E   |   සි   |  

2023-12-09

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மென்பொருள் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கான பெறுமதி சேர் வரி குறித்த சர்வதேச நடைமுறைக்கு அமைய வணிகம் செயற்படும் இடத்துக்கு அல்ல நுகர்வோர் இருக்கும் இடத்துக்கான சட்டவரம்பே ஏற்புடையது : ஆசிய இணையக் கூட்டணி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு அறிவிப்பு

மென்பொருள் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குனர்கள் மீதான பெறுமதி சேர் வரியை ஏற்றுக் கொள்வதற்கான சர்வதேச பொதுத்திட்ட அளவு வணிகம் செயற்படும் இடத்துக்கான சட்ட ஆட்சி எல்லையை அடிப்படையாகக் கொண்டது அல்ல, நுகர்வோர் இருக்கும் இடத்துக்கான சட்ட வரம்பை அடிப்படையாகக் கொண்டது என ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இணையம் தொடர்பான கொள்கைச் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றுக்கான தீர்வுகளை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் அமைப்பான ஆசிய இணையக் கூட்டணி, அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அறிவித்துள்ளது.

பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது உள்நாட்டு மென்பொருள் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடியபோது மேற்குறித்த விடயம் பற்றி ஆராயப்பட்டது.

கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் நீடிப்பாக அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அண்மையில் (டிச. 07) கூடியபோது, உள்நாட்டு மற்றும் சர்வதேச மென்பொருள், டிஜிட்டல் சேவை வழங்குனர்களான பிக்மீ, ஊபர், ஆசிய இணையக் கூட்டணி (மீட்டா, கூகுள், எக்ஸ், புக்கிங்.கொம், அமேசன் ஆகியவற்றின் சார்பில்) மற்றும் டராஸ் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

மென்பொருள் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குனர்கள் தற்பொழுது பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள போதும், 2024 ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலத்தில் இந்த வரிவிலக்கு நீக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் கடல் கடந்துள்ள வணிகங்களை விட இந்நாட்டிலுள்ள வணிகளுக்கு பாதகம் ஏற்படும் என்பதும் இங்கு தெரியவந்தது.

அத்தகைய கொள்கை முடிவுகள் வணிகங்கள் தமது செயற்பாடுகளை உள்நாட்டிலிருந்து மேற்கொள்வதை ஊக்கப்படுத்தாது என்றும், அவ்வாறான வணிகங்கள் கடல்கடந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கினால் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், டிஜிட்டல் சேவை வழங்குனர்கள் மற்றும் புதிய தொடக்கங்களைத் தடுக்கும் என்பதும் குழுவின் நிலைப்பாடாக இருந்தது. இதற்கமைய, ஆசிய இணைய கூட்டணியினால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொள்ளுமாறு நிதி அமைச்சுக்குப் பணிப்புரை வழங்கிய குழு, 2023 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையொன்றைக் கையளிக்குமாறும் அறிவுறுத்தியது.

மேலும், நிதி பற்றிய குழு ஐந்து கட்டளைகள் மற்றும் ஒழுங்கு விதிகள் பற்றியும் ஆராய்ந்தது. இதற்கு அமைய 2347/06 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10வது பிரிவின் கீழான கட்டளை, 2345/64, 2346/16, 2348/44 மற்றும் 2353/77 இலக்கங்களைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட சிறப்புப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான ஐந்து கட்டளைகள் என்பன குழுவினால் ஆராயப்பட்டன.

கோதுமை மற்றும் பாசிப்பயறு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பாதிக்கும் வரிகளில் அதிகரிப்பு அல்லது குறைப்பை மேற்கொள்வது குறித்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினரின் உதவியுடன் ஆழமான பகுப்பாய்வுகளை நிதி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

மேலும், 2021ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க இலங்கை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளின் கீழ் கொழும்பு துறைமுக நகரத்தில் அமைக்கப்படவுள்ள டவுன் – டவுன் சேவை விலக்களிப்பு (Down – Town Duty Free) கட்டமைப்புக் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி, அமைக்கப்படவுள்ள டவுன் – டவுன் சேவை விலக்களிப்பானது முக்கியமாக சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 70% சுற்றுலா நுகர்வோரை இலக்காகக் கொண்டுள்ளது என்பதுடன், உலகளாவிய ரீதியில் பிரபல்யமாக உள்ள வர்த்தக நாமங்கள் உள்ளிட்ட 25 தயாரிப்புக்களை உள்ளடக்கியிருக்கும்.

இந்த ஒழுங்கு விதியில் சில பிரிவுகளில் இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருட்களின் பட்டியல்கள் விதிகளாக உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றுக்கு சட்ட ரீதியான ஏற்றுக்கொள்ளல்கள் இல்லையென்றும் குழு சுட்டிக்காட்டியது. எனவே, எழக்கூடிய இடைவெளிகளைத் தவிர்க்கவும், மக்கள் அதைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் ஒழுங்குமுறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று குழு தெரிவித்தது. இதன்படி கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு திருத்தப்பட்ட பதிப்பை வெளியிடுமாறும் குழு பணிப்புரை விடுத்தது.

இக்குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ (வைத்திய கலாநிதி) சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சமிந்த வீரக்கொடி, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ நிமல் லன்சா, கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3



தொடர்புடைய செய்திகள்

2025-10-29

இலங்கையின் தேயிலை, கோப்பி மற்றும் புகையிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் சீன தூதுக்குழுவுடன் கலந்துரையாடல்

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் சீனாவின் யுனான் பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவரான யான் யாலின் அவர்களின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையில் விவசாய அபிவிருத்தி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (ஒக். 24) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் கௌரவ பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தேயிலை, கோப்பி மற்றும் புகையிலை பயிர்ச்செய்கை துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த கௌரவ பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஏற்கனவே நடத்தப்பட்டதாகவும், இந்தச் சந்திப்பானது சீனத் தூதுக்குழுவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டது என்றும் தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் பல்வேறு கட்டங்களில் சீனாவால் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவை பாராட்டிய கௌரவ பிரதி அமைச்சர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பிலும் விசேடமாகச் சுட்டிக்காட்டினார். இவ்வாறான உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பங்களிக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். தேயிலை, கோப்பி மற்றும் புகையிலைத் தொழில்களின் அபிவிருத்தி குறித்து இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், நவீன தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறைந்து வரும் தொழிற்படை காரணமாக எழும் சவால்களைக் வெற்றிகொள்வதற்கும், தேயிலைப் பயிர்ச்செய்கையின் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் நான்காம் தலைமுறை உரங்களைப் (fourth-generation fertilizers) பயன்படுத்துவது பொருத்தமானது என்று சீன தூதுக்குழுவினர் பரிந்துரைத்தனர். கோப்பி பயிர்ச்செய்கை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கடந்த தசாப்தத்தில் இலங்கையின் கோப்பித் தொழில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளது என்று இங்கு தெரிவிக்கப்பட்டதுடன், கோப்பி பயிர்ச்செய்கைக்காக நில ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தற்போது 5,000 ஹெக்டெயாருக்கும் அதிகமான பரப்பளவில் கோப்பி பயிரிடப்படுவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதனை 10,000 ஹெக்டெயாராக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாககவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இலங்கையின் புகையிலைத் தொழில் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புகையிலை மூலப்பொருட்களுக்குப் பதிலாக பதப்படுத்தப்பட்ட, பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புக்களை சந்தைப்படுத்துவதன் மூலம் சர்வதேச சந்தைக்கு நுழைய முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர். இலங்கையின் புகையிலைத் தொழில் இன்னும் சிறிய அளவிலான தொழிலாகவே காணப்படுவதாகவும், தொழிற்சாலைகளை மையமாகக் கொண்ட பாரிய அளவிலான தொழில்துறையாக அதனை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் சீனப் பிரதிநிதிகள் குழுவினர் சுட்டிக்காட்டினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளடங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சீனப் பிரதிநிதிகள் குழுவினர், பாராளுமன்றத்தின் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-10-29

வடமேல் மாகாணசபை கோபா குழுவிற்கு அழைப்பு

ஆறு மாடிக் கட்டடத்தின் நிர்மாணத்தில் மாகாணசபை அதிக சுமையை ஏற்கும் வகையில் ஒப்பந்தக்காரரினால் தயாரிக்கப்பட்ட நிர்மாணக் கொள்முதல் நடைமுறையைத் தெரிவுசெய்து – சாத்தியக்கூற்று அறிக்கையும் பெற்றுக்கொள்ளப்படவில்லை – கோபா குழு கேள்வி   வடமேல் மாகாணசபை மற்றும் குருநாகல் மாநகரசபை ஆகியன இணைந்து ஆறுமாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக கேள்விப் பத்திரங்களைக் கோரி ஒப்பந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்ததுடன், இது தொடர்பில் காணப்படும் மேற்பார்வை நடவடிக்கைகள் காரணமாக இந்தக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பது அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) தெரியவந்தது. இதுபோன்ற கட்டடங்களை அமைப்பதற்கு முன்னர் சாத்தியக்கூற்று ஆய்வு அறிக்கை பெறவேண்டியிருக்கின்றபோதும் அவ்வாறான அறிக்கை பெற்றுக் கொள்ளப்படவில்லையென்பதும் இங்கு தெரியவந்தது. அத்துடன், விசேடமான வடிவமைப்பைக் கொண்ட கட்டுமானம் இன்றி, சாதாரண வகையிலான அலுவலகக் கட்டடத்தை அமைப்பதற்கு மேல்மாகாண சபை அதிக சுமையை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தகாரரினால் நிர்மாண கொள்முதல் நடைமுறை தெரிவுசெய்யப்பட்டிருப்பது பிரச்சினைக்குரியது என்பதும் கோபா குழுவினால் வலியுறுத்தப்பட்டது. வடமேல் மாகாணசபை தொடர்பான 2023, 2024ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 23) கூடியபோதே இந்த விடயங்கள் தெரியவந்தன. இதற்கமைய குறித்த கட்டுமானம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு மீண்டும் ஒருமுறை அதிகாரிகளை அழைப்பதற்கும், ஒரு மாத காலத்திற்குள் குறித்த கட்டடம் தொடர்பான பரிந்துரைகள், கொள்முதல் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களின் அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்கள் சகலவற்றையும் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. மேலும், உணவு ஆணையாளர் திணைக்களத்தினால் வடமேல் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக அரசி உற்பத்தியாளர்களின் கூட்டுறவுச் சங்கத்திற்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட கடன் மற்றும் தாமதக் கட்டணத்தை வசூலிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு கேட்கப்பட்டதுடன், இது தொடர்பான அறிக்கையொன்றை திகதிகள் குறிப்பிட்டு இரண்டு மாதங்களுக்குள் கோபா குழுவுக்கு அனுப்பிவைக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு அரச காணிகள் குறித்து முறையான பதிவேட்டைப் பேணுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள போதும், குறித்த பதிவேடு அரசாங்க காணிகள் யாவற்றையும் அடையாளம் காண்பது, நீண்டகால குத்தகைக்குக் கொடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட மற்றும் அனுமதியளிக்கப்படாத காணிகள், நிலுவையில் உள்ள குத்தகைத் தவணைகள் போன்ற விடயங்களை இலகுவில் கண்டறியக் கூடிய வகையில் இல்லாமை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய பணத்தை வசூலிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டக்கூடாது என்றும், கோபா குழு இதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இதற்கு அமைய, இந்த ஆண்டு இறுதிக்குள் வசூலிக்கப்பட வேண்டிய மொத்த தொகை குறித்து அறிக்கை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, சுமார் 85 மில்லியன் ரூபாய் வசூலிக்கப்படாத வரித் தொகை இருப்பதாகவும், இது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கோபா குழு அறிவுறுத்தியது. இக்கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான அரவிந்த செனரத்,  மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருன ஜயசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, டி.கே. ஜயசுந்தர, ருவன்திலக ஜயக்கொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுத, சுனில் ரத்னசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-10-27

அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க புதுப்பிக்கப்பட்ட தரவுக் கட்டமைப்பு அவசியம் – உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவிப்பு

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சர்வதேச அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் கடந்த ஒக். 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ‘அஸ்வெசும திட்டம்’ குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், உலக வங்கியின் சமூகப் பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் பிரான்செஸ்கா லமன்னா (Francesca Lamanna)  மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர் ஸ்ரீனிவாஸ் வரதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  சமூகப் பாதுகாப்புக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதன் மூலம், உண்மையிலேயே வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள், குடும்பங்களை அடையாளம் காண முடியும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பிரஜைகளின் தகவல்களை சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் உள்ளிடுவது அவர்களை அஸ்வெசும அல்லது பிற தொடர்புடைய சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றாது என்றும், உள்ளிடப்பட்ட தரவைச் சரிபார்க்க முடியும் என்றும், தொடர்புடைய சலுகைகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றும் இந்தக் குழு வலியுறுத்தியது. இந்தச் சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஒரு நாட்டிற்கு ஒரு உற்பத்தி முதலீடாகும், எனவே தரவுத்தளத்தைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். "அஸ்வெசும" சலுகைகளை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அதன்படி, கிராம ரீதியாக அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அஸ்வெசும பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, சம்பந்தப்பட்ட கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்களைக் காண்பிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த, "அஸ்வெசும" திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததால் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் வகிபாகம் குறித்து முறையான தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் ஊடாக இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தாம் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தனர். கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வங்கி ஆலோசகர் ஷாலிகா சுபசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.


2025-10-24

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்று (ஒக். 23) கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி அமைச்சின் அதிகாரிகள், 2026ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஒவ்வொரு துறைக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த விபரங்களை முன்வைத்தனர். இவ்விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks