பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-02-27
செய்தி வகைகள் : குழு செய்திகள்
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மூடுவதற்கு இடமாளிக்காது அரச தனியார் பங்குடமையாக முன்னெடுத்துச் செல்லவேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் ஜனாதிபதியிடம் முன்வைக்குமாறு தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
2013, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (பெப். 20) அவருடைய தலைமையில் கூடியபோதே இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
வாழைச்சேனை தொழிற்சாலையில் இயந்திரங்கள் 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டவை என்றும் அவற்றைப் பழுதுபார்ப்பதற்கு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாகவும், திரைசேரியிடமிருந்து போதிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமையால் இதனை அரச தனியார் பங்குடமையாக முன்னெடுத்துச் செல்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான காணியை சுற்றுலாத்துறைக்காக ஒதுக்குவதற்கான திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்றும் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர இங்கு தெரிவித்தார்.
1.2 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்து தொழிற்சாலையின் இயந்திரங்களைப் பழுதுபார்த்தால் நாளொன்றுக்கு 5 டொன் வீதம் உற்பத்தியை மேற்கொண்டு மாதமொன்றுக்கு 22 மில்லியன் ரூபா இலாபம் மீட்ட முடியும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது. 340 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இதன் காணியை சுற்றுலாத்துறைக்கு முழுமையாக எடுக்காது அதில் ஒரு பகுதியை மாத்திரம் குறித்த தேவைக்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மூடுவதாக இருந்தால் அதனை விற்பனை செய்வதற்குப் பதிலாக அரச தனியார் பங்குடமையாக நடத்துவதன் முக்கியத்துவத்தை குழு பரிந்துரைத்ததுடன், இது சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவித்தது.
அத்துடன், சுற்றுலாத்துறையில் மாத்திரம் தங்கியிருப்பதற்குப் பதிலாக, நாட்டின் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்து அதன் ஊடாக உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது முக்கியமானது என்றும் குழு வலியுறுத்தியது. இந்நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 15 % மாத்திரமேயாகும், எனினும் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை 30% என்றும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் கைத்தொழில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியின் அளவு நூற்றுக்கு 0.04 வீதமாகும் என்றும், வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை 3% என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், தோல் கைத்தொழிலுக்காக விசேடமான வலயமொன்றை ஒதுக்குவது குறித்த பிரச்சினை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை இரண்டையும் அபிவிருத்தி செய்வது குறித்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், அரசிறைக்கொள்கைத் திணைக்களத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையைக் கவனத்தில் கொண்டு, இந்நாட்டில் வரி வசூலிக்கும் செயற்பாட்டின் குறைபாடுகள் குறித்தும் குழுவின் தலைவர் கவனம் செலுத்தினார். அதிக வருமானத்தை ஈட்டும் நபர்கள் வரி வலைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் போது, குறைந்த வருமானத்தைப் பெறும் நபர்கள் மாத்திரம் அவற்றில் இணைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வரிக் கொள்கை இதனைவிட விரிவானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார். உள்நாட்டு இறைவரி சட்டமூலம் திருத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு நிதி அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகள் முன்நின்றி செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ரமிஸ் கட்டமைப்புடன், காணிப் பதிவாளர் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றை இணைத்துக்கொள்ளுமாறு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டபோதும் இதுவரையில் இந்தப் பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமை குறித்து குழுவின் தலைவர் விசனம் தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தற்காலிக வற்வரி பதிவு இலக்கம் வழங்கப்படுவதால் அரசாங்கத்துக்குப் பாரிய வரி இழப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், அரசாங்கக் கணக்குகள் திணைக்களத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கை, HDFC வங்கியின் 2020ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கை, வர்த்தக வாணிப அமைப்பின் 2022ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கை, இலங்கை ஒத்தியல் மதிப்பீட்டுக்கான தராதர அங்கீகார சபை யின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, கூட்டுறவு சேவைகள் ஆணைக்குழுவின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை மற்றும் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை என்பனவும் இங்கு ஆராயப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இரான் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2025-02-16
உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் இன்று (14) பாராளுமன்றத்தில் கூடிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், வரையறுக்கப்பட்ட தொலைக் கல்வி நிலையத்தின் 2021 மற்றம் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையும் இங்கு ஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-02-13
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 2025.02.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அவசியம் தொடர்பில் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்தது. பணியிடங்களில் பாலியல் வன்முறையை ஒழித்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) இல்லாமல் செய்வது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மார்ச் 8ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலீ குணசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கலாநிதி கெளஷல்யா ஆரியரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, தீப்தி வாசலகே, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, அம்பிகா சாமிவெல் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-02-13
சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள துறைமுகங்களை புனரமைத்தல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சு கவனம் - குழுவின் தலைவர் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் (பெப். 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர் ரத்ன கமகேவும் கலந்துகொண்டார். அதற்கமைய, இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழகத்துடனும் இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இந்நாட்டு மீனவர்களைப் பாதித்துள்ள இந்தப் பிரச்சினைக்கு முரண்பாட்டு வழியிலல்லாமல் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்துடன், சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்தல் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு உரையாற்றிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கமைய, மீன்களை விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார். சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையா நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அதற்கமைய, நுகர்வோர் எளிதாக சமைக்கும் வகையில், மீன் வகைகளை பொதி செய்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் காணப்படும் கடற்றொழில் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் டைனமைட்டைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், நன்னீர் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நாட்டின் துறைமுகங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்களை புனரமைப்பதில் அமைச்சு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான கடற்றொழி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை என்பனவும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2025-02-07
உபகுழுவின் தலைவர் பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத் அரசாங்க சேவையில் தேவையான கொள்கை மாற்றத்தை அடையாளம் காண்பதற்காகப் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் எட்டுப் பேரைக் கொண்ட விசேட உபகுழுவை அமைக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அறிவுறுத்தல் வழங்கினார். பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (பெப். 05) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த உபகுழு அமைக்கப்பட்டது. கௌரவ பிரதியமைச்சர் பி.ருவன் செனரத் அவர்களின் தலைமையில் இந்த உபகுழு அமைக்கப்பட்டிருப்பதுடன், இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, அஜந்த கம்மெத்தெகே, தர்மப்பிரிய திசாநாயக்க, தினிந்து சமன், (சட்டத்தரணி) கீதா ஹேரத், மொஹமட் பைசல் மற்றும் லால் பிரேமநாத் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உபகுழுவின் ஊடாக அரசாங்க சேவைக்கான நியமனங்கள், போட்டிப் பரீட்சைகளை நடத்துதல், ஓய்வூ வழங்குதல் மற்றும் வெற்றிடங்கள் உள்ளிட்ட அரசாங்க சேவையிலுள்ள பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கைரீதியான மாற்றங்கள் குறித்துத் தேவையான விசாரணைகளை நடத்தி, அடையாளம் காணப்பட்ட முன்மொழிவுகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்வாறான உபகுழுவொன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி முன்மொழிந்ததுடன், இதற்கு அமையவே குழுவின் தலைவர் இந்த உபகுழுவை நியமித்தார். அத்துடன், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்றங்களில் 8,435 பேரின் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தற்பொழுத பணியாளர் மதிப்பாய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி, இறுதி அறிக்கை 2025 மார்ச் 31ஆம் திகதி கிடைக்கப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நியமனங்களுக்குத் தேவையான தரவுகளை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சில திட்டங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் சேவைகள் உறுதிப்படுத்தப்படாது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கிராம சேவர்களின் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks