E   |   සි   |  

2023-06-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு, சர்வதேச வியாபாரங்களை ஒழுங்குமுறைப்படுத்த பொறிமுறையொன்று அவசியம் – வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண் பெறுமானத்தை அதிகரிப்பது குறித்த விசேட குழுவில் அவதானம்

இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் வியாபார செயற்பாடுகள், அவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வரி அறவீடுகளை மேற்கொள்ளல் போன்றவற்றை ஒழுங்குமுறைப்படுத்த இதுவரை உரிய பொறிமுறையொன்று இல்லையென்றும், இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ மதுர விதானகே தலைமையில் அண்மையில் (ஜூன் 13) கூடிய இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான  பாராளுமன்ற விசேட குழுவிலேயே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

தற்பொழுது காணப்படும் தொழில்வழங்குநருக்கும் ஊழியருக்கும் இடையில் காணப்படும் பாரம்பரிய தொழில் ஏற்பாடுகளுக்கு மாறாக தொழிற் சந்தையில் சுயமான தொழிலாளர்கள் (Freelancer) உள்ளடங்கலாக பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டுள்ள பொருளாதாரம் அல்லது கிக் பொருளாதார நிலைமை (Gig economy) தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

ஒன்லைன் தளங்களின் ஊடாக வர்த்தங்களில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் வரிகளைச் செலுத்தாது பெருமளவு பணத்தை வெளிநாட்டிலுள்ள தமது வங்கிக் கணக்குகளுக்குப் பெற்றுக் கொள்வது இங்கு தெரியவந்தது. இதற்கமைய இணையத்தை அடிப்படையாகக் கொண்டு வணிகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு சம வர்த்தக சூழலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

வர்த்தக வங்கிகளின் தலைவர்கள், ஒன்லைன் தளங்களில் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிரடிட் கார்ட் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கிக் பொருளாதாரம் (Gig Economy)வேகமாக வளர்ச்சிகண்டு வருவதால், ஒன்லைன் தளங்களின் ஊடான வர்த்தக செயற்பாடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இவற்றை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் அதேநேரம், டிஜிட்டல் சேவை வரியொன்றை அறிமுகப்படுத்துவது குறித்தும் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், டிஜிட்டல் தளங்களைக் கொண்ட வர்த்தகங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் பலவற்றை நாட்டுக்குள் ஈர்ப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.

பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் ஏற்படும் வரி சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான இரண்டாவது தூண் தீர்வுக்கு அமைய (G20 /OECD) 140 உறுப்பினர்களைக் கொண்ட உலக அமைப்பில் இலங்கை, பாகிஸ்தான், கென்யா மற்றும் நைஜீரியா போன்ற நான்கு நாடுகள் மாத்திரமே கைச்சாத்திடவில்லை என்பதும் இங்கு புலப்பட்டது.

அதேநேரம், நாணயத் தாள்களுக்குப் பதிலாக டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை ஊக்குவிப்பதன் அவசியம் குறித்தும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். நாணயத் தாள்களை அச்சிட்டு அவற்றைப் பயன்பாட்டுக்கு விடுவதற்கு வருடாந்தம் 3.2 பில்லியன் செலவு ஏற்படுவதாகவும், டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை அதிகரிப்பதன் ஊடாக இந்தச் செலவீனங்களைக் குறைக்க முடியும் என இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை ஊக்கப்படுத்துவது தொடர்பில் மத்திய வங்கி தயாரித்துள்ள திட்டம் குறித்த அறிக்கையொன்றைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் கௌரவ லலித் வர்ணகுமார ஆகியோர் கலந்துகொண்டனர்.

மத்திய வங்கி, சட்டமா அதிபர் திணைக்களம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, நிதி அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், அவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் இதில் பங்கெடுத்திருந்தனர். நிறுவனங்களின் பதிவாளர் நாயகம், மத்திய வங்கி, கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, HNB வங்கி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, NDB வங்கி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின் தலைவர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், சிரேஷ்ட முகாமையாளர்கள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும், இலங்கையில் உள்ள ஒன்லைன் சேவை வழங்குனர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Lanka Pay, Pick me, Uber, Master, Visa, Daraz ஆகிய நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் இக்குழுவில் தமது கருத்துக்களை முன்வைத்தனர். எந்தவொரு சட்டத்திலும் குறிப்பிடப்படாத வரையில் நிறுவனங்களைப் பதிவு செய்வதை கட்டாயப்படுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முடியாது என்றும், நிறுவனப் பதிவுத் துறையானது தகவல்களைத் தாக்கல் செய்யும் முகவராகச் செயல்படும் என்றும் குழுவில் கலந்துகொண்டிருந்த நிறுவனப் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டினர். தனிநபர் வியாபாரங்கள் மற்றும் பங்குடமைகள் பிரதேச செயலகங்களினால் பதிவுசெய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை முதலீடு செய்தல் மற்றும் வழங்குதல் என்பன இருவேறுபட்ட விடயங்கள் என அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திருமதி விவேகா சிறிவர்தன தெரிவித்தார்.இலங்கையில் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் உள்ளூர் நிறுவனங்கள் அரசாங்கத்திற்கும் வரி செலுத்துகின்றபோதும் சில சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு முறையாக வரி செலுத்துவதில்லை என்பதும் இங்கு தெரியவந்தது.

 

1 2

3

 



தொடர்புடைய செய்திகள்

2025-06-02

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளது - கோப் குழுவில் புலப்பட்டது

Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது, வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்திற்காக கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாததால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகியுள்ளது - கோப் குழு   2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) புலப்பட்டது.  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் 2024 ஆம் ஆண்டில் குடியகல்வு சங்கங்களின் 5,000 அங்கத்தவர்கள் கலந்துகொண்ட மாகாண மட்டத்திலான 3 கூட்டங்களுக்கான 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சித்தட்டத்துக்கு 63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களினாலும் வழங்கப்படும் சேவைகளை, அந்த சேவைகளைப் பெறுவோர் தமது வசிக்கும் பகுதிகளையே பெறும் வகையில் நாடு பூராகவும் நடத்தப்பட்ட Glocal Fair வேலைத்திட்டத்துக்கு 1,259 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக கோப் குழுவில் புலப்பட்டன.     இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2022 மற்றும் 2023 ஆம் நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகையை பரிசீலிப்பதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (மே 23) கூடிய போதே இந்த விடயங்கள் புலப்பட்டன. Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன், இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தில் 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 1,259 மில்லியன் ரூபாய் போன்ற பாரிய நிதி செலவு செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாறான நிதியை செலவிடுவதன் நோக்கங்களை அடைய முடிந்துள்ளதா என இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். அத்துடன்,  Glocal Fair வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், வர்த்தகக் கூடம் ஒன்றை ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் 5 இலட்சம் ரூபாவுக்கு வர்த்தகக் கூடம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் குழுவில் வினவப்பட்டது. எனினும் வினைத்திறனான வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்த இருந்த நிதி நோக்கம் அற்ற முறையாகத் திட்டமிடப்படாத வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் பாரிய நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்தை 5 வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய செயற்படுத்தியில்லை என்றும், அதனால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை என்றும் குழுவில் வெளிப்பட்டது. என்னினும், இலங்கை சமுர்த்தி அதிகாரசபை தற்போது அந்தத் தொகையை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இந்த வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் எத்தனை பேருக்கு சம்பந்தப்பட்ட கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று குழு அதிகாரிகளிடம் வினவியதுடன்,   அத்தகைய தரவு இல்லை என்று அவர்கள் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மீள் பரிசீலனை இடம்பெற்றில்லை எனத் தெரிவித்த குழுவின் தலைவர் ரடவிரு வீட்டுக் கடன் திட்டம் தொடர்பில் ஆரம்பம் முதல் தற்பொழுது வரையான தகவல்கள் அடங்கிய முழுமையான அறிக்கையொன்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். எவ்வாறாயினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகி செயற்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதுவரை 18 பில்லியனாக உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நிலையான வைப்பை மிகவும் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு திட்டமொன்று தயாரிக்கப்படுவதன் தேவை குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், செயற்பாட்டில் இல்லாத 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 5.1 பில்லியன் நிலுவை காணப்படும் குவைட் இழப்பீடு நிதியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகளிடம் குழு வினவியது. அதற்கமைய, அந்த நிதியத்தை பயன்படுத்தி வீட்டுப் பணிகளுக்காக வெளிநாட்டு செல்லும் பணியாளர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கும், பணியாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்பு தேடும் தொழிலாளர்கள் ஊடாக செய்த நிதி மோசடி குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வேலைவாய்ப்புக்காக முகவர்கள் மூலம் அல்லாமல் வெளிநாடு செல்லும் ஒவ்வொரு பணியாளர்களும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான பதிவுக்கட்டணத்தை பணியகத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், முகவர்கள் மூலம் வெளிநாடு செல்லும் போதும் அவர்களுக்கான பதிவுக்கட்டணம் பணியகத்துக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதில் 70% மீண்டும் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனத்துக்கு செலுத்தப்படுவதாக குழுவில் புலப்பட்டது. எனினும், சுயமாக செல்லும் பணியாளர்களை, முகவர்கள் மூலமாக செல்லும் பணியாளர்களாகக் காண்பித்து மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பில் கண்டறிய உப குழுவொன்றை நியமிப்பதற்கு குழுவின் தலைவர் தீர்மானித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அனுராத ஜயரத்ன, முஜிபுர் ரஹுமான், எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், (வைத்தியர்) எஸ். பவானந்தராஜா, சுஜீவ திசாநாயக்க, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், திலின சமரகோன், சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமன்த மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-05-28

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவு

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (மே 27) இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்திற்கான குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் முதலாவது அமர்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது. இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஏற்கனவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணங்கியிருந்தன. இதற்கமைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு கௌரவ அஜித் பி பெரேராவின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்மொழிந்ததுடன், அதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நீண்டகாலமாகக் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கான தீர்வுகளை உள்ளடக்கியதாக இந்தத் திருத்ததச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டதுடன் இதற்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படவேண்டியுள்ள பிரதான மாற்றங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்களான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, தனுஷ்க ரங்கனாத், அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2025-05-27

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவு

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகத் தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (மே 27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் நான்கு குழுக்களின் தலைமைப் பதவி ஆளும் கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்களின் பெயரை, கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க முன்மொழிந்ததுடன், இதனைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹசாரா லியனகே வழிமொழிந்தார். அத்துடன், இத்துறைசார் குழுக் கூட்டத்தில் 03.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ள தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் குறித்துக் கலந்துரையாடப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைய, ஜூன் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ளது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாசன கமகே, சட்டத்தரணி ஹசாரா லியனகே மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2025-05-26

பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் விலையில் திருத்தம்

பாராளுமன்ற நிறைவேற்றுத் தரம் மற்றும் நிறைவேற்றுத்தரம் அல்லாத பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் கட்டணத்தை திருத்துவதற்கு 2025 மே மாதம் 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவில் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு அக்குழுவின் கூட்டமொன்று கடந்த 2025.05.23 ஆம் திகதி குழுவின் தலைவர் சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்கான கட்டணத்தை 2025.06.01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பின்வருமாறு திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, நிறைவேற்றுத் தர அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 4,000 ரூபாவும், நிறைவேற்றுத்தரம் அல்லாத அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 2,500 ரூபாவும் அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்ற பொதுமக்கள் உணவகத்தில் உணவைப் பெற்றுக்கொள்ளும் கௌரவ உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடமிருந்து தற்பொழுது அறவிடப்படும் கட்டணத்தை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கும் குழு தீர்மானித்தது. இந்த கட்டணங்களைத் திருத்தம் செய்தல், பாராளுமன்ற பணியாளர்களுக்கு வழங்கும் செலவுகள் தொடர்பில் திறைசேரியினால் வழங்கப்பட்ட பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும். இந்த சபைக் குழு பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks