E   |   සි   |  

2025-03-07

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டம் - அதில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிப்பு

  • ஐந்து ஏக்கருக்கு குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம்...  
  • இந்திய உதவித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் 4,700 வீடுகள் - வீட்டுப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல், கட்சி, நிறப் பாகுபாடு இல்லை...
  • பெருந்தோட்ட நிறுவனங்களில் அடையாளம் காணப்பட்ட பயன்படுத்தப்படாத சுமார் 30,000 ஹெக்டெயர் நிலங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கும் திட்டம்…

 

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரின் தலைமையில் 2025.03.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும் இதில் கலந்துகொண்டார்.

தென்னை பயிரிச்செய்கையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாண்டில் 2.5 மில்லியன் தேங்காய் விதைகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் MOP உரத்தில், 27,500 மெட்ரிக் தொன் தற்போது தென்னை பயிற்செய்கைக்காக 56,000 மெட்ரிக் தொன் கலப்பு உரத்தைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்குவதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். அதற்கமைய, அந்த கலப்பு உரம், சந்தை விலை அண்ணளவாக 9,500 ரூபாய் கொண்ட 50 கிலோ கிராம் உர மூட்டையை 4,000 ரூபாய் மானிய விலையில் இந்த மாத இறுதியில் நாடு பூராகவும் உள்ள தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய உதவித் திட்டத்தின் கீழுள்ள 10,000 வீட்டுத்திட்டத்தில் இவ்வாண்டில் 4,700 தோட்டப்புற வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் வீட்டுப் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டிருந்தாலும், இம்முறை எந்தவிதக் கட்சி, நிறப் பாகுபாடும் இன்றி முன்னுரிமை அடிப்படையில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். மண்சரிவு எச்சரிக்கை உள்ள பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தோட்ட வீடுகளை மேம்படுத்துவதன் மூலம் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு உள்நாட்டு நிதியங்களிலிருந்து 1,300 மில்லியன் ரூபாய் செலவிட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சின் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை குழுவின் முன் சமர்ப்பித்த அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவிக்கையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள பெருந்தோட்ட நிறுவனங்களில் பயன்படுத்தப்படாத சுமார் 30,000 ஹெக்டெயர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.  

அத்துடன், 2024 ஆம் ஆண்டில் இந்நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி சுமார் 262 மில்லியன் கிலோ கிராம் எனவும், 2025 இல் அந்த இலக்கு 275 மில்லியன் கிலோ கிராம் தேயிலை எனவும் செயலாளர் தெரிவித்தார். அத்துடன், உலகில் முதல் இறப்பர் ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பித்த இந்நாட்டின் இறப்பர் ஏற்றுமதியில் குறைவு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர் 2025 ஆம் ஆண்டில் அந்த இலக்கு 78 மில்லியன் கிலோ கிராம் இறப்பர் எனவும் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் இந்நாட்டின் தென்னை பயிர்ச்செய்கை இலக்கு 2,875 மில்லியன் தேங்காய்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், கிளைபோசேட் அதிகமாக பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இலங்கையின் தேயிலை மற்றும் கறுவா என்பவற்றின் உயர் தரம் குறைவடையும் எச்சரிக்கை காணப்படுவதாகவும் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது முக்கியமானது எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

தேயிலை உரங்களின் தரம், மரமுந்திரிகை பயிர்ச்செய்கையை மேம்படுத்தல் உள்ளிட்ட இந்த அமைச்சுடன் சம்பந்தமான விடங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-06-02

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது - கோப் குழுவில் புலப்பட்டது

Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது, வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்திற்காக கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாததால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகியுள்ளது - கோப் குழு   2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) புலப்பட்டது.  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் 2024 ஆம் ஆண்டில் குடியகல்வு சங்கங்களின் 5,000 அங்கத்தவர்கள் கலந்துகொண்ட மாகாண மட்டத்திலான 3 கூட்டங்களுக்கான 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சித்தட்டத்துக்கு 63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களினாலும் வழங்கப்படும் சேவைகளை, அந்த சேவைகளைப் பெறுவோர் தமது வசிக்கும் பகுதிகளையே பெறும் வகையில் நாடு பூராகவும் நடத்தப்பட்ட Glocal Fair வேலைத்திட்டத்துக்கு 1,259 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக கோப் குழுவில் புலப்பட்டன.     இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2022 மற்றும் 2023 ஆம் நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகையை பரிசீலிப்பதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (மே 23) கூடிய போதே இந்த விடயங்கள் புலப்பட்டன. Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன், இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தில் 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 1,259 மில்லியன் ரூபாய் போன்ற பாரிய நிதி செலவு செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாறான நிதியை செலவிடுவதன் நோக்கங்களை அடைய முடிந்துள்ளதா என இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். அத்துடன்,  Glocal Fair வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், வர்த்தகக் கூடம் ஒன்றை ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் 5 இலட்சம் ரூபாவுக்கு வர்த்தகக் கூடம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் குழுவில் வினவப்பட்டது. எனினும் வினைத்திறனான வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்த இருந்த நிதி நோக்கம் அற்ற முறையாகத் திட்டமிடப்படாத வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் பாரிய நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்தை 5 வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய செயற்படுத்தியில்லை என்றும், அதனால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை என்றும் குழுவில் வெளிப்பட்டது. என்னினும், இலங்கை சமுர்த்தி அதிகாரசபை தற்போது அந்தத் தொகையை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இந்த வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் எத்தனை பேருக்கு சம்பந்தப்பட்ட கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று குழு அதிகாரிகளிடம் வினவியதுடன்,   அத்தகைய தரவு இல்லை என்று அவர்கள் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மீள் பரிசீலனை இடம்பெற்றில்லை எனத் தெரிவித்த குழுவின் தலைவர் ரடவிரு வீட்டுக் கடன் திட்டம் தொடர்பில் ஆரம்பம் முதல் தற்பொழுது வரையான தகவல்கள் அடங்கிய முழுமையான அறிக்கையொன்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். எவ்வாறாயினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகி செயற்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதுவரை 18 பில்லியனாக உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நிலையான வைப்பை மிகவும் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு திட்டமொன்று தயாரிக்கப்படுவதன் தேவை குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், செயற்பாட்டில் இல்லாத 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 5.1 பில்லியன் நிலுவை காணப்படும் குவைட் இழப்பீடு நிதியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகளிடம் குழு வினவியது. அதற்கமைய, அந்த நிதியத்தை பயன்படுத்தி வீட்டுப் பணிகளுக்காக வெளிநாட்டு செல்லும் பணியாளர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கும், பணியாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்பு தேடும் தொழிலாளர்கள் ஊடாக செய்த நிதி மோசடி குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வேலைவாய்ப்புக்காக முகவர்கள் மூலம் அல்லாமல் வெளிநாடு செல்லும் ஒவ்வொரு பணியாளர்களும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான பதிவுக்கட்டணத்தை பணியகத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், முகவர்கள் மூலம் வெளிநாடு செல்லும் போதும் அவர்களுக்கான பதிவுக்கட்டணம் பணியகத்துக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதில் 70% மீண்டும் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனத்துக்கு செலுத்தப்படுவதாக குழுவில் புலப்பட்டது. எனினும், சுயமாக செல்லும் பணியாளர்களை, முகவர்கள் மூலமாக செல்லும் பணியாளர்களாகக் காண்பித்து மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பில் கண்டறிய உப குழுவொன்றை நியமிப்பதற்கு குழுவின் தலைவர் தீர்மானித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அனுராத ஜயரத்ன, முஜிபுர் ரஹுமான், எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், (வைத்தியர்) எஸ். பவானந்தராஜா, சுஜீவ திசாநாயக்க, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், திலின சமரகோன், சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமன்த மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-05-28

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவு

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (மே 27) இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்திற்கான குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் முதலாவது அமர்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது. இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஏற்கனவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணங்கியிருந்தன. இதற்கமைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு கௌரவ அஜித் பி பெரேராவின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்மொழிந்ததுடன், அதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நீண்டகாலமாகக் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கான தீர்வுகளை உள்ளடக்கியதாக இந்தத் திருத்ததச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டதுடன் இதற்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படவேண்டியுள்ள பிரதான மாற்றங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்களான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, தனுஷ்க ரங்கனாத், அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2025-05-27

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவு

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகத் தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (மே 27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் நான்கு குழுக்களின் தலைமைப் பதவி ஆளும் கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்களின் பெயரை, கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க முன்மொழிந்ததுடன், இதனைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹசாரா லியனகே வழிமொழிந்தார். அத்துடன், இத்துறைசார் குழுக் கூட்டத்தில் 03.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ள தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் குறித்துக் கலந்துரையாடப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைய, ஜூன் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ளது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாசன கமகே, சட்டத்தரணி ஹசாரா லியனகே மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2025-05-26

சட்டமியற்றும் செயல்முறையை மிகவும் திறனாக மேற்கொள்ளவும், நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்தவும், பாராளுமன்றக் குழுக்கள் தேவையான அறிவு மற்றும் கருவிகளைக் கொண்டிருப்பது அவசியம் - துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் உறுப்பினர்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவிப்பு

சட்டமியற்றும் செயல்முறையை மிகவும் திறனாக மேற்கொள்ளவும், நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்தவும், பாராளுமன்றக் குழுக்கள் தேவையான அறிவு மற்றும் கருவிகளைக் கொண்டிருப்பது அவசியம் என சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சட்டமியற்றும் செயல்முறை தொடர்பான தேவையான அறிவைப் பெறுவதற்கான வழிவகைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் வகையில், மே 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே கௌரவ சபாநாயகர் இக்கருத்துக்களை தெரிவித்தார். இக்ருத்தரங்கு, சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் (Max Planck Foundation) ஆதரவுடன் இலங்கை பாராளுமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன,  இந்தக் கருத்தரங்கு மூலம் பெறப்பட்ட அனுபவத்தைப் பயன்படுத்தி, துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகளை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார். இலங்கையில் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மேக்ஸ் பிளாங்க் மன்றத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தா சபாநாயகர் சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதில் அவர்களின் அர்ப்பணிப்பு இலங்கை பாராளுமன்றத்தின் திறனைக் கட்டியெழுப்புவதற்கு உதவியுள்ளதாக மேலும் தெரிவித்தார். இந்தக் கருத்தரங்கில்  ஜெனோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்ரிகோ அல்பனேசி [(Professor) Enrico Albanesi], மேக்ஸ் பிளாங்க்  மன்றத்தின்  ஆராய்ச்சி உதவியாளர்  பிரவீன் சாக்கோ நினன்  (Praveen Chacko Ninan) மற்றும் மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் சட்ட ஆலோசகர் மெத்மினி விஜேசிங்க ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். கருத்தரங்கின் ஆரம்ப உரையை நிகழ்த்திய மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் ஆராய்ச்சி உதவியாளர் பிரவீன் சாக்கோ நினன், சட்டமன்றப் பணிகளுக்காகக் காணப்படும் நுட்பங்கள் மற்றும் சட்டமூலங்களை  எவ்வாறு மதிப்பாய்வு செய்து பகுப்பாய்வு செய்வது என்பது குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கினார். சட்டமூலங்களை மதிப்பிடுவதற்கான நடைமுறை நுட்பங்கள் மற்றும் தரநிலைகள் குறித்தும் அவர் உறுப்பினர்களுக்கு விளக்கினார். அத்துடன்,  சட்டத்தின் ஆட்சியுடன் இணைந்ததாக எவ்வாறு சட்டமூலங்களைப்   பரிசீலிப்பது என்பது குறித்து பேராசிரியர் என்ரிகோ அல்பனேசி உறுப்பினர்களுக்கு விளக்கினார். அதற்காகக் காணப்படும் சட்ட விதிகள்,   பல்வேறு வழிக்காட்டல்கள் மற்றும் கோட்பாடுகளைக் கோடிட்டுக் காட்டி அவர் விளக்கமளித்தார். இந்த நிகழ்வில் கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளர் எம். ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும், பாராளுமன்ற சபை முதல்வர்  அலுவலகம், அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks