E   |   සි   |  

2025-08-29

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 31 ஆம் திகதி - கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார் 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கௌரவ அமைச்சர், 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக இதனை நடைமுறைப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார். அத்துடன், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பாடசாலை பஸ்கள், அலுவலக சேவைப் போக்குவரத்து பஸ்கள், சுற்றுலா பஸ்கள் மற்றும் ஏனைய பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு சுமார் 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, சுமார் 2,000 ரூபாவாக இருந்த ஆசனப் பாட்டிகளின் விலை தற்போது 5,000 முதல் 7,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையினால் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் கௌரவ அமைச்சர் தெரிவித்தார். 

நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பாக மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், இது குறித்து அண்ணளவாக அனைவரும் தமது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், அதனால் எதிர்காலத்தில் நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விசேடமாக Citra Innovation Lab நிறுவனத்தின் ஊடாக இந்தக் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் பயணிகள், சாரதிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட 2100 பேரிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அது சம்பந்தமான அறிக்கையொன்றை அந்த நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். 

அத்துடன், தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்து, அதிவேக நெடுஞ்சாலைக்குள் வாகனங்கள் நுழையும்போது வாகன உதிரிப் பாகங்களின் தரத்தைப் பரிசோதித்து புள்ளிகள் வழங்கும் முறையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கௌரவ அமைச்சர் தெரிவித்ததுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். 

அத்துடன், வாகனங்களின் டயர்கள் தேவையான தரத்தில் இல்லாவிட்டால், அதிவேக நெடுஞ்சாலைக்குள் வாகனத்தை நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முச்சக்கர வண்டிகள், வான்கள் உட்பட தனியார் போக்குவரத்துத் துறையின் சாரதிகளுக்காக நலன்புரி நிதியமொன்றை உருவாக்குவதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், இது தொடர்பான சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

நீண்ட தூர சேவை மற்றும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களின் நிறுத்துமிடம் தொடர்பான தேவையான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், புகையிரத சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான தேவையான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும், துறைமுகங்கள் தொடர்பான தேவையான நவீனமயமாக்குவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் இரண்டு உப குழுக்களை நியமிப்பதும், அவற்றுக்கு உறுப்பினர்களை நியமிப்பதும் இதன்போது இடம்பெற்றது. 

இதற்கு மேலதிகமாக, கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் பணிகள் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிப்பது மற்றும் நிர்மாணிக்கும் பணிகளை நிறைவு செய்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய விடயங்கள் தொடர்பாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டு, பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகள் பலரும் இணைந்திருந்தனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-10-27

அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க புதுப்பிக்கப்பட்ட தரவுக் கட்டமைப்பு அவசியம் – உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவிப்பு

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் கடந்த ஒக். 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ‘அஸ்வெசும திட்டம்’ குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், உலக வங்கியின் சமூகப் பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் பிரான்செஸ்கா லமன்னா (Francesca Lamanna)  மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீனிவாஸ் வரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  சமூகப் பாதுகாப்புக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையிலேயே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள், குடும்பங்களை அடையாளம் காண முடியும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பிரஜைகளின் தகவல்களை சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் உள்ளிடுவது அவர்களை அஸ்வெசும அல்லது பிற தொடர்புடைய சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றாது என்றும், உள்ளிடப்பட்ட தரவைச் சரிபார்க்க முடியும் என்றும், தொடர்புடைய சலுகைகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது. இந்தச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாகும், எனவே தரவுத்தளத்தைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். "அஸ்வெசும" சலுகைகளை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அதன்படி, கிராம ரீதியாக அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்களைக் காண்பிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த, "அஸ்வெசும" திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததால் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் வகிபாகம் குறித்து முறையான தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் ஊடாக இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தாம் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தனர். கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கி ஆலோசகர் ஷாலிகா சுபசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.


2025-10-24

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்று (ஒக். 23) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி அமைச்சின் அதிகாரிகள், 2026ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஒவ்வொரு துறைக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த விபரங்களை முன்வைத்தனர். இவ்விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.


2025-10-23

2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் 2025.12.31 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.  இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 21) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.  அதற்கமைய, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் 2025.12.31 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.  இங்கு குழுவில் உரையாற்றிய அதன் தலைவர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளை அந்தந்த அமைச்சுகள் செலவிடுதல் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பான அனைத்து விடயங்களையும் குழுவால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கமைய, தனது குழுவின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகள் தொடர்பான விடயங்களும் இவ்வாறு ஆராயப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அதற்கமைய, அந்தந்த அமைச்சுக்களுக்கு வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அவற்றைச் செலவு செய்ததன் முன்னேற்றம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அத்தியாவசியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் குழுவிற்கு அறிக்கைகளை வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்காணி, சுசந்த குமார நவரத்ன, கிட்ணன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், சுதத் பலகல்ல, சித்ரால் பெர்னாண்டோ, ஜே.சி. அளவதுவல, சுஜீவ சேனசிங்க, உபுல் கித்சிறி மற்றும் எம்.எஸ். உதுமாலெப்பெ ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-10-23

வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அவசர கொள்முதல் மற்றும் வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியது

வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அவசர கொள்முதல் மற்றும் வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதில் குறிப்பாக 2022ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற கேள்விப் பத்திரம் கோரல் நடைமுறை மற்றும் 2022ஆம் ஆண்டின் பின்னர் குறித்த கேள்விப்பத்திர நடைமுறையில் ஒவ்வொரு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியது. உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில் அண்மையில் (ஒக். 17) கூடியபோதே இவ்விடயம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் வலுசக்தி அமைச்சு, வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனம், இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு அவசர கொள்முதல்கள் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியதுடன், அவசர கொள்முதல்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் கொண்ட முழுமையான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்திடம் தற்பொழுது காணப்படும் இருப்புக்கள் போதுமான நாட்கள் மற்றும் அதன் பின்னர் எதிர்காலத்தில் கொள்முதல் செய்யவிருக்கும் நிலக்கரியின் அளவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, ஜகத் விதான மற்றும் அசித நிரோஷன எகொட விதான ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks