பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-11-19
செய்தி வகைகள் : குழு செய்திகள்
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பத்துலட்சம் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு 2018ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்ட 214 பணியாளர்கள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்றி சேவையில் நிரந்தரமாக்கப்பட்டிருப்பதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியவந்தது. அமைச்சரவை அனுமதியின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டபோதும், அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமைய இவர்களை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இங்கு புலப்பட்டது.
குறிப்பிட்ட திட்டமொன்றுக்காகப் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி இன்றி இவ்வாறு சேவையில் நிரந்தரமாக்குவதில் பாரிய தவறு இழைக்கப்பட்டிருப்பதாகவும், இது ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமைகிறது என்றும் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார். எனவே, இது தொடர்பில் அமைச்சின் மட்டத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு முழுமையான அறிக்கை ஒரு மாத காலப்பகுதிக்குள் குழு முன்னிலையில் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த நிலைமையைத் திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க அவர்களுக்கு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயற்றிறன் அறிக்கை குறித்து கடந்த 17ஆம் திகதி பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு ஆராய்ந்திருந்தது. இதன்போதே இவ்விடயங்கள் தெரியவந்தன.
1972ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க காணி மறுசீரமைப்புச் சட்டத்துக்கு அமைய அமைக்கப்பட்ட காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் ஊடாக காணிகளைக் கையகப்படுத்தும்போது கையகப்படுத்தப்பட்ட காணிகள் மற்றும் அந்தந்த அரசாங்கங்களின் காலப் பகுதிகளில் அப்புறப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பில் சரியான தகவல்கள் இல்லாமை பாரிய பிரச்சினை என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதுவரை ஏறழத்தாழ 17 இலட்சம் ஏக்கர் காணிகள் ஆணைக்குழுவிடம் காணப்படுவதாகவும், இவற்றின் மதிப்பு துல்லியமானதாக இல்லையென்பதும் இங்கு தெரியவந்தது. காணிகளைக் கையகப்படுத்தும்போதும், பல்வேறு அரசுகளின் கீழ் காணிகளைப் பெற்றுக்கொள்ளும்போது சரியான முறையில் அளவிடல் பணிகள் மேற்கொள்ளப்படாமை இந்நிலைமைக்குக் காரணம் என காணி அமைச்சின் செயலாளர் இங்கு தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் பிரதான சொத்துக்களான இந்தக் காணிகள் தொடர்பில் சரியான தகவல்களும், மதிப்பீடுகளும் ஆணைக்குழுவிடம் இருப்பது அவசியமானது என்றும், காணிகளை சரியான முறையில் அளவீடு செய்து, அதுபற்றிய திட்டவட்டமான அடிப்படை ஆவணத்தைத் தயாரிப்பது அவசியம் என்றும் குழு சுட்டிக்காட்டியது. இது சம்பந்தமாக. நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரைவான வேலைத்திட்டத்தை தயாரித்து கோப் குழுவிற்கு அறிவிக்குமாறு அதன் தலைவர் அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நிலங்களின் தரவுகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. இதன் மூலம் பல்வேறு முறைகேடுகள் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என சுட்டிக்காட்டிய குழு, செயலாளரிடம் உடனடியாக தலையிடுமாறு பணிப்புரை விடுத்தது.
காணி கையகப்படுத்தல் தொடர்பான சில கோப்புகள் காணாமல் போயுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இது போன்று கிட்டத்தட்ட 200 கோப்புகள் காணாமல் போனது தெரியவந்தது. இது தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு அமைச்சின் செயலாளருக்கு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார். பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட காணிகளிலிருந்து உரிய பலனைப் பெற்றுக் கொள்ள வினைத்திறனான முறையில் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவற்றை தனிநபர்களுக்கு வழங்குவது பாரிய பிரச்சினையென்றும், இதனைச் சீர் செய்வது அவசியமானதாகும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் 1972-1974ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணி மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குத் திட்டங்கள் மற்றும் சாற்றுதல் சமர்ப்பிக்கப்படாமை காரணமாக 50 ஏக்கர் காணிகளை வழங்காத 260 காணிகள் காணப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது. இதனால் 50 வருடங்களாக காலதாமதமடைந்திருக்கும் இந்தச் செயற்பாடு வரலாற்றுப் பிரச்சினையாக இருப்பதால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விசேட வழியொன்றை ஏற்படுத்த உரிய தலையீட்டை வழங்குமாறும் கோப் குழுவின் தலைவர், அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
ஆணைக் குழுவின் வசம் உள்ள ஏறத்தாழ 17 இலட்சம் காணிகள் தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுக்கு அமைய அவற்றின் பெறுமதி 676 மில்லியன் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு தற்போதைய காலத்துக்கு ஏற்ப சீர் செய்யப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நிலையில் ஒரு ஏக்கரின் பெறுமதி சுமார் 500 ரூபாவாக உள்ளதால், இப்பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கையை ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ளுமாறும் குழு பரிந்துரைத்தது.
அத்துடன், ஆணைக்குழுவினால் காணிகள் குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர் அந்தக் காணிகளை வங்கிகளில் அடகுவைத்து கடன் பெறுவது சிக்கலானது என்றும் இங்கு தெரியவந்தது. அத்துடன், சில காணிகள் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
ஆணைக்குழுவின் வசமுள்ள பெறுமதியான காணிகளை அடையாளம் கண்டு அவற்றைப் பயனுள்ள விதத்தில் அபிவிருத்தி செய்வதற்கான மாதிரியைத் தயாரிப்பதே தற்போதைய அவசர தேவை என கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இது தேசிய முக்கியத்துவம் மிக்கது என்பதால் நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருடன் இணைந்து உரிய வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக மீண்டும் ஒருமுறை குழு முன்னிலையில் அழைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரத்ன, நளின் பண்டார, மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-10-29
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் சீனாவின் யுனான் பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவரான யான் யாலின் அவர்களின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையில் விவசாய அபிவிருத்தி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (ஒக். 24) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தேயிலை, கோப்பி மற்றும் புகையிலை பயிர்ச்செய்கை துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த கௌரவ பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஏற்கனவே நடத்தப்பட்டதாகவும், இந்தச் சந்திப்பானது சீனத் தூதுக்குழுவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் பல்வேறு கட்டங்களில் சீனாவால் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவை பாராட்டிய கௌரவ பிரதி அமைச்சர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பிலும் விசேடமாகச் சுட்டிக்காட்டினார். இவ்வாறான உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பங்களிக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். தேயிலை, கோப்பி மற்றும் புகையிலைத் தொழில்களின் அபிவிருத்தி குறித்து இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், நவீன தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறைந்து வரும் தொழிற்படை காரணமாக எழும் சவால்களைக் வெற்றிகொள்வதற்கும், தேயிலைப் பயிர்ச்செய்கையின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் நான்காம் தலைமுறை உரங்களைப் (fourth-generation fertilizers) பயன்படுத்துவது பொருத்தமானது என்று சீன தூதுக்குழுவினர் பரிந்துரைத்தனர். கோப்பி பயிர்ச்செய்கை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கடந்த தசாப்தத்தில் இலங்கையின் கோப்பித் தொழில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளது என்று இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், கோப்பி பயிர்ச்செய்கைக்காக நில ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தற்போது 5,000 ஹெக்டெயாருக்கும் அதிகமான பரப்பளவில் கோப்பி பயிரிடப்படுவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதனை 10,000 ஹெக்டெயாராக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாககவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இலங்கையின் புகையிலைத் தொழில் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புகையிலை மூலப்பொருட்களுக்குப் பதிலாக பதப்படுத்தப்பட்ட, பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புக்களை சந்தைப்படுத்துவதன் மூலம் சர்வதேச சந்தைக்கு நுழைய முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர். இலங்கையின் புகையிலைத் தொழில் இன்னும் சிறிய அளவிலான தொழிலாகவே காணப்படுவதாகவும், தொழிற்சாலைகளை மையமாகக் கொண்ட பாரிய அளவிலான தொழில்துறையாக அதனை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் சீனப் பிரதிநிதிகள் குழுவினர் சுட்டிக்காட்டினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சீனப் பிரதிநிதிகள் குழுவினர், பாராளுமன்றத்தின் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-10-29
ஆறு மாடிக் கட்டடத்தின் நிர்மாணத்தில் மாகாணசபை அதிக சுமையை ஏற்கும் வகையில் ஒப்பந்தக்காரரினால் தயாரிக்கப்பட்ட நிர்மாணக் கொள்முதல் நடைமுறையைத் தெரிவுசெய்து – சாத்தியக்கூற்று அறிக்கையும் பெற்றுக்கொள்ளப்படவில்லை – கோபா குழு கேள்வி வடமேல் மாகாணசபை மற்றும் குருநாகல் மாநகரசபை ஆகியன இணைந்து ஆறுமாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக கேள்விப் பத்திரங்களைக் கோரி ஒப்பந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்ததுடன், இது தொடர்பில் காணப்படும் மேற்பார்வை நடவடிக்கைகள் காரணமாக இந்தக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பது அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) தெரியவந்தது. இதுபோன்ற கட்டடங்களை அமைப்பதற்கு முன்னர் சாத்தியக்கூற்று ஆய்வு அறிக்கை பெறவேண்டியிருக்கின்றபோதும் அவ்வாறான அறிக்கை பெற்றுக் கொள்ளப்படவில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. அத்துடன், விசேடமான வடிவமைப்பைக் கொண்ட கட்டுமானம் இன்றி, சாதாரண வகையிலான அலுவலகக் கட்டடத்தை அமைப்பதற்கு மேல்மாகாண சபை அதிக சுமையை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தகாரரினால் நிர்மாண கொள்முதல் நடைமுறை தெரிவுசெய்யப்பட்டிருப்பது பிரச்சினைக்குரியது என்பதும் கோபா குழுவினால் வலியுறுத்தப்பட்டது. வடமேல் மாகாணசபை தொடர்பான 2023, 2024ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 23) கூடியபோதே இந்த விடயங்கள் தெரியவந்தன. இதற்கமைய குறித்த கட்டுமானம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு மீண்டும் ஒருமுறை அதிகாரிகளை அழைப்பதற்கும், ஒரு மாத காலத்திற்குள் குறித்த கட்டடம் தொடர்பான பரிந்துரைகள், கொள்முதல் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களின் அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சகலவற்றையும் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. மேலும், உணவு ஆணையாளர் திணைக்களத்தினால் வடமேல் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக அரசி உற்பத்தியாளர்களின் கூட்டுறவுச் சங்கத்திற்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட கடன் மற்றும் தாமதக் கட்டணத்தை வசூலிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு கேட்கப்பட்டதுடன், இது தொடர்பான அறிக்கையொன்றை திகதிகள் குறிப்பிட்டு இரண்டு மாதங்களுக்குள் கோபா குழுவுக்கு அனுப்பிவைக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு அரச காணிகள் குறித்து முறையான பதிவேட்டைப் பேணுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள போதும், குறித்த பதிவேடு அரசாங்க காணிகள் யாவற்றையும் அடையாளம் காண்பது, நீண்டகால குத்தகைக்குக் கொடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட மற்றும் அனுமதியளிக்கப்படாத காணிகள், நிலுவையில் உள்ள குத்தகைத் தவணைகள் போன்ற விடயங்களை இலகுவில் கண்டறியக் கூடிய வகையில் இல்லாமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய பணத்தை வசூலிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டக்கூடாது என்றும், கோபா குழு இதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இதற்கு அமைய, இந்த ஆண்டு இறுதிக்குள் வசூலிக்கப்பட வேண்டிய மொத்த தொகை குறித்து அறிக்கை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, சுமார் 85 மில்லியன் ரூபாய் வசூலிக்கப்படாத வரித் தொகை இருப்பதாகவும், இது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கோபா குழு அறிவுறுத்தியது. இக்கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான அரவிந்த செனரத், மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருன ஜயசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, டி.கே. ஜயசுந்தர, ருவன்திலக ஜயக்கொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுத, சுனில் ரத்னசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-10-27
"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் கடந்த ஒக். 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ‘அஸ்வெசும திட்டம்’ குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், உலக வங்கியின் சமூகப் பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் பிரான்செஸ்கா லமன்னா (Francesca Lamanna) மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீனிவாஸ் வரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். சமூகப் பாதுகாப்புக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையிலேயே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள், குடும்பங்களை அடையாளம் காண முடியும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பிரஜைகளின் தகவல்களை சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் உள்ளிடுவது அவர்களை அஸ்வெசும அல்லது பிற தொடர்புடைய சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றாது என்றும், உள்ளிடப்பட்ட தரவைச் சரிபார்க்க முடியும் என்றும், தொடர்புடைய சலுகைகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது. இந்தச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாகும், எனவே தரவுத்தளத்தைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். "அஸ்வெசும" சலுகைகளை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அதன்படி, கிராம ரீதியாக அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்களைக் காண்பிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த, "அஸ்வெசும" திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததால் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் வகிபாகம் குறித்து முறையான தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் ஊடாக இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தாம் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தனர். கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கி ஆலோசகர் ஷாலிகா சுபசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
2025-10-24
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்று (ஒக். 23) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி அமைச்சின் அதிகாரிகள், 2026ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஒவ்வொரு துறைக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த விபரங்களை முன்வைத்தனர். இவ்விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


