E   |   සි   |  

2024-04-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

காலி துறைமுக மெரினா அபிவிருத்தித் திட்டம் மற்றும் நீலக் கொடி கடற்கரைகளை ஸ்தாபித்தல் ஆகியவற்றை துரிதப்படுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து குறிப்பிட்ட கால எல்லைக்குள் செயற்பட வேண்டும் - சுற்றாடல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அறிவுறுத்தல்

  • காலி துறைமுக மெரினா அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குழுவிற்கு அறிவிக்குமாறும் ஆலோசனை
  • நீலக்கொடி திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் அறிவுறுத்தும் செயலமர்வை பாராளுமன்றத்தில் நடத்துமாறும் அறிவுறுத்தல்

 

காலி துறைமுக மெரினா அபிவிருத்தித் திட்டம் மற்றும் நீலக் கொடி கடற்கரைகளை (Blue Flag Beach) ஸ்தாபித்தல் ஆகியவற்றை துரிதப்படுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து குறிப்பிட்ட கால எல்லைக்குள் செயற்படுமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அரச நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் இணக்கப்பாடு இன்மை காரணமாக நாட்டுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்கள் தாமதமாகி வருவதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

16 வருடங்கள் கால தாமதமான காலி துறைமுக மெரினா அபிவிருத்தித் திட்டம் மற்றும் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீலக் கொடி கடற்கரைகள் அமைப்பது தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்ட போதே குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, துறைமுக அதிகார சபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், காலி மாநகர சபை, தொல்பொருளியல் திணைக்களம், வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆகிய சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் காலி துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கான கடனுதவி 2006 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு இத்திட்டத்தினால் எவ்வித நிதிப் பயனும் கிடைக்காத காரணத்தினால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. பின்னர் திட்டத்தின் பொருளாதாரப் பயன்கள் அடிப்படையில் இரண்டாவது திட்ட முன்மொழிவுக்கு அமைய மேலதிகமாக இனங்காணப்பட்ட 40 ஹெக்டயர் நிலம் நிரப்பப்பட்டு அதற்கு மரபுரிமை பாதிப்பு அறிக்கை, சுற்றுச்சூழல் மற்றும் தொல்பொருள் ஆய்வு அறிக்கை பெறப்பட்டு, தகுந்த முதலீட்டாளருக்கு வழங்கி அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

பகுதியில் 4 கப்பல் விபத்துக்குள்ளாகியிருப்பதக்கவும், தொல்பொருள் தாக்க பகுப்பாய்வு (AIA) மூலம் கப்பல் பாகங்களை மீட்டு காட்சிப்படுத்துவது போன்ற மாற்று முறைளைப் பயன்படுத்த முடியும் என தொல்பொருளியல் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது யுனெஸ்கோ உலக மரபுரிமைப் பகுதி என்பதால் அது தொடர்பிலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதி உள்ளிட்ட இந்தத் திட்டத்தம் தொடர்பான சட்டரீதியான தடைகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்தத் திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டுக்கு நன்மை பயக்கும் இவ்வாறான திட்டங்களை தடைகளை வெற்றிகொண்டு அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. அத்துடன், அனைத்துத் தரப்பினரும் சந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் களமாக இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவைப் பயன்படுத்துமாறும் குழுவின் தலைவர் கௌரவ அஜித் மான்னப்பெரும சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இத முன்னேற்றம் தொடர்பில் குழுவுக்கு அறிக்கை அளிக்குமாறு துறைமுக அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், ஏப்ரல் 26 திகதிக்குள் சம்பந்தப்பட்ட ஆரம்பகட்ட முன்னேற்றத்தை அறிவிக்குமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் கடல்சார் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் நீலக்கொடி கடற்கரை திட்டம் (Blue Flag Beaches) குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் சுற்றுலாத்தலங்களைக் கொண்ட 28 கடற்கரைகள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தச் சான்றிதழுக்காக 33 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் இங்கு புலப்பட்டது. இலங்கைக்குப் பின்னர் இத்திட்டத்தை ஆரம்பித்த இந்தியாவின் 8 கடற்கரைகள் ஏற்கனவே இந்தச் சான்றிதழைப் பெற்றுள்ளதாகவும், தான் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்னும் செயற்படுத்தப்படாமல் பல வருடங்களாகத் தாமதமாகி வருகின்றது எனவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்

தற்பொழுது உனவட்டுன, பெந்தோட்டை, பாசிக்குடா மற்றும் அறுகம்பே ஆகிய கடற்கரைகள் உத்தியோகபூர்வ சான்றிதழைப் பெறக்கூடிய கடற்கரைகளாக இனங்காணப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கௌரவ மான்னப்பெரும வலியுறுத்தினார்.

அதற்கமைய, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் முயற்சியின் கீழ் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவுறுத்தும் செயலமர்வை ஏற்பாடு செய்யுமாறும் குழு ஆலோசனை வழங்கியது.

 

1 3

 



தொடர்புடைய செய்திகள்

2025-07-28

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில்  கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-07-28

மருந்து பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள்   மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.  கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-07-28

கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக செயற்குழு நியமிக்கப்பட்டது

பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-07-21

“அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை பாராளுமன்ற குழுக்கள் அவற்றுக்கான கடமையின் அடிப்படையில் ஆராய முடியும்” – முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், கோப், கோபா குழுக்களின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே

பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.  பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும்  இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார்.  அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks