E   |   සි   |  

2023-12-12

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மது வரி நிலுவையைச் செலுத்தும் திட்டத்துக்கு அமைய 2023.12.04ஆம் திகதிவரை வரித் தவணையைச் செலுத்தாத மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கான மது உற்பத்தி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கவும் – வழி வகைகள் பற்றிய குழு அறிவுறுத்தல்

  • வசூலிக்கப்பட வேண்டியுள்ள 173 பில்லியன் ரூபா வரியை (collectable taxes) வசூலிக்கவும் பணிப்புரை
  • கோதுமை மா மற்றும் சீனி இறக்குமதியில் தேவையற்ற இலாபமீட்டிய தரப்பினரிடமிருந்து உரிய வரியை வசூலிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவும் – வழி வகைகள் பற்றிய குழு அறிவுறுத்தல்

 

மது வரி நிலுவையைச் செலுத்தும் திட்டத்திற்கு அமைய 04.12.2023 திகதி வரை வரி நிலுவைத் தவணையை செலுத்தாத மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கான அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்துமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

அத்துடன், 2023 ஜூன் 30ஆம் திகதியில் 100 மில்லியன் ரூபா அல்லது அதற்கு அதிகமான வரி நிலுவை காணப்படும் வரி செலுத்துபவர்களின் பட்டியலை வழங்குமாறு, 2023.07.24 ஆம் திகதி குழுவில் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய இரண்டு குழு அமர்வுகளில் அறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் கோரிய போதும் அதனை இதுவரை வழங்காமை ஏன் என்பது குறித்தும் வழி வகைகள் பற்றிய குழு கேள்வியெழுப்பியது. அது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை கோரியிருப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்ததுடன், டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பட்டியலை குழுவுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் சில பரிந்துரைகள் குறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாமை, கால அவகாசம் கோரியமை, பரிந்துரைகளை நிறைவேற்றாமை தொடர்பில் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக தலைமையில் அண்மையில் (06) கூடியபோதே இந்த விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனங்களான பிறீமா மற்றும் செரண்டீப் தவிர ஏனைய நிறுவனங்களின் கோதுமை இறக்குமதி அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டிருந்ததுடன், இவ்வாறு தடைவிதிக்கப்பட்ட காலத்தில் இரண்டு நிறுவனங்களும் பெருமளவு கோதுமை மா தொகையை களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாகவும், தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு கிலோ கோதுமை மாவுக்கு 16 ரூபா வீதம் வரி விதித்ததன் மூலம் இந்த நிறுவனங்களுக்கு கணிசமான இலாபம் ஈட்டப்பட்டிருப்பதாகவும் குழுவில் தெரியவந்தது.

அத்துடன், சீனிக்குக் காணப்பட்ட விசேட பண்ட வரி 25 சதத்திலிருந்து 50 ரூபாவாக உயர்த்தப்பட்டதன் மூலம் சீனி இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஏறத்தாழ 8500 டொன் சீனியை சந்தைக்கு விநியோகத்தமையின் காரணமாக கணிசமான இலாபம் சம்பந்தப்பட் நிறுவனங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும், இதன் மூலம் 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திணைக்கள சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் ஈட்டப்பட்ட அதிக இலாபத்துக்கான வரியை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

வரி ஏய்ப்புச் செய்த, வரி செலுத்தாத, முறைப்பாடு உள்ள வரி செலுத்துனர்களின் நிலுவை வரியை வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றுடன் ஏற்றுக்கொள்ளக் கூடிய மட்டத்தில் காணப்பம் வரி நிலுவை (Collectable taxes) 173 பில்லியன் ரூபாவை மீண்டும் வசூலிப்பதற்கான திட்டத்த தயாரித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குழுவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

மதுவரித் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட 39 பரிந்துரைகளில், மதுபான உற்பத்திக்கான அனுமதியைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ஆகக் குறைந்தது 10 மில்லியன் ரூபாவரைஅதிகரிப்பது தொடர்பான குழுவின் பரிந்துரை மற்றும் மாவட்டத்துக்குள் ஒரு மதுபான அனுமதிப்பத்திரத்துக்கு மேலான அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை குழுவுக்கு வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டிருந்தபோதும் இவற்றை நிறைவேற்றாமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டது. எனினும், மதுவரித் திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்புக்கு அமைய ஒரு மாவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அனுமதிப்பதிரத்தைக் கொண்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் எதுவும் இல்லை என்பது காண்பிக்கப்படுவதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை எழுத்துமூலம் அறிவிக்குமாறு குழு வலியுறுத்தியது.

மேலும், தற்போது 46 கள் உற்பததி நிலையங்கள் உள்ளதாகவும், அவற்றைக் கண்காணித்து நாளாந்தம் உற்பத்தியைக் கணக்கிடுவதற்கான கட்டமைப்பைத் தயாரிக்க குழுவின் பரிந்துரைக்கு அமைய கையடக்கத்தொலைபேசி செயலியை தயாரித்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைக் குழுவில் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சுங்க தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஸ்கானர்களில் செயற்கை நுண்ணறிவு (AI) சேர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், நிதி அமைச்சுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்களின் வழிகாட்டுதலின் கீழ் அரச தனியார் கூட்டுத்திட்டமாக இதற்கான முன்மொழிவைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அனர்த்த முகாமைத்துவம், அஸ்வெசும நலன்புரித் திட்டம் மற்றும் சமூக சேவைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நகரப் பகுதிகளில் உள்ள யாசகர்கள் பற்றிய கணக்கெடுப்பு பற்றிய விடயங்களும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் குழுக் கூடு்டத்தில் நிதி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், இலங்கை சுங்கம், நலன்புரி நன்மைகள் சபை போன்ற அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அசோக அபேசிங்ஹ, கௌரவ இஷாக் ரஹ்மான்  மற்றும் கௌரவ சுதத் மஞ்சுளஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2025-07-28

மருந்து பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள்   மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.  கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-07-28

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில்  கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-07-28

கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக செயற்குழு நியமிக்கப்பட்டது

பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-07-21

“அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை பாராளுமன்ற குழுக்கள் அவற்றுக்கான கடமையின் அடிப்படையில் ஆராய முடியும்” – முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், கோப், கோபா குழுக்களின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே

பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.  பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும்  இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார்.  அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks