E   |   සි   |  

2025-03-24

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் 296 மோட்டார் சைக்கிள்கள் உரிய தொகை அறிவிடப்படாமல் பதிவு செய்யப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 78.15 மில்லியன் இழப்பு – கோபா குழுவில் தெரியவந்தது

  • முன்னைய கோபா குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பற்றிய 25 கணக்காய்வு அவதானிப்புக்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏற்க முடியாதவை. சுயாதீனக் குழுவொன்றை அமைத்து மீண்டும் உரிய விசாரணைகளை நடத்தவும் – கோபா குழு அறிவுறுத்தல்
  • பயன்படுத்தப்படாத வெற்று இலக்கங்களை உபயோகித்து வாகனப் பதிவுச் சான்றிதழ்களை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மோசடியான முறையில் வழங்கியமையால் அரசாங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா இழப்பு – கோபா குழுவில் புலப்பட்டது
  • இரத்துச் செய்யப்பட்ட இராஜதந்திர வாகன இலக்கங்களில் வேறு வாகனங்களைப் பதிவு செய்தமையால் 122 மில்லியன் ரூபா நஷ்டம் – கணக்காய்வாளர் நாயகம்

 

201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் அறவிடப்பட வேண்டிய உரிய தொகையை அறவிடாது 296 மோட்டார் சைக்கிள்களைப் பதிவுசெய்தமையின் காரணமாக அரசாங்கத்திற்கு 78.15 இழப்பு ஏற்பட்டிருப்பதுடன், அமைச்சரவை அனுமதி இன்றியும், பதிவு செய்வதற்குத் தேவையான சட்டரீதியான ஆவணங்கள் இன்றியும் 3088 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரியவந்தது.

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் (மார்ச் 21) கூடிய போதே இந்த விபரம் தெரியவந்தது. இது பற்றி விசாரிப்பதற்காக கடந்த 10ஆம் திகதி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கோபா குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தபோதும், அதிகாரிகள் உரிய தயார்ப்படுத்தலில் வராமையினால் அவர்கள் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.

அத்துடன், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கோபா உபகுழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. சுங்கத்தின் கணினிக் கட்டமைப்பில் இணைவதற்கு முன்னர், இடம்பெறும் ஏனைய அனைத்து வாகனப் பதிவுகள் குறித்தும் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட 25 விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் எடுத்துள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளிட்ட தற்போதைய செயலாற்றுகை குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக திணைக்களம் எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்காமை தொடர்பில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்திய குழு, திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் திருப்தியடைய முடியாது என்றும் வலியுறுத்தியது. இதற்கு அமைய குறித்த விடயம் தொடர்பில் காலதாமதம் இன்றி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கான விசாரணைகளை சுயாதீனமான அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோபா குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.

முன்னர் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் இலக்கங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அடிச்சட்ட இலக்கங்கள் மற்றும் இயந்திர இலக்கங்களை பதிவுக் கட்டமைப்பிலிருந்து மாற்றி மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு அவற்றை வழங்கி, சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்  வெளியிட்டமை குறித்தும் கோபா குழு கவனம் செலுத்தியது. இதனால் அரசாங்கத்திற்கு 1.2 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.

மேலும், பயன்பாட்டிற்கு எடுக்கப்படாத வெற்று இலக்கங்களை மோசடியாகப் பயன்படுத்தி மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டு இராஜதந்திர வாகன இலக்கங்கள் வேறு வாகனங்களின் பதிவுகளுக்காகப் பயன்படுத்தியமையால் அரசாங்கத்திற்கு 122 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இது விடயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கணக்காய்வாளர் நாயகம்  வலியுறுத்தினார்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி அவற்றுடன் தொடர்புபட்ட சகல அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதில் ஏற்படும் முன்னேற்றம் தொடர்பில் விசாரிக்க திணைக்களத்தை மாதம் தோறும் குழு முன்நிலையில் அழைப்பதற்கும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், இங்கு இடம்பெற்றுள்ள மோசடியான செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

இந்தக் கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர, சுகத் திலகரத்ன, சுந்தரலிங்கம் பிரதீப், நலின் ஹேவகே கௌரவ பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி. அலவதுவல, ரோஹித அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, கவீந்திரன் கோடிஸ்வரன, மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத, ஒஷானி உமங்கா, ருவன்திலக்க ஜயகொடி, சுசந்த குமார நவரத்ன, சந்தன சூரியஆரச்சி, (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, சானக மாதுகொட, ரீ.கே. ஜயசுந்தர, தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் லால் பிரேமநாத் ஆகியோருடன் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-11-25

இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படத் தேவையில்லை, அவர்கள் சுயமாகச் செயற்படுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே அவசியமானது – தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாந்து

இயலாமை உடைய நபர்கள் பணியாற்றக் கூடிய வகையில் வேலைத் தளங்கள் அமைக்கப்பட வேண்டும் – இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த.த சில்வா  இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படவேண்டிய அவசியமில்லை, அவ்வாறு அனுதாபப்படுவது அவர்களை ஒரு விதத்தில் அவமரியாதைப் படுத்துவதுபோன்றாகும். இயலாமை உடைய நபர்கள் தமது கடமைகளைச் சுயமாக நிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்குவதையே செய்ய வேண்டியிருப்பதாக கௌரவ தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் கௌரவ பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாந்து தெரிவித்தார். இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அமைச்சுக்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள செயலமர்வுத் தொடரில், முதலாவது செயலமர்வு தொழில் அமைச்சில் கடந்த நவ. 20ஆம் திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையுடன், தொழில் அமைச்சு மற்றும் நிறுவனங்களில் மக்கள் தொடர்புப் பிரிவில் பணிபுரியும் பணியாளர்களை இலக்காகக் கொண்டு, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய, இயலாமை உடைய நபர்கள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்துக்கள் சமூகமயமாக்கப்படும் வரை, சட்டதிட்டங்கள் மூலம் ஒருங்கிணைப்பை அடைவதற்கு நடவடிக்கை எடுக்க  வேண்டிய அவசியம் இருப்பதாக அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டார். சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் மூலம் மாத்திரம் இந்தக் குழுவினருக்குத் தேவையான ஆதரவை வழங்குவது போதுமானதாக இருக்காது என்றும், மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இயலாமை உடைய நபர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். தனியார் துறையிலும் இயலாமை உடைய நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு உரையாற்றிய இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா, இயலாமை உடைய நபர்கள்  வேலைசெய்யக் கூடிய வகையில் பணியிடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றார். இதைச் செயல்படுத்த, முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் இயலாமை உடைய நபர்கள் பங்கேற்பதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதன் ஊடாக இயலாமை உடைய நபர்களும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஓர் அங்கமாக இருப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார். இயலாமை உடைய நபர்கள் ஏனையவர்களைச் சார்ந்தவர்களாக அன்றி,  பொருளாதார செயல்முறைக்குப் பங்களிப்பவர்களாக இருக்கும் நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இயலாமை உடைய நபர்களைக் கொண்ட வளவாளர்களினால் குறித்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டது. மேலும் இந்தச் செயலமர்வில் வளவாளர்களாகக் கலந்துகொண்ட இயலாமை உடைய நபர்கள் தங்கள் அனுபவங்களையும், தங்கள் பணியிடங்களில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் பகிர்ந்து கொண்டனர். எதிர்காலத்தில் அனைத்து அமைச்சுக்களையும் இலக்காகக் கொண்டு இதுபோன்ற செயலமர்வுகளை நடத்துவதற்கு இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. இச்செயலமர்வில் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் அதிகாரிகள், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் இந்ரக உபேசேகர, இத்திட்டத்தின் அதிகாரி அனோஜிதா சிவாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள், இயலாமை உடைய நபர்களுக்கான அமைப்புக்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-22

நிதி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டுக்கான செயலாற்றுகை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது

2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டிய 8 அறிக்கைகளுக்கும் அனுமதி நிதி அமைச்சின் கீழ் முக்கிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் 2025 செப்டெம்பர் மாதம் வரையில் மொத்த நிதிச் செயற்பாடுகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 20) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் இது பற்றி ஆராயப்பட்டது.  இதற்கமைய உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை மதுவரித் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாகரிகள் ஒவ்வொரு நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்த விளக்கத்தை முன்வைத்தனர். அத்துடன், அரசாங்க பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி குழுவில் கலந்துகொண்ட அதிகாரிகள், 2026-2030 ஆண்டு காலப்பகுதிக்கான இடைக்கால படுகடன்முகாமைத்துத்துக்கான வழிகாட்டல் மற்றும் 2026-2030 ஆண்டு காலப்பகுதிக்கான படுகடன் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். இலங்கை முதலீட்டுச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் தமது நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். நேரடியான வெளிநாட்டு முதலீடு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 827 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி வெளிநாட்டு முதலீடுகளாகப் பெறப்பட்டுள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதன்படி, எதிர்வரும் ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடு தொடர்ந்து மேம்படுவதை உறுதிசெய்ய இலங்கை முதலீட்டுச் சபையும் அதனுடன் சம்பந்தப்பட்ட  ஏனைய நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குழு வலியுறுத்தியது. அத்துடன், 2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டிய 8 அறிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-22

இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய உத்தேச சட்டமூல வரைபு ஆவணம் தொடர்பில் பாராளுமன்ற குழுக்களின் கவனத்திற்கு

எதிர்வரும் காலத்தில் அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து விரிவாகக் கலந்துரையாடின.  அந்தக் குழுக்களின் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர மற்றும் சமன்மலீ குணசிங்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் (நவ. 20) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் நீதி அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.  இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இந்த உத்தேச சட்டமூலம் தொடர்பான முதலாவது சட்டமூலம் 2024 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தனர். அதன்போது, சட்டமூலம் மீது உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கமைய உயர் நீதிமன்றத்தினால் உள்வாங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்ட திருத்தங்கள், சட்டமூலத்தின் குழு நிலையின் போது மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சினால் உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் கொள்கை ரீதியாக உள்வாங்கப்படவேண்டிய ஏனைய திருத்தங்கள் சேர்க்கப்பட்டு புதிய சட்டமூலம் வரைபு செய்யப்பட்டு வர்த்தமானி தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தை பத்தாவது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.  அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தின் ஊடாக இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவுதல், பணக் கடன் வழங்கும் தொழில் மற்றும் நுண்நிதித் தொழில் என்பவற்றை ஒழுங்குபடுத்தல், அவற்றின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் மற்றும் 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் பணிப்பாளர்கள் சபையின் அமைப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பணிப்பாளர்கள் சபையின் அமைப்பில் நுண்நிதித் தொழில் வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவர் உள்வாங்கப்படாமை பிரச்சினைக்குரியது என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர சுட்டிக்காட்டினார். விசேடமாக நுண்நிதித் தொழிற்துறைக்கு ஒழுங்குபடுத்தல் இல்லாததால் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் இருப்பதன் முக்கியத்துவத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அல்லது மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் பிரதிநிதி ஒருவர் அல்லது அந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் இந்தப் பணிப்பாளர் சபையில் அங்கத்தவராக இருப்பது பொருத்தமாகும் என கௌரவ உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது.  அத்துடன், இந்த வரைபு ஆவணத்தில் உள்ளடங்கப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எந்தவொரு ஒழுங்குபடுத்தலும் இன்றி நுண்நிதித் தொழிற்துறை கீழ் மட்டத்தில் செயற்படுவதால் பாரியதொரு சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குழு, அந்த சமூக நெருக்கடியையும் பாதிப்பையும் தவிர்ப்பதே இதன் குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்வரும் காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டமூலத்துக்குத் தேவையான திருத்தங்களை உள்வாங்குமாறு அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தியதுடன், சம்பந்தப்பட்ட திருத்தங்களை சட்டமூலத்தின் குழு நிலையின் போது முன்வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.


2025-11-21

மனிதர்கள் என்ற ரீதியில் மனிதர்களுக்குச் சேவை செய்யக் கூடிய சிறந்த மனம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எமது அரசியலின் நோக்கமாகும் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

மனிதர்கள் என்ற ரீதியில் மனிதர்களுக்குச் சேவை செய்யக் கூடிய சிறந்த மனம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எமது அரசியலின் நோக்கமாகும்  என பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். பிரதேச அரசியலில் பிரதிநிதித்துவம் இல்லாத பெண்கள் குழுக்களை அரசியல் ரீதியாக உள்ளடக்கப்படுவதை அதிகரிப்பது குறித்து கடந்த நவ. 17ஆம் திகதி கூடிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் வாழும் சிறப்புக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேட்புமனு செயல்முறையை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு நாட்கள் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான உலகளாவிய செயற்பாட்டுக்கான நாட்களாக அனுஷ்டிக்கப்படும் நிலையில், இதற்கு சமாந்தரமாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இங்கு கலந்துரையாடப்பட்டது.  ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சமன்மலி குணசிங்ஹ, கிருஷ்ணன் கலைச்செல்வி, ஏம்.எம்.எம்.எம் ரத்வத்த, (சட்டத்தரணி) ஹிருணி விஜேசிங்க, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) கீதா ஹேரத், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks