E   |   සි   |  

2024-01-24

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மாத்தறை நகரின் குடிநீர் மற்றும் வெள்ளப் பிரச்சினை தொடர்பாக வழிவகைகள் பற்றிய குழுவில் அவதானம்

  • நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களையும் இணைத்து நில்வளா வெள்ளம் குறித்து திட்ட ஆய்வொன்றை மேற்கொண்டு வெள்ளப்பெருக்கு எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதற்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடவடிக்கை எடுக்க வழிவகைகள் பற்றிய குழு பரிந்துரை
  • கடந்த வருடத்தில் ஏற்பட்ட பயிர்களுக்கான சேதம் குறித்து அறிக்கை கோரல்
  • வெள்ளப்பெருக்குக் காரணமாக ஒன்பது போகங்கள் பாதிப்பை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு  பெற்றுக் கொடுப்பதற்கும் அறிவுறுத்தல்
  • மணல் தடுப்பை முற்றாக அகற்றி வடிகால்களில் காணப்படும் தடைகளை நீக்கி அவற்றை சீர் செய்யவும் பணிப்புரை
  • எதிர்கால நீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு தற்பொழுது காணப்படும் பழைய 5 நீர்த்தேக்கங்களையும் மீண்டும் புனரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தல்


விரைவில் நகரமயப்படுத்தப்பட்டுவரும், மூலோபாய நகராக வளர்ச்சி கண்டுவரும் மாத்தறை நகரில் காணப்படும் குடிநீர் மற்றும் வெள்ளநீர் பிரச்சினை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களுடன் இணைந்து உலக வங்கியின் திட்டத்தின் நீட்சியாக திட்ட ஆய்வொன்றைத் தயாரித்து அதுபற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க இன்று (ஜன. 24) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

நில்வளா கங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்த விடயம் தொடர்பில் ஆராயும் நோக்கில் பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழு இன்று (24) கூடியபோதே அதன் தலைவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

இந்த அமர்வுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், தென் மாகாண நீர்வழங்கல் சபை, மாத்தறை மாவட்ட செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

2023 ஆண்டு நில்வளா கங்கையை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நில்வளா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இயற்கையான நிலைமையா அல்லது அமைக்கப்பட்ட உப்பு நீர் தடுப்பு அணையினால் ஏற்பட்ட நிலைமையா என்பது குறித்து குழுவின் தலைவர் வினவினார். மக்களின் குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்ட உப்பு நீர் தடுப்பணை இந்த வெள்ள நிலைமைக்கு நேரடிக் காரணம் என்பது இங்கு தெரியவந்ததுடன், வெள்ளப்பெருக்குக் காரணமாக கடந்த வருடத்தில் ஏற்பட்ட பயிர்களுக்கான சேதம் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர், மாத்தறை மாவட்ட செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

உப்பு நீர் தடுப்பு அணைக்கு மேலதிகமாக மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அதிக மழைவீழ்ச்சி, நில்வளா கங்கையின் படுகையில்  சகதி படிந்தமை, பழைய உப்பு நீர் தடுப்பணை அகற்றப்படாமையால் இரண்டு தடுப்பணைகள் உருவாகியமை மற்றும் மணல் தடுப்புக்கள் அகற்றப்படாமை போன்றவை இந்த வெள்ள சூழ்நிலைக்குக் காரணமாக அமைந்ததாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. வடிகான்களில் சகதிகள் அகற்றப்படாமை மற்றும் அவை ஒழுங்கான முறையில் பராமரிப்பதற்கு நிதி மற்றும் உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு நிலைமையால் சரியான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லையென்றும் தெரியவந்தது. அத்துடன், அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தின் போது போடப்பட்ட தற்காலிக மாற்று வீதிகள் இதுவரை அகற்றப்படாமையும் வெள்ள நிலைமைக்கு வழிவகுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நில்வளா பள்ளத்தாக்கில் வெள்ள நிலைமை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. மக்களைப் பாதித்துள்ள இந்த சமூகப் பிரச்சினை தொடர்பில் மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றி நீர்ப்பாசனத் திணைக்களம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக ரணவக்க கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிந்திருந்ததாகவும், உப்பு நீர் தடுப்பு அணையை விட மணல் தடுப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது. மேலும் நில்வளா பாதுகாக்கப்பட்ட பகுதியில் மழைநீரை ஆற்றுக்கு வெளியேற்றும் பம்பிகளுக்குப் போதிய எரிபொருள் இன்மையும் பிரச்சினையாக அமைந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நீரை வெளியேற்றும் நிலையங்கள் புனரமைக்கப்படவில்லையென்றும் 2010 ஆம் ஆண்டு இந்த நீர் பம்பிகளின் இயந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலை தொடர்பாக நடத்தப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது.

மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து மண் தடுப்பை முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கான செயற்பாடுகளால் ஏற்பட்ட இடையூறுகள் அகற்றப்பட வேண்டும் என்றும், நில்வளா கங்கையில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு அதனை ஆழப்படுத்தும் பணியை நீர்ப்பாசணத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் அது பற்றிய அறிக்கை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், எதிர்கால நீர்த்தேவைகளை பரிசீலித்து, பழைய 5 நீர்த்தேக்கங்களை புனரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ அநுராத ஜயரத்ன, கௌரவ ஷசீந்திர ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ டலஸ் அழகப்பெரும, கௌரவ புத்திக பத்திரன, கௌரவ கருணாதாச கொடித்துவக்கு மற்றும் கௌரவ வீரசுமண வீரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

1 2

3



தொடர்புடைய செய்திகள்

2025-07-28

மருந்து பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள்   மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.  கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-07-28

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில்  கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-07-28

கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக செயற்குழு நியமிக்கப்பட்டது

பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-07-21

“அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை பாராளுமன்ற குழுக்கள் அவற்றுக்கான கடமையின் அடிப்படையில் ஆராய முடியும்” – முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், கோப், கோபா குழுக்களின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே

பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.  பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும்  இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார்.  அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks