2023-01-20
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் பரிசீலிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு (கோப்) 2023.01.19 அன்று கூடியது. இதன்போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
1 - பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அவசியமான பரிந்துரைகளை வழங்குமாறு முன்மொழிவு
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்புக்கள் தொடர்பில் இதன்போது குழு வினவியது. பாவனையாளர்களை வலுவூட்டல், வியாபாரத்தை முறைமைப்படுத்தல் மற்றும் சிறந்த ஊக்குவிப்புக்கள் மூலம் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அதிகாரசபையின் பிரதான பொறுப்பாக இருந்தாலும் அந்த நோக்குக்கு அமைய அதிகாரசபை செயற்படுவதில்லை என குழுவின் கருத்தாக இருந்தது. அதற்கமைய பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் எவ்வாறு அதிகாரசபைக்குச் செயற்பட முடியும் என கோப் குழுவுக்கு இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு குழு பரிந்துரை வழங்கியது.
2 - பண்டங்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டம்
பண்டங்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டது. விசேடமாக, தற்போதைய முட்டை விலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய வர்த்தகம் மற்றும் விவசாய அமைச்சுகளின் செயலாளர்கள் இருவரும் உரிய அதிகாரிகளை இணைத்துக்கொண்டு முட்டையொன்றின் விலையை தீர்மனிக்கும் விலை சூத்திரத்தை மூன்று நாட்களில் தயாரித்தல் மற்றும் அதற்கமைய முட்டையொன்றுக்கான செலவை கணக்கிடுவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அது தொடர்பில் விசாரணை செய்வதற்கு அமைச்சின் செயலாளர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
3 - முட்டை விலையை தீர்மானிப்பது தொடர்பாகக் காணப்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பிரேரணை
பொதுமக்களுக்கு நிவாரண விலையில் முட்டையை வழங்கும் நோக்கில் முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மனத்துக்கு காணப்படும் தடைகளை நீக்குவதற்கான தீர்வுகளை முன்வைக்குமாறும் குழுவினால் அமைச்சின் செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
முட்டை இறக்குமதியை தடைசெய்து ஒரு சில பெரிய அளவிலான முட்டை வியாபாரிகளுக்காக பொதுமக்களுக்கு அநீதியிழைக்க இடமளிக்க முடியாது எனவும் அதற்கமைய, அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து முட்டைக்கு குறைந்தபட்ச விலையை தீர்மானிப்பது அல்லது இறக்குமதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
முட்டைக்குக் கட்டுப்பாட்டு விலையைப் பேணி பாவனையாளர்களை பாதுகாப்பது போன்று முட்டை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பாவனையாளர் அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்கள் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்படவேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
4 - பாவனையாளர் அதிகாரசபைக்கு விரைவில் நிரந்தரப் பணிப்பாளர் நாயகம்
பாவனையாளர் அதிகாரசபைக்கு விரைவில் நிரந்தரப் பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தற்பொழுது பல வருடங்களாக பதில் பணிப்பாளர் நாயகமே நியமிக்கப்பட்டுள்ளமை இதன்போது புலப்பட்டது. முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகம் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வுபெற்றதை அடுத்து இந்தப் பதவி வெற்றிடமாகக் காணப்படுவது குழுவில் வெளிப்பட்டது. பணிப்பாளர் நாயகம் ஒருவர் இல்லை என்பதால் சட்டத்தின் ஒருசில அதிகாரங்களை செயற்படுத்த முடியாது என கணக்காய்வாளர் நாயகம் இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைய, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி நிறுவனத்தின் பிரதான பதவியொன்றான பணிப்பாளர் நாயகப் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
அதேபோன்று, இரண்டு வாரங்களில் பணிப்பாளர் நாயகமொன்றை நியமிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
5 - அதிகாரசபையின் சட்டத்தை இற்றைப்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு வாரத்தில் அறிவிக்கவும்
2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தை இற்றைப்படுத்துவது தாமதமடைந்துள்ளதால், அதற்கான திட்டத்தை ஒரு வாரத்தில் கோப் குழுவுக்கு அறிக்கையிடுமாறும், அதற்காக அமைச்சு மட்டத்தில் குழுவொன்றை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதன்போது அமைச்சின் செயலாளர், சட்டத்தைத் திருத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து குழுவில் தெரிவித்தார். இந்தச் சட்டத்தைத் திருத்துவது சுமார் 17 வருடங்களாகத் தாமதமடைந்துள்ளதால் அந்த செயற்பாட்டை துரிதப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.
6 - பட்டதாரிகளை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்துவது தொடர்பில் வேலைத்திட்டம்
அதிகாரசபையில் தற்பொழுது பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுள்ள சுமார் 400 பட்டதாரிகளின் செயலாற்றுகை மற்றும் வினைத்திறனை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை உரிய பிரதான செயற்திறன் குறிகாட்டிகளுடன் (KPIs) ஒரு மாத காலத்துக்குள் கோப் குழுவுக்கு முன்மொழியுமாறும் கோப் குழுவின் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதேபோன்று, பாவனையாளர்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விரைவில் பதிலளிக்காமை மற்றும் செயற்படாமை என்பன தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய இந்த பட்டதாரிகளை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு விரைவாக செயற்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் குழுவில் வலியுறுத்தப்பட்டது.
7 - மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்படும் திருத்தப்பட்ட சட்டத்துக்கு அமைய ஒருங்கிணைந்த செயல்திட்டம்
அதிகாரசபைக்கு இதுவரை ஒருங்கிணைந்த செயல்திட்டமொன்று சாத்தியக்கூறுகளுடன் கூடிய ஒருங்கிணைந்த செயல்திட்டமொன்றை, திருத்த சட்டத்துக்கு அமைய மூன்று மாதங்களில் தயாரித்து கோப் குழுவுக்கு அறிக்கையிடுமாறும் கோப் குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார். நிறுவனத்தில் காணப்படும் சிக்கல்கள், பாவனையாளர்களின் பிரச்சினைகள், சுற்றிவளைப்புக்கள் போன்று நிறுவனத்தின் நோக்கு, குறிக்கோள் மற்றும் பணிகளை செயற்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த ஒருங்கிணைத்த திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
8 - ஆய்வுப் பிரிவு மற்றும் தரவு வங்கியொன்றின் அவசியம்
பாவனையாளர் அதிகாரசபையில் ஒரு குறிப்பிட்ட ஆய்வு அலகொன்றை ஆரம்பிக்குமாறும் இங்கு அறிவுறுத்தப்பட்டது. அதிகாரசபையினால் தமது பொறுப்புக்களை மேற்கொள்ளும் போது தொடர்ச்சியாக உற்பத்தி, சந்தை மற்றும் பாவனையாளர் தரவுகள் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுவதால் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு ஆய்வு அலகொன்றின் தேவை இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று, இறக்குமதி, உற்பத்தி மற்றும் விபரங்களுடன் சம்பந்தப்பட்ட தரவு வங்கியொன்றை பேணுவதன் அவசியமும் இங்கு கலந்துரையாப்பட்டது.
9 - பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அதிகாரசபை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கு விரைவான வேலைத்திட்டமொன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும் என பிரேரணை
பாவனையாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அதிகாரசபை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கு விரைவான வேலைத்திட்டமொன்று ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும் என கோப் குழுவினால் அறிவிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜானக வக்கும்புற, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத், கௌரவ டி.வீ. சானக, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ நிமல் லன்சா, கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ (சட்டத்தரணி) பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ மற்றும் கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே ஆகியோர் இந்தக் கூட்டத்தால் கலந்துகொண்டிருந்தனர்.
அதுபோன்று, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பி.எம்.பீ. அதபத்து, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பாவனையாளர் அதிகாரசபையின் தலைவர் சாந்த நிரிஎல்ல ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2025-06-02
Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது, வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்திற்காக கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாததால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகியுள்ளது - கோப் குழு 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) புலப்பட்டது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் 2024 ஆம் ஆண்டில் குடியகல்வு சங்கங்களின் 5,000 அங்கத்தவர்கள் கலந்துகொண்ட மாகாண மட்டத்திலான 3 கூட்டங்களுக்கான 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சித்தட்டத்துக்கு 63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களினாலும் வழங்கப்படும் சேவைகளை, அந்த சேவைகளைப் பெறுவோர் தமது வசிக்கும் பகுதிகளையே பெறும் வகையில் நாடு பூராகவும் நடத்தப்பட்ட Glocal Fair வேலைத்திட்டத்துக்கு 1,259 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக கோப் குழுவில் புலப்பட்டன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2022 மற்றும் 2023 ஆம் நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகையை பரிசீலிப்பதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (மே 23) கூடிய போதே இந்த விடயங்கள் புலப்பட்டன. Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன், இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தில் 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 1,259 மில்லியன் ரூபாய் போன்ற பாரிய நிதி செலவு செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாறான நிதியை செலவிடுவதன் நோக்கங்களை அடைய முடிந்துள்ளதா என இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். அத்துடன், Glocal Fair வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், வர்த்தகக் கூடம் ஒன்றை ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் 5 இலட்சம் ரூபாவுக்கு வர்த்தகக் கூடம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் குழுவில் வினவப்பட்டது. எனினும் வினைத்திறனான வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்த இருந்த நிதி நோக்கம் அற்ற முறையாகத் திட்டமிடப்படாத வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் பாரிய நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்தை 5 வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய செயற்படுத்தியில்லை என்றும், அதனால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை என்றும் குழுவில் வெளிப்பட்டது. என்னினும், இலங்கை சமுர்த்தி அதிகாரசபை தற்போது அந்தத் தொகையை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இந்த வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் எத்தனை பேருக்கு சம்பந்தப்பட்ட கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று குழு அதிகாரிகளிடம் வினவியதுடன், அத்தகைய தரவு இல்லை என்று அவர்கள் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மீள் பரிசீலனை இடம்பெற்றில்லை எனத் தெரிவித்த குழுவின் தலைவர் ரடவிரு வீட்டுக் கடன் திட்டம் தொடர்பில் ஆரம்பம் முதல் தற்பொழுது வரையான தகவல்கள் அடங்கிய முழுமையான அறிக்கையொன்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். எவ்வாறாயினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகி செயற்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதுவரை 18 பில்லியனாக உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நிலையான வைப்பை மிகவும் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு திட்டமொன்று தயாரிக்கப்படுவதன் தேவை குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், செயற்பாட்டில் இல்லாத 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 5.1 பில்லியன் நிலுவை காணப்படும் குவைட் இழப்பீடு நிதியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகளிடம் குழு வினவியது. அதற்கமைய, அந்த நிதியத்தை பயன்படுத்தி வீட்டுப் பணிகளுக்காக வெளிநாட்டு செல்லும் பணியாளர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கும், பணியாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்பு தேடும் தொழிலாளர்கள் ஊடாக செய்த நிதி மோசடி குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வேலைவாய்ப்புக்காக முகவர்கள் மூலம் அல்லாமல் வெளிநாடு செல்லும் ஒவ்வொரு பணியாளர்களும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான பதிவுக்கட்டணத்தை பணியகத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், முகவர்கள் மூலம் வெளிநாடு செல்லும் போதும் அவர்களுக்கான பதிவுக்கட்டணம் பணியகத்துக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதில் 70% மீண்டும் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனத்துக்கு செலுத்தப்படுவதாக குழுவில் புலப்பட்டது. எனினும், சுயமாக செல்லும் பணியாளர்களை, முகவர்கள் மூலமாக செல்லும் பணியாளர்களாகக் காண்பித்து மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பில் கண்டறிய உப குழுவொன்றை நியமிப்பதற்கு குழுவின் தலைவர் தீர்மானித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அனுராத ஜயரத்ன, முஜிபுர் ரஹுமான், எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், (வைத்தியர்) எஸ். பவானந்தராஜா, சுஜீவ திசாநாயக்க, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், திலின சமரகோன், சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமன்த மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-05-28
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (மே 27) இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்திற்கான குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் முதலாவது அமர்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது. இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஏற்கனவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணங்கியிருந்தன. இதற்கமைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு கௌரவ அஜித் பி பெரேராவின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்மொழிந்ததுடன், அதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நீண்டகாலமாகக் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கான தீர்வுகளை உள்ளடக்கியதாக இந்தத் திருத்ததச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டதுடன் இதற்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படவேண்டியுள்ள பிரதான மாற்றங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்களான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, தனுஷ்க ரங்கனாத், அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-05-27
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகத் தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (மே 27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் நான்கு குழுக்களின் தலைமைப் பதவி ஆளும் கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்களின் பெயரை, கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க முன்மொழிந்ததுடன், இதனைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹசாரா லியனகே வழிமொழிந்தார். அத்துடன், இத்துறைசார் குழுக் கூட்டத்தில் 03.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ள தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் குறித்துக் கலந்துரையாடப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைய, ஜூன் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ளது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாசன கமகே, சட்டத்தரணி ஹசாரா லியனகே மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2025-05-26
பாராளுமன்ற நிறைவேற்றுத் தரம் மற்றும் நிறைவேற்றுத்தரம் அல்லாத பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் கட்டணத்தை திருத்துவதற்கு 2025 மே மாதம் 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவில் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு அக்குழுவின் கூட்டமொன்று கடந்த 2025.05.23 ஆம் திகதி குழுவின் தலைவர் சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்கான கட்டணத்தை 2025.06.01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பின்வருமாறு திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, நிறைவேற்றுத் தர அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 4,000 ரூபாவும், நிறைவேற்றுத்தரம் அல்லாத அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 2,500 ரூபாவும் அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்ற பொதுமக்கள் உணவகத்தில் உணவைப் பெற்றுக்கொள்ளும் கௌரவ உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடமிருந்து தற்பொழுது அறவிடப்படும் கட்டணத்தை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கும் குழு தீர்மானித்தது. இந்த கட்டணங்களைத் திருத்தம் செய்தல், பாராளுமன்ற பணியாளர்களுக்கு வழங்கும் செலவுகள் தொடர்பில் திறைசேரியினால் வழங்கப்பட்ட பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும். இந்த சபைக் குழு பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.