பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-11-25
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பிரதமரும், பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் அதிகாரிகளுக்குப் பணிப்புரை...
• அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்த விசாரணைகள் காலதாமதம் அடைவதைத் தடுக்கத் துரித நடவடிக்கை
• மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் தமது பணிகளை முன்னெடுக்க அலுவலக வசதி
• பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் தொடர்பில் தேசிய கொள்கையைத் தயாரிக்க ஆலோசனை
• கொழும்பு நகரின் சுகாதார மற்றும் கழிவுநீர் திட்டம் குறித்து தீவிர கவனம்
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதுடன், இதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் அதன் சட்ட அதிகாரிகளுக்கு, பிரதமரும், பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்தார்.
பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் பிரதமர் தலைமையில் நேற்று (நவ. 24) நடைபெற்ற போதே இந்தப் பணிப்புரையை வழங்கினார்.
கள அதிகாரிகள் தமது தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஒக்டோபர் 19ஆம் திகதி சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், நிறுவனத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களை நிறுவனத்துக்கு அழைத்து விளக்கமளிக்குமாறு பணிப்பாளர் நாயகத்துக்குப் பிரதமர் பணிப்புரை வழங்கினார்.
பிரதேச செயலாளர்கள் இடமாற்றம் தொடர்பில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டுமெனக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் தொடர்பில் குறிப்பிட்ட முறைமை எதுவும் இல்லை எனவும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தற்போது பிரதேச செயலாளர் ஒருவர் 06 வருடங்களே ஓரிடத்தில் பணியாற்ற முடியும் என்றும், அதிகபட்சமாக 12 வருடங்களும் சேவையாற்ற முடியும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இது தொடர்பில் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் சிபாரிசைப் பெற்று பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பிரதேச செயலகங்கள் சிலவற்றில் 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தவில்லை என்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்குப் பிரதமர் பணிப்புரை வழங்கினார். இலஞ்சம், மோசடி மற்றும் ஊழல்களில் ஈடுபடும் பிரதேச செயலாளர்கள் குறித்த விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுவது குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
முறைகேடுகளில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததுடன், ஆதாரங்களுடன் முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இருந்தபோதும் தமக்குக் கிடைக்கும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயர் மட்டத்திலான முறைப்பாடுகள் பிரதேச செயலாளர்களுக்கும், இரண்டாம் மட்டத்திலான முறைப்பாடுகள் மாவட்ட செயலாளர்கள் மட்டத்திலும், மூன்றாம் மட்டத்திலான முறைப்பாடுகளில் பொதுநிர்வாக அமைச்சு நேரடியாகத் தலையிடுகிறது. அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் ஏற்படும் அதீத காலதாமதத்தை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தியுனார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் தமது கடமைகளை மேற்கொள்வதற்குத் தேவையான அலுவலக வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும், வசதிகள் இல்லாத பட்சத்தில் ஆளுநர்களுடன் கலந்துரையாடி அதற்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்குமாறும் பிரதமர் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
இதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட இதுவரை அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொள்ளாத நகரசபையை மாநகர சபையாக உயர்த்துவது தொடர்பான விடயத்தை மீண்டும் அமைச்சரவையில் முன்வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மேலதிக செயலாளருக்குப் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
உள்ளூராட்சி தேர்தல் முறையை மாற்றியமைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததுடன், அந்த கோரிக்கைகளை எல்லை நிர்ணய ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு பிரதமர் சுட்டிக்காட்டினார். நாட்டில் தேர்தல் முறைமையை மாற்றியமைக்க பிரதமர் எடுத்து வரும் நீண்ட கால முயற்சிகளுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நன்றி தெரிவித்தார்.
கடந்த 15 வருடங்களாக கொழும்பு மாநகரில் துப்புரவு மற்றும் கழிவுநீர் உட்கட்டமைப்புக்கு அதிகளவு பணம் செலவிடப்பட்ட போதிலும், இதுவரையில் அந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்படவில்லை என கவலை தெரிவித்த பிரதமர், அதற்கான தனியான முன்மொழிவுகளை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். இது தொடர்பான முன்னெடுப்புக்களை அடுத்த ஆண்டுக்குள் முடித்து அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கும், அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இச்சந்திப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கும்புர மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த மற்றும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டனர்.
2025-07-28
உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-28
மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன. கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2025-07-28
பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-07-21
பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர். பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks