E   |   සි   |  

2023-01-20

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாக கோப் குழு குற்றச்சாட்டு

  • எதிர்வரும் புதன்கிழமை அமைச்சின் செயலாளர்களுக்கு மீண்டும் அழைப்பு
  • பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அவசியமான பரிந்துரைகளை வழங்குமாறு முன்மொழிவு
  • பண்டங்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டம்  
  • முட்டை விலையை தீர்மானிப்பது தொடர்பாகக் காணப்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பிரேரணை

 

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் பரிசீலிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு (கோப்) 2023.01.19 அன்று கூடியது. இதன்போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

1 - பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அவசியமான பரிந்துரைகளை வழங்குமாறு முன்மொழிவு
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்புக்கள் தொடர்பில் இதன்போது குழு வினவியது. பாவனையாளர்களை வலுவூட்டல், வியாபாரத்தை முறைமைப்படுத்தல் மற்றும் சிறந்த ஊக்குவிப்புக்கள் மூலம் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அதிகாரசபையின் பிரதான பொறுப்பாக இருந்தாலும் அந்த நோக்குக்கு அமைய அதிகாரசபை செயற்படுவதில்லை என குழுவின் கருத்தாக இருந்தது. அதற்கமைய பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் எவ்வாறு அதிகாரசபைக்குச் செயற்பட முடியும் என கோப் குழுவுக்கு இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு குழு பரிந்துரை வழங்கியது.

2 - பண்டங்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டம்
பண்டங்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டது. விசேடமாக, தற்போதைய முட்டை விலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய வர்த்தகம் மற்றும் விவசாய அமைச்சுகளின் செயலாளர்கள் இருவரும் உரிய அதிகாரிகளை இணைத்துக்கொண்டு முட்டையொன்றின் விலையை தீர்மனிக்கும் விலை சூத்திரத்தை மூன்று நாட்களில் தயாரித்தல் மற்றும் அதற்கமைய முட்டையொன்றுக்கான செலவை கணக்கிடுவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அது தொடர்பில் விசாரணை செய்வதற்கு அமைச்சின் செயலாளர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

3 - முட்டை விலையை தீர்மானிப்பது தொடர்பாகக் காணப்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பிரேரணை
பொதுமக்களுக்கு நிவாரண விலையில் முட்டையை வழங்கும் நோக்கில் முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மனத்துக்கு காணப்படும் தடைகளை நீக்குவதற்கான தீர்வுகளை முன்வைக்குமாறும் குழுவினால் அமைச்சின் செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முட்டை இறக்குமதியை தடைசெய்து ஒரு சில பெரிய அளவிலான முட்டை வியாபாரிகளுக்காக பொதுமக்களுக்கு அநீதியிழைக்க இடமளிக்க முடியாது எனவும் அதற்கமைய, அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து முட்டைக்கு குறைந்தபட்ச விலையை தீர்மானிப்பது அல்லது இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

முட்டைக்குக் கட்டுப்பாட்டு விலையைப் பேணி பாவனையாளர்களை பாதுகாப்பது போன்று முட்டை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பாவனையாளர் அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்கள் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்படவேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

4 - பாவனையாளர் அதிகாரசபைக்கு விரைவில் நிரந்தரப் பணிப்பாளர் நாயகம்
பாவனையாளர் அதிகாரசபைக்கு விரைவில் நிரந்தரப் பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தற்பொழுது பல வருடங்களாக பதில் பணிப்பாளர் நாயகமே நியமிக்கப்பட்டுள்ளமை இதன்போது புலப்பட்டது. முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகம் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வுபெற்றதை அடுத்து இந்தப் பதவி வெற்றிடமாகக் காணப்படுவது குழுவில் வெளிப்பட்டது. பணிப்பாளர் நாயகம் ஒருவர் இல்லை என்பதால் சட்டத்தின் ஒருசில அதிகாரங்களை செயற்படுத்த முடியாது என கணக்காய்வாளர் நாயகம் இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைய, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி நிறுவனத்தின் பிரதான பதவியொன்றான பணிப்பாளர் நாயகப் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

அதேபோன்று, இரண்டு வாரங்களில் பணிப்பாளர் நாயகமொன்றை நியமிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

5 - அதிகாரசபையின் சட்டத்தை இற்றைப்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு வாரத்தில் அறிவிக்கவும்
2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தை இற்றைப்படுத்துவது தாமதமடைந்துள்ளதால், அதற்கான திட்டத்தை ஒரு வாரத்தில் கோப் குழுவுக்கு அறிக்கையிடுமாறும், அதற்காக அமைச்சு மட்டத்தில் குழுவொன்றை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதன்போது அமைச்சின் செயலாளர், சட்டத்தைத் திருத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து குழுவில் தெரிவித்தார். இந்தச் சட்டத்தைத் திருத்துவது சுமார் 17 வருடங்களாகத் தாமதமடைந்துள்ளதால் அந்த செயற்பாட்டை துரிதப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

6 - பட்டதாரிகளை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்துவது தொடர்பில் வேலைத்திட்டம்
அதிகாரசபையில் தற்பொழுது பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுள்ள சுமார் 400 பட்டதாரிகளின் செயலாற்றுகை மற்றும் வினைத்திறனை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை உரிய பிரதான செயற்திறன் குறிகாட்டிகளுடன் (KPIs) ஒரு மாத காலத்துக்குள் கோப் குழுவுக்கு முன்மொழியுமாறும் கோப் குழுவின் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதேபோன்று, பாவனையாளர்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விரைவில் பதிலளிக்காமை மற்றும் செயற்படாமை என்பன தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய இந்த பட்டதாரிகளை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு விரைவாக செயற்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் குழுவில் வலியுறுத்தப்பட்டது.

7 - மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்படும் திருத்தப்பட்ட சட்டத்துக்கு அமைய ஒருங்கிணைந்த செயல்திட்டம்
அதிகாரசபைக்கு இதுவரை ஒருங்கிணைந்த செயல்திட்டமொன்று சாத்தியக்கூறுகளுடன் கூடிய ஒருங்கிணைந்த செயல்திட்டமொன்றை, திருத்த சட்டத்துக்கு அமைய மூன்று மாதங்களில் தயாரித்து கோப் குழுவுக்கு அறிக்கையிடுமாறும் கோப் குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார். நிறுவனத்தில் காணப்படும் சிக்கல்கள், பாவனையாளர்களின் பிரச்சினைகள், சுற்றிவளைப்புக்கள் போன்று நிறுவனத்தின் நோக்கு, குறிக்கோள் மற்றும் பணிகளை செயற்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த ஒருங்கிணைத்த திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

8 - ஆய்வுப் பிரிவு மற்றும் தரவு வங்கியொன்றின் அவசியம்
பாவனையாளர் அதிகாரசபையில் ஒரு குறிப்பிட்ட ஆய்வு அலகொன்றை ஆரம்பிக்குமாறும் இங்கு அறிவுறுத்தப்பட்டது. அதிகாரசபையினால் தமது பொறுப்புக்களை மேற்கொள்ளும் போது தொடர்ச்சியாக உற்பத்தி, சந்தை மற்றும் பாவனையாளர் தரவுகள் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுவதால் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு ஆய்வு அலகொன்றின் தேவை இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று, இறக்குமதி, உற்பத்தி மற்றும் விபரங்களுடன் சம்பந்தப்பட்ட தரவு வங்கியொன்றை பேணுவதன் அவசியமும் இங்கு கலந்துரையாப்பட்டது.

9 - பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அதிகாரசபை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கு விரைவான வேலைத்திட்டமொன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும் என பிரேரணை
பாவனையாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அதிகாரசபை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கு விரைவான வேலைத்திட்டமொன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும் என கோப் குழுவினால் அறிவிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புற, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத், கௌரவ டி.வீ. சானக, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ நிமல் லன்சா, கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ (சட்டத்தரணி) பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ மற்றும் கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே ஆகியோர் இந்தக் கூட்டத்தால் கலந்துகொண்டிருந்தனர்.

அதுபோன்று, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பி.எம்.பீ. அதபத்து, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பாவனையாளர் அதிகாரசபையின் தலைவர் சாந்த நிரிஎல்ல ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

4 2

 



தொடர்புடைய செய்திகள்

2025-04-23

இயலாமையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவில் ஆராய்வு

இயலாமையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் போக்குவரத்துத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதன் ஊடாக சாதகமான திசையை நோக்கி போக்குவரத்துத் துறையை வழிநடத்துவது தொடர்பான இரண்டாவது உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் (ஏப். 10) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த த. சில்வா, பல்வேறு இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இயலாமையுடைய சமூகத்தினருக்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாமை அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரியதொரு பிரச்சினையாக இருப்பது இங்கு அடையளம் காணப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் முறையான அணுகல் வசதிகள் இல்லாமை காரணமாக இயலாமை உடைய நபர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் நிலை காணப்படுவதாகவும், இதற்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியிருப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். 2006ஆம் ஆண்டு 01ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் குறித்த ஒழுங்குவிதி பற்றிய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இயலாமையுடைய சமூகத்தினருக்கு உரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதன்படி, அந்தச் சட்டங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்படும்போது இயலாமையுடைய சமூகம் பெறும் நிவாரணம் குறித்தும் அவர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். சில பேருந்து நடத்துனர்களின் செயல்களால் இயலாமையுடைய நபர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதாக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவிடம் சுட்டிக்காட்டினர். இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும், இயலாமையுடைய நபர்கள் தொடர்பான அணுகுமுறைகளை மேம்படுத்தவும் சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் ஆசனங்கள், சட்டரீதியாக இயலாமையுடைய நபர்களுக்கான ஆசனங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியம், பேருந்துகளில் நிபந்தனையின்றி இயலாமையுடைய நபர்களுக்கு இடமளிக்க வேண்டியதன் அவசியம், புகையிரத நிலையங்களில் இயலாமையுடைய நபர்களுக்கான  தகவல் தொடர்பு வசதியை எளிதாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. செவிப்புலன் அற்ற சமூகத்தினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வினவப்பட்டதுடன், அவர்களுக்கு அவற்றை மீண்டும் வழங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை இரண்டு வாரங்களுக்குள் எழுத்துமூலமாக இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பெறப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பரிசீலித்த பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் உபகுழுவின் தலைவர் தெரிவித்தார்.


2025-04-23

பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து உப குழுவில் கலந்துரையாடல்

இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுகளை வழங்குமாறும் அறிவிப்பு பொதுப் போக்குவரத்து சாதனங்களின் பொருத்தப்பாட்டை ஆராய்வதற்கு சரியான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க ஒரு மாதத்திற்குள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல்   பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் அமைக்கப்பட்ட “போக்குவரத்துத் துறை தொடர்பான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் போக்குவரத்துத் துறையை நேர்மறையான திசையில் வழிநடத்துதல்" என்ற உபகுழுவில் ஆராயப்பட்டது. இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில்  2025.04.09 அன்று கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான கருத்துக்களையும் அவர்கள் குழுவிடம் முன்வைத்தனர். பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பஸ்களுக்குத் தகுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியது. மோட்டார் வாகனச் சட்டத்தின் 29வது பிரிவின் படி பஸ்கள், லொறிகள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இந்தத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனுமதி இன்றி மாகாண சபைகளில் பதிவுசெய்யப்பட்ட கராஜ்களினால் இந்தத் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தகுதிச் சான்றிதழ்களை வழங்கும் கராஜ்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையில் சிக்கல்கள் இருப்பதால், இவற்றை ஒழுங்குமுறைப் படுத்தவேண்டியதன் அவசியத்தை உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார். மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 19வது பிரிவின் கீழான நிர்மாணக் கட்டளைகளை  நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதன்படி, புதிய பஸ்களை இறக்குமதி செய்வதிலும், ஏற்கனவே உள்ள பஸ்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக இருக்கைகளுக்கு இடையில் பொருத்தமான இடைவெளி, தேவையற்ற உபரணங்களை அகற்றுதல் மற்றும் ஆசனப் பட்டிகளை அணிவது போன்ற விடயங்கள் குறித்தும் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, தொடர்புடைய தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகளுடன் கூடிய அறிக்கையைத் தயாரித்து, இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்குமாறும் உபகுழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சாரதிகளின் தொழிலை தரப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஒரு மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உபகுழுவின் தலைவர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவித்தார். அத்துடன், கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் குறித்த தரவுகளை உடனடியாக குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குழு கேட்டுக் கொண்டது. தரவுகளின் அடிப்படையில் எதிர்கால பரிந்துரைகளை வகுப்பதன் முக்கியத்துவத்தை உப குழுவின் தலைவர் வலியுறுத்தினார். பஸ் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான சட்ட விதிகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இது தொடர்பான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விதிமுறைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், சாரதிகளின் உடலில் போதைப்பொருள் இருப்பதைக் கண்டறிதல் உள்ளிட்ட தொழில்நுட்ப வழிமுறைகள் முறையாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த உபகுழு, போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் செயல்படுத்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்களை முதன்மையாக ஆராய்ந்து, பின்னர் தேவையான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையைத் தயாரிக்கும். இக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த. சில்வாவும் பங்கேற்றார்.


2025-04-10

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விஜயம் செய்த அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) நிலைமைகளை ஆராய்ந்தது

வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் தொடர்பான 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து அண்மையில் (2025.04.02) இடம்பெற்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதற்கு அமைய, விசாரணைகளை முன்னெடுப்பதறற்காக கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் கோப் குழு நேற்றையதினம் (ஏப். 09) பண்டாநரயாக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் தொலையியங்கி ஏற்றுமிடம் மற்றும் நடையோடுபாதையின் (Remote Apron and Taxiways) நிர்மாணப் பணியின் ஊடாக விமான நிலையத்தில் நிறுத்தப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், திட்டமிடல் மற்றும் ஆலோசனை சேவையப் பெற்றுகொள்வதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனம் சேவையைப் பெற்றுக் கொண்ட ஜப்பானிய கூட்டு நிறுவனமும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனமும் எந்தவொரு தொழில்நுட்ப அல்லது செயல்பாட்டு பகுப்பாய்வும் இல்லாமல் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், எதிர்பார்க்கப்பட்ட நோக்கத்தை நடைமுறைப்படுத்துவது சவாலாக இருப்பதும் இங்கு அவதானிக்கப்பட்டது. இத்திட்டம் திட்டமிடல் கட்டத்தின் போதே பல பலவீனங்களையும் நடைமுறைச் சிக்கல்களையும் கொண்டிருந்தாலும், இதையும் மீறி பணியைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதையும் குழு அவதானித்தது. தற்போதைய சூழ்நிலையில், இந்த திட்டத்தின் எதிர்பார்த்த நோக்கங்களை அடைவதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தினால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட தீர்வுகளும் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இங்கு கோப் குழுவின் உறுப்பினர்கள் ஜப்பானிய கூட்டு நிறுவனத்தின் இந்நாட்டுக்கான பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் இவ்விடயம் பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடினர். இந்த கவனக்குறைவான நடவடிக்கையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து அதிருப்தி தெரிவித்த குழு உறுப்பினர்கள், எதிர்காலத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தாமல், பொது நிதியை மேலும் தவறாகப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர். அத்துடன், இது தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தை மீண்டும் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நேரடி விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம். அஸ்லம், சமன்மலி குணசிங்க, லெப்டினட் கமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, ருவன் மாப்பலகம, சுனில் ராஜபக்ஷ, திலின சமரக்கோன், சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோரும், சம்பந்தப்பட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-04-10

இயலாமையுடைய சிறுவர்களைக் கையாழ்வது தொடர்பில் கல்வியியல் கல்லூரிகளில் கற்றுவரும் ஆசிரியர்களுக்கு ஆறு மாத பயிற்சியை வழங்குவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் முன்மொழிவு

ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு  - இலங்கையில் 9,000ற்கும் அதிகமான சிறுவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – அதிகாரிகள் குழுவில் தெரிவிப்பு முன்பிள்ளைப் பருவத்திலேயே ஆட்டிசம்  உள்ள சிறுவர்களை அடையாளம் காணும் பொறிமுறையை செயற்படுத்துங்கள் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்   இயலாமையுடைய சிறுவர்களைக் கையாழ்வது தொடர்பில் கல்வியியல் கல்லூரியில் கற்றுவரும் ஆசிரியர்களுக்கு ஆறு மாத பயிற்சியை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் இயலாமை உடைய சிறுவர்களை சாதாரண சிறுவர்களுக்கு சமமாக நடத்துவதற்கு தேவையான அறிவு மற்றும் மனப்பான்மைகளை ஆசிரியர்களுக்கு வழங்க முடியும் என நம்புவதாகவும் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்  அவர்களின் தலைமையில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் நாமல் சுதர்ஷனவும் கலந்துகொண்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இலங்கையில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டனர். இது தொடர்பான கணக்கெடுப்பிற்கு அமைய 9,000ற்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். எனவே, சரியான அடையாளம் காணப்படல்கள் இல்லாமையாலேயே சிறுவர்கள் இயலாமையுடைய நபர்களாக மாறவேண்டியிருப்பதாக குழுவின் தலைவர் வலியுறுத்தினார். முன்பிள்ளைப் பருவத்தில் ஆட்டிசம் உடைய சிறுவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும், அவ்வாறு அடையாளம் கண்டுகொண்டல் மாத்திரமே அவர்களை ஆரோக்கியம் மிக்க சிறுவர்களாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதாவது குழந்தை பிறந்தது முதல் முன்பிள்ளைப் பருவம் வரையான குடும்ப சுகாதார அதிகாரியின் மேற்பார்வைக் காலத்தில் குழந்தைகள் மீது கவனம் செலுத்துவதற்கான பொறிமுறை உரிய மட்டத்தில் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்காக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மூன்று மாதிரி பகல்நேர பராமரிப்பு மையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தலைவர் கூறினார். இதற்காகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒரு குழுவை நியமிக்கவும் முன்மொழியப்பட்டது. இதன் மூலம், அந்தக் குழந்தைகள் பொருத்தமான வளர்ச்சி நிலைகளுக்கு வழிநடத்தப்படுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. மேலும், ஆபத்து மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்கள் நிறைந்த நிலையில் காணப்படும் சிறுவர் இல்லங்கள் மற்றும் சிறுவர் நிலையங்களில் உள்ள சிறுவர்களை உயிரியல் ரீதியான குடும்பங்களிலிருந்து பிரிப்பதற்குப் பதிலாக, குடும்பத்திற்குள் பராமரிப்பை வழங்குவதன் அவசியத்தையும் குழு விரிவாகக் கலந்துரையாடியது. நீதிமன்ற செயற்பாடுகளுக்குப் பின்னர் சிறுவர் நன்னடத்தை நிலையங்களுக்கு சிறுவர்கள் அனுப்பப்படுவதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இவ்வாறு சிறுவர்கள் நிறுவனமயமாக்கப்படுவதை விட குடும்பத்திற்குள் பராமரிக்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்து நீதிபதிகளைத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பெருந்தோட்டத் துறையில் உள்ள சிறுவர்கள் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் போக்குக் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சிறுவர்கள், குழந்தைகள் பாபுல் மற்றும் பான் பராக் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை நாடுவது குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. பாவனையாளர் அதிகாரசபையின் தடைசெய்யப்பட்ட இறக்குமதி பொருட்களின் பட்டியலில் பாபுல் மற்றும் பான் பராக் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளடக்கப்படவில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. இதற்கு அமைய இந்தப் பொருட்களை தடைசெய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களின் பட்டியலில் சேர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாவனையாளர் அதிகார சபைக்கு அனுப்பவும் குழு தீர்மானித்தது. மகப்பேற்றுக்கு விடுமுறைகள் வழங்கப்படும்போது மூன்றாவது குழந்தையைப் பிரசவிப்பதற்காக விடுமுறை வழங்கப்படாத சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். மகப்பேற்றுக்கு விடுமுறை வழங்கும்போது முதல் மற்றும் இரண்டாவது பிரசவங்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே மூன்றாவது மற்றும் நான்காவது பிரசவங்களுக்கும் அதே சலுகைகளை வழங்க சட்டம் திருத்தப்பட்டுள்ளதாகவும், இது முறையாக சமூகமயமாக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழில் பணிபுரியக்கூடிய பெண் அதிகாரிகளை நியமிப்பது குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர, யாழ்ப்பாணத்தில் தற்போது 56 பெண் அதிகாரிகள் பணியாற்றுவதாகக் கூறினார். அந்தப் பெண் அதிகாரிகளில் 21 பேர் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவுகளில் பணிபுரிவதாகவும்,  அவர்களில் 8 பேர் மட்டுமே தமிழில் பணிபுரிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இங்கு, சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் தொடர்பான விடயம் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் நிகழ்ச்சிநிரல்களில் உள்ளடக்கப்படாமை தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்குத் தெரியப்படுத்தி, குறித்த குழுக் கூட்டங்களில் இவ்விடயத்தை உள்ளடக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழு கேட்டறிந்தது. தற்போது அந்தக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலில் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம் தொடர்பான விடயஙங்கள் கலந்துரையாடப்படுவதாக அதிகாரிகள் குழுவிற்குப் பதிலளித்தனர். பிரதேச செயலக மட்டத்தில் நடைபெற்ற சிறுவர் உரிமைகள் மேம்பாட்டுக் குழுவில் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், மகளிர்  மற்றும் சிறுவர் விவகாரங்கள் தொடர்பான அனைத்து அதிகாரிகளின் பங்கேற்க  வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks