பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-01-20
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் பரிசீலிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு (கோப்) 2023.01.19 அன்று கூடியது. இதன்போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
1 - பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அவசியமான பரிந்துரைகளை வழங்குமாறு முன்மொழிவு
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்புக்கள் தொடர்பில் இதன்போது குழு வினவியது. பாவனையாளர்களை வலுவூட்டல், வியாபாரத்தை முறைமைப்படுத்தல் மற்றும் சிறந்த ஊக்குவிப்புக்கள் மூலம் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அதிகாரசபையின் பிரதான பொறுப்பாக இருந்தாலும் அந்த நோக்குக்கு அமைய அதிகாரசபை செயற்படுவதில்லை என குழுவின் கருத்தாக இருந்தது. அதற்கமைய பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் எவ்வாறு அதிகாரசபைக்குச் செயற்பட முடியும் என கோப் குழுவுக்கு இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு குழு பரிந்துரை வழங்கியது.
2 - பண்டங்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டம்
பண்டங்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டது. விசேடமாக, தற்போதைய முட்டை விலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய வர்த்தகம் மற்றும் விவசாய அமைச்சுகளின் செயலாளர்கள் இருவரும் உரிய அதிகாரிகளை இணைத்துக்கொண்டு முட்டையொன்றின் விலையை தீர்மனிக்கும் விலை சூத்திரத்தை மூன்று நாட்களில் தயாரித்தல் மற்றும் அதற்கமைய முட்டையொன்றுக்கான செலவை கணக்கிடுவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அது தொடர்பில் விசாரணை செய்வதற்கு அமைச்சின் செயலாளர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
3 - முட்டை விலையை தீர்மானிப்பது தொடர்பாகக் காணப்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பிரேரணை
பொதுமக்களுக்கு நிவாரண விலையில் முட்டையை வழங்கும் நோக்கில் முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மனத்துக்கு காணப்படும் தடைகளை நீக்குவதற்கான தீர்வுகளை முன்வைக்குமாறும் குழுவினால் அமைச்சின் செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
முட்டை இறக்குமதியை தடைசெய்து ஒரு சில பெரிய அளவிலான முட்டை வியாபாரிகளுக்காக பொதுமக்களுக்கு அநீதியிழைக்க இடமளிக்க முடியாது எனவும் அதற்கமைய, அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து முட்டைக்கு குறைந்தபட்ச விலையை தீர்மானிப்பது அல்லது இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
முட்டைக்குக் கட்டுப்பாட்டு விலையைப் பேணி பாவனையாளர்களை பாதுகாப்பது போன்று முட்டை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பாவனையாளர் அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்கள் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்படவேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
4 - பாவனையாளர் அதிகாரசபைக்கு விரைவில் நிரந்தரப் பணிப்பாளர் நாயகம்
பாவனையாளர் அதிகாரசபைக்கு விரைவில் நிரந்தரப் பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தற்பொழுது பல வருடங்களாக பதில் பணிப்பாளர் நாயகமே நியமிக்கப்பட்டுள்ளமை இதன்போது புலப்பட்டது. முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகம் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வுபெற்றதை அடுத்து இந்தப் பதவி வெற்றிடமாகக் காணப்படுவது குழுவில் வெளிப்பட்டது. பணிப்பாளர் நாயகம் ஒருவர் இல்லை என்பதால் சட்டத்தின் ஒருசில அதிகாரங்களை செயற்படுத்த முடியாது என கணக்காய்வாளர் நாயகம் இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைய, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி நிறுவனத்தின் பிரதான பதவியொன்றான பணிப்பாளர் நாயகப் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
அதேபோன்று, இரண்டு வாரங்களில் பணிப்பாளர் நாயகமொன்றை நியமிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
5 - அதிகாரசபையின் சட்டத்தை இற்றைப்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு வாரத்தில் அறிவிக்கவும்
2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தை இற்றைப்படுத்துவது தாமதமடைந்துள்ளதால், அதற்கான திட்டத்தை ஒரு வாரத்தில் கோப் குழுவுக்கு அறிக்கையிடுமாறும், அதற்காக அமைச்சு மட்டத்தில் குழுவொன்றை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதன்போது அமைச்சின் செயலாளர், சட்டத்தைத் திருத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து குழுவில் தெரிவித்தார். இந்தச் சட்டத்தைத் திருத்துவது சுமார் 17 வருடங்களாகத் தாமதமடைந்துள்ளதால் அந்த செயற்பாட்டை துரிதப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.
6 - பட்டதாரிகளை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்துவது தொடர்பில் வேலைத்திட்டம்
அதிகாரசபையில் தற்பொழுது பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுள்ள சுமார் 400 பட்டதாரிகளின் செயலாற்றுகை மற்றும் வினைத்திறனை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை உரிய பிரதான செயற்திறன் குறிகாட்டிகளுடன் (KPIs) ஒரு மாத காலத்துக்குள் கோப் குழுவுக்கு முன்மொழியுமாறும் கோப் குழுவின் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதேபோன்று, பாவனையாளர்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விரைவில் பதிலளிக்காமை மற்றும் செயற்படாமை என்பன தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய இந்த பட்டதாரிகளை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு விரைவாக செயற்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் குழுவில் வலியுறுத்தப்பட்டது.
7 - மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்படும் திருத்தப்பட்ட சட்டத்துக்கு அமைய ஒருங்கிணைந்த செயல்திட்டம்
அதிகாரசபைக்கு இதுவரை ஒருங்கிணைந்த செயல்திட்டமொன்று சாத்தியக்கூறுகளுடன் கூடிய ஒருங்கிணைந்த செயல்திட்டமொன்றை, திருத்த சட்டத்துக்கு அமைய மூன்று மாதங்களில் தயாரித்து கோப் குழுவுக்கு அறிக்கையிடுமாறும் கோப் குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார். நிறுவனத்தில் காணப்படும் சிக்கல்கள், பாவனையாளர்களின் பிரச்சினைகள், சுற்றிவளைப்புக்கள் போன்று நிறுவனத்தின் நோக்கு, குறிக்கோள் மற்றும் பணிகளை செயற்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த ஒருங்கிணைத்த திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
8 - ஆய்வுப் பிரிவு மற்றும் தரவு வங்கியொன்றின் அவசியம்
பாவனையாளர் அதிகாரசபையில் ஒரு குறிப்பிட்ட ஆய்வு அலகொன்றை ஆரம்பிக்குமாறும் இங்கு அறிவுறுத்தப்பட்டது. அதிகாரசபையினால் தமது பொறுப்புக்களை மேற்கொள்ளும் போது தொடர்ச்சியாக உற்பத்தி, சந்தை மற்றும் பாவனையாளர் தரவுகள் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுவதால் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு ஆய்வு அலகொன்றின் தேவை இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று, இறக்குமதி, உற்பத்தி மற்றும் விபரங்களுடன் சம்பந்தப்பட்ட தரவு வங்கியொன்றை பேணுவதன் அவசியமும் இங்கு கலந்துரையாப்பட்டது.
9 - பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அதிகாரசபை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கு விரைவான வேலைத்திட்டமொன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும் என பிரேரணை
பாவனையாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அதிகாரசபை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கு விரைவான வேலைத்திட்டமொன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும் என கோப் குழுவினால் அறிவிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புற, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத், கௌரவ டி.வீ. சானக, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ நிமல் லன்சா, கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ (சட்டத்தரணி) பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ மற்றும் கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே ஆகியோர் இந்தக் கூட்டத்தால் கலந்துகொண்டிருந்தனர்.
அதுபோன்று, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பி.எம்.பீ. அதபத்து, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பாவனையாளர் அதிகாரசபையின் தலைவர் சாந்த நிரிஎல்ல ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2025-09-15
மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தினால் தனியார் வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனை மீள் செலுத்தாதது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இலங்கை துறைமுக அதிகாரசபையின் 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த செப். 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் 2013 ஜூலை 05 ஆம் திகதி நிறுவப்பட்டது என்றும், அந்த நிறுவனம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்ற அனுமதிப்பத்திரம் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் விநியோகஸ்தராக செயற்பாடுகளை ஆரம்பித்து 2014 ஆம் ஆண்டில் தனியார் வங்கியொன்றிலிருந்து துறைமுக அதிகாரசபையின் நிறுவன உத்தரவாதத்தின் (Corporate Guarantee) மூலம் 24 மில்லியன் டொலர் கடன் பெற்றிருந்தமை இங்கு தெரியவந்தது. எனினும், இந்தத் தொகையில் 18.82 மில்லியன் டொலர்கள் (6836 மில்லியன் ரூபாய்) 2023 டிசம்பர் வரை செலுத்தப்படாமல் இருந்ததாகவும், இந்தக் கடன் தொகையை மீளப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வங்கி 2019 ஆம் ஆண்டில் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் அதிகாரசபைக்கு எதிராக இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இது தொடர்பாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன், 2022 ஜூன் மாதம் முதல் கலைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தை மூடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதற்கமைய, இது தொடர்பாக குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இவ்விடயத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை தனது பொறுப்பை நிறைவேற்றுவதில் திருப்தியடைய முடியாது என குழு இதன்போது சுட்டிக்காட்டியது. அத்துடன், நிறுவனத்தை மூடுவதன் மூலம் மாத்திரம் திருப்தியடைய முடியாது என சுட்டிக்காட்டிய குழு, கடன் செலுத்தும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு பரிந்துரைத்தது. அத்துடன், இது தொடர்பாக ஒரு உள்ளக விசாரணை நடத்தி அதற்குரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும், உள்ளகக் கணக்காய்வுப் பிரிவை சரியாக மேற்பார்வையிடுவதற்கான ஒரு பொறிமுறையை தயாரிக்குமாறும் குழு பரிந்துரைத்தது. அதற்கமைய, இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் குழுவிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, அதிகாரசபையின் கூட்டுத் திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, டி.வி. சானக்க, எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, திலின சமரக்கோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-09-12
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (செப். 11) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கிக்கு நிதிச் சுதந்திரம் இருப்பதாகவும், அந்த நிறுவனங்களைப் போலவே இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும், கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்திற்கும் மிகவும் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான நிதிச் சுதந்திரம் வழங்குவது முக்கியம் என்று இங்கு குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தற்போதுள்ள அரசியல் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அந்த நிறுவனங்களால் மிகவும் சுயாதீனமாகச் செயற்பட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதனால், நிதி அமைச்சரான கௌரவ ஜனாதிபதிக்கும் இது தொடர்பாகத் தெரியப்படுத்துவதற்கு குழு இதன்போது தீர்மானித்தது. அத்துடன், ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் குழு உறுப்பினர்களின் சம்பளம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளத்திற்கு சமமாக அமைக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு சுட்டிக்காட்டுவதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளம் திருத்தப்படும் விதத்தில் இந்த அதிகாரிகளின் சம்பளமும் திருத்தப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதுடன், அதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-09-12
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்கள் 2025.08.06ஆம் திகதி அப்பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்றையதினம் (செப். 12) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது. தலைவர் பதவிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல அவர்கள் முன்மொழிந்ததுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அரசியல் கருத்துவேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செற்பட்ட, சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், முன்னாள் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியை தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குறிப்பிட்டார். புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தலைவர் மேலும் தெரிவித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சுதத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜே.சி.அலவத்துவல, ரோஹித்த அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத் தசநாயக்க, (வைத்தியர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, எம். ஏ. எம். தாஹிர், லால் பிரேமநாத், சானக மாதுகொட ஆகியோரும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-09-11
2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் ஆராயப்பட்டது. அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கம் வலுவான நிதி செயற்திறனைப் பதிவு செய்து, அரையாண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரை ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட வருமானம் 2,241 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், மொத்தமாக சேகரிக்கப்பட்ட வருமானம் 2,318 பில்லியன் ரூபாய் எனவும், இது அரை ஆண்டு மதிப்பீட்டை விட 3% அதிகமாகும் என தரவுகளை முன்வைத்து நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவு 3,467 பில்லியன் ரூபாய் என்பதுடன், இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த செலவுடன் ஒப்பிடுகையில் 367 பில்லியன் ரூபா அதிகமாகும். இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணியாக கடன் சேவைகள் அமைந்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இது 1,984 பில்லியன் ரூபாவாகும். அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியங்கள், அஸ்வெசும மற்றும் சமுர்த்தி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட அத்தியாவசிய அரச சேவைகளுக்கான மீண்டெழும் செலவுகளும் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இலங்கை சுங்கத் திணைக்களம் 2024 ஆம் ஆண்டுடன் (ஜனவரி - ஜூன்) ஒப்பிடுகையில் 47% வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 996 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து கிடைத்த வருமானம் இந்த வளர்ச்சிக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளதுடன், இதன் மூலம் 429 பில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 220,026 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 154,537 வாகனங்களுக்கான சுங்க விடுவிப்பு நடவடிக்கைகளை இலங்கை சுங்கம் நிறைவுசெய்துள்ளதாகவும் நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், கொள்கலன்கள் விடுவிப்பு நடவடிக்கைகளுக்காக சுங்கத்தில் 9 - 10 நாட்கள் செல்வதால் இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் குழு உறுப்பினர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் வினவினர். அதன்படி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 2 - 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பொருட்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கி வருவதாகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் (IRD) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மதிப்பிடப்பட்ட வருமானம் 1,022,691 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், 1,040,388 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1.3 மில்லியன் இலங்கையர்களுக்கு TIN (Tax Identification Number) இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய முடியுமா என்று குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். எனினும், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் 3.1% ஆக இருக்கும் என்று அனுமானிக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் வரிக் கொள்கை தொடர்பான நிதி அமைச்சின் கொள்கை என்ன என்பது குறித்து குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பவற்றின் முன்னறிவிப்புகளுக்கு இடையிலான முரண்பாடு குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, சம்பிக்க ஹெட்டியாராச்சி, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks