E   |   සි   |  

2025-05-15

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இயலாமையுள்ள நபர்களுக்குத் தாக்கம் செலுத்தும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இயலாமையுள்ள நபர்கள் குழுக்களுடன் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடல்

இயலாமையுள்ள நபர்களுக்குத் தாக்கம் செலுத்தும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இயலாமையுள்ள நபர்கள் குழுக்களின் பிரதிநிதிகளுடன் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடியது.

இந்த ஒன்றியம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தலைமையில் அண்மையில் (மே 08) பாராளுமன்றத்தில் கூடிய போதே அந்தப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தப் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றியத்தை அறிவுறுத்தியதுடன், இவ்வாறு முன்வைக்கப்படும் அனைத்து கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வதாகவும், அது தொடர்பில் எடுக்கக்கூடிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.

இயலாமையுள்ள நபர்களுக்காக அனைத்துத் தேர்தல்களிலும் குறிப்பிட்ட ஒரு ஒதுக்கீட்டை ஒதுக்குமாறு பிரதிநிதிகள் முன்மொழிந்தனர். அத்துடன், இயலாமையுள்ள நபர்களுக்கான தகவல்கள் அடங்கிய இணையத்தளமொன்றை தயாரிக்குமாறு ஒன்றியத்துக்கு முன்மொழிந்ததுடன், இந்த இணையத்தளத்தை கையடக்கத்தொலைபேசி ஊடாகவும் பிரவேசிக்க முடியுமான வகையில் தயாரிக்குமாறு தெரிவித்தனர்.

அத்துடன், பிரேல் ஊடாக கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை அதிகரிப்பது தொடர்பிலும் ஒன்றியத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், இயலாமையுள்ள நபர்கள் தொடர்பில் புதிய சட்டமொன்றை கொண்டுவருவது தொடர்பில் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பற்றி கவனம் செலுத்தப்பட்டதுடன், அதன் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு மேலதிகமாக, செவிப்புலன் குறைபாடு கொண்ட நபர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகக் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும் ஒன்றியத்திற்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், இயலாமையுள்ள நபர்களுக்காக அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பிலும் இங்கு முன்மொழியப்பட்டது.

இந்த ஒன்றியத்தின் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், சந்திம ஹெட்டிஆரச்சி மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-10-29

இலங்கையின் தேயிலை, கோப்பி மற்றும் புகையிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் சீன தூதுக்குழுவுடன் கலந்துரையாடல்

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் சீனாவின் யுனான் பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவரான யான் யாலின் அவர்களின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையில் விவசாய அபிவிருத்தி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (ஒக். 24) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தேயிலை, கோப்பி மற்றும் புகையிலை பயிர்ச்செய்கை துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த கௌரவ பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஏற்கனவே நடத்தப்பட்டதாகவும், இந்தச் சந்திப்பானது சீனத் தூதுக்குழுவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் பல்வேறு கட்டங்களில் சீனாவால் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவை பாராட்டிய கௌரவ பிரதி அமைச்சர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பிலும் விசேடமாகச் சுட்டிக்காட்டினார். இவ்வாறான உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பங்களிக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். தேயிலை, கோப்பி மற்றும் புகையிலைத் தொழில்களின் அபிவிருத்தி குறித்து இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், நவீன தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறைந்து வரும் தொழிற்படை காரணமாக எழும் சவால்களைக் வெற்றிகொள்வதற்கும், தேயிலைப் பயிர்ச்செய்கையின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் நான்காம் தலைமுறை உரங்களைப் (fourth-generation fertilizers) பயன்படுத்துவது பொருத்தமானது என்று சீன தூதுக்குழுவினர் பரிந்துரைத்தனர். கோப்பி பயிர்ச்செய்கை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கடந்த தசாப்தத்தில் இலங்கையின் கோப்பித் தொழில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளது என்று இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், கோப்பி பயிர்ச்செய்கைக்காக நில ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தற்போது 5,000 ஹெக்டெயாருக்கும் அதிகமான பரப்பளவில் கோப்பி பயிரிடப்படுவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதனை 10,000 ஹெக்டெயாராக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாககவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இலங்கையின் புகையிலைத் தொழில் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புகையிலை மூலப்பொருட்களுக்குப் பதிலாக பதப்படுத்தப்பட்ட, பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புக்களை சந்தைப்படுத்துவதன் மூலம் சர்வதேச சந்தைக்கு நுழைய முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர். இலங்கையின் புகையிலைத் தொழில் இன்னும் சிறிய அளவிலான தொழிலாகவே காணப்படுவதாகவும், தொழிற்சாலைகளை மையமாகக் கொண்ட பாரிய அளவிலான தொழில்துறையாக அதனை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் சீனப் பிரதிநிதிகள் குழுவினர் சுட்டிக்காட்டினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சீனப் பிரதிநிதிகள் குழுவினர், பாராளுமன்றத்தின் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-10-27

அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க புதுப்பிக்கப்பட்ட தரவுக் கட்டமைப்பு அவசியம் – உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவிப்பு

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் கடந்த ஒக். 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ‘அஸ்வெசும திட்டம்’ குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், உலக வங்கியின் சமூகப் பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் பிரான்செஸ்கா லமன்னா (Francesca Lamanna)  மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீனிவாஸ் வரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  சமூகப் பாதுகாப்புக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையிலேயே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள், குடும்பங்களை அடையாளம் காண முடியும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பிரஜைகளின் தகவல்களை சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் உள்ளிடுவது அவர்களை அஸ்வெசும அல்லது பிற தொடர்புடைய சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றாது என்றும், உள்ளிடப்பட்ட தரவைச் சரிபார்க்க முடியும் என்றும், தொடர்புடைய சலுகைகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது. இந்தச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாகும், எனவே தரவுத்தளத்தைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். "அஸ்வெசும" சலுகைகளை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அதன்படி, கிராம ரீதியாக அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்களைக் காண்பிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த, "அஸ்வெசும" திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததால் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் வகிபாகம் குறித்து முறையான தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் ஊடாக இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தாம் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தனர். கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கி ஆலோசகர் ஷாலிகா சுபசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.


2025-10-24

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்று (ஒக். 23) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி அமைச்சின் அதிகாரிகள், 2026ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஒவ்வொரு துறைக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த விபரங்களை முன்வைத்தனர். இவ்விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.


2025-10-23

2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கான முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் 2025.12.31 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.  இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 21) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.  அதற்கமைய, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் 2025.12.31 வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.  இங்கு குழுவில் உரையாற்றிய அதன் தலைவர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளை அந்தந்த அமைச்சுகள் செலவிடுதல் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பான அனைத்து விடயங்களையும் குழுவால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கமைய, தனது குழுவின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகள் தொடர்பான விடயங்களும் இவ்வாறு ஆராயப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அதற்கமைய, அந்தந்த அமைச்சுக்களுக்கு வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அவற்றைச் செலவு செய்ததன் முன்னேற்றம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அத்தியாவசியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் குழுவிற்கு அறிக்கைகளை வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறீநேசன், ரொஷான் அக்மீமன, சதுரி கங்காணி, சுசந்த குமார நவரத்ன, கிட்ணன் செல்வராஜ், (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத், சுதத் பலகல்ல, சித்ரால் பெர்னாண்டோ, ஜே.சி. அளவதுவல, சுஜீவ சேனசிங்க, உபுல் கித்சிறி மற்றும் எம்.எஸ். உதுமாலெப்பெ ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks