E   |   සි   |  

2023-11-30

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

தற்போதைய வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணுக்கு அமைய குறியீட்டிற்கு ஏற்ப ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான சூத்திரங்களை உருவாக்கவும் – வழிவகைகள் பற்றிய குழு ஓய்வூதியத் திணைக்களத்துக்குப் பரிந்துரை

  • ஓய்வூதியம் பெறுபவர்கள் மரணிக்கும்போது அதனை அறிவிப்பதற்கு டிஜிட்டல் கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து குழுவில் அவதானம்
  • உடல் ஊனமுற்ற மற்றும் முதியோருக்கான கொடுப்பனவைப் பெறும் பயனாளிகளை  அஸ்வெசும திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் சமூக நலன் பெறவேண்டிய நபர்களின் பட்டியலில் (social registry) உள்ளடக்கவும்


ஓய்வூதியக் கொடுப்பனவை மனிதாபிமான ரீதியில் அணுகி தற்பொழுது காணப்படும் வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணின் விகிதத்துக்கு ஏற்ப உயர்த்துவதற்கு உரிய வகையில் ஏதாவது சூத்திரம் தயாரிக்கப்பட வேண்டும் என வழிவகைகள் பற்றிய குழு ஓய்வூதியத் திணைக்களத்துக்குப் பரிந்துரைத்தது. குறித்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்றையதினம் (நவ. 29) கூடியபோதே இந்தப் பரிந்துரை வழங்கப்படடது.

ஓய்வூதியத் திணைக்களம், முதியோருக்கான தேசிய செயலகம் போன்ற அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் சங்கங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நாட்டில் தற்பொழுது 7 இலட்சம் செயலில் உள்ள ஓய்வூதியம் பெறுவோர் பதிவாகியிருப்பதாகவும், விசாரணை மட்டம் மற்றும் உயிரிழத்தல் போன்ற காரணங்களால் சிலருடைய ஓய்வூதியங்கள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்தது.

வருடமொன்றுக்கு 26,000 பேர் (19,000 சிவில் சேவை, 7000 முப்படை) ஓய்வூதியம் பெறுபவர்களாக இணைந்துகொள்வதாகவும், வருடமொன்றுக்கு 20,000 பேர் உயிரிழப்பதால் ஓய்வூதியப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது. ஓய்வூதியத் திணைக்களத்துக்கு மாதமொன்றுக்கு 413 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாகவும், 55 வயது பூர்த்தியடைந்ததும் ஓய்வுபெறுபவர்களுக்கு சம்பளத்தைப் போன்று 24 மடங்கு பணிக்கொடையாக வழங்குவதாகவும், இதில் 10 வருடங்களுக்குள் ஓய்வூதியத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அதேநேரம், 70 வயதுக்கு மேற்பட்ட, மாதாந்தம் 6000 ரூபாவுக்குக் குறைந்த வருமானத்தை ஈட்டுவோருக்கு மாதாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதே முதியோருக்கான தேசிய செயலகத்தின் பணி என இங்கு தெரிவிக்கப்பட்டது. கிராம உத்தியோகத்தர்களின் சான்றுரைப்படுத்தலுடன் இதுவரை 733,204 பேருக்கு முதியோருக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். முதியோர் உதவித்தொகை செலுத்துவோர் பட்டியலில் வருடாந்தம் புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கை, இறப்புக் காரணமாக குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்படுவோரின் எண்ணிக்கை, மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை போன்ற புள்ளவிபரங்களைக் குழு முன்னிலையில் சமர்ப்பிக்குமாறும், முதியோருக்கான தேசிய செயலகத்தின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

2016.01.01 திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 2020.01.01 வரையில் ஐந்து கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், 2020.01.01 ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கு சமமான அளவில் முழுமையான ஓய்வூதியம் வழங்கப்பட்டமையால், 2017ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் 2020ற்குப் பின்னர் ஓய்வுபெற்றவர்களுக்கிடையில் பாரிய சம்பள வேறுபாடு காணப்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 2020.01.01 ஆம் திகதி மேற்கொள்ள வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் இதற்குக் காரணம் என்றும், அத்துடன், பாடசாலை அதிபர்களுக்கு 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்புக் காரணமாக 2017.01.01ற்கு முன்னர் ஒய்வுபெற்ற தரப்பினருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவில் பாரிய முரண்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

 அத்துடன், அரசாங்க ஊழியர்களுக்கு 2024/01/01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10,000 ரூபா வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்படவிருக்கும் நிலையில், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2500 ரூபா மாத்திரமே அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், இது 25 % அதிகரிப்பு மாத்திரமே என்றும், தற்போதைய வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு மத்தியில் அதிகரிப்பு போதுமானதாக இல்லை என ஓய்வூதியம் பெறுவோர் குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர். மனிதாபிமான முறையில் தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணுக்கு ஏற்ற விகிதத்தில் ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கு சூத்திரங்களை உருவாக்குமாறும் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் பலன்கள் 2016.01.01ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும், அதற்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும், காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தி, அந்த பலன்கள் கிடைக்கும் வகையில், மருத்துவமனைக் கொடுப்பனவுகள், அறுவைச் சிகிச்சைக் கொடுப்பனவுகள், இறப்பின் போதான கருணைத்தொகை என்பவற்றை வழங்க வேண்டும் என்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு தலைவர் ஆலோசனை வழங்கினார்.

ஓய்வூதியம் பெறுபவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஓய்வூதிய திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறும், ஓய்வூதியம் பெறுபவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முதற்கட்ட கலந்துரையாடலை டிசம்பர் 15 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நடத்துமாறும் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், உடல் ஊனமுற்ற மற்றும் முதியோருக்கான கொடுப்பனவைப் பெறும் பயனாளிகளை  அஸ்வெசும திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் சமூக நலன் பெறவேண்டிய நபர்களின் பட்டியலில் (social registry) உள்ளடக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஓய்வூதியம் வழங்குவதில் கணிசமான பாதிப்பு உள்ளதால், ஓய்வூதியம் பெறுபவர்கள் மரணமடைந்தால் அது குறித்து அறிவிப்பதற்கு டிஜிட்டல் முறைமையொன்றைத் தயாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன் செனவிரத்ன, கௌரவ நாளக்க பண்டார கோட்டேகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2025-11-19

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) மற்றும் பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) மற்றும் பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) கடந்த நவ. 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் ஊடாக 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டத்துக்கு 4 திருத்தங்கள் சேர்க்கப்படுவதாக குழுவில் கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதனையடுத்து, இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதன் பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.  அத்துடன், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் ஊடாக 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டம் திருத்தப்படுவதுடன், அதன் மூலம் மொத்தச் சேகரிப்பு அறவீடு 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்படும். அத்துடன், இலங்கை பிரஜைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த கசினோ நுழைவு அறவீடு, அமெரிக்க டொலர் 50 இலிருந்து 100 ஆக அதிகரிக்கப்படும். அதற்கமைய, இது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச தொலைத்தொடர்பு இயக்குனர் வரி செலுத்துவதற்கான செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்படுகிறது. அத்துடன், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 25 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணங்கள் தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த விதிகள் தொடர்பாக குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. எனினும், அதற்கு குழுவின் அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து தகுந்த பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும், அதன் பின்னர் இது எதிர்காலத்தில் பரிசீலனை செய்யப்படும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாண்டோ மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-18

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து வழிவகைகள் பற்றிய குழு கவனம் செலுத்தியது

அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 12) பாராளுமன்றத்தில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். அஸ்வெசும திட்டத்திற்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அந்த அளவுகோல்களின் அடிப்படையில் பொருத்தமான சலுகைகளை வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இத்திட்டத்தில், 22 அளவுகோல்களின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த அளவுகோல்களை செயல்படுத்தும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்காக மாத்திரம் பயனாளிகளைப் பதிவுசெய்வதற்குத் தற்பொழுது அனுமதிக்கப்பட்டாலும், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது தகவல்களைக் கட்டமைப்பொன்றில் (Social Registry) பதிவுசெய்வதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், பதிவுசெய்த பின்னர் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதன் மூலம், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று குழு சுட்டிக்காட்டியது. முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கு அஸ்வெசும திட்டத்தை அவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு  விரிவாகக் கலந்துரையாடியது. தேசிய அடையாள அட்டை இல்லாததால் நலன்புரித் திட்டத்தின் உதவிகளைப் பெற முடியாத தகுதியுள்ள நபர்கள் தற்போது இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாததால் அந்தச் சலுகைகளைப் பெற முடியாத சில குழுக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அதன்படி, முடிந்தவரை அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதன் மூலம் நலன்புரித்திட்ட உதவிகளை வழங்குவதன் நோக்கத்தை அடைவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது. இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த, கௌரவ பிரதியமைச்சர்களான  சதுரங்க அபேசிங்ஹ, (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான  (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, கே.சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹன பண்டார, சத்துர கலபதி, திலின சமரகோன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-17

தேசிய உயர்கல்வி கொள்கை வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி அலுவல்ககள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவில் ஆராய்ப்பட்டது

தேசிய உயர்கல்வி கொள்கைக்கான வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உயர்கல்விப் பிரிவு தொடர்பான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தயாரிக்கப்பட்டுவரும் உயர்கல்விக் கொள்கை வரைபு மற்றும் அதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி.த சில்வா அவர்கள் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்தார். நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வரைபைத் தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை மதிப்பாய்வு செய்தல், இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வெளிப்புற பட்டப்படிப்பு திட்டங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக முந்தைய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-15

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்படும் தாமதம் குறித்து கோப் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது

முழுத் திட்டமும் 548 நாட்கள் தாமதமானதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளமை தெரியவந்தது துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் ஏற்றுக்கொள்வது மற்றும் அகற்றுவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது   கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஒட்டுமொத்த திட்டத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் கடந்த நவ. 13ஆம் திகதி கூடியபோதே மேற்கண்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டு 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டிருந்தது. அன்றையதினம் கலந்துரையாட முடியாத விடயங்கள் குறித்து மீண்டும் கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 2021 நவம்பர் மாதம் நிறுவனமொன்றுக்கு ரூ.40,273 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொடுக்க ஆமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 2021 டிசம்பர் மாதம் இது தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதுடன், 2025 ஜனவரி 03ஆம் திகதி இத்திட்டம் பூர்த்திசெய்யப்படவேண்டியிருந்தது. எனினும், சில காரணங்களுக்காக கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தமையால் காலம் நீடிக்கப்பட்டு 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதனைப் பூர்த்திசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு தெரியவந்தது. இதனால் குறித்த அபிவிருத்தித் திட்டம் 548 நாட்கள் காலதாமதம் அடைந்திருப்பதால் ஒப்பந்தக்காரர் ரூ.4227 மில்லியன் இழப்பீடு கோரியதாகவும், இது தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை கோப் குழுவில் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை நிறைவடையும் என்றும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதிகாரசபை ஊழியர்களின் உணவுச் செலவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியதுடன், 2023 ஆம் ஆண்டு கோப் குழுவால் இது தொடர்பாக வழங்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் குழு சுட்டிக்காட்டியது. அதன்படி, செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விலைகளைக் குறைக்க போட்டிமுறையிலான கேள்விப்பத்திரங்கள் கோரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் கையகப்படுத்தி அப்புறப்படுத்துவது குறித்து கவனம் செலுத்திய குழுவின் தலைவர், நீதிமன்றத்தால் அப்புறப்படுத்துவதற்கும் கையகப்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்ட காணிகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அதன்படி, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சீதுவை ரந்தொலுவ விளையாட்டுக் கழகத்தின் பெயர் இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டுக் கழகம் எனப் பெயர்மாற்றம் செய்வது, குறித்த கழகத்தில் இணைந்த வீர வீராங்கனைகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களாக ஆட்சேர்ப்பு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, எஸ்.எம்.மரிக்கார், (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, எம்.கே.எம்.அஸ்லம், (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, திலின சமரகோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks