பார்க்க

E   |   සි   |  

2025-02-21

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்களை மேம்படுத்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் இரண்டு உப குழுக்கள்

  • பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் தகவல்கள் அடங்கிய தரவுக் கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பில் குழுவின் கவனத்திற்கு

 

இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்களை மேம்படுத்துவதற்கு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால்  இரண்டு உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.

அதற்கமைய, வியாட்டுத்துறை பற்றிய உப குழுவுக்கு, ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களான சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, ருவன் மாபலகம, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இளைஞர் விவகாரங்கள் பற்றிய உப குழுவுக்கு, ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களான லசித் பாஷண கமகே, தினிந்து சமன் மற்றும் கோசல நுவன் ஜயவீர ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஏனைய உறுப்பினர்களுக்கும் தன்னார்வ அடிப்படையில் இந்த உப குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதன்முறையாகக் கூடிய போதே இந்த உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் இளைஞர் விவகாரங்கள் கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவும் கலந்துகொண்டார்.

இதன்போது நாடு பூராகவும் காணப்படும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் அத்துறையை வலுப்படுத்துவதற்குத் தேவையான முன்மொழிவுகள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சிறுவர்களின் விளையாட்டுத்துறை தொடர்பான ஆர்வம் மேம்பட்ட நிலையில் இல்லாமை மற்றும் அதனால் அவர்கள் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் போக்கு ஏற்பட்டுள்ளதாக கௌரவ உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதனால் விளையாட்டுக்கள் மீது சிறுவர்களை ஈடுபடுத்தும் வகையில் விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டம் ஒன்றின் அவசியம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டுக்கள்  இந்நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் பிரதான காரணியாகும் எனத் தெரிவித்ததுடன், இந்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். விளையாட்டுத்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமைச்சுக்கு எழுத்து மூலமாக அறிவிக்குமாறும், நாட்டின் விளையாட்டு மேம்பாட்டிற்காக, அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் போர்வையில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சிறு வயதிலிருந்தே பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை அடையாளம் கண்டு, அந்தத் தகவல்கள் ஒரே தரவுக் கட்டமைப்பில் இல்லாமை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, அந்தத் தகவல்கள் ஒரு கட்டமைப்பில் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர் தற்பொழுது தன்னார்வ மென்பொருள் பொறியியலாளர் ஒருவரினால் தகவல்களை சேகரிக்கும் கட்டமைப்பை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இளைஞர் விவகாரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விடயங்களை முன்வைத்தனர். அதற்கமைய, அந்த விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

2022 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கையை குழுவின் அனுமதிக்காக  முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த அறிக்கையை ஆராய்வதற்குக் காலம் தேவை என்பதால், எதிர்வரும் காலத்தில் அந்த அறிக்கையை மீண்டும் குழுவில் கருத்திற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-11-22

நிதி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டுக்கான செயலாற்றுகை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது

2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டிய 8 அறிக்கைகளுக்கும் அனுமதி நிதி அமைச்சின் கீழ் முக்கிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் 2025 செப்டெம்பர் மாதம் வரையில் மொத்த நிதிச் செயற்பாடுகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 20) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் இது பற்றி ஆராயப்பட்டது.  இதற்கமைய உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை மதுவரித் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாகரிகள் ஒவ்வொரு நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்த விளக்கத்தை முன்வைத்தனர். அத்துடன், அரசாங்க பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி குழுவில் கலந்துகொண்ட அதிகாரிகள், 2026-2030 ஆண்டு காலப்பகுதிக்கான இடைக்கால படுகடன்முகாமைத்துத்துக்கான வழிகாட்டல் மற்றும் 2026-2030 ஆண்டு காலப்பகுதிக்கான படுகடன் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். இலங்கை முதலீட்டுச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் தமது நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். நேரடியான வெளிநாட்டு முதலீடு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 827 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி வெளிநாட்டு முதலீடுகளாகப் பெறப்பட்டுள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதன்படி, எதிர்வரும் ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடு தொடர்ந்து மேம்படுவதை உறுதிசெய்ய இலங்கை முதலீட்டுச் சபையும் அதனுடன் சம்பந்தப்பட்ட  ஏனைய நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குழு வலியுறுத்தியது. அத்துடன், 2024ஆம் ஆண்டு 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசாங்க நிதி பற்றிய குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டிய 8 அறிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2025-11-22

இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய உத்தேச சட்டமூல வரைபு ஆவணம் தொடர்பில் பாராளுமன்ற குழுக்களின் கவனத்திற்கு

எதிர்வரும் காலத்தில் அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து விரிவாகக் கலந்துரையாடின.  அந்தக் குழுக்களின் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர மற்றும் சமன்மலீ குணசிங்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் (நவ. 20) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் நீதி அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.  இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இந்த உத்தேச சட்டமூலம் தொடர்பான முதலாவது சட்டமூலம் 2024 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தனர். அதன்போது, சட்டமூலம் மீது உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கமைய உயர் நீதிமன்றத்தினால் உள்வாங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்ட திருத்தங்கள், சட்டமூலத்தின் குழு நிலையின் போது மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சினால் உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட திருத்தங்கள் மற்றும் கொள்கை ரீதியாக உள்வாங்கப்படவேண்டிய ஏனைய திருத்தங்கள் சேர்க்கப்பட்டு புதிய சட்டமூலம் வரைபு செய்யப்பட்டு வர்த்தமானி தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தை பத்தாவது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.  அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தின் ஊடாக இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவுதல், பணக் கடன் வழங்கும் தொழில் மற்றும் நுண்நிதித் தொழில் என்பவற்றை ஒழுங்குபடுத்தல், அவற்றின் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் மற்றும் 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தை நீக்குவதற்கும் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் பணிப்பாளர்கள் சபையின் அமைப்பு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், பணிப்பாளர்கள் சபையின் அமைப்பில் நுண்நிதித் தொழில் வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவர் உள்வாங்கப்படாமை பிரச்சினைக்குரியது என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர சுட்டிக்காட்டினார். விசேடமாக நுண்நிதித் தொழிற்துறைக்கு ஒழுங்குபடுத்தல் இல்லாததால் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் இருப்பதன் முக்கியத்துவத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு அல்லது மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் பிரதிநிதி ஒருவர் அல்லது அந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் இந்தப் பணிப்பாளர் சபையில் அங்கத்தவராக இருப்பது பொருத்தமாகும் என கௌரவ உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது.  அத்துடன், இந்த வரைபு ஆவணத்தில் உள்ளடங்கப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், எந்தவொரு ஒழுங்குபடுத்தலும் இன்றி நுண்நிதித் தொழிற்துறை கீழ் மட்டத்தில் செயற்படுவதால் பாரியதொரு சமூக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குழு, அந்த சமூக நெருக்கடியையும் பாதிப்பையும் தவிர்ப்பதே இதன் குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்வரும் காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சட்டமூலத்துக்குத் தேவையான திருத்தங்களை உள்வாங்குமாறு அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தியதுடன், சம்பந்தப்பட்ட திருத்தங்களை சட்டமூலத்தின் குழு நிலையின் போது முன்வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்தக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.


2025-11-21

மனிதர்கள் என்ற ரீதியில் மனிதர்களுக்குச் சேவை செய்யக் கூடிய சிறந்த மனம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எமது அரசியலின் நோக்கமாகும் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

மனிதர்கள் என்ற ரீதியில் மனிதர்களுக்குச் சேவை செய்யக் கூடிய சிறந்த மனம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது எமது அரசியலின் நோக்கமாகும்  என பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். பிரதேச அரசியலில் பிரதிநிதித்துவம் இல்லாத பெண்கள் குழுக்களை அரசியல் ரீதியாக உள்ளடக்கப்படுவதை அதிகரிப்பது குறித்து கடந்த நவ. 17ஆம் திகதி கூடிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் வாழும் சிறப்புக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேட்புமனு செயல்முறையை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பதினாறு நாட்கள் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான உலகளாவிய செயற்பாட்டுக்கான நாட்களாக அனுஷ்டிக்கப்படும் நிலையில், இதற்கு சமாந்தரமாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இங்கு கலந்துரையாடப்பட்டது.  ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சமன்மலி குணசிங்ஹ, கிருஷ்ணன் கலைச்செல்வி, ஏம்.எம்.எம்.எம் ரத்வத்த, (சட்டத்தரணி) ஹிருணி விஜேசிங்க, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) கீதா ஹேரத், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2025-11-20

பாராளுமன்ற குழுக்களின் பரிந்துஐரகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சை அழைத்தது

பாராளுமன்றத்தின் பொதுமனுக்கள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் காலதாமதங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பாராளுமன்ற குழுக்களின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகளை அழைத்திருந்தது. கடந்த நவ. 13ஆம் திகதி இந்தக் குழு அதன் தலைவர் கௌரவ நீதி அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அமைச்சின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கமைய, குழுக்களினால் வழங்கப்படும் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோன்று, சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குழுவில் எடுத்துக் கூறினர். இருப்பினும், சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது எழும் சிக்கல்கள் குறித்து மனுதாரரின் கருத்துகளையும் பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது, அதன்படி, மனுதாரர்களை வேறொரு திகதியில் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் முடிவுசெய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அஜித் பி.பெரேரா, ரவி கருணாநாயக்க மற்றும் ஒஷானி உமங்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks