2022-07-07
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சியாம் கேஸ் நிறுவனத்திடம் ஒரு மெற்றிக்தொன் கேஸ் 96 அமெரிக்க டொலர் வீதம் குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரலின் அடிப்படையில் (Term Tender) கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை வழங்கிய தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டு, ஒரு மெற்றிக் தொன் 129 அமெரிக்க டொலர் வீதம் ஓமான் நிறுவனமொன்றிடமிருந்து கேஸைக் கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களத்தின் ஊடாக விசாரணை நடத்துமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் நேற்றுமுன்தினம் (05) பணிப்புரை விடுத்தார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பணிப்புரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் லிற்றோ கேஸ் லங்கா நிறுவனம், லிற்றோ கேஸ் டேர்மினல் லங்கா (தனியார்) நிறுவனம் மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியன நேற்றுமுன்தினம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதமாகும்போது கேஸ் கொள்வனவு செய்வதற்காக குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், 280,000 மெற்றிக் தொன்னுக்காக கேள்விப்பத்திரம் கோரப்பட்டதாகவும் இதற்காக 3 கேஸ் விநியோகஸ்தர்கள் முன்வந்ததாகவும் இங்கு புலப்பட்டது. இதில் சியாம் கேஸ் நிறுவனம் ஒரு மெற்றிக்தொன்னுக்கு 96 அமெரிக்க டொலர் வீதம் குறைந்த விலையில் கேள்விப்பத்திரத்தை சமர்ப்பித்தமைக்கு அமைய குறித்த நிறுவனத்துக்கு இதனை வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
இருந்தபோதும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கேள்விப்பத்திரம் கோரலின் போது வழங்கப்பட்ட நிபந்தனைக்கு அமைய லிற்றோ நிறுவனத்துக்கு கடன் உறுதிக் கடிதத்தை (Standby Letter of Credit / SBLC) வழங்க இந்நாட்டிலுள்ள வங்கிகளுக்கு முடியாமல் போனமையால் சியாம் நிறுவனத்திடமிருந்து எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனதாக லிற்றோ கேஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் குறித்த நிறுவனத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதும் கேள்விப்பத்திரம் கோரல் முறையின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைக்கு அமைய கடன் உறுதிக் கடிதத்தை சமர்ப்பிக்கத் தவறியமையால் எரிவாயுவை வழங்க நிறுவனம் தயக்கம் காட்டியதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தக் காலதாமதத்தினால் ஏற்பட்ட சூழ்நிலைக்குத் தீர்வாக சியாம் நிறுவனத்திடமிருந்து இரண்டு வாரங்களுக்கு அவசியமான எரிவாயுத் தொகையான 15,000 மெற்றின்தொன்னை அவசர கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதும், 6600 மெற்றிக்தொன் எரிவாயுவை மாத்திரமே விநியோகிக்க முடியும் என அவர்கள் பதில் வழங்கியதால் கலந்துரையாடல்கள் வெற்றியளிக்கவில்லையென்றும் இங்கு புலப்பட்டது. அத்துடன், குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரலின் கீழ் ஒரு மெற்றிக்தொன்னை 129 அமெரிக்க டொலருக்கு வழங்க இணக்கம் தெரிவித்த ஓமான் நிறுவனம் மாதமொன்றுக்கு 25,000 மெற்றிக்தொன் வீதம் 4 மாதங்களுக்கு ஒரு இலட்சம் மெற்றிக்தொன் கேஸ் விநியோகத்தை வழங்க இணங்கியதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்தது.
இதற்கமைய மேற்குறிப்பிட்ட விடயம் அமைச்சரவைக்குத் தெரியப்படுத்தப்பட்டு சியாம் கேஸ் நிறுவனத்துக்கு வழங்கிய குறிப்பிட்ட காலத்துக்கான கேள்விப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு ஓமான் நிறுவனத்திடம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பதிரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்காக உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி மற்றும் லிற்றோ நிறுவனத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகியவற்றை வழங்கி 90 மில்லியன் அமெரிக்க டொலர் செலவுசெய்யப்படவிருப்பதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
எரிவாயுத் தேவை அத்தியாவசியமான அவசர தேவையாக இருக்கின்றபோதும் குறைந்த கேள்விப்பத்திரத்தை வழங்கிய சியாம் நிறுவனத்துக்குப் பதிலாக அதிக விலையில் ஓமான் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரனமாக அமையும் என்றும், இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுமாறும் கோப் குழுவின் தலைவர், கணக்காய்வாளர் திணைக்களத்துக்குத் தெரிவித்தார்.
இந்திய கடன் வசதியின் கீழ் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 160 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையில் எரிவாயுவைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இந்திய அரசாங்கத்தின் நிபந்தனைகளின்படி நாட்டில் உற்பத்தி செய்யப்படாத எரிவாயுவை கொள்வனவு செய்வதே பிரச்சினை என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். இது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இதனை உடனடியாக ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு கோப் குழுவின் தலைவர் நிதியமைச்சின் செயலாளருக்கு பரிந்துரை செய்தார்.
லிற்றோ நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு தற்பொழுது 4 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சட்டரீதியாக ஐவர் இருக்க வேண்டும் என்பதும் இங்கு புலப்பட்டது. பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் நிதி அமைச்சின் ஊடாக நியமிக்கப்படுகின்றபோதும், தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியவாறு பணிப்பாளர் சபை நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர் நிதி அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய இரு பதவிகளையும் ஒரே நபர் வைத்திருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிறுவனத்தின் தலைவர் பதவி மாறினாலும், நிறைவேற்று அதிகாரி பதவி நிரந்தரமாக இருப்பதுடன், நிறுவனம் சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதால், அதற்காக விரைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டவுடன் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு பணிப்பாளர் சபை ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ளதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் இங்கு தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு குழு பரிந்துரைத்தது.
லிட்ரோ கம்பனியின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய திறன் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜித ஹேரத் கூறுகையில், அரச வங்கியில் சுமார் 5 பில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டதன் காரணமாகவே கடந்த காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிந்தது என்றார்.
நிதி அமைச்சின் செயலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தி திறைசேரியின் உதவிச் செயலாளர் சமன் பெர்னாந்து, காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், லிற்றோ நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான விஜித ஹேரத், லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டிருந்ததுடன், லிற்றோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திசர ஜயவர்தன ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, அனுரகுமார திஸாநாயக்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கலாநிதி சரத் வீரசேகர, ஜகத் புஷ்பகுமார, இந்திக்க அனுருத்த, எஸ்.எம்.மரிக்கார், ஜயந்த சமரவீர, கலாநிதி நாலக கொடஹேவா, பிரேம்நாத் சி.தொலவத்த, மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-28
மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன. கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-07-28
பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-28
உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-21
பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர். பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.