E   |   සි   |  

2025-01-30

செய்தி வகைகள் : செய்திகள் 

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கோரல்

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு உறுப்பினர் ஒருவரின் நியமனத்திற்கான விதப்புரையை மேற்கொள்வதற்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு வெளியீட்டாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக ஆட்களின் ஒழுங்கமைப்புக்களிடம் இருந்து பெயர் குறித்த நியமனங்களை  அரசியலமைப்புப் பேரவை கோரியுள்ளது.

சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சட்டம், ஆளுகை, பொது நிர்வாகம், சமூக சேவைகள், ஊடகத் துறை, அறிவியல் மற்றும் தொழினுட்பவியல் அல்லது முகாமைத்துவம் ஆகிய துறைகளில் அறிவு, அனுபவம் மற்றும் திறமையைப் பறைசாற்றி பகிரங்க வாழ்வில் தமக்கென சிறந்த நிலையினை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.

அவ்வாறு பெயர் குறித்து நியமிக்கப்படுபவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக, ஏதேனும் மாகாண சபை உறுப்பினராக அல்லது உள்ளூரதிகாரசபை உறுப்பினராகவோ அல்லது ஏதேனும் பகிரங்க அல்லது நீதிசார் பதவியை அல்லது வேறேதேனும் இலாபமீட்டும் பதவியை வகிக்காதவராகவோ, ஏதேனும் அரசியற் கட்சியுடன் சம்பந்தப்படாத ஆட்களாகவோ, ஏதேனும் தொழிலைக் கொண்டு நடாத்தாதவர்கள் அல்லது ஏதேனும் உயர்தொழிலைப் புரியாத ஆட்களாவோ இருக்க வேண்டும்.

பெயர் குறித்த நியமனங்கள் www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்படல் வேண்டும். உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட பெயர் குறித்த நியமனங்கள்  அரசியலமைப்புப்  பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப்  பேரவை – அலுவலகம்,  இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு 2025 பெப்ரவரி 7 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ எனக் குறிப்பிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

[இணைப்பு]




தொடர்புடைய செய்திகள்

2025-06-04

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2025.06.04

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மனுக்களின் பிரதிகள் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு   அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் மேலும் இரண்டு பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (ஜூன் 04) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


2025-06-03

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்புக்கு வழங்கிவைப்பு

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளினால் சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்புக்கு இன்று (ஜூன் 03) வழங்கிவைக்கப்பட்டன. உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன அவர்களின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட விசாரணைக்குழு இன்று (03) பாராளுமன்றத்தில் கூடிய போதே சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன. இங்கு சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விசரணைக்குழுவில் பங்குபற்றிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஜனாதிபதி சட்டத்தரணி) திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர், பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ். வீரவிக்ரமவின் வீட்டுக்குச் சென்று கடந்த வார இறுதியில் சாட்சியங்களின் 12 சத்தியக்கடதாசிகளை வழங்க நடவடிக்கை எடுத்ததாக குழுவில் சுட்டிக்காட்டினர். அத்துடன், இன்றைய தினம், 10 சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகளை குழுவின் முன்னிலையில் பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்கியதுடன், எஞ்சிய சத்தியக்கடதாசிகளை எதிர்வரும் குழுவின் அமர்வில் முன்வைக்க எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்தனர். அதற்கமைய, முன்னர் இணங்கியதன் பிரகாரம் அனைத்து சாட்சியங்களினதும் சத்தியக்கடதாசிகளை இன்றைய தினம் வழங்குமாறு பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். பின்னர் இரு தரப்பினராலும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டதை அடுத்து, 6 வாக்குமூலங்களின் சத்தியக்கடதாசிகளை பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்குவது பொருத்தமானது என குழுவின் நிலைப்பாடாக இருந்ததுடன், அது தொடர்பில் இரு தரப்பினரதும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், 2 சத்தியக்கடதாசிகளை இரு தரப்பினருக்கும் வசதியான தினமொன்றில் மற்றும் நேரத்தில் தனிப்பட்ட வகையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து பரிசீலிப்பதற்கு குழு அனுமதி வழங்கியது. மற்றுமொரு சாட்சியமாக வழங்கப்பட்டுள்ள ஊடக சந்திப்பு ஒன்று தொடர்பான காணொலியின் இறுவெட்டை (CD) பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பினருக்கு வழங்குவதற்கு குழு தீர்மானித்ததுடன், சட்டமா அதிபர்  திணைக்களத்தின் பிரதிநிதிகள் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இந்த சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் தொடர்பான பிரதிவாதி பொலிஸ்மா அதிபர் தரப்பின் நிலைப்பாட்டு 9 ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு விசாரணைக்குழு கூடி முன்வைக்கப்படவுள்ளது.


2025-06-03

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2025.06.03

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு   அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி தனக்குக் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (மே 03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


2025-06-02

இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் பங்கேற்பு






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks