E   |   සි   |  

2025-07-30

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பலவீனங்கள் குறித்து கோப் குழுவின் கவனத்துக்கு

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (ஜூலை 23) கூடியது.

ஊழியர் சேம நிதிய சட்டம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய (ETF) சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் செயற்படாமை காரணமாக 2006 முதல் 2022 வரையான காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட நிதியங்களுக்கு மிகைக்கட்டணமாக 122 மில்லியன் ரூபாய் செலுத்தவேண்டியுள்ளதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இதன்போது புலப்பட்டது. அத்துடன், கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களால் செலுத்தவேண்டிய பங்களிப்புத் தொகை அண்ணளவாக 126 மில்லியன் ரூபாய் தொகையை கூட்டுத்தாபனத்தினால் செலுத்தவேண்டி ஏற்பட்டதால் 248 மில்லியன் ரூபாய் கூட்டுத்தாபனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு முதல் பணியாளர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும்போது, அதற்கு EPF மற்றும் ETF செலுத்தப்பட வேண்டுமா என்று தொழில் ஆணையர் நாயகம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வினவப்பட்டிருந்த நிலையில், அதற்கான பதில்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 2018 இல் பணியாளர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி இது செலுத்தப்பட வேண்டி ஏற்பட்டதாகவும் இதன்போது தெரியவந்தது. இந்த விடயத்தை விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டதாகவும், ஆனால் பொறுப்பான அதிகாரி அல்லது தரப்பினர் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த விடயங்களில் தெளிவின்மை இருப்பதாகத் தோன்றுவதால், இது குறித்த முழுமையான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவித்தது. 

தளபாடங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்பட்டுள்ள  தொடர்ச்சியான நட்டம் குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இந்தத் தொகைகள், 2021 இல் 20 மில்லியன் ரூபாய், 2022 இல் 95.6 மில்லியன் ரூபாய், 2023 இல் 72.1 மில்லியன் ரூபாய் மற்றும் 2024 இல் 75.6 மில்லியன் ரூபாய் எனப் பதிவாகியுள்ளதாகத் தெரியவந்தது. பொருளாதார நெருக்கடி போன்ற கரணங்கள் இந்த நட்டத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வருடாந்த விற்பனைத் தேவைகளின் அடிப்படையில் உற்பத்தித் தேவைகளைக் கணித்தல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான புதிய உத்திகளைக் கடைப்பிடித்தல் போன்ற முறைகள் மூலம் நட்டங்களைக் குறைத்து, கூட்டுத்தாபனத்தை இலாபகரமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. மிகவும் நம்பகமான மற்றும் சிறந்த தரமான மர மற்றும் மர அடிப்படையிலான தயாரிப்புகளை வழங்குவதில் நாட்டின் தலைவராக இருக்க வேண்டும் என நிறுவனத்தின் தொலைநோக்காக இருந்தாலும், அந்த இலக்குகளை அடைவதற்கான தடைகள் குறித்து குழு விரிவாகக் கலந்துரையாடியது.

மரம் மற்றும்  மர அடிப்படையிலான தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வது கூட்டுத்தாபனத்தின் செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தாலும், ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படாமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. பைனஸ் மரங்களை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பைனஸ்  மர வகைக்கான தொழில்துறை கேள்வி குறைவு என்பதாலும், நாட்டில் உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதாலும் இந்த முயற்சிகள் தோல்வியடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இறக்குமதியின் போது மரக் கூட்டுத்தாபனத்தினால் பரிசீலனை செய்து சான்றிதழ் வழங்கக்கூடிய நிலைக்கு சட்டரீதியான மாற்றங்களைச் செய்யுமாறு அமைச்சின் செயலாளரின் கவனத்துக்குக் குழு கொண்டுவந்தது. 

முகாமைத்துவது உதவியாளர் பதவிகளின் இரண்டாம் நிலை மட்டத்தில் 11 பேர் அமைய அடைப்படையிலும் 49 பேர் தினசரிப் பணியாளர்களாகவும் 60 ஊழியர்களை பணிக்கு அமர்த்தியது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன், அங்கீகரிக்கப்படாத பதவிகளில் 9 பேர் நிரந்தர சேவையிலிருந்து சம்பளம் பெருகின்றமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக தகவல்களைக் கோரும் போது தெளிவான தகவல்களை வழங்கத் தவறியது குறித்து குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், இது தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குழு அறிவுறுத்தியது. 

நிறுவனத்தின் கையிருப்பு முகாமைத்துவ கணினி அமைப்பின் முறையான பராமரிப்பு இல்லாமை தொடர்பிலும் குழு விசாரித்தது. 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அமைப்பில் முறையான பணியாளர்கள் இல்லை என்பதும், புதுப்பிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. அதனை முறையாகக் கட்டியெழுப்புவதற்கு மற்றும் சம்பந்தப்பட்ட தரவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழு அறிவித்தது. 

நிறுவனத்தின் நிதிப் பிரிவில் உள்ள வாகனப் பதிவேட்டின்படி, கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களின் எண்ணிக்கை 547 ஆக இருந்தாலும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் நிறுவனத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 563 என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. நிதி அமைச்சின் அனுமதியுடன் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோட்டார் சைக்கிள்களின் உரிமை பணியாளர்களுக்கு முறையாக மாற்றப்படாததால் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமைய, இந்த விடயத்தை விசாரித்து முழுமையான  அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டது.

கூட்டுத்தாபனத்தின் பயன்படுத்தக்கூடிய மரம் வெட்டும் இயந்திரங்கள் (Chainsaw) இருந்தபோதிலும், மரங்களை வெட்டும் போது தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் சேவை பெறுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. மரம் வெட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதால் விசேட அனுமதியின் கீழ் 2023 இல் 100 மரம் வெட்டும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வெளியாட்கள் பயன்படுத்தும் போது கைப்பற்றப்பட்டு நீதிமன்ற செயன்முறையை அடுத்து அரசுடைமையாக்கப்பட்ட மரம் வெட்டும் இயந்திரங்களையும் பயன்படுத்தி வினைத்திறனான திட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சமன்மலீ குணசிங்ஹ, லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, சுனில் ராஜபக்ஷ, பத்மநாதன் சத்தியலிங்கம், திலிண சமரகோன், சந்திம ஹெட்டிஆரச்சி மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அத்துடன், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவெல அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிஷாந்த பட்டபெந்தி உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-09-15

தனியார் வங்கியிலிருந்து மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் பெற்றுக்கொண்ட கடனை மீள் செலுத்தாமை தொடர்பில் கோப் குழுவின் கவனத்திற்கு

மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தினால் தனியார் வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனை மீள் செலுத்தாதது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டன.  இலங்கை துறைமுக அதிகாரசபையின் 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த செப். 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.  மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் 2013 ஜூலை 05 ஆம் திகதி நிறுவப்பட்டது என்றும், அந்த நிறுவனம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்ற அனுமதிப்பத்திரம் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் விநியோகஸ்தராக செயற்பாடுகளை ஆரம்பித்து 2014 ஆம் ஆண்டில் தனியார் வங்கியொன்றிலிருந்து துறைமுக அதிகாரசபையின் நிறுவன உத்தரவாதத்தின் (Corporate Guarantee) மூலம் 24 மில்லியன் டொலர் கடன் பெற்றிருந்தமை இங்கு தெரியவந்தது. எனினும், இந்தத் தொகையில் 18.82 மில்லியன் டொலர்கள் (6836 மில்லியன் ரூபாய்) 2023 டிசம்பர் வரை செலுத்தப்படாமல் இருந்ததாகவும், இந்தக் கடன் தொகையை மீளப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வங்கி 2019 ஆம் ஆண்டில் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் அதிகாரசபைக்கு எதிராக இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இது தொடர்பாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன், 2022 ஜூன் மாதம் முதல் கலைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தை மூடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதற்கமைய, இது தொடர்பாக குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இவ்விடயத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை தனது பொறுப்பை நிறைவேற்றுவதில் திருப்தியடைய முடியாது என குழு இதன்போது சுட்டிக்காட்டியது. அத்துடன், நிறுவனத்தை மூடுவதன் மூலம் மாத்திரம் திருப்தியடைய முடியாது என சுட்டிக்காட்டிய குழு, கடன் செலுத்தும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு பரிந்துரைத்தது. அத்துடன், இது தொடர்பாக ஒரு உள்ளக விசாரணை நடத்தி அதற்குரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும், உள்ளகக் கணக்காய்வுப் பிரிவை சரியாக மேற்பார்வையிடுவதற்கான ஒரு பொறிமுறையை தயாரிக்குமாறும்  குழு பரிந்துரைத்தது. அதற்கமைய, இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் குழுவிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, அதிகாரசபையின் கூட்டுத் திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, டி.வி. சானக்க, எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, திலின சமரக்கோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-09-12

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்கள் 2025.08.06ஆம் திகதி அப்பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்றையதினம் (செப். 12) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது. தலைவர் பதவிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல அவர்கள் முன்மொழிந்ததுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அரசியல் கருத்துவேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செற்பட்ட, சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், முன்னாள் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியை தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குறிப்பிட்டார். புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தலைவர் மேலும் தெரிவித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சுதத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜே.சி.அலவத்துவல, ரோஹித்த அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத் தசநாயக்க, (வைத்தியர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, எம். ஏ. எம். தாஹிர், லால் பிரேமநாத், சானக மாதுகொட ஆகியோரும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2025-09-12

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (செப். 11) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.  இலங்கை மத்திய வங்கிக்கு நிதிச் சுதந்திரம் இருப்பதாகவும், அந்த நிறுவனங்களைப் போலவே இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும், கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்திற்கும் மிகவும் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான நிதிச் சுதந்திரம் வழங்குவது முக்கியம் என்று இங்கு குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தற்போதுள்ள அரசியல் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அந்த நிறுவனங்களால் மிகவும் சுயாதீனமாகச் செயற்பட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதனால், நிதி அமைச்சரான கௌரவ ஜனாதிபதிக்கும் இது தொடர்பாகத் தெரியப்படுத்துவதற்கு குழு இதன்போது தீர்மானித்தது.  அத்துடன், ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் குழு உறுப்பினர்களின் சம்பளம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளத்திற்கு சமமாக அமைக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு சுட்டிக்காட்டுவதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளம் திருத்தப்படும் விதத்தில் இந்த அதிகாரிகளின் சம்பளமும் திருத்தப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதுடன், அதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-09-11

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் ஆராயப்பட்டது. அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கம் வலுவான நிதி செயற்திறனைப் பதிவு செய்து, அரையாண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரை ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட வருமானம் 2,241 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், மொத்தமாக சேகரிக்கப்பட்ட வருமானம் 2,318 பில்லியன் ரூபாய் எனவும், இது அரை ஆண்டு மதிப்பீட்டை விட 3% அதிகமாகும் என தரவுகளை முன்வைத்து நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவு 3,467 பில்லியன் ரூபாய் என்பதுடன், இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த செலவுடன் ஒப்பிடுகையில் 367 பில்லியன் ரூபா அதிகமாகும். இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணியாக கடன் சேவைகள் அமைந்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இது 1,984 பில்லியன் ரூபாவாகும். அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியங்கள், அஸ்வெசும மற்றும் சமுர்த்தி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட அத்தியாவசிய அரச சேவைகளுக்கான மீண்டெழும் செலவுகளும் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இலங்கை சுங்கத் திணைக்களம் 2024 ஆம் ஆண்டுடன் (ஜனவரி - ஜூன்) ஒப்பிடுகையில் 47% வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 996 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து கிடைத்த வருமானம் இந்த வளர்ச்சிக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளதுடன், இதன் மூலம் 429 பில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 220,026 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 154,537 வாகனங்களுக்கான சுங்க விடுவிப்பு நடவடிக்கைகளை இலங்கை சுங்கம் நிறைவுசெய்துள்ளதாகவும் நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், கொள்கலன்கள் விடுவிப்பு நடவடிக்கைகளுக்காக சுங்கத்தில் 9 - 10 நாட்கள் செல்வதால் இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் குழு உறுப்பினர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் வினவினர். அதன்படி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 2 - 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பொருட்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கி வருவதாகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.  உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் (IRD) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மதிப்பிடப்பட்ட வருமானம் 1,022,691 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், 1,040,388 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1.3 மில்லியன் இலங்கையர்களுக்கு TIN (Tax Identification Number) இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய முடியுமா என்று குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். எனினும், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் 3.1% ஆக இருக்கும் என்று அனுமானிக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் வரிக் கொள்கை தொடர்பான நிதி அமைச்சின் கொள்கை என்ன என்பது குறித்து குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பவற்றின் முன்னறிவிப்புகளுக்கு இடையிலான முரண்பாடு குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, சம்பிக்க ஹெட்டியாராச்சி, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks