பார்க்க

E   |   සි   |  

2025-10-16

செய்தி வகைகள் : செய்திகள் 

வெற்றிகரமான ஆய்வுப் பயணத்தைத் தொடர்ந்து இலங்கை - சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது

இலங்கை - சுவிட்சர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அண்மையில் (ஒக். 10) சங்கத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ (கலாநிதி) சிரி வால்ட் (Dr.Siri Walt) மற்றும் சங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே அவர்கள், சுவிட்சர்லாந்திற்கு அண்மையில் மேற்கொண்ட ஆய்வுப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும், சுவிஸ் ஆட்சிமுறைக்கு மற்றும் சமூகம் குறித்த பெறுமதியான அறிவை பெற்றுக்கொள்ள முடிந்தது என்றும் குறிப்பிட்டார். அத்துடன், இந்தப் பயணத்துக்கு அழைப்பு விடுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கும், இந்தப் பயணத்தின் போது ஆதரவு வழங்கிய கௌரவ (கலாநிதி) சிரி வால்ட் மற்றும் இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், இந்த ஆய்வுப் பயணத்தில் பங்கேற்ற தூதுக்குழுவினர் தமது கருத்துக்களை இதன்போது பகிர்ந்துகொண்டதுடன், சுவிஸ் ஆட்சிமுறை அதன் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பிரஜைகளை மையப்படுத்திய அணுகுமுறை தொடர்பில் பாராட்டினர். பொதுமக்களின் செயலூக்கமான பங்கேற்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள அந்நாட்டின் ஜனநாயக கலாசாரத்தையும் அவர்கள் பாராட்டினர். சுவிட்சர்லாந்து மக்களின் விருந்தோம்பல் பற்றிக் குறிப்பிட்ட தூதுக்குழுவினர் இவை நாட்டின் நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு பங்களிக்கின்றன என்றும் குறிப்பிட்டனர்.

ஆய்வுப் பயணத்தின்போது அவதானிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை இலங்கைக்கு ஏற்றவகையில் பயன்படுத்தலாம் எனவும் ஆட்சிமுறை மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கு அவை உதவும் என்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்தக் கூட்டத்தில் நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி மற்றும் நட்புறவு சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-10-23

இலங்கை - இந்திய சட்ட மாணவர்கள் குழு இலங்கைப் பாராளுமன்றத்திற்கு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டப் பிரிவின் மாணவர்களும், இந்தியாவின் மும்பையில் உள்ள அமிட்டி சட்டக் கல்லூரியின் மாணவர்களும் அண்மையில் (ஒக். 21) இலங்கைப் பாராளுமன்றத்திற்கு ஒரு கல்விச் சுற்றுலா நோக்கமாக வருகை தந்தனர்.  கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு, சுற்றாடல் சட்டம் மற்றும் கொள்கைக்கான நிலையம் (CELP) மற்றும் இந்தியாவின் மும்பையில் உள்ள அமிட்டி சட்டக் கல்லூரி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் ''இந்து - இலங்கை சுற்றாடல் சட்ட வாரம் - 2025'' ஐ முன்னிட்டு அமுல்படுத்தப்படும் கல்விசார் நிகழ்ச்சித் தொடரின் ஒரு அங்கமாகவே சட்ட மாணவர்கள் குழுவினர் இவ்வாறு பாராளுமன்றத்திற்கான கல்விச் சுற்றுலாவில் கலந்துகொண்டனர். பாராளுமன்றத்திற்கு வருகை தந்த இம்மாணவர்களுக்கு முதலாவதாக, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைப் பிரிவின் வழிகாட்டலின் கீழ் பாராளுமன்ற வளாகத்தையும் சபை மண்டபத்தையும் அவதானிக்கும் சுற்றுலாவில் பங்கேற்று அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதனையடுத்து, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா அவர்களின் தலைமையில் அவர்களுக்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன்போது, இலங்கையின் சட்டவாக்க செயன்முறை, பாராளுமன்றத்தின் பங்கு மற்றும் செயற்பாடு குறித்து அவர் விளக்கமளித்தார். அத்துடன், சட்ட மாணவர்களின் கேள்விகளுக்கும் இதன்போது பதில்கள் வழங்கப்பட்டன.  கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டப் பிரிவின் தலைவர் பேராசிரியர் கோகிலா லங்காத்திலக்க கோணசிங்க உள்ளிட்ட சட்ட பீட விரிவுரையாளர்களும், இந்தியாவின் மும்பையில் உள்ள அமிட்டி சட்டக் கல்லூரியின் பணிப்பாளர் பேராசிரியர் வி.எஸ். ஜிஜிமன் உள்ளிட்ட அக் கல்லூரியின் விரிவுரையாளர்களும், இரண்டு நாடுகளின் சட்ட மாணவர்களும் அடங்கிய குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


2025-10-22

மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம்

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு  மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும் கைப்பட்டி அணிவிக்கும் நிகழ்வு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.  பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர, ஆளும் கட்சியின் முதற்கோலாசான், கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ, கௌரவ எதிரிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக ஆகியோருக்கு சின்னங்களும், கைப்பட்டிகளும் அணிவிக்கப்பட்டன. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் நுழைவாயில் பகுதியில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டும் வகையிலான சின்னமும், கைப்பட்டியும் அணிவிக்கப்பட்டன. அத்துடன், ஒன்றியத்தினால் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோருக்கும் சின்னமும், கைப்பட்டியும் அணிவிக்கப்பட்டன. இன்றையதினம் இந்நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி பாராளுமன்ற பணியாளர்களும் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடையணிந்து வருகை தந்திருந்தனர். அத்துடன், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மார்பகப் புற்றுநோய் ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வூட்டல் தொடர்பில் பி.ப 4.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையும் விவாதிக்கப்படவுள்ளது. உலகம் முழுவதிலும் பெண்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் காணப்படுகிறது. இதற்கு அமைய இலங்கையில் நாளாந்தம் 15 புதிய  நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இதில் மூவர் உயிரிழப்பதாகவும் இங்கு கருத்துத் தெரிவித்த வைத்தியர்கள் தெரிவித்தனர். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மார்பகப் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும், இதற்காக 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாதத்திற்கு ஒரு முறை சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர் அதன்படி, ஒக்டோபர் மாதத்தில் மட்டுமல்ல, இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், இந்த சமூகப் பேரழிவை ஒழிக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உள்ளது என்பதும் வலியுறுத்தப்பட்டது. பாடசாலை மட்டத்தில் இது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், இளஞ்சிவப்பு புதன்கிழமை (Pink Wednesday) என்ற பெயரில் பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைப்புடன் நாட்டில் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். பாராளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக, அனைத்துப் பாடசாலைகளினதும் காலைக் கூட்டங்களில் இவ்விடயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட பாடசாலை அதிபர்களின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒன்றியத்தினால் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஏனைய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் ஸ்ரீனி அழகப்பெரும, விசேட வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாந்து, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் லங்கா ஜயசூர்ய திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


2025-10-21

ஒக்டோபர் மாத சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டலை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்துவருமாறு சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவிப்பு

“ஒக்டோபர் மாத சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டல் நிகழ்வை” முன்னிட்டு 2025 ஒக்டோபர் 22 ஆம் திகதி, அதாவது நாளைய தினம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முடியுமாயின் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்துவருமாறு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (ஒக். 21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.  அத்துடன், ஒக்டோபர் மாத சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வூட்டலை முன்னிட்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் நாளைய தினம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அணிவதற்காக அடையாளச்சின்னமொன்றை வழங்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அடையாளச்சின்னம்  உறுப்பினர் நுழைவாயிலில் வழங்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.


2025-10-21

'பளிங்கு ரேண' பாராளுமன்றத்தில்

2025 இலக்கிய மாதத்துடன் இணைந்ததாக பாராளுமன்ற கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'பளிங்கு ரேண' (Wingfield Family) மேடை நாடகம் 2025.10.23 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகிலுள்ள வைபவ மண்டபத்தில் பி.ப. 6.30 மணிக்கு அரங்கேற்றப்படவுள்ளது.  இந்த 'பளிங்கு ரேண' மேடை நாடகம் அமெரிக்காவின் பிரபல நாடக ஆசிரியர் டென்னிசி வில்லியம்ஸின் The Glass Menagerie எனும் சிறந்த தரத்திலான மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.  இலங்கை நாடக ஆசிரியர் ஹென்றி ஜயசேன அவர்களினால் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்பட்ட இந்த 'பளிங்கு ரேண' மேடை நாடகம், பூஜித்த டி மெல் அவர்களினால் இயக்கப்பட்டுள்ளது. சாந்தணி செனவிரத்ன, ஸ்செவியர் கனிஷ்க, மனுஷி டானியா, பிம்சர சில்வா ஆகிய கலைஞர்களின் பங்களிப்புடன் இந்த மேடை நாடகம் அரங்கேற்றப்படும்.  இந்நிகழ்வில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks