாத்திரம் இலாபம் ஈட்டியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து நட்டமடைந்து வரும் பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 10 தேயிலை தொழிற்சாலைகளில் 7 தொழிற்சாலைகள் செயல்படாமல் இருப்பதும் தெரியவந்தது. ஆனால், செயலிழந்த தேயிலை தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கோ அல்லது குத்தகைக்கு விடுவதற்கோ கூட்டுத்தாபனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் தொடர்ச்சியான நட்டங்களுக்கு மூலதனப் பற்றாக்குறையே முதன்மைக் காரணம் என அதன் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அத்துடன், மூலதனம் இல்லாததால் உரம் மற்றும் அது சார்ந்த களைக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்தாததும் நட்டத்திற்கு காரணம் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். எவ்வாறாயினும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கு பிரதான காரணம் மூலதனப் பற்றாக்குறை மாத்திரமல்ல என குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியது. அதற்கமைய, பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் மிக அதிக ஊழியர் செலவு குறித்த தரவுகளை குழு சமர்ப்பித்ததுடன், இலங்கை பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் செலவு சுமார் 75% எனத் தெரியவந்தது.
மேலும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்கிய பின்னர் ஏனைய தரப்பினர் கையகப்படுத்தியமை தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீட்பதற்கு தேவையான சட்ட நடைமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், இலங்கை பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணிகளை உடனடியாக மீள் அளவீடு செய்யுமாறும், கூட்டுத்தாபனத்தினால் குத்தகை அடிப்படையில் இந்தக் காணி வழங்கப்பட்டுள்ளது, காணிகளை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் யார், ஒப்பந்தம் செய்யப்பட்ட நிதி, வரி அடிப்படையில் வழங்கப்பட்ட நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் என்பன உள்ளிட்ட விரிவான அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அத்துடன், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளாக 1.5 பில்லியன் செலுத்த வேண்டியுள்ளதாக இதன்போது தெரியவந்தது. அதற்கமைய, உடனடியாக தலையிட்டு உரிய கொடுப்பனவுகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழங்கி முடிப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் 2024-2028 காலப்பகுதிக்கான கூட்டுத் திட்டமொன்றும் குழுவில் முன்வைக்கப்பட்டது. எவ்வாறாயினும், நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் சம்பந்தப்பட்ட கூட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படாதது குறித்து குழு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது. அதனடிப்படையில் தமது நிறுவனத்தின் தேவையை அறியாமல் ஏனைய தரப்பினர் ஊடாக கூட்டுத் திட்டத்தை தயாரித்துள்ளமை குறித்த வருத்தம் தெரிவித்த குழுவின் தலைவர், உடனடியாக அமுல்படுத்தும் வகையில் நிறுவனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய கூட்டுத் திட்டத்தை 02 மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
மேலும், பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் தொடர்பில் முறையான தரவுக் கட்டமைப்பு இல்லாமை பற்றி அதிருப்தியை குழு வெளியிட்டதுடன், அது தொடர்பான விரிவான அறிக்கையை உடனடியாக குழுவிற்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ இந்திக்க அனுருத்த, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ ஜகத் குமார சுமித்ராறச்சி, கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம், கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ ஆகியோரும் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
2025-02-16
உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் இன்று (14) பாராளுமன்றத்தில் கூடிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், வரையறுக்கப்பட்ட தொலைக் கல்வி நிலையத்தின் 2021 மற்றம் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையும் இங்கு ஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-02-13
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 2025.02.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அவசியம் தொடர்பில் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்தது. பணியிடங்களில் பாலியல் வன்முறையை ஒழித்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) இல்லாமல் செய்வது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மார்ச் 8ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலீ குணசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கலாநிதி கெளஷல்யா ஆரியரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, தீப்தி வாசலகே, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, அம்பிகா சாமிவெல் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-02-13
சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள துறைமுகங்களை புனரமைத்தல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சு கவனம் - குழுவின் தலைவர் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் (பெப். 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர் ரத்ன கமகேவும் கலந்துகொண்டார். அதற்கமைய, இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழகத்துடனும் இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இந்நாட்டு மீனவர்களைப் பாதித்துள்ள இந்தப் பிரச்சினைக்கு முரண்பாட்டு வழியிலல்லாமல் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்துடன், சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்தல் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு உரையாற்றிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கமைய, மீன்களை விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார். சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையா நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அதற்கமைய, நுகர்வோர் எளிதாக சமைக்கும் வகையில், மீன் வகைகளை பொதி செய்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் காணப்படும் கடற்றொழில் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் டைனமைட்டைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், நன்னீர் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நாட்டின் துறைமுகங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்களை புனரமைப்பதில் அமைச்சு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான கடற்றொழி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை என்பனவும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2025-02-07
உபகுழுவின் தலைவர் பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத் அரசாங்க சேவையில் தேவையான கொள்கை மாற்றத்தை அடையாளம் காண்பதற்காகப் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் எட்டுப் பேரைக் கொண்ட விசேட உபகுழுவை அமைக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அறிவுறுத்தல் வழங்கினார். பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (பெப். 05) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த உபகுழு அமைக்கப்பட்டது. கௌரவ பிரதியமைச்சர் பி.ருவன் செனரத் அவர்களின் தலைமையில் இந்த உபகுழு அமைக்கப்பட்டிருப்பதுடன், இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, அஜந்த கம்மெத்தெகே, தர்மப்பிரிய திசாநாயக்க, தினிந்து சமன், (சட்டத்தரணி) கீதா ஹேரத், மொஹமட் பைசல் மற்றும் லால் பிரேமநாத் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உபகுழுவின் ஊடாக அரசாங்க சேவைக்கான நியமனங்கள், போட்டிப் பரீட்சைகளை நடத்துதல், ஓய்வூ வழங்குதல் மற்றும் வெற்றிடங்கள் உள்ளிட்ட அரசாங்க சேவையிலுள்ள பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கைரீதியான மாற்றங்கள் குறித்துத் தேவையான விசாரணைகளை நடத்தி, அடையாளம் காணப்பட்ட முன்மொழிவுகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்வாறான உபகுழுவொன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி முன்மொழிந்ததுடன், இதற்கு அமையவே குழுவின் தலைவர் இந்த உபகுழுவை நியமித்தார். அத்துடன், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்றங்களில் 8,435 பேரின் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தற்பொழுத பணியாளர் மதிப்பாய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி, இறுதி அறிக்கை 2025 மார்ச் 31ஆம் திகதி கிடைக்கப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நியமனங்களுக்குத் தேவையான தரவுகளை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சில திட்டங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் சேவைகள் உறுதிப்படுத்தப்படாது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கிராம சேவர்களின் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks