E   |   සි   |  

2024-04-04

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தை விலையின் அடிப்படையில் விற்பனை செய்யப்படும்போது ஒரு கிலோவுக்காக வியாபாரிகள் பெற்றுக் கொள்ளும் இலாபம் 100 – 1000 ரூபாவாகும் என வழிவகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது

  • கணக்காய்வாளர் நாயகத்தினால் நடத்தப்படும் தடயவியல் கணக்காய்வு முடிவடையும்வரை வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான இலத்திரனியல் வாகனங்கள் இறங்குமதிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த அறிவுறுத்தல்
  • சேர் பெறுமதி வரியாக 188 பில்லியன் ரூபாவை வசூலிப்பதற்கு உள்நாட்டு இறைவரி சட்டத்துக்கு அமைய விரைவில் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை
  • 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வரிக் கோப்புக்களைத் திறப்பதற்குப் பதிலாக மாதமொன்றுக்கு 100,000 ற்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நபர்கள் தொடர்பான தகவல்களை டிஜிட்டல் தளத்துக்குப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

 

இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தை விலையின் அடிப்படையில் விற்பனை செய்யும்போது வியாபாரிகள் கிலோவொன்றுக்கு 100-1000 ரூபா வரையில் இலாபம் ஈட்டுவது வழிவகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரவணக்க தலைமையில் அண்மையில் (ஏப். 02) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரியவந்தது.

இதில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கிலோவொன்றின் சந்தை விலைக்கும், இறக்குமதி செய்யப்பட்ட விலைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசம் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கி, வணிக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம், இலங்கை சுங்கம், ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, ஹெக்டர் கொபேகடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

2018 ஆம் ஆண்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்காக அரசாங்கத்தினால் அறவிடப்பட்ட வரி வருமானத்தில் தொடர்ச்சியாக வீழ்ச்சி ஏற்பட்டதாகவும், அமெரிக்க டொலர் பெறுமதிக்கு ஏற்ப இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான அறவிடப்படும் விசேட பண்ட வரி பொருத்தமாக இல்லாமை இதற்குக் காரணம் என்றும் இங்கு தெரியவந்தது. இதற்கு அமைய இந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது அதிக பணம் செலவாவதாகவும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு நன்மைகள் கிடைக்காதபோதும், இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதிக இலாபத்தை ஈட்டுவதாகவும் தெரியவந்தது. கிலோவொன்றுக்கு 100-1000 ரூபாவரையில் வியாபாரிகள் இலாபமீட்டுவதும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிலோவொன்றுக்கு சந்தை விலை மற்றும் விசேட பண்ட வரி அறிவிடப்பட்ட பின்னர் சுங்க வரி விலக்களிக்கப்பட்ட பின்னரான விலைக்கும் இடையில் காணப்படும் பாரிய வேறுபாடு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்படி, அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் வாரந்தோறும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் இலங்கை சுங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும், 2525 பிரிவில் பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களிடமிருந்து சேர் பெறுமதி வரியை அறவிடக்கூடிய வகையில் அவர்களைப் பதிவுசெய்தல் மற்றும் 7000 பிரிவின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்யும் நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், 2018 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இறக்குமதியாளர்களினால் சட்டத்துக்கு அமைய வரியை அறவிடுவதற்கு (super gain tax) மற்றும் அவற்றின் முன்னேற்றத்தை இம்மாத இறுதியில் குழுவுக்கு அறிக்கையிடுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சுரண்டல் உச்சத்தை அடையும் அபாயம் இருப்பதால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலையீட்டின் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது. மேலும், அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு பதிலாக, வர்த்தக அமைச்சு நேரடியாக இறக்குமதி செய்து நுகர்வோருக்கு வழங்குவதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும், சந்தை விலை மற்றும் ஆகக் கூடிய விற்பனை விலை என்பன இணையத்தளம், கையடக்கத்தொலைபேசி செயலி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் குழு தெரிவித்தது.

மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் மேற்கொண்ட தடயவியல் கணக்காய்வின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் கணக்காய்வுப் பணிகள் முடிவடையும் வரை வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை நீடிப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழிவகைகள் பற்றிய குழு பணிப்புரை வழங்கியது.

அத்துடன், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் நிலுவைகளை அறவிடுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

•    சேர் பெறுமதி வரியின் நிலுவைத் தொகையான 188 பில்லியன் ரூபாவை அறவிடுவதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை கையகப்படுத்தல்)

•    சட்ட நடவடிக்கை எடுப்பதன் காரணமாக 3 ஆண்டுகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட வரியை வசூலிக்க தேவையான நடவடிக்கை எடுத்தல்.

•    ஒரு கோடிக்கு மேல் வரி ஏய்ப்புச் செய்த நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஒரு வாரத்துக்குள் குழுவிடம் பெற்றுக்கொடுத்தல்.

•    ரமிஸ் (RAMIS) கட்டமைப்பைப் பேணுவதற்கு திறந்த கேள்விப்பத்திரம் கோரலின் கீழ் அரச தனியார் பங்குடமை மாதிரியொன்றைத் தயாரித்தல்.

•    ரமிஸ் (RAMIS)  கட்டமைப்புத் தொடர்பான கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத் தகவலை மூன்றாம் தரப்பினருக்கு வெளியிட முடியுமா என்பது தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தைக் குழுவுக்குப் பெற்றுக்கொடுத்தல்.
•    18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு வரிக் கோப்புக்களைத் திறப்பதற்குப் பதிலாக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் குறித்த தகவல்களை டிஜிட்டல் தளத்துக்குப் பெற்றுக்கொள்ளல்.


இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ சிசிர ஜயக்கொடி, கௌரவ அனுராத ஜயரத்ன, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ டபிள்யூ.டி. ஜே செனவிரத்ன, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ வசந்த யாப்பா பண்டார, கெளரவ ஜயரத்ன ஹேரத், கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ அலி சாஹிர் மௌலானா, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ காமினி வலேபொட மற்றும் கௌரவ வீரசுமன வீரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2025-02-16

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம்

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் இன்று (14) பாராளுமன்றத்தில் கூடிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே  இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், வரையறுக்கப்பட்ட தொலைக் கல்வி நிலையத்தின் 2021 மற்றம் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையும் இங்கு ஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-02-13

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கௌரவ பிரதமர் தலைமையில் எதிர்காலத் செயற்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியது

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் 2025.02.07ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அவசியம் தொடர்பில் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்தது. பணியிடங்களில் பாலியல் வன்முறையை ஒழித்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) இல்லாமல் செய்வது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மார்ச் 8ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலீ குணசிங்ஹ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கலாநிதி கெளஷல்யா ஆரியரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, தீப்தி வாசலகே, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, அம்பிகா சாமிவெல் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-02-13

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர்

சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள துறைமுகங்களை புனரமைத்தல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சு கவனம் - குழுவின் தலைவர்   இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர்  ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் அண்மையில் (பெப். 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர்   ரத்ன கமகேவும் கலந்துகொண்டார். அதற்கமைய, இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழகத்துடனும் இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இந்நாட்டு மீனவர்களைப் பாதித்துள்ள இந்தப் பிரச்சினைக்கு முரண்பாட்டு வழியிலல்லாமல் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்துடன், சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்தல் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு உரையாற்றிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை  விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கமைய, மீன்களை விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய  முடியும் எனத் தெரிவித்தார். சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையா நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அதற்கமைய, நுகர்வோர் எளிதாக சமைக்கும் வகையில், மீன் வகைகளை பொதி செய்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் காணப்படும் கடற்றொழில் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் டைனமைட்டைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், நன்னீர் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நாட்டின் துறைமுகங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்களை புனரமைப்பதில் அமைச்சு  அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குழுவின் தலைவர்  தெரிவித்தார். அத்துடன், 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான கடற்றொழி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கை என்பனவும் குழுவில் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


2025-02-07

அரசாங்க சேவையில் தேவையான கொள்கை மாற்றத்தை அடையாளம் காண்பதற்காக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் 08 பேரைக் கொண்ட விசேட உபகுழு

உபகுழுவின் தலைவர் பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத்   அரசாங்க சேவையில் தேவையான கொள்கை மாற்றத்தை அடையாளம் காண்பதற்காகப் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் எட்டுப் பேரைக் கொண்ட விசேட உபகுழுவை அமைக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அறிவுறுத்தல் வழங்கினார். பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (பெப். 05) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த உபகுழு அமைக்கப்பட்டது. கௌரவ பிரதியமைச்சர் பி.ருவன் செனரத் அவர்களின் தலைமையில் இந்த உபகுழு அமைக்கப்பட்டிருப்பதுடன், இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, அஜந்த கம்மெத்தெகே, தர்மப்பிரிய திசாநாயக்க, தினிந்து சமன், (சட்டத்தரணி) கீதா ஹேரத், மொஹமட் பைசல் மற்றும் லால் பிரேமநாத் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உபகுழுவின் ஊடாக அரசாங்க சேவைக்கான நியமனங்கள், போட்டிப் பரீட்சைகளை நடத்துதல், ஓய்வூ வழங்குதல் மற்றும் வெற்றிடங்கள் உள்ளிட்ட அரசாங்க சேவையிலுள்ள பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கைரீதியான மாற்றங்கள் குறித்துத் தேவையான விசாரணைகளை நடத்தி, அடையாளம் காணப்பட்ட முன்மொழிவுகள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்வாறான  உபகுழுவொன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி முன்மொழிந்ததுடன், இதற்கு அமையவே குழுவின் தலைவர் இந்த உபகுழுவை நியமித்தார். அத்துடன், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்றங்களில் 8,435 பேரின் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தற்பொழுத பணியாளர் மதிப்பாய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி, இறுதி அறிக்கை 2025 மார்ச் 31ஆம் திகதி கிடைக்கப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் நியமனங்களுக்குத் தேவையான தரவுகளை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சில திட்டங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் சேவைகள் உறுதிப்படுத்தப்படாது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். கிராம சேவர்களின் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks