பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
சட்டத்தரணி சாகரிகா அதாவுத மற்றும் (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் ஆகிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்காகக் தவிசாளர் குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் அறிவிப்பு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143 இன் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்காகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தவிசாளர் குழாத்தின் கௌரவ உறுப்பினர்களிடையே (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன மற்றும் அரவிந்த செனரத் ஆகியோர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக சட்டத்தரணி சாகரிகா அதாவுத மற்றும் (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் ஆகிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிசாளர் குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (நவ. 11) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கு மேலதிகமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கவீந்திரன் கோடீஸ்வரன், கிங்ஸ் நெல்சன், எம்.கே. எம். அஸ்லம், உபுல் கித்சிறி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ மற்றும் சுஜீவ திசாநாயக்க ஆகியோர் தவிசாளர் குழாத்தில் உள்ளடக்குவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் அறிவித்தார்.
2025-11-10
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு 2025.11.04 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் நடைபெற்றது. கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்து கொண்டனர். இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவ மாணவிகளுக்கு பாராளுமன்ற நடைமுறை குறித்த பிரயோக ரீதியான அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, அந்தக் கல்லூரியும், ஜனாதிபதி செயலகமும், இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வில், ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன கமகே, ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே ஆகியோரும் பங்கேற்றனர். இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்கள், மாணவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக ஒழுக்கத்தை உரிய முறையில் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சட்டத்திற்குக் கீழ்ப்படியாத ஒருவரால் சட்டமியற்றும் செயன்முறையில் ஈடுபட முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர், அரசியல்வாதியும் இராஜதந்திரியும் இரு வேறு நபர்கள் என்றும், அரசியல்வாதி எதிர்கால வாக்குகளை இலக்காகக் கொண்டு செயற்படுகையில், இராஜதந்திரி அடுத்த தலைமுறையை இலக்காகக் கொண்டு முடிவுகளை எடுக்கும் நபர் என்றும் வலியுறுத்தினார். இங்கு உரையாற்றிய கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்கள், மாணவர் பாராளுமன்றத்தின் மூலம் பிள்ளைகளின் வாழ்க்கையில் அடையக்கூடிய நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் அதன் மூலம் அந்தப் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறக்கூடிய சந்தர்ப்பம் பற்றி கருத்து தெரிவித்தார். அத்துடன், உலகில் உள்ள ஏனைய நாடுகளில் மாணவர் பாராளுமன்றங்கள் இயங்கும் விதத்திற்கு உதாரணங்களை சுட்டிக்காட்டிய குழுக்களின் பிரதித் தவிசாளர், அந்த நாடுகளில் தேசிய ரீதியான பிரச்சினைகளைத் தீர்க்கும் போது மாணவர் பாராளுமன்றங்கள் ஊடாக தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பித்துள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஒரு தலைவர் என்பவர் அதிகாரத்தை அனுபவிக்கும் நபர் அல்ல என்றும், தலைவர் என்பவர் தனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்வபரே என்றும் அவர் மேலும் கருத்துத் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் சபாநாயகர் உட்பட உறுப்பினர்கள் மொழியைச் சிறப்பாகக் கையாண்டமைக்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதனையடுத்து அவர் பாராளுமன்றத்தின் செயன்முறை மற்றும் அதன் பங்கு பற்றி விளக்கியதோடு, பாராளுமன்றம் எவ்வாறு செயற்படுகிறது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார். இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர். அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர். இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் அதிபர் கப்டன் நீல் தம்மிக வத்துக்காரவத்த உட்பட கல்லூரியின் ஆசிரியர்கள் குழுவினர் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
2025-11-10
கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டீ. தர்மபால அவர்கள் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கையளித்தார். அரசியலமைப்பின் 154வது யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனகள், சபைகள், அதிகார சபைகள், நியதிச்சட்ட நிதியங்கள், நியதிச்சட்டமல்லாத நிதியங்கள், வெளிநாட்டு உதவித் திட்டங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களை 2024 ஆம் ஆண்டில் கணக்காய்வு செய்து அவற்றின் கணக்காய்வு அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பதற்கு கணக்காய்வாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கமைய இந்த வருடாந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதிக் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.டி.டீ. ரத்நாயக்க, கணக்காய்வு கண்காணிப்பாளர் ஆர்.டீ. சேனாரத்ன மற்றும் கௌரவ சபாநாயகரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் சமீர கால்லகே ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
2025-11-07
தலைவர்கள் என்பவர்கள் அதிகாரத்தை அனுபவிப்பவர்கள் அல்ல, மாறாகத் தமது நாட்டுக்கும் தமது சமூகத்திற்கும் சேவையாற்றுபவர் மாத்திரமேயாகும். அதிகாரம் என்பது அலங்காரத்திற்கானது அல்ல, மக்கள் கூட்டமொன்றின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் கருவியாகும் என்பதை எந்தவொரு தலைவரும் மனதில் கொள்ள வேண்டும் என கிரில்லவெல வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தெரிவித்தார். ஜனநாயக ரீதியாகவும் சட்டத்தை மதிக்கும் வகையிலும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும், மற்றவர்களுக்குச் செவிசாய்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் கடந்த ஒக். 31ஆம் திகதி நடைபெற்ற கிரில்லவெல மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன், சர்வதேச மட்டத்தில் மாணவர் பாராளுமன்றங்கள் செயற்படும் விதம் தொடர்பில் விளக்கமளித்த குழுக்களின் பிரதித் தவிசாளர், இந்த நாட்டில் மாணவர் பாராளுமன்றங்கள் மூலம் தங்கள் பாடசாலைகளுக்கு மாத்திரமல்ல, முழு சமூகத்திற்கும் பயனளிக்கும் மாற்றங்களைச் செய்வதற்கான திட்டங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டினார். மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் பாடசாலையில் செயல்படுத்த விரும்பும் திட்டங்கள் உள்ளிட்ட முன்மொழிவுகளை முன்வைத்தனர். இங்கு உரையாற்றிய பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, மாணவர் பாராளுமன்றங்கள் மாணவர்களின் ஆளுமைகள் மற்றும் திறமைகளை வளர்ப்பதில் பெரும் உதவியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், பாராளுமன்ற சட்டவாக்க நடைமுறைகள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்தும் அவர் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் ஏனைய விருந்தினர்களால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, கிரில்லவல மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.டபிள்யூ.எம்.ஏ. பண்டார வீரசிங்க மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-07
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (நவ. 07) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இன்று பி.ப 1.30 மணிக்கு வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டுடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து சம்பிரதாய பூர்வமாக படைக்கல சேவிதர் அழைத்துவர சபா மண்டபத்திற்கு வருகை தந்ததுடன் பி.ப 5.50 மணிவரை வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைத்தார். புதிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டமான இது சுதந்திர இலங்கையின் 80வது வரவுசெலவுத்திட்டமாக வரலாற்றில் பதிவாகிறது. வெளிநாட்டுத் தூதுவர்கள், ஆளுநர்கள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், நீதிபதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர். 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் இடம்பெறும். அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும். இதனைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 3 சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக 17 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறும்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks