E   |   සි   |  

2024-07-12

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

2023 இற்கான வரி நிலுவையை முழுமையாக அறவிடுமாறு வழங்கிய பரிந்துரையை மது வரித் திணைக்களம் புறக்கணித்தமை தொடர்பில் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் கடுமையான அதிருப்தி

  • மது வரி ஆணையாளர் நாயகம் வழிவகைகள் பற்றிய குழுவைத் தவிர்ப்பதும் குழுவின் பரிந்துரைகளை புறக்கணிப்பதும் பாராளுமன்றத்தையும் குழுவையும் அகௌரவிப்பதாகும் - வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர்
  • எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சிடம் விடுத்த வினவிலுக்கு பதில் வரவில்லை - மது வரித் திணைக்களம் குழுவில் தெரிவிப்பு

 

2023 இற்கான முழுமையான வரி நிலுவையான 1.1 பில்லியன் ரூபாய் நிதியை 2024.06.30 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட மது உற்பத்தியாளர்களிடமிருந்து அறவிடுமாறு 2024.04.24 ஆம் திகதி வழிவகைகள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரையின் முன்னேற்றம் தொடர்பில் பரிசீலிக்கும் போது குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய, அது தொடர்பில் போதுமான நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து குழு அதன் கடுமையான அதிருப்தியை வெளியிட்டது.

இங்கு மதுவரித் திணைக்களம் குறிப்பிடுகையில், வழிவகைகள் பற்றிய குழு வழங்கிய பரிந்துரை மற்றும் முன்னைய ஆண்டுகளின் மது வரி அறவிடுதல் தொடர்பான ஒப்பந்தங்கள் என்பவற்றுக்கிடையிலான முரண்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி 2024.05.02 ஆம் திகதி கடிதம் மூலம் நிதி அமைச்சிடம் வினவியிருந்தாலும் நிதி அமைச்சு தரப்பிலிருந்து பதிலொன்று கிடைக்கவில்லை எனத் தெரிவித்தது.

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் 2024.07.10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இங்கு, டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனம் 1,659 மில்லியன் ரூபாய், ஹிங்குரான டிஸ்டிலரீஸ் நிறுவனம் 102 மில்லியன் ரூபாய், சினர்ஜி நிறுவனம் 37 மில்லியன் ரூபாய், வயம்ப டிஸ்டிலரீஸ் 79 மில்லியன் ரூபாய் என்றவகையில் 2023 ஆம் ஆண்டு முதல் 2024.06.15 ஆம் திகதி வரையான நிலுவை வரி மற்றும் வருமானம் 1.8 பில்லியன் ரூபாய் என குழுவில் புலப்பட்டதுடன், இவ்வாறு நிலுவை வரியை முழுமையாக அறவிடுமாறு குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டிருந்த நிலையில், மதுவரித் திணைக்களத்தினால் அதன் கடமையை புறக்கணித்துள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்துக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்துவதாக குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

மேலும், டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனம் தவிர்ந்த ஏனைய நிறுவங்களுடன் மதுவரித் திணைக்களம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் தற்பொழுது செயலற்ற நிலையில் உள்ளதாகவும் இங்கு புலப்பட்டது. இது தொடர்பில் முறையான நடவடிக்கை எடுப்பதற்கு மது வரி ஆணையாளர் நாயகத்துக்கு முடியாமல் போயுள்ளதாகவும், அவ்வாறு உள்ள நிலையில் ஆணையாளர் நாயகம் வழிவகைகள் பற்றிய குழுவை புறக்கணித்து வருவதாகவும், மதுவரித் திணைக்களம் குழுவின் பரிந்துரைகளை பொருட்படுத்தாமல் இருப்பதாகவும், அது பாராளுமன்றத்தையும் குழுவையும் அகௌரவிப்பதாகும் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

2023 இற்கான நிலுவை மது வரியை செலுத்தாத நிறுவனங்களின் மது உற்பத்தியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மீண்டும் நிதி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு குழுவின் செயலாளருக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

பொதுமக்களுக்கு வரி விதிக்கும் பின்னணியில், நிலுவை வரிகளை செலுத்தாத மது உற்பத்தியாளர்கள் தொடர்பில் மதுவரித் திணைக்களம் தளர்வான கொள்கையை பின்பற்றுவது தொடர்பிலும் குழு அதன் அதிருப்தியை வெளியிட்டது. அத்துடன், நான்கு குழுக் கூட்டங்களில் குழுவினால் நிதி அமைச்சுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்தாமை தொடர்பிலும் குழுவின் கடுமையான அதிருப்தி வெளியிடப்பட்டது.

அத்துடன், அவசர அனர்த்த சூழ்நிலையில் தலையிடுவதன் கீழ், கண்டி புகையிரத நிலையம் வெள்ளத்தினால் மூழ்கிய விடயம் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இங்கு, கண்டி புகையிரத நிலையம் உள்ளடங்கிய வடிகான் கட்டமைப்பு போதுமானதாக இல்லை எனவும், அவற்றின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் என்பன விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இது தொடர்பில் உலக வங்கியின் கவனத்தை ஈர்ப்பதற்கும், மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு இந்தப் பிரேரணையை முன்வைக்குமாறும், அதற்கு புகையிரத திணைக்களத்தையும் சம்பந்தப்படுத்திக்கொள்ளுமாறும் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அவிசாவளை பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் சேற்று நீர் கலந்த நீர் விநியோகிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனு தொடர்பிலும் இதன்போது மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிக்கலுக்குக் காரணமாக உள்ள அனுமதி வழங்கப்பட்ட மற்றும் அனுமதி வழங்கப்படாத இரத்தினக்கல் அகழ்வு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் இணைந்து சிக்கலுக்குக் காரணமான கெடஹெத்த கால்வாயுடன் தொடர்புடைய இரத்தினக்கல் அகழ்வுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள பட்டியலை பெற்றுக்கொள்ளுமாறும், அது தொடர்பில் கண்காணிப்பு செய்து அதன் அறிக்கையை வழிவகைகள் பற்றிய குழுவுக்கு வழங்குமாறும் குழுவின் தலைவர் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டதில் வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான கௌரவ டபிள்யு. டி. ஜே. செனவிரத்ன, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ உதயன கிரிந்திகொட மற்றும் கௌரவ வசந்த யாப்பா பண்டார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

6 3

 



தொடர்புடைய செய்திகள்

2025-11-18

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து வழிவகைகள் பற்றிய குழு கவனம் செலுத்தியது

அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டம், அதன் நடைமுறைகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 12) பாராளுமன்றத்தில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு அஸ்வெசும நலன்புரி சலுகைத் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். அஸ்வெசும திட்டத்திற்குப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அந்த அளவுகோல்களின் அடிப்படையில் பொருத்தமான சலுகைகளை வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் காணப்படும் சிக்கல்கள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இத்திட்டத்தில், 22 அளவுகோல்களின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த அளவுகோல்களை செயல்படுத்தும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்காக மாத்திரம் பயனாளிகளைப் பதிவுசெய்வதற்குத் தற்பொழுது அனுமதிக்கப்பட்டாலும், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் தமது தகவல்களைக் கட்டமைப்பொன்றில் (Social Registry) பதிவுசெய்வதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், பதிவுசெய்த பின்னர் தங்களுக்கு என்ன தேவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதன் மூலம், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று குழு சுட்டிக்காட்டியது. முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கு அஸ்வெசும திட்டத்தை அவர்களின் வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு  விரிவாகக் கலந்துரையாடியது. தேசிய அடையாள அட்டை இல்லாததால் நலன்புரித் திட்டத்தின் உதவிகளைப் பெற முடியாத தகுதியுள்ள நபர்கள் தற்போது இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாததால் அந்தச் சலுகைகளைப் பெற முடியாத சில குழுக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். அதன்படி, முடிந்தவரை அவர்களின் அடையாளங்களை உறுதி செய்வதன் மூலம் நலன்புரித்திட்ட உதவிகளை வழங்குவதன் நோக்கத்தை அடைவதன் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது. இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த, கௌரவ பிரதியமைச்சர்களான  சதுரங்க அபேசிங்ஹ, (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான  (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, கே.சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹன பண்டார, சத்துர கலபதி, திலின சமரகோன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-17

தேசிய உயர்கல்வி கொள்கை வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி அலுவல்ககள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவில் ஆராய்ப்பட்டது

தேசிய உயர்கல்வி கொள்கைக்கான வரைபு தயாரிப்பின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உயர்கல்விப் பிரிவு தொடர்பான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தயாரிக்கப்பட்டுவரும் உயர்கல்விக் கொள்கை வரைபு மற்றும் அதற்கான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி.த சில்வா அவர்கள் குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்தார். நவம்பர் மாத இறுதிக்குள் இந்த வரைபைத் தயாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை மதிப்பாய்வு செய்தல், இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் வெளிப்புற பட்டப்படிப்பு திட்டங்களின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக முந்தைய குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-11-15

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கை உப குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி அவர்களினால் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது.  பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 13) பாராளுமன்றத்தில் கூடியபோதே இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டது. பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், அரச சேவையில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாறியவர்களுக்கு, அந்த உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் சேவையாற்றிய பதவிக்குரிய ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இங்கு முன்மொழியப்பட்டது. அரசாங்க வேலையை விட்டு பாராளுமன்ற உறுப்பினராக வரும் ஒருவருக்கு, உறுப்பினர் ஓய்வூதியமும் கிடைக்காததால், இந்த விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன்படி தனது கவனத்தைச் செலுத்த எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார். சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வு நடைமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வினைத்திறன்காண் தடைதாண்டல் (efficiency bar) மதிப்பெண் வரம்புகளை பொதுச் சேவை ஆணைக்குழு மாற்றியமைத்ததன் காரணமாக அரச சேவைக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தச் சிக்கல் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தக் குழு கூட்டத்தில் கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், குழுவின் கௌரவ உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-11-15

பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்கவும் – துறைசார் மேற்பார்வைக் குழு சுற்றாடல் அமைச்சுக்கு ஆலோசனை

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பல அமைச்சுக்களுக்கான முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை ஆராய்வதற்காகத் துறைசார் மேற்பார்வைக் குழு இரு நாட்கள் கூடியது பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியது. பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது சிலிசிலி பைகளுக்கு கட்டணம் அறவிடும் தீர்மானம் தொடர்பில் குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் பொலிஎதிலின் பயன்பாடு குறைக்கப்படுமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது இந்தப் பைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை முடிவு செய்த அதிகாரிகள் யார் என்பதையும் குழுவின் தலைவர் வினவினார். சிலிசிலி பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை என இங்கு ஆஜராகியிருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், குறித்த அமைச்சுக்களின் கீழ் உள்ள பல நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகள் மற்றும் செயற்திறன் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இக்கூட்டத்தில், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்கானி, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, ஜே.சி.அலவத்துவல, (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க மற்றும் உபுல் கித்சிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks