E   |   සි   |  

2021-11-29

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பத்து வருடங்களாக காலதாமதமாகும் கல்பிட்டி தீவுகளை சுற்றுலாக் கைத்தொழிலுக்குப் பயன்படுத்துவதற்கான உடனடி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும் - கோப் குழு, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குத் தெரிவிப்பு

கற்பிட்டியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 12 தீவுகளை சுற்றுலா கைத்தொழிலுக்குப் பயன்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டத்தை விரைவில் தயாரிக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குத் தெரிவித்தார்.

2055 ஏக்கரைக் கொண்ட 12 தீவுகளில் 5 தீவுகளுக்காக 2011ஆம் ஆண்டு முதலீடு செய்ய முன்வந்தபோதும் நீர் பங்களா திட்டத்துக்கு (Water Bungalows) அனுமதி பெற்றுக்கொள்ள உரிய நிறுவனத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியாததால் இது காலதாமதமடைந்துள்ளது என்பது இங்கு தெரியவந்தது. மாலைதீவில் இந்த வகையிலான ஹோட்டல்களைக் கொண்டுள்ள இந்த முதலீட்டாளருக்கு அனுமதியை வழங்காது 10 வருடங்கள் காலதாமதம் ஆகியிருப்பது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் தடையாக இருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அழகிய தீவை சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து கோப் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இதற்காக ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருப்பதாகவும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வடமேல் மாகாணசபை, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம் போன்ற சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வழிநடத்தல் குழுவொன்றை அமைத்து பலமான சட்டக் கட்டமைப்பின் கீழ் விசேட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமாலி பெர்னாந்து ஆகியோருக்கு கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் அண்மையில் (26) நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் புலப்பட்டன.

அத்துடன், சில வருடங்களுக்கு முன்னர் கதிர்காமம் சுற்றுலா விடுதியைப் புனரமைப்பதற்காக செலவு செய்யப்பட்ட 29 மில்லியன் ரூபாவில் 11 மில்லியன் ரூபா செய்யாத வேலைக்காக கொடுக்கப்பட்டமை குறித்த கணக்காய்வின் அவதானம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. மீண்டும் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் ஊடாக இந்த 11 மில்லியன் ரூபாவின் பெறுமதி 4.8 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது. மாறாக, சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு எச்சரிக்கைக் கடிதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் வெளிப்படுத்தியதோடு, இது தொடர்பில் குழு கடும் அதிருப்தியை வெளியிட்டது. இது தற்போதுள்ள நிர்வாகத்தின் மீதான விமர்சனம் அல்ல என்றும், நீண்டகாலமாக இருக்கும் இந்த முறையை மாற்றி, கணக்காய்வின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்க நிறுவனங்களின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கல்பிட்டிய தோரையடி ஜெட்டி மற்றும் வன்னிமுந்தலம் களப்பு ஆகியவற்றை அண்மித்த பகுதியில் வீதியமைப்பதற்காக மேலதிகமாக 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. இது தொடர்பில் புத்தளம் மாவட்ட பொறியியலாளரிடம் வினவியபோது உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை பதிலளித்தது. இது தொடர்பில் ஆராய்வதற்காக 2016 ஆம் ஆண்டு கோப் குழு பரிந்துரையொன்றை முன்வைத்திருந்தபோதும், 2018 ஆம் ஆண்டிலேயே விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். இது தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கோப் தலைவர், நாட்டின் நிதிக் கட்டுப்பாடு பாராளுமன்றத்திடமிருக்கும் நிலையில் அதனால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள் கட்டுப்பட்டிருப்பதால், உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார்.

2018-2019 ஆம் ஆண்டில் சுற்றுலா அபிவிருத்திக்காக 1.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாந்து தெரிவித்தார். அதன்படி தற்போது சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக தனித்தனியாக செயற்படும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இலங்கை மாநாட்டு பணியகம் ஆகியவற்றை இணைத்து தனியான நிறுவனமொன்றை உருவாக்கவிருப்பதாகவும், ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் ஒன்றை தனியாக செயற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான புதிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள்  இதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். மேலும் வினைத்திறன் மிக்க பொறிமுறை தேவையென்றால், அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் நிறுவனங்களின் பணிகளை துரிதப்படுத்துமாறு கோப் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

மாலைதீவு தற்போது சுற்றுலாத்துறையில் விரைவான வளர்ச்சியை அனுபவித்து வரும் நிலையில் இந்நிலைக்கு இலங்கை செல்வதில் காணப்படும் தடைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.  இங்கு கிமாலி பெர்னாந்து கருத்துத் தெரிவிக்கையில், மாலைதீவு சுற்றுலாத்துறையில் அதிக விலையுள்ள சொகுசு ஹோட்டல்கள் மட்டுமே செயலில் உள்ளமை, உளகளாவிய ரீதியில் காணப்படும் தொடர்புகள் மூலம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்ளல், சர்வதேச மட்டத்தில் 15 விசேட நிபுணர்களைக் கொண்ட சிறிய குழுவின் ஊடாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை, முன்னணி சர்வதேச முதலீட்டாளர்களைக் கொண்டு வருதல் போன்ற விடயங்களின் ஊடாக இத்துறையில் அவர்களால் முன்னேற்றம் காண முடிந்துள்ளது என்றார். கொவிட் தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இந்த நிறுவனம் பெரும் பங்காற்றியுள்ளது என்றும் தலைவர் தெரிவித்தார்.கொவிட் நிலையில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் தமது நிறுவனம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், தற்போது ஒன்லைனில் பதிவு செய்யும் செயல்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்ய முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக பல பிரதேசங்களில் காணிகள் உட்பட சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழு வலியுறுத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, நளின் பண்டார, எஸ்.எம்.மரிக்கார், மதுர விதானகே, பிரேம்நாத் சி.தொலவத்த மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1

2

4

 



தொடர்புடைய செய்திகள்

2025-09-15

தனியார் வங்கியிலிருந்து மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் பெற்றுக்கொண்ட கடனை மீள் செலுத்தாமை தொடர்பில் கோப் குழுவின் கவனத்திற்கு

மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தினால் தனியார் வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனை மீள் செலுத்தாதது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டன.  இலங்கை துறைமுக அதிகாரசபையின் 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த செப். 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.  மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் 2013 ஜூலை 05 ஆம் திகதி நிறுவப்பட்டது என்றும், அந்த நிறுவனம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்ற அனுமதிப்பத்திரம் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் விநியோகஸ்தராக செயற்பாடுகளை ஆரம்பித்து 2014 ஆம் ஆண்டில் தனியார் வங்கியொன்றிலிருந்து துறைமுக அதிகாரசபையின் நிறுவன உத்தரவாதத்தின் (Corporate Guarantee) மூலம் 24 மில்லியன் டொலர் கடன் பெற்றிருந்தமை இங்கு தெரியவந்தது. எனினும், இந்தத் தொகையில் 18.82 மில்லியன் டொலர்கள் (6836 மில்லியன் ரூபாய்) 2023 டிசம்பர் வரை செலுத்தப்படாமல் இருந்ததாகவும், இந்தக் கடன் தொகையை மீளப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வங்கி 2019 ஆம் ஆண்டில் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் அதிகாரசபைக்கு எதிராக இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இது தொடர்பாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன், 2022 ஜூன் மாதம் முதல் கலைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தை மூடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதற்கமைய, இது தொடர்பாக குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இவ்விடயத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை தனது பொறுப்பை நிறைவேற்றுவதில் திருப்தியடைய முடியாது என குழு இதன்போது சுட்டிக்காட்டியது. அத்துடன், நிறுவனத்தை மூடுவதன் மூலம் மாத்திரம் திருப்தியடைய முடியாது என சுட்டிக்காட்டிய குழு, கடன் செலுத்தும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு பரிந்துரைத்தது. அத்துடன், இது தொடர்பாக ஒரு உள்ளக விசாரணை நடத்தி அதற்குரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும், உள்ளகக் கணக்காய்வுப் பிரிவை சரியாக மேற்பார்வையிடுவதற்கான ஒரு பொறிமுறையை தயாரிக்குமாறும்  குழு பரிந்துரைத்தது. அதற்கமைய, இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் குழுவிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, அதிகாரசபையின் கூட்டுத் திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, டி.வி. சானக்க, எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, திலின சமரக்கோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-09-12

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்கள் 2025.08.06ஆம் திகதி அப்பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்றையதினம் (செப். 12) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது. தலைவர் பதவிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல அவர்கள் முன்மொழிந்ததுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அரசியல் கருத்துவேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செற்பட்ட, சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், முன்னாள் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியை தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குறிப்பிட்டார். புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தலைவர் மேலும் தெரிவித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சுதத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜே.சி.அலவத்துவல, ரோஹித்த அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத் தசநாயக்க, (வைத்தியர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, எம். ஏ. எம். தாஹிர், லால் பிரேமநாத், சானக மாதுகொட ஆகியோரும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2025-09-12

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (செப். 11) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.  இலங்கை மத்திய வங்கிக்கு நிதிச் சுதந்திரம் இருப்பதாகவும், அந்த நிறுவனங்களைப் போலவே இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும், கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்திற்கும் மிகவும் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான நிதிச் சுதந்திரம் வழங்குவது முக்கியம் என்று இங்கு குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தற்போதுள்ள அரசியல் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அந்த நிறுவனங்களால் மிகவும் சுயாதீனமாகச் செயற்பட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதனால், நிதி அமைச்சரான கௌரவ ஜனாதிபதிக்கும் இது தொடர்பாகத் தெரியப்படுத்துவதற்கு குழு இதன்போது தீர்மானித்தது.  அத்துடன், ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் குழு உறுப்பினர்களின் சம்பளம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளத்திற்கு சமமாக அமைக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு சுட்டிக்காட்டுவதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளம் திருத்தப்படும் விதத்தில் இந்த அதிகாரிகளின் சம்பளமும் திருத்தப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதுடன், அதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-09-11

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் ஆராயப்பட்டது. அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கம் வலுவான நிதி செயற்திறனைப் பதிவு செய்து, அரையாண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரை ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட வருமானம் 2,241 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், மொத்தமாக சேகரிக்கப்பட்ட வருமானம் 2,318 பில்லியன் ரூபாய் எனவும், இது அரை ஆண்டு மதிப்பீட்டை விட 3% அதிகமாகும் என தரவுகளை முன்வைத்து நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவு 3,467 பில்லியன் ரூபாய் என்பதுடன், இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த செலவுடன் ஒப்பிடுகையில் 367 பில்லியன் ரூபா அதிகமாகும். இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணியாக கடன் சேவைகள் அமைந்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இது 1,984 பில்லியன் ரூபாவாகும். அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியங்கள், அஸ்வெசும மற்றும் சமுர்த்தி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட அத்தியாவசிய அரச சேவைகளுக்கான மீண்டெழும் செலவுகளும் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இலங்கை சுங்கத் திணைக்களம் 2024 ஆம் ஆண்டுடன் (ஜனவரி - ஜூன்) ஒப்பிடுகையில் 47% வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 996 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து கிடைத்த வருமானம் இந்த வளர்ச்சிக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளதுடன், இதன் மூலம் 429 பில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 220,026 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 154,537 வாகனங்களுக்கான சுங்க விடுவிப்பு நடவடிக்கைகளை இலங்கை சுங்கம் நிறைவுசெய்துள்ளதாகவும் நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், கொள்கலன்கள் விடுவிப்பு நடவடிக்கைகளுக்காக சுங்கத்தில் 9 - 10 நாட்கள் செல்வதால் இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் குழு உறுப்பினர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் வினவினர். அதன்படி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 2 - 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பொருட்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கி வருவதாகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.  உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் (IRD) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மதிப்பிடப்பட்ட வருமானம் 1,022,691 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், 1,040,388 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1.3 மில்லியன் இலங்கையர்களுக்கு TIN (Tax Identification Number) இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய முடியுமா என்று குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். எனினும், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் 3.1% ஆக இருக்கும் என்று அனுமானிக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் வரிக் கொள்கை தொடர்பான நிதி அமைச்சின் கொள்கை என்ன என்பது குறித்து குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பவற்றின் முன்னறிவிப்புகளுக்கு இடையிலான முரண்பாடு குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, சம்பிக்க ஹெட்டியாராச்சி, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks