பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-11-29
செய்தி வகைகள் : குழு செய்திகள்
கற்பிட்டியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 12 தீவுகளை சுற்றுலா கைத்தொழிலுக்குப் பயன்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குத் தெரிவித்தார்.
2055 ஏக்கரைக் கொண்ட 12 தீவுகளில் 5 தீவுகளுக்காக 2011ஆம் ஆண்டு முதலீடு செய்ய முன்வந்தபோதும் நீர் பங்களா திட்டத்துக்கு (Water Bungalows) அனுமதி பெற்றுக்கொள்ள உரிய நிறுவனத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியாததால் இது காலதாமதமடைந்துள்ளது என்பது இங்கு தெரியவந்தது. மாலைதீவில் இந்த வகையிலான ஹோட்டல்களைக் கொண்டுள்ள இந்த முதலீட்டாளருக்கு அனுமதியை வழங்காது 10 வருடங்கள் காலதாமதம் ஆகியிருப்பது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் தடையாக இருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அழகிய தீவை சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இதற்காக ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருப்பதாகவும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வடமேல் மாகாணசபை, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம் போன்ற சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வழிநடத்தல் குழுவொன்றை அமைத்து பலமான சட்டக் கட்டமைப்பின் கீழ் விசேட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமாலி பெர்னாந்து ஆகியோருக்கு கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் அண்மையில் (26) நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் புலப்பட்டன.
அத்துடன், சில வருடங்களுக்கு முன்னர் கதிர்காமம் சுற்றுலா விடுதியைப் புனரமைப்பதற்காக செலவு செய்யப்பட்ட 29 மில்லியன் ரூபாவில் 11 மில்லியன் ரூபா செய்யாத வேலைக்காக கொடுக்கப்பட்டமை குறித்த கணக்காய்வின் அவதானம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. மீண்டும் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் ஊடாக இந்த 11 மில்லியன் ரூபாவின் பெறுமதி 4.8 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது. மாறாக, சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு எச்சரிக்கைக் கடிதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் வெளிப்படுத்தியதோடு, இது தொடர்பில் குழு கடும் அதிருப்தியை வெளியிட்டது. இது தற்போதுள்ள நிர்வாகத்தின் மீதான விமர்சனம் அல்ல என்றும், நீண்டகாலமாக இருக்கும் இந்த முறையை மாற்றி, கணக்காய்வின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்க நிறுவனங்களின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கல்பிட்டிய தோரையடி ஜெட்டி மற்றும் வன்னிமுந்தலம் களப்பு ஆகியவற்றை அண்மித்த பகுதியில் வீதியமைப்பதற்காக மேலதிகமாக 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. இது தொடர்பில் புத்தளம் மாவட்ட பொறியியலாளரிடம் வினவியபோது உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை பதிலளித்தது. இது தொடர்பில் ஆராய்வதற்காக 2016 ஆம் ஆண்டு கோப் குழு பரிந்துரையொன்றை முன்வைத்திருந்தபோதும், 2018 ஆம் ஆண்டிலேயே விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். இது தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கோப் தலைவர், நாட்டின் நிதிக் கட்டுப்பாடு பாராளுமன்றத்திடமிருக்கும் நிலையில் அதனால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள் கட்டுப்பட்டிருப்பதால், உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார்.
2018-2019 ஆம் ஆண்டில் சுற்றுலா அபிவிருத்திக்காக 1.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாந்து தெரிவித்தார். அதன்படி தற்போது சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக தனித்தனியாக செயற்படும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இலங்கை மாநாட்டு பணியகம் ஆகியவற்றை இணைத்து தனியான நிறுவனமொன்றை உருவாக்கவிருப்பதாகவும், ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை தனியாக செயற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான புதிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள் இதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். மேலும் வினைத்திறன் மிக்க பொறிமுறை தேவையென்றால், அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் நிறுவனங்களின் பணிகளை துரிதப்படுத்துமாறு கோப் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
மாலைதீவு தற்போது சுற்றுலாத்துறையில் விரைவான வளர்ச்சியை அனுபவித்து வரும் நிலையில் இந்நிலைக்கு இலங்கை செல்வதில் காணப்படும் தடைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கிமாலி பெர்னாந்து கருத்துத் தெரிவிக்கையில், மாலைதீவு சுற்றுலாத்துறையில் அதிக விலையுள்ள சொகுசு ஹோட்டல்கள் மட்டுமே செயலில் உள்ளமை, உளகளாவிய ரீதியில் காணப்படும் தொடர்புகள் மூலம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்ளல், சர்வதேச மட்டத்தில் 15 விசேட நிபுணர்களைக் கொண்ட சிறிய குழுவின் ஊடாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை, முன்னணி சர்வதேச முதலீட்டாளர்களைக் கொண்டு வருதல் போன்ற விடயங்களின் ஊடாக இத்துறையில் அவர்களால் முன்னேற்றம் காண முடிந்துள்ளது என்றார். கொவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இந்த நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது என்றும் தலைவர் தெரிவித்தார்.கொவிட் நிலையில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் தமது நிறுவனம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், தற்போது ஒன்லைனில் பதிவு செய்யும் செயல்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்ய முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக பல பிரதேசங்களில் காணிகள் உட்பட சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழு வலியுறுத்தியுள்ளது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, நளின் பண்டார, எஸ்.எம்.மரிக்கார், மதுர விதானகே, பிரேம்நாத் சி.தொலவத்த மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-07-28
உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-28
பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-28
மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன. கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-07-21
பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர். பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks