E   |   සි   |  

2024-08-02

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மக்கள் தொகை செறிவை கிலோமீற்றருக்கு 300 ஆகவும், வனப்பரப்பை 30% ஆகவும் பேணும் உலக நாடுகளில் இலங்கை 3 வது இடத்தில் – அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது

  • வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்படாத 2 இலட்சம் ஹெக்டயருக்கும் அதிகமான வனாந்தரப் பகுதியை வர்த்தமானியில் அறிவிக்கவும் – கோபா குழு வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல்
  • இவ்வருடத்தில் சிங்கராஜா வனத்தைப் பார்வையிட வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – வனப் பாதுகாப்புத் திணைக்களம் குழுவுக்கு அறிவிப்பு

 

மக்கள் தொகை செறிவை கிலோமீற்றருக்கு 300 ஆகவும், வனப் பரப்பை 30% ஆகவும் பேணும் உலக நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைய இலங்கையைவிட தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னிலையில் காணப்படுவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவன்ன தலைமையில் அண்மையில் (ஜூலை 25) கூடியபோதே இவ்விடயங்கள் தெரியவந்தன. 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக வனப் பாதுகாப்புத் திணைக்களம் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. உலக நாடுகளில் வனப்பரப்பளவு 31% ஆகக் காணப்படுவதுடன், இலங்கையின் வனாந்தரப் பகுதி 30% அளவில் இருப்பது மிகவும் நல்லதொரு நிலைமையென குறித்த திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையில் உள்ள முழு வனாந்தரப் பகுதியையும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடாமை குறித்து அதிகாரிகளிடம் குழு கேள்வியெழுப்பியது. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 1.4 மில்லியன் ஹெக்டெயர் வனப்பகுதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன என்றும், சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ஹெக்டெயர் வனப்பகுதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, வர்த்தமானியில் வெளியிடப்படாத வனாந்தரப் பகுதிகளை விரைவில் வர்த்தமானியின் ஊடாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இது பற்றிய அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் குழுவுக்கு அனுப்பிவைக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

உலக பாரம்பரியமாக விளங்கும் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கடந்த சில மாதங்களில் மொத்தம் 35000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட வந்துள்ளனர். வனப்பகுதியை சேதப்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை அதிகரிக்க அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் அறிவுரை வழங்கினார்.

அத்துடன், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தகவல்களை வழங்குவதற்கான மையப்படுத்தப்பட்ட தரவுக் கட்டமைப்பொன்றைப் பராமரிக்காமை குறித்தும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்ததோடு, இது தொடர்பான அறிக்கையை குழுவிற்கு அனுப்புமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்குப் பயனுள்ள உள்ளக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாமை குறித்தும் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. கருங்கல் குவாரிகள், சிறிய அளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்கள், மின்சாரக் கோபுரங்கள் போன்றவற்றிலிருந்து வருமானங்கள் வசூலிக்கப்பட வேண்டியிருப்பதாக கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, கருங்கல் குவாரிகளுக்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய அனுமதியைவிட அதிகளவான கருங்கல் உடைக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கருங்கல் குவாரிக்கு உரிமம் வழங்கும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, அதற்குத் தேவையான வெடிப்பொருட்களை தேவையான அளவு மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யுமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். அத்துடன், ஒலிபரப்புக் கோபுரங்களை வழங்குவதன் ஊடாக தொலைபேசித் தொடர்பாடல் நிறுவனங்களிடம் இருந்து பாரியளவிலான பணம் பெறப்பட உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய இந்த அனைத்து நிலுவைகளையும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.

அத்துடன், வல்லப்பட்டா எனப்படும் தாவரம் இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணியை கொண்டுவரும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டிருப்பதால் அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் குழு அறிவுறுத்தியது. குறித்த தாவரத்தைப் பயிரிடுவதைத் தடுப்பதற்கு சட்டம் இல்லை என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இந்தத் தாவரங்கள் காடுகளில் இருந்து வெட்டி அனுமதியின்றி கொண்டு செல்வது சட்டவிரோதமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. வல்லப்பட்டா தாவரத்தின் குணாதிசயங்களைக் கொண்ட அக்விலேரியா எனப்படும் இறக்குமதி செய்யப்பட்ட தாவரம் தற்போது இலங்கையில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வல்லப்பட்டா மற்றும் அக்விலேரியா தாவரங்களை  வேறுபடுத்துவது எளிதல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர். அடையாளம் காண்பதில் உள்ள சிரமம் காரணமாக, காடுகளில் இருந்து வெட்டப்படும் வல்லப்பட்டா செடிகளை, தனியார் தோட்டங்களில் இருந்து பெறப்படும் செடிகள் என, விளம்பரப்படுத்த, கடத்தல்காரர்கள் முயற்சித்து வருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
 
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மதுர விதானகே, கௌரவ உபுல் கலப்பதி, கௌரவ இசுறு தொடங்கொட ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

12

3



தொடர்புடைய செய்திகள்

2025-11-18

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து வழிவகைகள் பற்றிய குழு கவனம் செலுத்தியது

அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 12) பாராளுமன்றத்தில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். அஸ்வெசும திட்டத்திற்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அந்த அளவுகோல்களின் அடிப்படையில் பொருத்தமான சலுகைகளை வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இத்திட்டத்தில், 22 அளவுகோல்களின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த அளவுகோல்களை செயல்படுத்தும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்காக மாத்திரம் பயனாளிகளைப் பதிவுசெய்வதற்குத் தற்பொழுது அனுமதிக்கப்பட்டாலும், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது தகவல்களைக் கட்டமைப்பொன்றில் (Social Registry) பதிவுசெய்வதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், பதிவுசெய்த பின்னர் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதன் மூலம், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று குழு சுட்டிக்காட்டியது. முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கு அஸ்வெசும திட்டத்தை அவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு  விரிவாகக் கலந்துரையாடியது. தேசிய அடையாள அட்டை இல்லாததால் நலன்புரித் திட்டத்தின் உதவிகளைப் பெற முடியாத தகுதியுள்ள நபர்கள் தற்போது இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாததால் அந்தச் சலுகைகளைப் பெற முடியாத சில குழுக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அதன்படி, முடிந்தவரை அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதன் மூலம் நலன்புரித்திட்ட உதவிகளை வழங்குவதன் நோக்கத்தை அடைவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது. இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த, கௌரவ பிரதியமைச்சர்களான  சதுரங்க அபேசிங்ஹ, (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான  (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, கே.சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹன பண்டார, சத்துர கலபதி, திலின சமரகோன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-17

தேசிய உயர்கல்வி கொள்கை வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி அலுவல்ககள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவில் ஆராய்ப்பட்டது

தேசிய உயர்கல்வி கொள்கைக்கான வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உயர்கல்விப் பிரிவு தொடர்பான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தயாரிக்கப்பட்டுவரும் உயர்கல்விக் கொள்கை வரைபு மற்றும் அதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி.த சில்வா அவர்கள் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்தார். நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வரைபைத் தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை மதிப்பாய்வு செய்தல், இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வெளிப்புற பட்டப்படிப்பு திட்டங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக முந்தைய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-15

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்படும் தாமதம் குறித்து கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது

முழுத் திட்டமும் 548 நாட்கள் தாமதமானதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளமை தெரியவந்தது துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் ஏற்றுக்கொள்வது மற்றும் அகற்றுவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது   கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஒட்டுமொத்த திட்டத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் கடந்த நவ. 13ஆம் திகதி கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டு 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டிருந்தது. அன்றையதினம் கலந்துரையாட முடியாத விடயங்கள் குறித்து மீண்டும் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 2021 நவம்பர் மாதம் நிறுவனமொன்றுக்கு ரூ.40,273 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொடுக்க ஆமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 2021 டிசம்பர் மாதம் இது தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதுடன், 2025 ஜனவரி 03ஆம் திகதி இத்திட்டம் பூர்த்திசெய்யப்படவேண்டியிருந்தது. எனினும், சில காரணங்களுக்காக கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தமையால் காலம் நீடிக்கப்பட்டு 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதனைப் பூர்த்திசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு தெரியவந்தது. இதனால் குறித்த அபிவிருத்தித் திட்டம் 548 நாட்கள் காலதாமதம் அடைந்திருப்பதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியதாகவும், இது தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை கோப் குழுவில் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை நிறைவடையும் என்றும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதிகாரசபை ஊழியர்களின் உணவுச் செலவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன், 2023 ஆம் ஆண்டு கோப் குழுவால் இது தொடர்பாக வழங்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் குழு சுட்டிக்காட்டியது. அதன்படி, செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விலைகளைக் குறைக்க போட்டிமுறையிலான கேள்விப்பத்திரங்கள் கோரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் கையகப்படுத்தி அப்புறப்படுத்துவது குறித்து கவனம் செலுத்திய குழுவின் தலைவர், நீதிமன்றத்தால் அப்புறப்படுத்துவதற்கும் கையகப்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்ட காணிகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அதன்படி, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சீதுவை ரந்தொலுவ விளையாட்டுக் கழகத்தின் பெயர் இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டுக் கழகம் எனப் பெயர்மாற்றம் செய்வது, குறித்த கழகத்தில் இணைந்த வீர வீராங்கனைகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களாக ஆட்சேர்ப்பு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, எஸ்.எம்.மரிக்கார், (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, எம்.கே.எம்.அஸ்லம், (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, திலின சமரகோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-11-15

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கை உப குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி அவர்களினால் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது.  பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 13) பாராளுமன்றத்தில் கூடியபோதே இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டது. பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், அரச சேவையில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாறியவர்களுக்கு, அந்த உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் சேவையாற்றிய பதவிக்குரிய ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இங்கு முன்மொழியப்பட்டது. அரசாங்க வேலையை விட்டு பாராளுமன்ற உறுப்பினராக வரும் ஒருவருக்கு, உறுப்பினர் ஓய்வூதியமும் கிடைக்காததால், இந்த விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன்படி தனது கவனத்தைச் செலுத்த எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார். சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வு நடைமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வினைத்திறன்காண் தடைதாண்டல் (efficiency bar) மதிப்பெண் வரம்புகளை பொதுச் சேவை ஆணைக்குழு மாற்றியமைத்ததன் காரணமாக அரச சேவைக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தச் சிக்கல் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் குழு கூட்டத்தில் கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், குழுவின் கௌரவ உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks