பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-11-19
செய்தி வகைகள் : குழு செய்திகள்
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பத்துலட்சம் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு 2018ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்ட 214 பணியாளர்கள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்றி சேவையில் நிரந்தரமாக்கப்பட்டிருப்பதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியவந்தது. அமைச்சரவை அனுமதியின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டபோதும், அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமைய இவர்களை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இங்கு புலப்பட்டது.
குறிப்பிட்ட திட்டமொன்றுக்காகப் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்றி இவ்வாறு சேவையில் நிரந்தரமாக்குவதில் பாரிய தவறு இழைக்கப்பட்டிருப்பதாகவும், இது ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமைகிறது என்றும் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார். எனவே, இது தொடர்பில் அமைச்சின் மட்டத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு முழுமையான அறிக்கை ஒரு மாத காலப்பகுதிக்குள் குழு முன்னிலையில் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த நிலைமையைத் திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க அவர்களுக்கு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயற்றிறன் அறிக்கை குறித்து கடந்த 17ஆம் திகதி பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு ஆராய்ந்திருந்தது. இதன்போதே இவ்விடயங்கள் தெரியவந்தன.
1972ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க காணி மறுசீரமைப்புச் சட்டத்துக்கு அமைய அமைக்கப்பட்ட காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் ஊடாக காணிகளைக் கையகப்படுத்தும்போது கையகப்படுத்தப்பட்ட காணிகள் மற்றும் அந்தந்த அரசாங்கங்களின் காலப் பகுதிகளில் அப்புறப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பில் சரியான தகவல்கள் இல்லாமை பாரிய பிரச்சினை என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதுவரை ஏறழத்தாழ 17 இலட்சம் ஏக்கர் காணிகள் ஆணைக்குழுவிடம் காணப்படுவதாகவும், இவற்றின் மதிப்பு துல்லியமானதாக இல்லையென்பதும் இங்கு தெரியவந்தது. காணிகளைக் கையகப்படுத்தும்போதும், பல்வேறு அரசுகளின் கீழ் காணிகளைப் பெற்றுக்கொள்ளும்போது சரியான முறையில் அளவிடல் பணிகள் மேற்கொள்ளப்படாமை இந்நிலைமைக்குக் காரணம் என காணி அமைச்சின் செயலாளர் இங்கு தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் பிரதான சொத்துக்களான இந்தக் காணிகள் தொடர்பில் சரியான தகவல்களும், மதிப்பீடுகளும் ஆணைக்குழுவிடம் இருப்பது அவசியமானது என்றும், காணிகளை சரியான முறையில் அளவீடு செய்து, அதுபற்றிய திட்டவட்டமான அடிப்படை ஆவணத்தைத் தயாரிப்பது அவசியம் என்றும் குழு சுட்டிக்காட்டியது. இது சம்பந்தமாக. நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரைவான வேலைத்திட்டத்தை தயாரித்து கோப் குழுவிற்கு அறிவிக்குமாறு அதன் தலைவர் அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நிலங்களின் தரவுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. இதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என சுட்டிக்காட்டிய குழு, செயலாளரிடம் உடனடியாக தலையிடுமாறு பணிப்புரை விடுத்தது.
காணி கையகப்படுத்தல் தொடர்பான சில கோப்புகள் காணாமல் போயுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இது போன்று கிட்டத்தட்ட 200 கோப்புகள் காணாமல் போனது தெரியவந்தது. இது தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு அமைச்சின் செயலாளருக்கு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார். பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட காணிகளிலிருந்து உரிய பலனைப் பெற்றுக் கொள்ள வினைத்திறனான முறையில் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை தனிநபர்களுக்கு வழங்குவது பாரிய பிரச்சினையென்றும், இதனைச் சீர் செய்வது அவசியமானதாகும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் 1972-1974ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணி மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குத் திட்டங்கள் மற்றும் சாற்றுதல் சமர்ப்பிக்கப்படாமை காரணமாக 50 ஏக்கர் காணிகளை வழங்காத 260 காணிகள் காணப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது. இதனால் 50 வருடங்களாக காலதாமதமடைந்திருக்கும் இந்தச் செயற்பாடு வரலாற்றுப் பிரச்சினையாக இருப்பதால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விசேட வழியொன்றை ஏற்படுத்த உரிய தலையீட்டை வழங்குமாறும் கோப் குழுவின் தலைவர், அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
ஆணைக் குழுவின் வசம் உள்ள ஏறத்தாழ 17 இலட்சம் காணிகள் தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுக்கு அமைய அவற்றின் பெறுமதி 676 மில்லியன் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு தற்போதைய காலத்துக்கு ஏற்ப சீர் செய்யப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நிலையில் ஒரு ஏக்கரின் பெறுமதி சுமார் 500 ரூபாவாக உள்ளதால், இப்பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கையை ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ளுமாறும் குழு பரிந்துரைத்தது.
அத்துடன், ஆணைக்குழுவினால் காணிகள் குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர் அந்தக் காணிகளை வங்கிகளில் அடகுவைத்து கடன் பெறுவது சிக்கலானது என்றும் இங்கு தெரியவந்தது. அத்துடன், சில காணிகள் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
ஆணைக்குழுவின் வசமுள்ள பெறுமதியான காணிகளை அடையாளம் கண்டு அவற்றைப் பயனுள்ள விதத்தில் அபிவிருத்தி செய்வதற்கான மாதிரியைத் தயாரிப்பதே தற்போதைய அவசர தேவை என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இது தேசிய முக்கியத்துவம் மிக்கது என்பதால் நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருடன் இணைந்து உரிய வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக மீண்டும் ஒருமுறை குழு முன்னிலையில் அழைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரத்ன, நளின் பண்டார, மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-09-15
மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தினால் தனியார் வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனை மீள் செலுத்தாதது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இலங்கை துறைமுக அதிகாரசபையின் 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த செப். 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் 2013 ஜூலை 05 ஆம் திகதி நிறுவப்பட்டது என்றும், அந்த நிறுவனம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்ற அனுமதிப்பத்திரம் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் விநியோகஸ்தராக செயற்பாடுகளை ஆரம்பித்து 2014 ஆம் ஆண்டில் தனியார் வங்கியொன்றிலிருந்து துறைமுக அதிகாரசபையின் நிறுவன உத்தரவாதத்தின் (Corporate Guarantee) மூலம் 24 மில்லியன் டொலர் கடன் பெற்றிருந்தமை இங்கு தெரியவந்தது. எனினும், இந்தத் தொகையில் 18.82 மில்லியன் டொலர்கள் (6836 மில்லியன் ரூபாய்) 2023 டிசம்பர் வரை செலுத்தப்படாமல் இருந்ததாகவும், இந்தக் கடன் தொகையை மீளப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வங்கி 2019 ஆம் ஆண்டில் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் அதிகாரசபைக்கு எதிராக இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இது தொடர்பாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன், 2022 ஜூன் மாதம் முதல் கலைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தை மூடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதற்கமைய, இது தொடர்பாக குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இவ்விடயத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை தனது பொறுப்பை நிறைவேற்றுவதில் திருப்தியடைய முடியாது என குழு இதன்போது சுட்டிக்காட்டியது. அத்துடன், நிறுவனத்தை மூடுவதன் மூலம் மாத்திரம் திருப்தியடைய முடியாது என சுட்டிக்காட்டிய குழு, கடன் செலுத்தும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு பரிந்துரைத்தது. அத்துடன், இது தொடர்பாக ஒரு உள்ளக விசாரணை நடத்தி அதற்குரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும், உள்ளகக் கணக்காய்வுப் பிரிவை சரியாக மேற்பார்வையிடுவதற்கான ஒரு பொறிமுறையை தயாரிக்குமாறும் குழு பரிந்துரைத்தது. அதற்கமைய, இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் குழுவிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, அதிகாரசபையின் கூட்டுத் திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, டி.வி. சானக்க, எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, திலின சமரக்கோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-09-12
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்கள் 2025.08.06ஆம் திகதி அப்பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்றையதினம் (செப். 12) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது. தலைவர் பதவிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல அவர்கள் முன்மொழிந்ததுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அரசியல் கருத்துவேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செற்பட்ட, சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், முன்னாள் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியை தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குறிப்பிட்டார். புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தலைவர் மேலும் தெரிவித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சுதத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜே.சி.அலவத்துவல, ரோஹித்த அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத் தசநாயக்க, (வைத்தியர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, எம். ஏ. எம். தாஹிர், லால் பிரேமநாத், சானக மாதுகொட ஆகியோரும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-09-12
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (செப். 11) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கிக்கு நிதிச் சுதந்திரம் இருப்பதாகவும், அந்த நிறுவனங்களைப் போலவே இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும், கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்திற்கும் மிகவும் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான நிதிச் சுதந்திரம் வழங்குவது முக்கியம் என்று இங்கு குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தற்போதுள்ள அரசியல் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அந்த நிறுவனங்களால் மிகவும் சுயாதீனமாகச் செயற்பட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதனால், நிதி அமைச்சரான கௌரவ ஜனாதிபதிக்கும் இது தொடர்பாகத் தெரியப்படுத்துவதற்கு குழு இதன்போது தீர்மானித்தது. அத்துடன், ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் குழு உறுப்பினர்களின் சம்பளம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளத்திற்கு சமமாக அமைக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு சுட்டிக்காட்டுவதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளம் திருத்தப்படும் விதத்தில் இந்த அதிகாரிகளின் சம்பளமும் திருத்தப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதுடன், அதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-09-11
2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் ஆராயப்பட்டது. அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கம் வலுவான நிதி செயற்திறனைப் பதிவு செய்து, அரையாண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரை ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட வருமானம் 2,241 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், மொத்தமாக சேகரிக்கப்பட்ட வருமானம் 2,318 பில்லியன் ரூபாய் எனவும், இது அரை ஆண்டு மதிப்பீட்டை விட 3% அதிகமாகும் என தரவுகளை முன்வைத்து நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவு 3,467 பில்லியன் ரூபாய் என்பதுடன், இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த செலவுடன் ஒப்பிடுகையில் 367 பில்லியன் ரூபா அதிகமாகும். இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணியாக கடன் சேவைகள் அமைந்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இது 1,984 பில்லியன் ரூபாவாகும். அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியங்கள், அஸ்வெசும மற்றும் சமுர்த்தி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட அத்தியாவசிய அரச சேவைகளுக்கான மீண்டெழும் செலவுகளும் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இலங்கை சுங்கத் திணைக்களம் 2024 ஆம் ஆண்டுடன் (ஜனவரி - ஜூன்) ஒப்பிடுகையில் 47% வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 996 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து கிடைத்த வருமானம் இந்த வளர்ச்சிக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளதுடன், இதன் மூலம் 429 பில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 220,026 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 154,537 வாகனங்களுக்கான சுங்க விடுவிப்பு நடவடிக்கைகளை இலங்கை சுங்கம் நிறைவுசெய்துள்ளதாகவும் நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், கொள்கலன்கள் விடுவிப்பு நடவடிக்கைகளுக்காக சுங்கத்தில் 9 - 10 நாட்கள் செல்வதால் இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் குழு உறுப்பினர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் வினவினர். அதன்படி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 2 - 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பொருட்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கி வருவதாகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் (IRD) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மதிப்பிடப்பட்ட வருமானம் 1,022,691 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், 1,040,388 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1.3 மில்லியன் இலங்கையர்களுக்கு TIN (Tax Identification Number) இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய முடியுமா என்று குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். எனினும், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் 3.1% ஆக இருக்கும் என்று அனுமானிக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் வரிக் கொள்கை தொடர்பான நிதி அமைச்சின் கொள்கை என்ன என்பது குறித்து குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பவற்றின் முன்னறிவிப்புகளுக்கு இடையிலான முரண்பாடு குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, சம்பிக்க ஹெட்டியாராச்சி, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks