பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-10-19
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் கூடிய (ஒக். 17) அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அழைக்கப்பட்டது.
இதில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு அதிகார சபை குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை ஆராயப்பட்டன. இந்தக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயாளர் டபிள்யூ.எஸ் சத்தியானந்தா, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, பொது முகாமையாளர் (பதில்) கே.ஏ.ஜனக மற்றும் ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு கீழ்வரும் விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது,
சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகள் 16 பதில் பதவிகளாகக் காணப்படுகின்றமை
அதிகாரசபையின் பொது முகாமையாளர் பதவி, பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) உள்ளிட்ட 16 சிரேஷ்ட முகாமைத்துவப் பதவிகள் பதில் பதவிநிலைகளாகக் காணப்படுகின்றமை குறித்து இங்கு தகவல்கள் வெளியாகின. முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள முறைமைக்கு அப்பால் வெளியிலிருந்து ஆட்சேர்ப்புக்களை அதிகார சபை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்புக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அத்துடன், பிரதித் தலைவரின் தலைமையில் உள்ளகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
பில்லியன் கணக்கான பணம் பரிமாற்றம் செய்யப்படும் இந்த அதிகாரசபையில் பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) பதவி உள்ளிட்டவை கூட பதில் பதவிநிலைகளாகக் கணாப்படுகின்றமை பிரச்சினைக்குரிய விடயம் என்றும், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் குறிப்பிடுகையில், பதில் பதவி நிலைகளாக உள்ள 16 பதவிகளுக்கும் 5 பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளனர் என்றார். எனவே, இந்தப் பதவி நிலைகளுக்கு உள்ளக ரீதியில் தகுதி பெற்றவர்கள் மற்றும் தகுதி பெற்ற வெளியகத்தவர்களையும் ஆட்சேர்ப்புச் செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது. இதற்கமைய மிகவும் வெளிப்படையான முறையைத் தயாரித்து அதனை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிவிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்குக் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அத்துடன், தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் பதவி நிலைகளில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.
எவ்வித பிணையும் இன்றி ஏறத்தாழ 10,000 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டமை
இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நஷ்டம் இருபது பில்லியன் ரூபாவை நெருக்கியிருப்பதாக இங்கு தெரியவந்தது. அத்துடன் கடந்த ஐந்து வருடங்களில் மாத்திரம் 5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டினார். கடன் பெற்றவர்களிடம் இருந்து 10 பில்லியன் ரூபா அறவிடப்பட உள்ளதாகவும் தெரியவந்தது.
பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் அமைச்சர்களின் ஆட்சியில் அதிகார சபைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார். 2011 ஆம் ஆண்டு, 'உபஹாரா' எனும் வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ், எந்தவொரு பிணையும் இன்றி கடன் பெற்றவர்களுக்கு கிட்டத்தட்ட 10,000 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமையும் இங்கு தெரியவந்தது. அரச வங்கிகளினூடாக வழங்கப்பட்ட இந்தக் கடன்களால் அதிகாரசபையின் கணக்குகள் மாத்திரமே பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் இந்தப் பணத்தை வசூலிப்பது கடும் சிக்கலாக மாறியுள்ளதாகவும், மேலும் மூன்று பில்லியனுக்கும் அதிகமாக வசூல் செய்யப்படவேண்டி இருப்பதாகவும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி, இந்தக் கடன் திட்டம் குறித்த சுருக்கமான அறிக்கையை விரைவில் குழுவிடம் வழங்குமாறு கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். மேலும், நிறுவனத்தின் சொத்துக்களை அடமானமாக வைத்து இதுபோன்ற கடன் திட்டங்களை செயல்படுத்துவதை தடுக்க உடனடியாக சுற்றறிக்கை வெளியிடவும் திறைசேரியின் பிரதிச் செயலாளருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
ஆண்டு அறிக்கைகளில் தாமதம்
2019ஆம் ஆண்டிலிருந்து வருடாந்த அறிக்கைகளை அதிகார சபை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லையென்றும் இங்கு அதிருப்தி வெளியிடப்பட்டது. 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளின் ஆண்டறிக்கைகளை 2023 நவம்பர் 17ஆம் திகதிக்கு முன்னரும், 2022ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னரும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் கடன் விபரங்களையும் திரட்டி கணினி மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பை அமைக்கவும்
வீடுகளுக்காக வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பது தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள தரவுகளை ஒருங்கிணைக்கும் கணினிக் கட்டமைப்பொன்று இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது. எனவே, கூடிய விரைவில் ஒருங்கிணைந்த தரவுக் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான கட்டமைப்பொன்று இல்லாததன் காரணமாகப் பாரிய மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து தரவுக் கட்டமைப்பொன்றை அமைக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், டிசம்பர் 31ம் திகதிக்குள் இந்தப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
பாதியில் இடைநிறுத்தப்பட்ட 98000 வீடுகளின் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குதல்
தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட 98,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த வீடுகளை கட்டி முடிக்க மேலும் 24000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதுவரை 3750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார். இதன்படி எதிர்காலத்தில் இதற்குத் தேவையான ஏற்பாடுகளை வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.
பயிற்சிபெறும் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்
2015-2019 காலப்பகுதியில் 5296 பயிற்சி பெறும் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஏறத்தாழ 2800 பேர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. இவர்கள் களப்பணிக்காக அனுப்பப்பட்டதாகவும், 2148 மில்லியன் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது. தேவைக்கு அதிகமாக இருக்கும் பயிற்சி பெறும் பணியாளர்களை நீக்கிவிட்டு தற்போது 167 பயிற்சி பெற்ற ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று விசேட பரிந்துரைகள்
கடன் வசூலிக்கும் முறை, கடன் வழங்கும் முறை, காணிகளை அப்புறப்படுத்தல் முறை குறித்து இரண்டு மாதங்களுக்குள் விரிவான அறிக்கையொன்றை வழங்குமாறும் குழு பரிந்துரைத்தது. மேலும் வெளிப்படைத்தன்மையுடன் காணி குறித்த ஆவணத்தை இணையதளத்திலோ அல்லது வேறு வழியிலோ பகிரங்கப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.
மூன்று மாதங்களில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை மீண்டும் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஸ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ நிமல் லான்சா, கௌரவ நளின் பண்டார ஜயமஹா, கௌரவ எஸ்.எம்.மரிக்கார், கௌரவ ஜகத் குமார, சுமித்ராரச்சி, கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம்.ராமேஸ்வரன் மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் இந்தக் குழுவில் கலந்துகொண்டனர்.
2025-09-15
மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தினால் தனியார் வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனை மீள் செலுத்தாதது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இலங்கை துறைமுக அதிகாரசபையின் 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த செப். 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் 2013 ஜூலை 05 ஆம் திகதி நிறுவப்பட்டது என்றும், அந்த நிறுவனம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்ற அனுமதிப்பத்திரம் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் விநியோகஸ்தராக செயற்பாடுகளை ஆரம்பித்து 2014 ஆம் ஆண்டில் தனியார் வங்கியொன்றிலிருந்து துறைமுக அதிகாரசபையின் நிறுவன உத்தரவாதத்தின் (Corporate Guarantee) மூலம் 24 மில்லியன் டொலர் கடன் பெற்றிருந்தமை இங்கு தெரியவந்தது. எனினும், இந்தத் தொகையில் 18.82 மில்லியன் டொலர்கள் (6836 மில்லியன் ரூபாய்) 2023 டிசம்பர் வரை செலுத்தப்படாமல் இருந்ததாகவும், இந்தக் கடன் தொகையை மீளப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வங்கி 2019 ஆம் ஆண்டில் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் அதிகாரசபைக்கு எதிராக இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இது தொடர்பாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன், 2022 ஜூன் மாதம் முதல் கலைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தை மூடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதற்கமைய, இது தொடர்பாக குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இவ்விடயத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை தனது பொறுப்பை நிறைவேற்றுவதில் திருப்தியடைய முடியாது என குழு இதன்போது சுட்டிக்காட்டியது. அத்துடன், நிறுவனத்தை மூடுவதன் மூலம் மாத்திரம் திருப்தியடைய முடியாது என சுட்டிக்காட்டிய குழு, கடன் செலுத்தும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு பரிந்துரைத்தது. அத்துடன், இது தொடர்பாக ஒரு உள்ளக விசாரணை நடத்தி அதற்குரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும், உள்ளகக் கணக்காய்வுப் பிரிவை சரியாக மேற்பார்வையிடுவதற்கான ஒரு பொறிமுறையை தயாரிக்குமாறும் குழு பரிந்துரைத்தது. அதற்கமைய, இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் குழுவிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, அதிகாரசபையின் கூட்டுத் திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, டி.வி. சானக்க, எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, திலின சமரக்கோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-09-12
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (செப். 11) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கிக்கு நிதிச் சுதந்திரம் இருப்பதாகவும், அந்த நிறுவனங்களைப் போலவே இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும், கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்திற்கும் மிகவும் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான நிதிச் சுதந்திரம் வழங்குவது முக்கியம் என்று இங்கு குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தற்போதுள்ள அரசியல் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அந்த நிறுவனங்களால் மிகவும் சுயாதீனமாகச் செயற்பட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதனால், நிதி அமைச்சரான கௌரவ ஜனாதிபதிக்கும் இது தொடர்பாகத் தெரியப்படுத்துவதற்கு குழு இதன்போது தீர்மானித்தது. அத்துடன், ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் குழு உறுப்பினர்களின் சம்பளம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளத்திற்கு சமமாக அமைக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு சுட்டிக்காட்டுவதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளம் திருத்தப்படும் விதத்தில் இந்த அதிகாரிகளின் சம்பளமும் திருத்தப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதுடன், அதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-09-12
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்கள் 2025.08.06ஆம் திகதி அப்பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்றையதினம் (செப். 12) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது. தலைவர் பதவிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல அவர்கள் முன்மொழிந்ததுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அரசியல் கருத்துவேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செற்பட்ட, சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், முன்னாள் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியை தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குறிப்பிட்டார். புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தலைவர் மேலும் தெரிவித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சுதத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜே.சி.அலவத்துவல, ரோஹித்த அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத் தசநாயக்க, (வைத்தியர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, எம். ஏ. எம். தாஹிர், லால் பிரேமநாத், சானக மாதுகொட ஆகியோரும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-09-11
2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் ஆராயப்பட்டது. அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கம் வலுவான நிதி செயற்திறனைப் பதிவு செய்து, அரையாண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரை ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட வருமானம் 2,241 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், மொத்தமாக சேகரிக்கப்பட்ட வருமானம் 2,318 பில்லியன் ரூபாய் எனவும், இது அரை ஆண்டு மதிப்பீட்டை விட 3% அதிகமாகும் என தரவுகளை முன்வைத்து நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவு 3,467 பில்லியன் ரூபாய் என்பதுடன், இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த செலவுடன் ஒப்பிடுகையில் 367 பில்லியன் ரூபா அதிகமாகும். இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணியாக கடன் சேவைகள் அமைந்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இது 1,984 பில்லியன் ரூபாவாகும். அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியங்கள், அஸ்வெசும மற்றும் சமுர்த்தி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட அத்தியாவசிய அரச சேவைகளுக்கான மீண்டெழும் செலவுகளும் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இலங்கை சுங்கத் திணைக்களம் 2024 ஆம் ஆண்டுடன் (ஜனவரி - ஜூன்) ஒப்பிடுகையில் 47% வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 996 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து கிடைத்த வருமானம் இந்த வளர்ச்சிக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளதுடன், இதன் மூலம் 429 பில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 220,026 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 154,537 வாகனங்களுக்கான சுங்க விடுவிப்பு நடவடிக்கைகளை இலங்கை சுங்கம் நிறைவுசெய்துள்ளதாகவும் நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், கொள்கலன்கள் விடுவிப்பு நடவடிக்கைகளுக்காக சுங்கத்தில் 9 - 10 நாட்கள் செல்வதால் இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் குழு உறுப்பினர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் வினவினர். அதன்படி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 2 - 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பொருட்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கி வருவதாகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் (IRD) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மதிப்பிடப்பட்ட வருமானம் 1,022,691 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், 1,040,388 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1.3 மில்லியன் இலங்கையர்களுக்கு TIN (Tax Identification Number) இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய முடியுமா என்று குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். எனினும், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் 3.1% ஆக இருக்கும் என்று அனுமானிக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் வரிக் கொள்கை தொடர்பான நிதி அமைச்சின் கொள்கை என்ன என்பது குறித்து குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பவற்றின் முன்னறிவிப்புகளுக்கு இடையிலான முரண்பாடு குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, சம்பிக்க ஹெட்டியாராச்சி, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks