2023-11-30
செய்தி வகைகள் : குழு செய்திகள்
ஓய்வூதியக் கொடுப்பனவை மனிதாபிமான ரீதியில் அணுகி தற்பொழுது காணப்படும் வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணின் விகிதத்துக்கு ஏற்ப உயர்த்துவதற்கு உரிய வகையில் ஏதாவது சூத்திரம் தயாரிக்கப்பட வேண்டும் என வழிவகைகள் பற்றிய குழு ஓய்வூதியத் திணைக்களத்துக்குப் பரிந்துரைத்தது. குறித்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்றையதினம் (நவ. 29) கூடியபோதே இந்தப் பரிந்துரை வழங்கப்படடது.
ஓய்வூதியத் திணைக்களம், முதியோருக்கான தேசிய செயலகம் போன்ற அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் சங்கங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
நாட்டில் தற்பொழுது 7 இலட்சம் செயலில் உள்ள ஓய்வூதியம் பெறுவோர் பதிவாகியிருப்பதாகவும், விசாரணை மட்டம் மற்றும் உயிரிழத்தல் போன்ற காரணங்களால் சிலருடைய ஓய்வூதியங்கள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்தது.
வருடமொன்றுக்கு 26,000 பேர் (19,000 சிவில் சேவை, 7000 முப்படை) ஓய்வூதியம் பெறுபவர்களாக இணைந்துகொள்வதாகவும், வருடமொன்றுக்கு 20,000 பேர் உயிரிழப்பதால் ஓய்வூதியப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது. ஓய்வூதியத் திணைக்களத்துக்கு மாதமொன்றுக்கு 413 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாகவும், 55 வயது பூர்த்தியடைந்ததும் ஓய்வுபெறுபவர்களுக்கு சம்பளத்தைப் போன்று 24 மடங்கு பணிக்கொடையாக வழங்குவதாகவும், இதில் 10 வருடங்களுக்குள் ஓய்வூதியத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அதேநேரம், 70 வயதுக்கு மேற்பட்ட, மாதாந்தம் 6000 ரூபாவுக்குக் குறைந்த வருமானத்தை ஈட்டுவோருக்கு மாதாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதே முதியோருக்கான தேசிய செயலகத்தின் பணி என இங்கு தெரிவிக்கப்பட்டது. கிராம உத்தியோகத்தர்களின் சான்றுரைப்படுத்தலுடன் இதுவரை 733,204 பேருக்கு முதியோருக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். முதியோர் உதவித்தொகை செலுத்துவோர் பட்டியலில் வருடாந்தம் புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கை, இறப்புக் காரணமாக குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்படுவோரின் எண்ணிக்கை, மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை போன்ற புள்ளவிபரங்களைக் குழு முன்னிலையில் சமர்ப்பிக்குமாறும், முதியோருக்கான தேசிய செயலகத்தின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
2016.01.01 திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 2020.01.01 வரையில் ஐந்து கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், 2020.01.01 ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கு சமமான அளவில் முழுமையான ஓய்வூதியம் வழங்கப்பட்டமையால், 2017ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் 2020ற்குப் பின்னர் ஓய்வுபெற்றவர்களுக்கிடையில் பாரிய சம்பள வேறுபாடு காணப்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 2020.01.01 ஆம் திகதி மேற்கொள்ள வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் இதற்குக் காரணம் என்றும், அத்துடன், பாடசாலை அதிபர்களுக்கு 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்புக் காரணமாக 2017.01.01ற்கு முன்னர் ஒய்வுபெற்ற தரப்பினருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவில் பாரிய முரண்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
அத்துடன், அரசாங்க ஊழியர்களுக்கு 2024/01/01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10,000 ரூபா வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்படவிருக்கும் நிலையில், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2500 ரூபா மாத்திரமே அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், இது 25 % அதிகரிப்பு மாத்திரமே என்றும், தற்போதைய வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு மத்தியில் அதிகரிப்பு போதுமானதாக இல்லை என ஓய்வூதியம் பெறுவோர் குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர். மனிதாபிமான முறையில் தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணுக்கு ஏற்ற விகிதத்தில் ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கு சூத்திரங்களை உருவாக்குமாறும் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.
அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் பலன்கள் 2016.01.01ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும், அதற்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும், காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தி, அந்த பலன்கள் கிடைக்கும் வகையில், மருத்துவமனைக் கொடுப்பனவுகள், அறுவைச் சிகிச்சைக் கொடுப்பனவுகள், இறப்பின் போதான கருணைத்தொகை என்பவற்றை வழங்க வேண்டும் என்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு தலைவர் ஆலோசனை வழங்கினார்.
ஓய்வூதியம் பெறுபவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஓய்வூதிய திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறும், ஓய்வூதியம் பெறுபவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முதற்கட்ட கலந்துரையாடலை டிசம்பர் 15 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நடத்துமாறும் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், உடல் ஊனமுற்ற மற்றும் முதியோருக்கான கொடுப்பனவைப் பெறும் பயனாளிகளை அஸ்வெசும திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் சமூக நலன் பெறவேண்டிய நபர்களின் பட்டியலில் (social registry) உள்ளடக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஓய்வூதியம் வழங்குவதில் கணிசமான பாதிப்பு உள்ளதால், ஓய்வூதியம் பெறுபவர்கள் மரணமடைந்தால் அது குறித்து அறிவிப்பதற்கு டிஜிட்டல் முறைமையொன்றைத் தயாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன் செனவிரத்ன, கௌரவ நாளக்க பண்டார கோட்டேகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-06-02
Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது, வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்திற்காக கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாததால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகியுள்ளது - கோப் குழு 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) புலப்பட்டது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் 2024 ஆம் ஆண்டில் குடியகல்வு சங்கங்களின் 5,000 அங்கத்தவர்கள் கலந்துகொண்ட மாகாண மட்டத்திலான 3 கூட்டங்களுக்கான 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சித்தட்டத்துக்கு 63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களினாலும் வழங்கப்படும் சேவைகளை, அந்த சேவைகளைப் பெறுவோர் தமது வசிக்கும் பகுதிகளையே பெறும் வகையில் நாடு பூராகவும் நடத்தப்பட்ட Glocal Fair வேலைத்திட்டத்துக்கு 1,259 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக கோப் குழுவில் புலப்பட்டன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 2022 மற்றும் 2023 ஆம் நிதி ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகையை பரிசீலிப்பதற்கு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (மே 23) கூடிய போதே இந்த விடயங்கள் புலப்பட்டன. Glocal Fair வேலைத்திட்டம் அமைச்சரவை அனுமதிக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை வேலைத்திட்டத்தின் இடைநடுவில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன், இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த வருடாந்த வரவுசெலவுத்திட்டத்தில் 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 1,259 மில்லியன் ரூபாய் போன்ற பாரிய நிதி செலவு செய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாறான நிதியை செலவிடுவதன் நோக்கங்களை அடைய முடிந்துள்ளதா என இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். அத்துடன், Glocal Fair வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், வர்த்தகக் கூடம் ஒன்றை ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் 5 இலட்சம் ரூபாவுக்கு வர்த்தகக் கூடம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் குழுவில் வினவப்பட்டது. எனினும் வினைத்திறனான வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்த இருந்த நிதி நோக்கம் அற்ற முறையாகத் திட்டமிடப்படாத வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் பாரிய நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ரடவிரு வீட்டுக் கடன் திட்டத்தை 5 வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய செயற்படுத்தியில்லை என்றும், அதனால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கவேண்டிய 100 மில்லியன் ரூபா இன்னும் கிடைக்கவில்லை என்றும் குழுவில் வெளிப்பட்டது. என்னினும், இலங்கை சமுர்த்தி அதிகாரசபை தற்போது அந்தத் தொகையை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இந்த வீட்டுக் கடன் திட்டத்தின் மூலம் எத்தனை பேருக்கு சம்பந்தப்பட்ட கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது என்று குழு அதிகாரிகளிடம் வினவியதுடன், அத்தகைய தரவு இல்லை என்று அவர்கள் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மீள் பரிசீலனை இடம்பெற்றில்லை எனத் தெரிவித்த குழுவின் தலைவர் ரடவிரு வீட்டுக் கடன் திட்டம் தொடர்பில் ஆரம்பம் முதல் தற்பொழுது வரையான தகவல்கள் அடங்கிய முழுமையான அறிக்கையொன்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். எவ்வாறாயினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒழுங்குறுத்தும் பணியிலிருந்து விலகி செயற்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதுவரை 18 பில்லியனாக உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நிலையான வைப்பை மிகவும் வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு திட்டமொன்று தயாரிக்கப்படுவதன் தேவை குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், செயற்பாட்டில் இல்லாத 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 5.1 பில்லியன் நிலுவை காணப்படும் குவைட் இழப்பீடு நிதியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகளிடம் குழு வினவியது. அதற்கமைய, அந்த நிதியத்தை பயன்படுத்தி வீட்டுப் பணிகளுக்காக வெளிநாட்டு செல்லும் பணியாளர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கும், பணியாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்பு தேடும் தொழிலாளர்கள் ஊடாக செய்த நிதி மோசடி குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வேலைவாய்ப்புக்காக முகவர்கள் மூலம் அல்லாமல் வெளிநாடு செல்லும் ஒவ்வொரு பணியாளர்களும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான பதிவுக்கட்டணத்தை பணியகத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், முகவர்கள் மூலம் வெளிநாடு செல்லும் போதும் அவர்களுக்கான பதிவுக்கட்டணம் பணியகத்துக்கு செலுத்தப்பட வேண்டும் எனவும் அதில் 70% மீண்டும் சம்பந்தப்பட்ட முகவர் நிறுவனத்துக்கு செலுத்தப்படுவதாக குழுவில் புலப்பட்டது. எனினும், சுயமாக செல்லும் பணியாளர்களை, முகவர்கள் மூலமாக செல்லும் பணியாளர்களாகக் காண்பித்து மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பில் கண்டறிய உப குழுவொன்றை நியமிப்பதற்கு குழுவின் தலைவர் தீர்மானித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அனுராத ஜயரத்ன, முஜிபுர் ரஹுமான், எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், (வைத்தியர்) எஸ். பவானந்தராஜா, சுஜீவ திசாநாயக்க, ஜகத் மனுவர்ண, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷன எகொட விதான, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், திலின சமரகோன், சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமன்த மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-05-28
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (மே 27) இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்திற்கான குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் முதலாவது அமர்விலேயே இத்தெரிவு இடம்பெற்றது. இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு வழங்க ஏற்கனவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணங்கியிருந்தன. இதற்கமைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு கௌரவ அஜித் பி பெரேராவின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்மொழிந்ததுடன், அதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நீண்டகாலமாகக் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கான தீர்வுகளை உள்ளடக்கியதாக இந்தத் திருத்ததச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டதுடன் இதற்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படவேண்டியுள்ள பிரதான மாற்றங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் கௌரவ உறுப்பினர்களான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, தனுஷ்க ரங்கனாத், அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-05-27
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகத் தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (மே 27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் 7 துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் நான்கு குழுக்களின் தலைமைப் பதவி ஆளும் கட்சிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன அவர்களின் பெயரை, கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க முன்மொழிந்ததுடன், இதனைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹசாரா லியனகே வழிமொழிந்தார். அத்துடன், இத்துறைசார் குழுக் கூட்டத்தில் 03.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ள தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் குறித்துக் கலந்துரையாடப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைய, ஜூன் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ளது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாசன கமகே, சட்டத்தரணி ஹசாரா லியனகே மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2025-05-26
பாராளுமன்ற நிறைவேற்றுத் தரம் மற்றும் நிறைவேற்றுத்தரம் அல்லாத பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் கட்டணத்தை திருத்துவதற்கு 2025 மே மாதம் 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவில் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு அக்குழுவின் கூட்டமொன்று கடந்த 2025.05.23 ஆம் திகதி குழுவின் தலைவர் சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்கான கட்டணத்தை 2025.06.01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பின்வருமாறு திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, நிறைவேற்றுத் தர அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 4,000 ரூபாவும், நிறைவேற்றுத்தரம் அல்லாத அதிகாரியொருவருக்கு மாதாந்தம் 2,500 ரூபாவும் அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்ற பொதுமக்கள் உணவகத்தில் உணவைப் பெற்றுக்கொள்ளும் கௌரவ உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடமிருந்து தற்பொழுது அறவிடப்படும் கட்டணத்தை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கும் குழு தீர்மானித்தது. இந்த கட்டணங்களைத் திருத்தம் செய்தல், பாராளுமன்ற பணியாளர்களுக்கு வழங்கும் செலவுகள் தொடர்பில் திறைசேரியினால் வழங்கப்பட்ட பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும். இந்த சபைக் குழு பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.