2023-10-19
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் கூடிய (ஒக். 17) அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அழைக்கப்பட்டது.
இதில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு அதிகார சபை குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை ஆராயப்பட்டன. இந்தக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயாளர் டபிள்யூ.எஸ் சத்தியானந்தா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, பொது முகாமையாளர் (பதில்) கே.ஏ.ஜனக மற்றும் ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு கீழ்வரும் விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது,
சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகள் 16 பதில் பதவிகளாகக் காணப்படுகின்றமை
அதிகாரசபையின் பொது முகாமையாளர் பதவி, பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) உள்ளிட்ட 16 சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகள் பதில் பதவிநிலைகளாகக் காணப்படுகின்றமை குறித்து இங்கு தகவல்கள் வெளியாகின. முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள முறைமைக்கு அப்பால் வெளியிலிருந்து ஆட்சேர்ப்புக்களை அதிகார சபை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்புக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அத்துடன், பிரதித் தலைவரின் தலைமையில் உள்ளகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
பில்லியன் கணக்கான பணம் பரிமாற்றம் செய்யப்படும் இந்த அதிகாரசபையில் பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) பதவி உள்ளிட்டவை கூட பதில் பதவிநிலைகளாகக் கணாப்படுகின்றமை பிரச்சினைக்குரிய விடயம் என்றும், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் குறிப்பிடுகையில், பதில் பதவி நிலைகளாக உள்ள 16 பதவிகளுக்கும் 5 பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளனர் என்றார். எனவே, இந்தப் பதவி நிலைகளுக்கு உள்ளக ரீதியில் தகுதி பெற்றவர்கள் மற்றும் தகுதி பெற்ற வெளியகத்தவர்களையும் ஆட்சேர்ப்புச் செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது. இதற்கமைய மிகவும் வெளிப்படையான முறையைத் தயாரித்து அதனை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிவிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்குக் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அத்துடன், தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் பதவி நிலைகளில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.
எவ்வித பிணையும் இன்றி ஏறத்தாழ 10,000 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டமை
இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நஷ்டம் இருபது பில்லியன் ரூபாவை நெருக்கியிருப்பதாக இங்கு தெரியவந்தது. அத்துடன் கடந்த ஐந்து வருடங்களில் மாத்திரம் 5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டினார். கடன் பெற்றவர்களிடம் இருந்து 10 பில்லியன் ரூபா அறவிடப்பட உள்ளதாகவும் தெரியவந்தது.
பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் அமைச்சர்களின் ஆட்சியில் அதிகார சபைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார். 2011 ஆம் ஆண்டு, 'உபஹாரா' எனும் வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ், எந்தவொரு பிணையும் இன்றி கடன் பெற்றவர்களுக்கு கிட்டத்தட்ட 10,000 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமையும் இங்கு தெரியவந்தது. அரச வங்கிகளினூடாக வழங்கப்பட்ட இந்தக் கடன்களால் அதிகாரசபையின் கணக்குகள் மாத்திரமே பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இந்தப் பணத்தை வசூலிப்பது கடும் சிக்கலாக மாறியுள்ளதாகவும், மேலும் மூன்று பில்லியனுக்கும் அதிகமாக வசூல் செய்யப்படவேண்டி இருப்பதாகவும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி, இந்தக் கடன் திட்டம் குறித்த சுருக்கமான அறிக்கையை விரைவில் குழுவிடம் வழங்குமாறு கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். மேலும், நிறுவனத்தின் சொத்துக்களை அடமானமாக வைத்து இதுபோன்ற கடன் திட்டங்களை செயல்படுத்துவதை தடுக்க உடனடியாக சுற்றறிக்கை வெளியிடவும் திறைசேரியின் பிரதிச் செயலாளருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
ஆண்டு அறிக்கைகளில் தாமதம்
2019ஆம் ஆண்டிலிருந்து வருடாந்த அறிக்கைகளை அதிகார சபை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லையென்றும் இங்கு அதிருப்தி வெளியிடப்பட்டது. 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளின் ஆண்டறிக்கைகளை 2023 நவம்பர் 17ஆம் திகதிக்கு முன்னரும், 2022ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னரும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் கடன் விபரங்களையும் திரட்டி கணினி மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பை அமைக்கவும்
வீடுகளுக்காக வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பது தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள தரவுகளை ஒருங்கிணைக்கும் கணினிக் கட்டமைப்பொன்று இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது. எனவே, கூடிய விரைவில் ஒருங்கிணைந்த தரவுக் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான கட்டமைப்பொன்று இல்லாததன் காரணமாகப் பாரிய மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து தரவுக் கட்டமைப்பொன்றை அமைக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், டிசம்பர் 31ம் திகதிக்குள் இந்தப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
பாதியில் இடைநிறுத்தப்பட்ட 98000 வீடுகளின் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குதல்
தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட 98,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த வீடுகளை கட்டி முடிக்க மேலும் 24000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதுவரை 3750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார். இதன்படி எதிர்காலத்தில் இதற்குத் தேவையான ஏற்பாடுகளை வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.
பயிற்சிபெறும் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்
2015-2019 காலப்பகுதியில் 5296 பயிற்சி பெறும் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஏறத்தாழ 2800 பேர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இவர்கள் களப்பணிக்காக அனுப்பப்பட்டதாகவும், 2148 மில்லியன் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது. தேவைக்கு அதிகமாக இருக்கும் பயிற்சி பெறும் பணியாளர்களை நீக்கிவிட்டு தற்போது 167 பயிற்சி பெற்ற ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று விசேட பரிந்துரைகள்
கடன் வசூலிக்கும் முறை, கடன் வழங்கும் முறை, காணிகளை அப்புறப்படுத்தல் முறை குறித்து இரண்டு மாதங்களுக்குள் விரிவான அறிக்கையொன்றை வழங்குமாறும் குழு பரிந்துரைத்தது. மேலும் வெளிப்படைத்தன்மையுடன் காணி குறித்த ஆவணத்தை இணையதளத்திலோ அல்லது வேறு வழியிலோ பகிரங்கப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.
மூன்று மாதங்களில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை மீண்டும் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஸ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ நிமல் லான்சா, கௌரவ நளின் பண்டார ஜயமஹா, கௌரவ எஸ்.எம்.மரிக்கார், கௌரவ ஜகத் குமார, சுமித்ராரச்சி, கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம்.ராமேஸ்வரன் மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் இந்தக் குழுவில் கலந்துகொண்டனர்.
2025-07-28
மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன. கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-07-28
உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-28
பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-21
பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர். பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.