பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-01-24
செய்தி வகைகள் : செய்திகள்
பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2025.01.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நானாயக்கார தெரிவு செய்யப்பட்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் நட்புறவுச்சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, கடந்த 7 தசாப்தங்களாக இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய உறவுகள் வலுவடைந்துள்ளன என்றும் இந்த நட்புறவுச் சங்க மீள் ஸ்தாபிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்புக்கு ஒரு சான்றாகும் எனத் தெரிவித்தார். குறிப்பாக வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இரண்டு பாராளுமன்றங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் இது ஒரு தளத்தை ஏற்படுத்துகிறது எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது ஐக்கிய இராஜ்ஜியம் வழங்கிய ஆதரவு மற்றும் பரிஸ் கழக உறுப்பினராக கடன் மறுசீரமைப்புக்கு அளித்த பங்களிப்புகளை சபாநாயகர் பாராட்டினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களை செயலமர்வுகள், மாநாடுகள் மற்றும் ஆய்வுச் பயணங்கள் மூலம் மேம்படுத்துவதில் விலைமதிப்பற்ற பங்களிப்புகளைச் செய்ததற்காக ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்துக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக், சுமார் 50,000 இலங்கை மாணவர்கள் தற்போது ஐக்கிய இராஜ்ஜியத்தில் கல்வி பயின்று வருவதாகத் தெரிவித்ததுடன், கல்வித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி நம்பிக்கை வெளியிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து வளர்ப்பதை ஐக்கிய இராஜ்ஜியம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த 30 ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகளின்படி, இந்தப் பிராந்தியம் அதிகளவான செல்வாக்கு மிக்கதாக மாறும் என்றும், பிரகாசமான எதிர்காலத்திற்கு இலங்கை ஒரு நல்ல நிலையில் இருப்பதாக அவர் நம்புவதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்தமை தொடர்பில் கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நானாயக்கார இதன்போது நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால உறவை மேம்படுத்துவதில் நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். "இலங்கைக்கும் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராய்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் இந்தச் சங்கத்தை ஒரு சக்திவாய்ந்த தளமாக மாற்ற நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்," என அவர் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், பாராளுமன்ற ஒத்துழைப்பை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதிலும் மீள ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
2025-06-04
“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்களின் பிரதிகள் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் மேலும் இரண்டு பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (ஜூன் 04) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
2025-06-03
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளினால் சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்புக்கு இன்று (ஜூன் 03) வழங்கிவைக்கப்பட்டன. உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன அவர்களின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட விசாரணைக்குழு இன்று (03) பாராளுமன்றத்தில் கூடிய போதே சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன. இங்கு சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசரணைக்குழுவில் பங்குபற்றிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர், பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ். வீரவிக்ரமவின் வீட்டுக்குச் சென்று கடந்த வார இறுதியில் சாட்சியங்களின் 12 சத்தியக்கடதாசிகளை வழங்க நடவடிக்கை எடுத்ததாக குழுவில் சுட்டிக்காட்டினர். அத்துடன், இன்றைய தினம், 10 சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகளை குழுவின் முன்னிலையில் பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்கியதுடன், எஞ்சிய சத்தியக்கடதாசிகளை எதிர்வரும் குழுவின் அமர்வில் முன்வைக்க எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, முன்னர் இணங்கியதன் பிரகாரம் அனைத்து சாட்சியங்களினதும் சத்தியக்கடதாசிகளை இன்றைய தினம் வழங்குமாறு பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். பின்னர் இரு தரப்பினராலும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டதை அடுத்து, 6 வாக்குமூலங்களின் சத்தியக்கடதாசிகளை பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்குவது பொருத்தமானது என குழுவின் நிலைப்பாடாக இருந்ததுடன், அது தொடர்பில் இரு தரப்பினரதும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், 2 சத்தியக்கடதாசிகளை இரு தரப்பினருக்கும் வசதியான தினமொன்றில் மற்றும் நேரத்தில் தனிப்பட்ட வகையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து பரிசீலிப்பதற்கு குழு அனுமதி வழங்கியது. மற்றுமொரு சாட்சியமாக வழங்கப்பட்டுள்ள ஊடக சந்திப்பு ஒன்று தொடர்பான காணொலியின் இறுவெட்டை (CD) பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்குவதற்கு குழு தீர்மானித்ததுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இந்த சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் தொடர்பான பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பின் நிலைப்பாட்டு 9 ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு விசாரணைக்குழு கூடி முன்வைக்கப்படவுள்ளது.
2025-06-03
“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி தனக்குக் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (மே 03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
2025-06-02
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks