E   |   සි   |  

2023-06-09

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

2023.06.07 ஆம் திகதி நடைபெற்ற பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாது

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் எந்தப் பிரிவினருக்கும் அநீதி இழைக்கப்படாது

- பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதி

 

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் செய்யும்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும், எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என்றும் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்துடன் கலந்துரையாடாமல் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாது எனப் பிரதமரும் பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இளைஞர்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் நியாயமாக இருக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தை ஜூன் 07ஆம் திகதி தலைமையேற்று நடத்தியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கும்புர மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரசாங்க உத்தியோகத்தர்கள் தேர்தல் காலதாமதம் அடைந்திருப்பதால் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டாலும், சில நிறுவனங்களில் பணிகள் முறையாக நடைபெறாமல் இருப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. விவாதிக்கப்பட்டது. மேலும், சூழ்நிலைக்கு ஏற்ப, தற்காலிக பணிகளை மேற்கொள்வதில், இந்த ஊழியர்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இணைப்புகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் அருகிலுள்ள நிறுவனத்திற்கு சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.

இந்நிலையை மாற்றுவதற்கு தேவையான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இல்லாவிட்டால், வேட்புமனுவை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள் தமது தேர்தல் பிரதேசத்தில் தேர்தலில் போட்டியிடுவதில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக இது தொடர்பான சட்டமூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது விடயத்தில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து சட்டமூலம் தொடர்பான பணிகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

உள்ளுராட்சி மன்றங்கள் தற்போது உள்ளூராட்சி ஆணையாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலையிட வேண்டியதன் அவசியத்தைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் ஊடாக பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணிகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு மாகாண ஆளுநர்களுக்குப் பணிப்புரை வழங்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.

மாகாண அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உரிய இடமாற்றங்கள் வழங்கப்படாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாக உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் பிரதமர் வலியுறுத்தினார். அதன்படி, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார்.

திஸ்ஸமஹாராம முன்னாள் பிரதேச செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பாக உடனடி அறிக்கை வரவழைக்கப்பட்டு, தனிப்பட்ட காரணங்களுக்காக விருப்ப இடமாற்றம் கோரப்பட்டதாக கடிதமும் வந்துள்ளமை இங்கு தெரியவந்தது. இவ்வாறான அறிக்கையை வெளியிடுவது நியாயமானதல்ல எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

வெயாங்கொடை பிரதேச சபை உள்ளடங்கலாக பிரதேச சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்தும் விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற 85 கோரிக்கைகள் இருப்பதும் தெரியவந்தது. அதன்படி பணிகளை விரைவுபடுத்த தேவையான அறிவுரைகளைப் பிரதமர் வழங்கினார்.

2020 பட்டதாரி பயிலுனர் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதியான பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக நிரந்தர நியமனம் வழங்கப்படாதவர்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார். கொள்கை ரீதியான முடிவு எடுக்க வேண்டும் என பிரதமரின் செயலாளர் தலைமையிலான ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதன்படி, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சுமார் 30,000 பலநோக்கு திணைக்கள ஊழியர்களை தற்போது உள்ள பதவிகளில் அமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன் அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மேலும், பல ஆண்டுகளாக உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு வலியுறுத்தியது. தற்போது இவ்வாறான 9700 பணியாளர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

 

1 2

3 4

 



தொடர்புடைய செய்திகள்

2025-09-15

தனியார் வங்கியிலிருந்து மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் பெற்றுக்கொண்ட கடனை மீள் செலுத்தாமை தொடர்பில் கோப் குழுவின் கவனத்திற்கு

மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தினால் தனியார் வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனை மீள் செலுத்தாதது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டன.  இலங்கை துறைமுக அதிகாரசபையின் 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த செப். 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.  மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் 2013 ஜூலை 05 ஆம் திகதி நிறுவப்பட்டது என்றும், அந்த நிறுவனம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்ற அனுமதிப்பத்திரம் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் விநியோகஸ்தராக செயற்பாடுகளை ஆரம்பித்து 2014 ஆம் ஆண்டில் தனியார் வங்கியொன்றிலிருந்து துறைமுக அதிகாரசபையின் நிறுவன உத்தரவாதத்தின் (Corporate Guarantee) மூலம் 24 மில்லியன் டொலர் கடன் பெற்றிருந்தமை இங்கு தெரியவந்தது. எனினும், இந்தத் தொகையில் 18.82 மில்லியன் டொலர்கள் (6836 மில்லியன் ரூபாய்) 2023 டிசம்பர் வரை செலுத்தப்படாமல் இருந்ததாகவும், இந்தக் கடன் தொகையை மீளப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வங்கி 2019 ஆம் ஆண்டில் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் அதிகாரசபைக்கு எதிராக இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இது தொடர்பாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன், 2022 ஜூன் மாதம் முதல் கலைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தை மூடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதற்கமைய, இது தொடர்பாக குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இவ்விடயத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை தனது பொறுப்பை நிறைவேற்றுவதில் திருப்தியடைய முடியாது என குழு இதன்போது சுட்டிக்காட்டியது. அத்துடன், நிறுவனத்தை மூடுவதன் மூலம் மாத்திரம் திருப்தியடைய முடியாது என சுட்டிக்காட்டிய குழு, கடன் செலுத்தும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு பரிந்துரைத்தது. அத்துடன், இது தொடர்பாக ஒரு உள்ளக விசாரணை நடத்தி அதற்குரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும், உள்ளகக் கணக்காய்வுப் பிரிவை சரியாக மேற்பார்வையிடுவதற்கான ஒரு பொறிமுறையை தயாரிக்குமாறும்  குழு பரிந்துரைத்தது. அதற்கமைய, இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் குழுவிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, அதிகாரசபையின் கூட்டுத் திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, டி.வி. சானக்க, எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, திலின சமரக்கோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-09-12

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (செப். 11) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.  இலங்கை மத்திய வங்கிக்கு நிதிச் சுதந்திரம் இருப்பதாகவும், அந்த நிறுவனங்களைப் போலவே இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும், கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்திற்கும் மிகவும் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான நிதிச் சுதந்திரம் வழங்குவது முக்கியம் என்று இங்கு குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தற்போதுள்ள அரசியல் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அந்த நிறுவனங்களால் மிகவும் சுயாதீனமாகச் செயற்பட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதனால், நிதி அமைச்சரான கௌரவ ஜனாதிபதிக்கும் இது தொடர்பாகத் தெரியப்படுத்துவதற்கு குழு இதன்போது தீர்மானித்தது.  அத்துடன், ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் குழு உறுப்பினர்களின் சம்பளம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளத்திற்கு சமமாக அமைக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு சுட்டிக்காட்டுவதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளம் திருத்தப்படும் விதத்தில் இந்த அதிகாரிகளின் சம்பளமும் திருத்தப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதுடன், அதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-09-12

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்கள் 2025.08.06ஆம் திகதி அப்பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்றையதினம் (செப். 12) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது. தலைவர் பதவிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல அவர்கள் முன்மொழிந்ததுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அரசியல் கருத்துவேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செற்பட்ட, சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், முன்னாள் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியை தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குறிப்பிட்டார். புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தலைவர் மேலும் தெரிவித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சுதத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜே.சி.அலவத்துவல, ரோஹித்த அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத் தசநாயக்க, (வைத்தியர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, எம். ஏ. எம். தாஹிர், லால் பிரேமநாத், சானக மாதுகொட ஆகியோரும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2025-09-11

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் ஆராயப்பட்டது. அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கம் வலுவான நிதி செயற்திறனைப் பதிவு செய்து, அரையாண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரை ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட வருமானம் 2,241 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், மொத்தமாக சேகரிக்கப்பட்ட வருமானம் 2,318 பில்லியன் ரூபாய் எனவும், இது அரை ஆண்டு மதிப்பீட்டை விட 3% அதிகமாகும் என தரவுகளை முன்வைத்து நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவு 3,467 பில்லியன் ரூபாய் என்பதுடன், இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த செலவுடன் ஒப்பிடுகையில் 367 பில்லியன் ரூபா அதிகமாகும். இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணியாக கடன் சேவைகள் அமைந்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இது 1,984 பில்லியன் ரூபாவாகும். அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியங்கள், அஸ்வெசும மற்றும் சமுர்த்தி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட அத்தியாவசிய அரச சேவைகளுக்கான மீண்டெழும் செலவுகளும் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இலங்கை சுங்கத் திணைக்களம் 2024 ஆம் ஆண்டுடன் (ஜனவரி - ஜூன்) ஒப்பிடுகையில் 47% வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 996 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து கிடைத்த வருமானம் இந்த வளர்ச்சிக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளதுடன், இதன் மூலம் 429 பில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 220,026 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 154,537 வாகனங்களுக்கான சுங்க விடுவிப்பு நடவடிக்கைகளை இலங்கை சுங்கம் நிறைவுசெய்துள்ளதாகவும் நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், கொள்கலன்கள் விடுவிப்பு நடவடிக்கைகளுக்காக சுங்கத்தில் 9 - 10 நாட்கள் செல்வதால் இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் குழு உறுப்பினர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் வினவினர். அதன்படி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 2 - 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பொருட்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கி வருவதாகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.  உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் (IRD) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மதிப்பிடப்பட்ட வருமானம் 1,022,691 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், 1,040,388 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1.3 மில்லியன் இலங்கையர்களுக்கு TIN (Tax Identification Number) இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய முடியுமா என்று குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். எனினும், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் 3.1% ஆக இருக்கும் என்று அனுமானிக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் வரிக் கொள்கை தொடர்பான நிதி அமைச்சின் கொள்கை என்ன என்பது குறித்து குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பவற்றின் முன்னறிவிப்புகளுக்கு இடையிலான முரண்பாடு குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, சம்பிக்க ஹெட்டியாராச்சி, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks