பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-07-07
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சியாம் கேஸ் நிறுவனத்திடம் ஒரு மெற்றிக்தொன் கேஸ் 96 அமெரிக்க டொலர் வீதம் குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரலின் அடிப்படையில் (Term Tender) கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை வழங்கிய தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டு, ஒரு மெற்றிக் தொன் 129 அமெரிக்க டொலர் வீதம் ஓமான் நிறுவனமொன்றிடமிருந்து கேஸைக் கொள்வனவு செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களத்தின் ஊடாக விசாரணை நடத்துமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் நேற்றுமுன்தினம் (05) பணிப்புரை விடுத்தார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பணிப்புரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் லிற்றோ கேஸ் லங்கா நிறுவனம், லிற்றோ கேஸ் டேர்மினல் லங்கா (தனியார்) நிறுவனம் மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியன நேற்றுமுன்தினம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தபோதே இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதமாகும்போது கேஸ் கொள்வனவு செய்வதற்காக குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், 280,000 மெற்றிக் தொன்னுக்காக கேள்விப்பத்திரம் கோரப்பட்டதாகவும் இதற்காக 3 கேஸ் விநியோகஸ்தர்கள் முன்வந்ததாகவும் இங்கு புலப்பட்டது. இதில் சியாம் கேஸ் நிறுவனம் ஒரு மெற்றிக்தொன்னுக்கு 96 அமெரிக்க டொலர் வீதம் குறைந்த விலையில் கேள்விப்பத்திரத்தை சமர்ப்பித்தமைக்கு அமைய குறித்த நிறுவனத்துக்கு இதனை வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
இருந்தபோதும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கேள்விப்பத்திரம் கோரலின் போது வழங்கப்பட்ட நிபந்தனைக்கு அமைய லிற்றோ நிறுவனத்துக்கு கடன் உறுதிக் கடிதத்தை (Standby Letter of Credit / SBLC) வழங்க இந்நாட்டிலுள்ள வங்கிகளுக்கு முடியாமல் போனமையால் சியாம் நிறுவனத்திடமிருந்து எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனதாக லிற்றோ கேஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் குறித்த நிறுவனத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதும் கேள்விப்பத்திரம் கோரல் முறையின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைக்கு அமைய கடன் உறுதிக் கடிதத்தை சமர்ப்பிக்கத் தவறியமையால் எரிவாயுவை வழங்க நிறுவனம் தயக்கம் காட்டியதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தக் காலதாமதத்தினால் ஏற்பட்ட சூழ்நிலைக்குத் தீர்வாக சியாம் நிறுவனத்திடமிருந்து இரண்டு வாரங்களுக்கு அவசியமான எரிவாயுத் தொகையான 15,000 மெற்றின்தொன்னை அவசர கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதும், 6600 மெற்றிக்தொன் எரிவாயுவை மாத்திரமே விநியோகிக்க முடியும் என அவர்கள் பதில் வழங்கியதால் கலந்துரையாடல்கள் வெற்றியளிக்கவில்லையென்றும் இங்கு புலப்பட்டது. அத்துடன், குறிப்பிட்ட காலத்துக்கான விலைமனுக் கோரலின் கீழ் ஒரு மெற்றிக்தொன்னை 129 அமெரிக்க டொலருக்கு வழங்க இணக்கம் தெரிவித்த ஓமான் நிறுவனம் மாதமொன்றுக்கு 25,000 மெற்றிக்தொன் வீதம் 4 மாதங்களுக்கு ஒரு இலட்சம் மெற்றிக்தொன் கேஸ் விநியோகத்தை வழங்க இணங்கியதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்தது.
இதற்கமைய மேற்குறிப்பிட்ட விடயம் அமைச்சரவைக்குத் தெரியப்படுத்தப்பட்டு சியாம் கேஸ் நிறுவனத்துக்கு வழங்கிய குறிப்பிட்ட காலத்துக்கான கேள்விப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு ஓமான் நிறுவனத்திடம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பதிரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்காக உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி மற்றும் லிற்றோ நிறுவனத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகியவற்றை வழங்கி 90 மில்லியன் அமெரிக்க டொலர் செலவுசெய்யப்படவிருப்பதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
எரிவாயுத் தேவை அத்தியாவசியமான அவசர தேவையாக இருக்கின்றபோதும் குறைந்த கேள்விப்பத்திரத்தை வழங்கிய சியாம் நிறுவனத்துக்குப் பதிலாக அதிக விலையில் ஓமான் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரனமாக அமையும் என்றும், இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுமாறும் கோப் குழுவின் தலைவர், கணக்காய்வாளர் திணைக்களத்துக்குத் தெரிவித்தார்.
இந்திய கடன் வசதியின் கீழ் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 160 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையில் எரிவாயுவைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இந்திய அரசாங்கத்தின் நிபந்தனைகளின்படி நாட்டில் உற்பத்தி செய்யப்படாத எரிவாயுவை கொள்வனவு செய்வதே பிரச்சினை என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். இது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இதனை உடனடியாக ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு கோப் குழுவின் தலைவர் நிதியமைச்சின் செயலாளருக்கு பரிந்துரை செய்தார்.
லிற்றோ நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு தற்பொழுது 4 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சட்டரீதியாக ஐவர் இருக்க வேண்டும் என்பதும் இங்கு புலப்பட்டது. பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் நிதி அமைச்சின் ஊடாக நியமிக்கப்படுகின்றபோதும், தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியவாறு பணிப்பாளர் சபை நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர் நிதி அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய இரு பதவிகளையும் ஒரே நபர் வைத்திருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிறுவனத்தின் தலைவர் பதவி மாறினாலும், நிறைவேற்று அதிகாரி பதவி நிரந்தரமாக இருப்பதுடன், நிறுவனம் சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதால், அதற்காக விரைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டவுடன் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு பணிப்பாளர் சபை ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ளதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் இங்கு தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு குழு பரிந்துரைத்தது.
லிட்ரோ கம்பனியின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய திறன் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜித ஹேரத் கூறுகையில், அரச வங்கியில் சுமார் 5 பில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டதன் காரணமாகவே கடந்த காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிந்தது என்றார்.
நிதி அமைச்சின் செயலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தி திறைசேரியின் உதவிச் செயலாளர் சமன் பெர்னாந்து, காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், லிற்றோ நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான விஜித ஹேரத், லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டிருந்ததுடன், லிற்றோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திசர ஜயவர்தன ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, அனுரகுமார திஸாநாயக்க, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கலாநிதி சரத் வீரசேகர, ஜகத் புஷ்பகுமார, இந்திக்க அனுருத்த, எஸ்.எம்.மரிக்கார், ஜயந்த சமரவீர, கலாநிதி நாலக கொடஹேவா, பிரேம்நாத் சி.தொலவத்த, மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-10-29
ஆறு மாடிக் கட்டடத்தின் நிர்மாணத்தில் மாகாணசபை அதிக சுமையை ஏற்கும் வகையில் ஒப்பந்தக்காரரினால் தயாரிக்கப்பட்ட நிர்மாணக் கொள்முதல் நடைமுறையைத் தெரிவுசெய்து – சாத்தியக்கூற்று அறிக்கையும் பெற்றுக்கொள்ளப்படவில்லை – கோபா குழு கேள்வி வடமேல் மாகாணசபை மற்றும் குருநாகல் மாநகரசபை ஆகியன இணைந்து ஆறுமாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக கேள்விப் பத்திரங்களைக் கோரி ஒப்பந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்ததுடன், இது தொடர்பில் காணப்படும் மேற்பார்வை நடவடிக்கைகள் காரணமாக இந்தக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பது அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) தெரியவந்தது. இதுபோன்ற கட்டடங்களை அமைப்பதற்கு முன்னர் சாத்தியக்கூற்று ஆய்வு அறிக்கை பெறவேண்டியிருக்கின்றபோதும் அவ்வாறான அறிக்கை பெற்றுக் கொள்ளப்படவில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. அத்துடன், விசேடமான வடிவமைப்பைக் கொண்ட கட்டுமானம் இன்றி, சாதாரண வகையிலான அலுவலகக் கட்டடத்தை அமைப்பதற்கு மேல்மாகாண சபை அதிக சுமையை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தகாரரினால் நிர்மாண கொள்முதல் நடைமுறை தெரிவுசெய்யப்பட்டிருப்பது பிரச்சினைக்குரியது என்பதும் கோபா குழுவினால் வலியுறுத்தப்பட்டது. வடமேல் மாகாணசபை தொடர்பான 2023, 2024ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 23) கூடியபோதே இந்த விடயங்கள் தெரியவந்தன. இதற்கமைய குறித்த கட்டுமானம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு மீண்டும் ஒருமுறை அதிகாரிகளை அழைப்பதற்கும், ஒரு மாத காலத்திற்குள் குறித்த கட்டடம் தொடர்பான பரிந்துரைகள், கொள்முதல் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களின் அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சகலவற்றையும் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. மேலும், உணவு ஆணையாளர் திணைக்களத்தினால் வடமேல் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக அரசி உற்பத்தியாளர்களின் கூட்டுறவுச் சங்கத்திற்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட கடன் மற்றும் தாமதக் கட்டணத்தை வசூலிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு கேட்கப்பட்டதுடன், இது தொடர்பான அறிக்கையொன்றை திகதிகள் குறிப்பிட்டு இரண்டு மாதங்களுக்குள் கோபா குழுவுக்கு அனுப்பிவைக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு அரச காணிகள் குறித்து முறையான பதிவேட்டைப் பேணுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள போதும், குறித்த பதிவேடு அரசாங்க காணிகள் யாவற்றையும் அடையாளம் காண்பது, நீண்டகால குத்தகைக்குக் கொடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட மற்றும் அனுமதியளிக்கப்படாத காணிகள், நிலுவையில் உள்ள குத்தகைத் தவணைகள் போன்ற விடயங்களை இலகுவில் கண்டறியக் கூடிய வகையில் இல்லாமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய பணத்தை வசூலிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டக்கூடாது என்றும், கோபா குழு இதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இதற்கு அமைய, இந்த ஆண்டு இறுதிக்குள் வசூலிக்கப்பட வேண்டிய மொத்த தொகை குறித்து அறிக்கை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, சுமார் 85 மில்லியன் ரூபாய் வசூலிக்கப்படாத வரித் தொகை இருப்பதாகவும், இது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கோபா குழு அறிவுறுத்தியது. இக்கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான அரவிந்த செனரத், மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருன ஜயசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, டி.கே. ஜயசுந்தர, ருவன்திலக ஜயக்கொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுத, சுனில் ரத்னசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-10-29
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் சீனாவின் யுனான் பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவரான யான் யாலின் அவர்களின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையில் விவசாய அபிவிருத்தி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (ஒக். 24) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தேயிலை, கோப்பி மற்றும் புகையிலை பயிர்ச்செய்கை துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த கௌரவ பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஏற்கனவே நடத்தப்பட்டதாகவும், இந்தச் சந்திப்பானது சீனத் தூதுக்குழுவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் பல்வேறு கட்டங்களில் சீனாவால் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவை பாராட்டிய கௌரவ பிரதி அமைச்சர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பிலும் விசேடமாகச் சுட்டிக்காட்டினார். இவ்வாறான உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பங்களிக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். தேயிலை, கோப்பி மற்றும் புகையிலைத் தொழில்களின் அபிவிருத்தி குறித்து இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், நவீன தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறைந்து வரும் தொழிற்படை காரணமாக எழும் சவால்களைக் வெற்றிகொள்வதற்கும், தேயிலைப் பயிர்ச்செய்கையின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் நான்காம் தலைமுறை உரங்களைப் (fourth-generation fertilizers) பயன்படுத்துவது பொருத்தமானது என்று சீன தூதுக்குழுவினர் பரிந்துரைத்தனர். கோப்பி பயிர்ச்செய்கை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கடந்த தசாப்தத்தில் இலங்கையின் கோப்பித் தொழில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளது என்று இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், கோப்பி பயிர்ச்செய்கைக்காக நில ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தற்போது 5,000 ஹெக்டெயாருக்கும் அதிகமான பரப்பளவில் கோப்பி பயிரிடப்படுவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதனை 10,000 ஹெக்டெயாராக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாககவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இலங்கையின் புகையிலைத் தொழில் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புகையிலை மூலப்பொருட்களுக்குப் பதிலாக பதப்படுத்தப்பட்ட, பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புக்களை சந்தைப்படுத்துவதன் மூலம் சர்வதேச சந்தைக்கு நுழைய முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர். இலங்கையின் புகையிலைத் தொழில் இன்னும் சிறிய அளவிலான தொழிலாகவே காணப்படுவதாகவும், தொழிற்சாலைகளை மையமாகக் கொண்ட பாரிய அளவிலான தொழில்துறையாக அதனை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் சீனப் பிரதிநிதிகள் குழுவினர் சுட்டிக்காட்டினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சீனப் பிரதிநிதிகள் குழுவினர், பாராளுமன்றத்தின் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-10-27
"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் கடந்த ஒக். 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ‘அஸ்வெசும திட்டம்’ குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், உலக வங்கியின் சமூகப் பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் பிரான்செஸ்கா லமன்னா (Francesca Lamanna) மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீனிவாஸ் வரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். சமூகப் பாதுகாப்புக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையிலேயே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள், குடும்பங்களை அடையாளம் காண முடியும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பிரஜைகளின் தகவல்களை சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் உள்ளிடுவது அவர்களை அஸ்வெசும அல்லது பிற தொடர்புடைய சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றாது என்றும், உள்ளிடப்பட்ட தரவைச் சரிபார்க்க முடியும் என்றும், தொடர்புடைய சலுகைகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது. இந்தச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாகும், எனவே தரவுத்தளத்தைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். "அஸ்வெசும" சலுகைகளை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அதன்படி, கிராம ரீதியாக அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்களைக் காண்பிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த, "அஸ்வெசும" திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததால் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் வகிபாகம் குறித்து முறையான தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் ஊடாக இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தாம் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தனர். கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கி ஆலோசகர் ஷாலிகா சுபசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
2025-10-24
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்று (ஒக். 23) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி அமைச்சின் அதிகாரிகள், 2026ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஒவ்வொரு துறைக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த விபரங்களை முன்வைத்தனர். இவ்விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks



