E   |   සි   |  

2024-04-04

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தை விலையின் அடிப்படையில் விற்பனை செய்யப்படும்போது ஒரு கிலோவுக்காக வியாபாரிகள் பெற்றுக் கொள்ளும் இலாபம் 100 – 1000 ரூபாவாகும் என வழிவகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது

  • கணக்காய்வாளர் நாயகத்தினால் நடத்தப்படும் தடயவியல் கணக்காய்வு முடிவடையும்வரை வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான இலத்திரனியல் வாகனங்கள் இறங்குமதிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த அறிவுறுத்தல்
  • சேர் பெறுமதி வரியாக 188 பில்லியன் ரூபாவை வசூலிப்பதற்கு உள்நாட்டு இறைவரி சட்டத்துக்கு அமைய விரைவில் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை
  • 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வரிக் கோப்புக்களைத் திறப்பதற்குப் பதிலாக மாதமொன்றுக்கு 100,000 ற்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நபர்கள் தொடர்பான தகவல்களை டிஜிட்டல் தளத்துக்குப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

 

இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தை விலையின் அடிப்படையில் விற்பனை செய்யும்போது வியாபாரிகள் கிலோவொன்றுக்கு 100-1000 ரூபா வரையில் இலாபம் ஈட்டுவது வழிவகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரவணக்க தலைமையில் அண்மையில் (ஏப். 02) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரியவந்தது.

இதில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கிலோவொன்றின் சந்தை விலைக்கும், இறக்குமதி செய்யப்பட்ட விலைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசம் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கி, வணிக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம், இலங்கை சுங்கம், ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, ஹெக்டர் கொபேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

2018 ஆம் ஆண்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்காக அரசாங்கத்தினால் அறவிடப்பட்ட வரி வருமானத்தில் தொடர்ச்சியாக வீழ்ச்சி ஏற்பட்டதாகவும், அமெரிக்க டொலர் பெறுமதிக்கு ஏற்ப இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான அறவிடப்படும் விசேட பண்ட வரி பொருத்தமாக இல்லாமை இதற்குக் காரணம் என்றும் இங்கு தெரியவந்தது. இதற்கு அமைய இந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது அதிக பணம் செலவாவதாகவும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு நன்மைகள் கிடைக்காதபோதும், இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதிக இலாபத்தை ஈட்டுவதாகவும் தெரியவந்தது. கிலோவொன்றுக்கு 100-1000 ரூபாவரையில் வியாபாரிகள் இலாபமீட்டுவதும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிலோவொன்றுக்கு சந்தை விலை மற்றும் விசேட பண்ட வரி அறிவிடப்பட்ட பின்னர் சுங்க வரி விலக்களிக்கப்பட்ட பின்னரான விலைக்கும் இடையில் காணப்படும் பாரிய வேறுபாடு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்படி, அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் வாரந்தோறும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் இலங்கை சுங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும், 2525 பிரிவில் பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களிடமிருந்து சேர் பெறுமதி வரியை அறவிடக்கூடிய வகையில் அவர்களைப் பதிவுசெய்தல் மற்றும் 7000 பிரிவின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்யும் நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், 2018 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இறக்குமதியாளர்களினால் சட்டத்துக்கு அமைய வரியை அறவிடுவதற்கு (super gain tax) மற்றும் அவற்றின் முன்னேற்றத்தை இம்மாத இறுதியில் குழுவுக்கு அறிக்கையிடுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சுரண்டல் உச்சத்தை அடையும் அபாயம் இருப்பதால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலையீட்டின் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது. மேலும், அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு பதிலாக, வர்த்தக அமைச்சு நேரடியாக இறக்குமதி செய்து நுகர்வோருக்கு வழங்குவதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும், சந்தை விலை மற்றும் ஆகக் கூடிய விற்பனை விலை என்பன இணையத்தளம், கையடக்கத்தொலைபேசி செயலி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் குழு தெரிவித்தது.

மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் மேற்கொண்ட தடயவியல் கணக்காய்வின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் கணக்காய்வுப் பணிகள் முடிவடையும் வரை வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை நீடிப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழிவகைகள் பற்றிய குழு பணிப்புரை வழங்கியது.

அத்துடன், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் நிலுவைகளை அறவிடுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

•    சேர் பெறுமதி வரியின் நிலுவைத் தொகையான 188 பில்லியன் ரூபாவை அறவிடுவதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை கையகப்படுத்தல்)

•    சட்ட நடவடிக்கை எடுப்பதன் காரணமாக 3 ஆண்டுகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட வரியை வசூலிக்க தேவையான நடவடிக்கை எடுத்தல்.

•    ஒரு கோடிக்கு மேல் வரி ஏய்ப்புச் செய்த நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஒரு வாரத்துக்குள் குழுவிடம் பெற்றுக்கொடுத்தல்.

•    ரமிஸ் (RAMIS) கட்டமைப்பைப் பேணுவதற்கு திறந்த கேள்விப்பத்திரம் கோரலின் கீழ் அரச தனியார் பங்குடமை மாதிரியொன்றைத் தயாரித்தல்.

•    ரமிஸ் (RAMIS)  கட்டமைப்புத் தொடர்பான கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத் தகவலை மூன்றாம் தரப்பினருக்கு வெளியிட முடியுமா என்பது தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தைக் குழுவுக்குப் பெற்றுக்கொடுத்தல்.
•    18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு வரிக் கோப்புக்களைத் திறப்பதற்குப் பதிலாக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் குறித்த தகவல்களை டிஜிட்டல் தளத்துக்குப் பெற்றுக்கொள்ளல்.


இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ சிசிர ஜயக்கொடி, கௌரவ அனுராத ஜயரத்ன, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ டபிள்யூ.டி. ஜே செனவிரத்ன, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ வசந்த யாப்பா பண்டார, கெளரவ ஜயரத்ன ஹேரத், கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ அலி சாஹிர் மௌலானா, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ காமினி வலேபொட மற்றும் கௌரவ வீரசுமன வீரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2025-07-28

மருந்து பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள்   மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.  கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-07-28

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில்  கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-07-28

கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக செயற்குழு நியமிக்கப்பட்டது

பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-07-21

“அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை பாராளுமன்ற குழுக்கள் அவற்றுக்கான கடமையின் அடிப்படையில் ஆராய முடியும்” – முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், கோப், கோபா குழுக்களின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே

பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.  பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும்  இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார்.  அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks