பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-11-30
செய்தி வகைகள் : குழு செய்திகள்
ஓய்வூதியக் கொடுப்பனவை மனிதாபிமான ரீதியில் அணுகி தற்பொழுது காணப்படும் வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணின் விகிதத்துக்கு ஏற்ப உயர்த்துவதற்கு உரிய வகையில் ஏதாவது சூத்திரம் தயாரிக்கப்பட வேண்டும் என வழிவகைகள் பற்றிய குழு ஓய்வூதியத் திணைக்களத்துக்குப் பரிந்துரைத்தது. குறித்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்றையதினம் (நவ. 29) கூடியபோதே இந்தப் பரிந்துரை வழங்கப்படடது.
ஓய்வூதியத் திணைக்களம், முதியோருக்கான தேசிய செயலகம் போன்ற அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் சங்கங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
நாட்டில் தற்பொழுது 7 இலட்சம் செயலில் உள்ள ஓய்வூதியம் பெறுவோர் பதிவாகியிருப்பதாகவும், விசாரணை மட்டம் மற்றும் உயிரிழத்தல் போன்ற காரணங்களால் சிலருடைய ஓய்வூதியங்கள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்தது.
வருடமொன்றுக்கு 26,000 பேர் (19,000 சிவில் சேவை, 7000 முப்படை) ஓய்வூதியம் பெறுபவர்களாக இணைந்துகொள்வதாகவும், வருடமொன்றுக்கு 20,000 பேர் உயிரிழப்பதால் ஓய்வூதியப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது. ஓய்வூதியத் திணைக்களத்துக்கு மாதமொன்றுக்கு 413 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாகவும், 55 வயது பூர்த்தியடைந்ததும் ஓய்வுபெறுபவர்களுக்கு சம்பளத்தைப் போன்று 24 மடங்கு பணிக்கொடையாக வழங்குவதாகவும், இதில் 10 வருடங்களுக்குள் ஓய்வூதியத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அதேநேரம், 70 வயதுக்கு மேற்பட்ட, மாதாந்தம் 6000 ரூபாவுக்குக் குறைந்த வருமானத்தை ஈட்டுவோருக்கு மாதாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதே முதியோருக்கான தேசிய செயலகத்தின் பணி என இங்கு தெரிவிக்கப்பட்டது. கிராம உத்தியோகத்தர்களின் சான்றுரைப்படுத்தலுடன் இதுவரை 733,204 பேருக்கு முதியோருக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். முதியோர் உதவித்தொகை செலுத்துவோர் பட்டியலில் வருடாந்தம் புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கை, இறப்புக் காரணமாக குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்படுவோரின் எண்ணிக்கை, மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை போன்ற புள்ளவிபரங்களைக் குழு முன்னிலையில் சமர்ப்பிக்குமாறும், முதியோருக்கான தேசிய செயலகத்தின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
2016.01.01 திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 2020.01.01 வரையில் ஐந்து கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், 2020.01.01 ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கு சமமான அளவில் முழுமையான ஓய்வூதியம் வழங்கப்பட்டமையால், 2017ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் 2020ற்குப் பின்னர் ஓய்வுபெற்றவர்களுக்கிடையில் பாரிய சம்பள வேறுபாடு காணப்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 2020.01.01 ஆம் திகதி மேற்கொள்ள வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் இதற்குக் காரணம் என்றும், அத்துடன், பாடசாலை அதிபர்களுக்கு 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்புக் காரணமாக 2017.01.01ற்கு முன்னர் ஒய்வுபெற்ற தரப்பினருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவில் பாரிய முரண்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
அத்துடன், அரசாங்க ஊழியர்களுக்கு 2024/01/01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10,000 ரூபா வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்படவிருக்கும் நிலையில், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2500 ரூபா மாத்திரமே அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், இது 25 % அதிகரிப்பு மாத்திரமே என்றும், தற்போதைய வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு மத்தியில் அதிகரிப்பு போதுமானதாக இல்லை என ஓய்வூதியம் பெறுவோர் குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர். மனிதாபிமான முறையில் தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணுக்கு ஏற்ற விகிதத்தில் ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கு சூத்திரங்களை உருவாக்குமாறும் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.
அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் பலன்கள் 2016.01.01ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும், அதற்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும், காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தி, அந்த பலன்கள் கிடைக்கும் வகையில், மருத்துவமனைக் கொடுப்பனவுகள், அறுவைச் சிகிச்சைக் கொடுப்பனவுகள், இறப்பின் போதான கருணைத்தொகை என்பவற்றை வழங்க வேண்டும் என்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு தலைவர் ஆலோசனை வழங்கினார்.
ஓய்வூதியம் பெறுபவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஓய்வூதிய திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறும், ஓய்வூதியம் பெறுபவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முதற்கட்ட கலந்துரையாடலை டிசம்பர் 15 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நடத்துமாறும் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், உடல் ஊனமுற்ற மற்றும் முதியோருக்கான கொடுப்பனவைப் பெறும் பயனாளிகளை அஸ்வெசும திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் சமூக நலன் பெறவேண்டிய நபர்களின் பட்டியலில் (social registry) உள்ளடக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஓய்வூதியம் வழங்குவதில் கணிசமான பாதிப்பு உள்ளதால், ஓய்வூதியம் பெறுபவர்கள் மரணமடைந்தால் அது குறித்து அறிவிப்பதற்கு டிஜிட்டல் முறைமையொன்றைத் தயாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன் செனவிரத்ன, கௌரவ நாளக்க பண்டார கோட்டேகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-02-16
உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் இன்று (14) பாராளுமன்றத்தில் கூடிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், வரையறுக்கப்பட்ட தொலைக் கல்வி நிலையத்தின் 2021 மற்றம் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையும் இங்கு ஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-02-13
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 2025.02.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அவசியம் தொடர்பில் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்தது. பணியிடங்களில் பாலியல் வன்முறையை ஒழித்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) இல்லாமல் செய்வது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மார்ச் 8ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலீ குணசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கலாநிதி கெளஷல்யா ஆரியரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, தீப்தி வாசலகே, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, அம்பிகா சாமிவெல் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-02-13
சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள துறைமுகங்களை புனரமைத்தல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சு கவனம் - குழுவின் தலைவர் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் (பெப். 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர் ரத்ன கமகேவும் கலந்துகொண்டார். அதற்கமைய, இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழகத்துடனும் இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இந்நாட்டு மீனவர்களைப் பாதித்துள்ள இந்தப் பிரச்சினைக்கு முரண்பாட்டு வழியிலல்லாமல் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்துடன், சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்தல் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு உரையாற்றிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கமைய, மீன்களை விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார். சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையா நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அதற்கமைய, நுகர்வோர் எளிதாக சமைக்கும் வகையில், மீன் வகைகளை பொதி செய்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் காணப்படும் கடற்றொழில் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் டைனமைட்டைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், நன்னீர் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நாட்டின் துறைமுகங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்களை புனரமைப்பதில் அமைச்சு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான கடற்றொழி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை என்பனவும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2025-02-07
மஹாபொல புலமைப்பரிசிலை காலதாமதம் இன்றி முறையாக வழங்க நடவடிக்கை – புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க முன்மொழிவு 1100 மில்லியன் ஒதுக்கீட்டில் மஹாபொல நிதியத்தில் SLIIT நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறித்து தடயவியல் கணக்காய்வு மேற்கொள்ளப்படுவதாக கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற பத்தாவது பாராளுமன்றத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழுவுடன் இணைந்து அண்மையில் (05) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் 2023ஆம் ஆண்டு 36ஆம் இலக்க புலமைத் சொத்துச் சட்டத்தின் 160அ, 161ஆ, 161இ, 161ஈ, 161உ, 161ஊ, 161எ, 161ஐ, 161ஒ மற்றும் 161ஒள ஆகிய பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 204ஆம் பிரிவின் கீழ் அப்போதைய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2024 ஒக்டோபர் 22ஆம் திகதிய 2407/04ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் இங்கு ஆராயப்பட்டு, இரண்டு குழுக்களினாலும் அங்கீகரிக்கப்பட்டன. மேலும், இங்கு 2023ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகு, நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்று அறிக்கை ஆராயப்பட்டதுடன், செயலாற்று அறிக்கைகளை காலதாமதமின்றி பாராளுமன்றத்திற்கு சமர்க்கப்படுவது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தியதுடன் குறித்த அறிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மஹாபொல நம்பிக்கை நிதியம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு SLIIT நிதியத்தின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு அமைய 1100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு மஹாபொல நம்பிக்கை நிதியத்திற்குச் சொந்தமான இடத்திலேயே SLIIT நிறுவனம் கட்டப்பட்டிருப்பதாக கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டதுடன், கடந்த காலத்தில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது குறித்த அறிக்கைகளோ, தகவல்களோ எதுவும் இல்லையென்றும் தெரிவித்தார். எனவே, இது தொடர்பில் மீண்டும் தடயவியல் கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார். அரசியல் முடிவுகளின் அடிப்படையில் மஹாபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து 97 மில்லியன் ரூபா எடுக்கப்பட்டதாகவும், அதில் 37 மில்லியன் ரூபா மீள வழங்கப்படவில்லையென்றும், இந்த விவகாரம் குறித்து விசாரணைகளும் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கும்போது, மஹாபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து 2650 ரூபா தொகையும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் 2450 ரூபா தொகையும் வழங்கப்படும் என மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் தலைவர் இங்கு தெரிவித்தார். அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக வழங்கப்படும் இந்தத் தொகை திறைசேரியிடமிருந்தே கிடைப்பதாகவும், 563 மில்லியன் ரூபா தொகை இன்னமும் கிடைக்கப்பெறவேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹாபொல நிதியம் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு மஹாபொலவை வழங்குவதற்குத் திறைசேரியிடமிருந்து வர வேண்டிய நிதி ஏற்பாடுகளை முறையாகப் பெறுவது அவசியம் என்று மஹாபொல நம்பிக்கை நிதியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். வழங்கப்பட வேண்டியுள்ள மஹாபொல புலமைப்பரிசில் தொகையின் நிலுவையை எதிர்வரும் மாதத்திற்குள் வழங்குவதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அத்துடன், ஏப்ரல் மாதத்திலிருந்து மஹாபொல புலமைப்பரிசிலை உரிய முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மஹாபொல புலமைப்பரிசில் நிதியை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் ஜனாதிபதி இதை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் குறித்த பிரச்சினைகள் பற்றியும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மக்களுக்கு மிகவும் வினைத்திறன்மிக்க வகையில் சேவையை வழங்க பொருத்தமான நிலைமையில் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை மேம்படுத்துவதன் அவசியம் பற்றியும் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks