07

E   |   සි   |  

2018-10-16

நவராத்திரி விழா 2018

மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா கடந்த 10 ஆம் திகதி ஐப்பசி மாதம் 2018 ஆம் ஆண்டு அன்று பதினான்காவது முறையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வீரத்திற்கு அதிபதியான துர்க்கை, செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளின் அருட்கடாட்சத்தினை பெற்றுக்கொள்வதற்காகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட நவராத்திரி விழாவை முன்னிட்டு 10 ஆம் திகதி ஐப்பசி மாதம் 2018 ஆம் ஆண்டு அன்று காலை வேளை தொடக்கம் பாராளுமன்ற வளாகம் நந்திக் கொடி, மாவிலை, தோரணங்கள், வாழை மரங்கள் என்பவற்றால் மிகவும் மங்களகரமான முறையில் அலங்கரிக்கப்பட்டு விசேடமாக அமைக்கப்பட்ட தேர் வடிவிலான மலர் மேடையில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளும் எழுந்தருளிக் காட்சிதந்தனர்.

நாதஸ்வரம் மற்றும் தவில் வாத்தியக் கலைஞர்களின் மங்கள வாத்தியம் முழங்க சிறப்பு பூஜைகள் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. சபாநாயகர் கெளரவ கரு ஜயசூரிய பிரதி சபாநாயகர் கௌரவ ஜே.எம்.ஆனந்த குமாரசிறி குழுக்களின் பிரதித்தலைவர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற சபை முதல்வர் கௌரவ லக்ஸ்மன் கிரிஎல்ல எதிர்க் கட்சித்தலைவர் கௌரவ இரா. சம்பந்தன் மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் கெளரவ டி.எம். சுவாமிநாதன் ஆகியோருடன் மேலும பல பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் திரு. தம்மிக்க தஸநாயக்க அவர்களும் வருகை தந்தனர்.

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பல வாணேஸ்வரர் தேவஸ்தத்தின் பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் மற்றும் அவரது குழுவினரும் மிகச் சிறப்பன முறையில் மந்திர உச்சாடனங்கள் செய்து பக்தி மயமான பூஜையினை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றினர்.

இப் பூஜை வழிபாடுகளில் அதிகளவான பாராளுமன்றப் பணியாளர்களும் மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் பணியாளர்களும் பக்திபூர்வமாகக் கலந்து கொண்டனர்.

பூஜை வழிபாடுகள் நிறைவு பெற்றதும் கொழும்பு, திருமதி பவானி குகப்பிரியா அவர்களது மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சிகள் அனைவரதும் அமோக வரவேற்பினையும் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks