2022-07-07
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சியாம் கேஸ் நிறுவனத்திடம் ஒரு மெற்றிக்தொன் கேஸ் 96 அமெரிக்க டொலர் வீதம் குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரலின் அடிப்படையில் (Term Tender) கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை வழங்கிய தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டு, ஒரு மெற்றிக் தொன் 129 அமெரிக்க டொலர் வீதம் ஓமான் நிறுவனமொன்றிடமிருந்து கேஸைக் கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களத்தின் ஊடாக விசாரணை நடத்துமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் நேற்றுமுன்தினம் (05) பணிப்புரை விடுத்தார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பணிப்புரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் லிற்றோ கேஸ் லங்கா நிறுவனம், லிற்றோ கேஸ் டேர்மினல் லங்கா (தனியார்) நிறுவனம் மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியன நேற்றுமுன்தினம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதமாகும்போது கேஸ் கொள்வனவு செய்வதற்காக குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், 280,000 மெற்றிக் தொன்னுக்காக கேள்விப்பத்திரம் கோரப்பட்டதாகவும் இதற்காக 3 கேஸ் விநியோகஸ்தர்கள் முன்வந்ததாகவும் இங்கு புலப்பட்டது. இதில் சியாம் கேஸ் நிறுவனம் ஒரு மெற்றிக்தொன்னுக்கு 96 அமெரிக்க டொலர் வீதம் குறைந்த விலையில் கேள்விப்பத்திரத்தை சமர்ப்பித்தமைக்கு அமைய குறித்த நிறுவனத்துக்கு இதனை வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
இருந்தபோதும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கேள்விப்பத்திரம் கோரலின் போது வழங்கப்பட்ட நிபந்தனைக்கு அமைய லிற்றோ நிறுவனத்துக்கு கடன் உறுதிக் கடிதத்தை (Standby Letter of Credit / SBLC) வழங்க இந்நாட்டிலுள்ள வங்கிகளுக்கு முடியாமல் போனமையால் சியாம் நிறுவனத்திடமிருந்து எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனதாக லிற்றோ கேஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் குறித்த நிறுவனத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதும் கேள்விப்பத்திரம் கோரல் முறையின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைக்கு அமைய கடன் உறுதிக் கடிதத்தை சமர்ப்பிக்கத் தவறியமையால் எரிவாயுவை வழங்க நிறுவனம் தயக்கம் காட்டியதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தக் காலதாமதத்தினால் ஏற்பட்ட சூழ்நிலைக்குத் தீர்வாக சியாம் நிறுவனத்திடமிருந்து இரண்டு வாரங்களுக்கு அவசியமான எரிவாயுத் தொகையான 15,000 மெற்றின்தொன்னை அவசர கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதும், 6600 மெற்றிக்தொன் எரிவாயுவை மாத்திரமே விநியோகிக்க முடியும் என அவர்கள் பதில் வழங்கியதால் கலந்துரையாடல்கள் வெற்றியளிக்கவில்லையென்றும் இங்கு புலப்பட்டது. அத்துடன், குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரலின் கீழ் ஒரு மெற்றிக்தொன்னை 129 அமெரிக்க டொலருக்கு வழங்க இணக்கம் தெரிவித்த ஓமான் நிறுவனம் மாதமொன்றுக்கு 25,000 மெற்றிக்தொன் வீதம் 4 மாதங்களுக்கு ஒரு இலட்சம் மெற்றிக்தொன் கேஸ் விநியோகத்தை வழங்க இணங்கியதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்தது.
இதற்கமைய மேற்குறிப்பிட்ட விடயம் அமைச்சரவைக்குத் தெரியப்படுத்தப்பட்டு சியாம் கேஸ் நிறுவனத்துக்கு வழங்கிய குறிப்பிட்ட காலத்துக்கான கேள்விப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு ஓமான் நிறுவனத்திடம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பதிரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்காக உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி மற்றும் லிற்றோ நிறுவனத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகியவற்றை வழங்கி 90 மில்லியன் அமெரிக்க டொலர் செலவுசெய்யப்படவிருப்பதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
எரிவாயுத் தேவை அத்தியாவசியமான அவசர தேவையாக இருக்கின்றபோதும் குறைந்த கேள்விப்பத்திரத்தை வழங்கிய சியாம் நிறுவனத்துக்குப் பதிலாக அதிக விலையில் ஓமான் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரனமாக அமையும் என்றும், இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுமாறும் கோப் குழுவின் தலைவர், கணக்காய்வாளர் திணைக்களத்துக்குத் தெரிவித்தார்.
இந்திய கடன் வசதியின் கீழ் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 160 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையில் எரிவாயுவைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இந்திய அரசாங்கத்தின் நிபந்தனைகளின்படி நாட்டில் உற்பத்தி செய்யப்படாத எரிவாயுவை கொள்வனவு செய்வதே பிரச்சினை என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். இது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இதனை உடனடியாக ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு கோப் குழுவின் தலைவர் நிதியமைச்சின் செயலாளருக்கு பரிந்துரை செய்தார்.
லிற்றோ நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு தற்பொழுது 4 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சட்டரீதியாக ஐவர் இருக்க வேண்டும் என்பதும் இங்கு புலப்பட்டது. பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் நிதி அமைச்சின் ஊடாக நியமிக்கப்படுகின்றபோதும், தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியவாறு பணிப்பாளர் சபை நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர் நிதி அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய இரு பதவிகளையும் ஒரே நபர் வைத்திருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிறுவனத்தின் தலைவர் பதவி மாறினாலும், நிறைவேற்று அதிகாரி பதவி நிரந்தரமாக இருப்பதுடன், நிறுவனம் சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதால், அதற்காக விரைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டவுடன் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு பணிப்பாளர் சபை ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ளதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் இங்கு தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு குழு பரிந்துரைத்தது.
லிட்ரோ கம்பனியின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய திறன் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜித ஹேரத் கூறுகையில், அரச வங்கியில் சுமார் 5 பில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டதன் காரணமாகவே கடந்த காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிந்தது என்றார்.
நிதி அமைச்சின் செயலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தி திறைசேரியின் உதவிச் செயலாளர் சமன் பெர்னாந்து, காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், லிற்றோ நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான விஜித ஹேரத், லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டிருந்ததுடன், லிற்றோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திசர ஜயவர்தன ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, அனுரகுமார திஸாநாயக்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கலாநிதி சரத் வீரசேகர, ஜகத் புஷ்பகுமார, இந்திக்க அனுருத்த, எஸ்.எம்.மரிக்கார், ஜயந்த சமரவீர, கலாநிதி நாலக கொடஹேவா, பிரேம்நாத் சி.தொலவத்த, மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-02-16
உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் இன்று (14) பாராளுமன்றத்தில் கூடிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், வரையறுக்கப்பட்ட தொலைக் கல்வி நிலையத்தின் 2021 மற்றம் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையும் இங்கு ஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-02-13
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 2025.02.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அவசியம் தொடர்பில் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்தது. பணியிடங்களில் பாலியல் வன்முறையை ஒழித்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) இல்லாமல் செய்வது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மார்ச் 8ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலீ குணசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கலாநிதி கெளஷல்யா ஆரியரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, தீப்தி வாசலகே, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, அம்பிகா சாமிவெல் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-02-13
சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள துறைமுகங்களை புனரமைத்தல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சு கவனம் - குழுவின் தலைவர் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் (பெப். 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர் ரத்ன கமகேவும் கலந்துகொண்டார். அதற்கமைய, இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழகத்துடனும் இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இந்நாட்டு மீனவர்களைப் பாதித்துள்ள இந்தப் பிரச்சினைக்கு முரண்பாட்டு வழியிலல்லாமல் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்துடன், சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்தல் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு உரையாற்றிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கமைய, மீன்களை விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார். சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையா நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அதற்கமைய, நுகர்வோர் எளிதாக சமைக்கும் வகையில், மீன் வகைகளை பொதி செய்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் காணப்படும் கடற்றொழில் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் டைனமைட்டைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், நன்னீர் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நாட்டின் துறைமுகங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்களை புனரமைப்பதில் அமைச்சு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான கடற்றொழி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை என்பனவும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2025-02-07
மஹாபொல புலமைப்பரிசிலை காலதாமதம் இன்றி முறையாக வழங்க நடவடிக்கை – புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க முன்மொழிவு 1100 மில்லியன் ஒதுக்கீட்டில் மஹாபொல நிதியத்தில் SLIIT நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறித்து தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்படுவதாக கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற பத்தாவது பாராளுமன்றத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழுவுடன் இணைந்து அண்மையில் (05) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் 2023ஆம் ஆண்டு 36ஆம் இலக்க புலமைத் சொத்துச் சட்டத்தின் 160அ, 161ஆ, 161இ, 161ஈ, 161உ, 161ஊ, 161எ, 161ஐ, 161ஒ மற்றும் 161ஒள ஆகிய பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 204ஆம் பிரிவின் கீழ் அப்போதைய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2024 ஒக்டோபர் 22ஆம் திகதிய 2407/04ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் இங்கு ஆராயப்பட்டு, இரண்டு குழுக்களினாலும் அங்கீகரிக்கப்பட்டன. மேலும், இங்கு 2023ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகு, நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்று அறிக்கை ஆராயப்பட்டதுடன், செயலாற்று அறிக்கைகளை காலதாமதமின்றி பாராளுமன்றத்திற்கு சமர்க்கப்படுவது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தியதுடன் குறித்த அறிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மஹாபொல நம்பிக்கை நிதியம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு SLIIT நிதியத்தின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு அமைய 1100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு மஹாபொல நம்பிக்கை நிதியத்திற்குச் சொந்தமான இடத்திலேயே SLIIT நிறுவனம் கட்டப்பட்டிருப்பதாக கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டதுடன், கடந்த காலத்தில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது குறித்த அறிக்கைகளோ, தகவல்களோ எதுவும் இல்லையென்றும் தெரிவித்தார். எனவே, இது தொடர்பில் மீண்டும் தடயவியல் கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார். அரசியல் முடிவுகளின் அடிப்படையில் மஹாபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து 97 மில்லியன் ரூபா எடுக்கப்பட்டதாகவும், அதில் 37 மில்லியன் ரூபா மீள வழங்கப்படவில்லையென்றும், இந்த விவகாரம் குறித்து விசாரணைகளும் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கும்போது, மஹாபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து 2650 ரூபா தொகையும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் 2450 ரூபா தொகையும் வழங்கப்படும் என மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் தலைவர் இங்கு தெரிவித்தார். அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக வழங்கப்படும் இந்தத் தொகை திறைசேரியிடமிருந்தே கிடைப்பதாகவும், 563 மில்லியன் ரூபா தொகை இன்னமும் கிடைக்கப்பெறவேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹாபொல நிதியம் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு மஹாபொலவை வழங்குவதற்குத் திறைசேரியிடமிருந்து வர வேண்டிய நிதி ஏற்பாடுகளை முறையாகப் பெறுவது அவசியம் என்று மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். வழங்கப்பட வேண்டியுள்ள மஹாபொல புலமைப்பரிசில் தொகையின் நிலுவையை எதிர்வரும் மாதத்திற்குள் வழங்குவதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அத்துடன், ஏப்ரல் மாதத்திலிருந்து மஹாபொல புலமைப்பரிசிலை உரிய முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மஹாபொல புலமைப்பரிசில் நிதியை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் ஜனாதிபதி இதை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் குறித்த பிரச்சினைகள் பற்றியும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மக்களுக்கு மிகவும் வினைத்திறன்மிக்க வகையில் சேவையை வழங்க பொருத்தமான நிலைமையில் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்துவதன் அவசியம் பற்றியும் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.