பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-02-17
செய்தி வகைகள் : செய்திகள்
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் இன்று (பெப். 17) நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 187 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து குழுநிலையில் சட்டமூலம் கருத்திற்கொள்ளப்பட்டதுடன், அதன் பின்னர் சட்டமூலத்திற்கான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. அதற்கமைய, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மற்றும் மூன்றாம் மதிப்பீடு விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
2025-10-24
2025 இலக்கிய மாதத்துடன் இணைந்ததாக கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'பளிங்கு ரேண' (Wingfield Family) மேடை நாடகம் இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகிலுள்ள வைபவ மண்டபத்தில் நேற்றையதினம் (ஒக். 23) பி.ப. 7.00 மணிக்கு வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டது. கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவும் கலந்துகொண்டார். நாடகம் தொடங்குவதற்கு முன்னர் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) சேன நாணயக்கார ஆகியோர் நாடகம் குறித்த அறிமுகத்தை வழங்கினர். இந்த 'பளிங்கு ரேண' மேடை நாடகம் அமெரிக்காவின் பிரபல நாடக ஆசிரியர் டென்னிசி வில்லியம்ஸின் The Glass Menagerie எனும் சிறந்த தரத்திலான மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடக ஆசிரியர் ஹென்றி ஜயசேன அவர்களினால் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்பட்ட இந்த 'பளிங்கு ரேண' மேடை நாடகம், பூஜித்த டி மெல் அவர்களினால் இயக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை சாந்தனி செனவிரத்ன, ஸ்செவியர் கனிஷ்க, மனுஷி டானியா, பிம்சர சில்வா உள்ளிட்ட பல கலைஞர்களின் பங்களிப்புடன் இந்த மேடை நாடகம் அரங்கேற்றப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, கலை மற்றும் கலாசாரம் மீது காணப்படும் உணர்திறன் காரணமாக ஒருவருடைய வாழ்க்கை மேம்படுவதுடன், கலாசாரம் இன்றி வளமான நாட்டை உருவாக்க முடியாது என்றும் தெரிவித்தார். சமூகத்தை வெவ்வேறு கோணங்களில் பார்ப்பதில் இத்தகைய கலை நடவடிக்கைகள் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர், இந்த மேடை நாடகத்தை ஏற்பாடு செய்த கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்திற்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி, பாராளுமன்றம் ஒரு கடுமையான இடம் அல்ல, மாறாக தனிநபர்களுக்கு உணர்திறன் கொண்ட இடம் என்பதை நிரூபிக்கும் ஒரு சிறப்பு சந்தர்ப்பம் இது என்றும், மனித உறவுகளை மேலும் பாதுகாப்பதற்கான ஒரு தனித்துவமான வழியாக இதுபோன்ற கலை நிகழ்வுகளை அறிமுகப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையில் கலை மற்றும் கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்துவவதற்கு கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கும் என்றும், இதன் அடிப்படையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறித்த ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, எதிர்க்கட்சியின் கௌரவ முதற்கோலாசான் கயந்த கருணாதிலக, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ருவன் மாப்பலகம, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) சுசந்த தொடாவத்த மற்றும் சுகத் வசந்த த சில்வா உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2025-10-24
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் “மனிதநேய நெறிமுறைகளை நிலைநிறுத்துதல் மற்றும் நெருக்கடி காலங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல்" என்ற தொனிப்பொருளின் கீழ் 2025 ஒக்டோபர் 19 முதல் 23 வரை நடைபெற்ற 151வது அனைத்துப் பாராளுமன்றங்களின் ஒன்றியத்தின் (IPU) மாநாட்டில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் கலந்துகொண்டனர். தொடர்ச்சியான உலகளாவிய மனிதாபிமான சவால்களின் பின்னணியில், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தைப் பாதுகாத்தல், பல்தரப்பட்ட உறுதிப்பாடுகளை வலுப்படுத்தல், மற்றும் மோதல் மற்றும் நெருக்கடி காலங்களில் பயனுள்ள மனிதாபிமானப் பதிலளிப்பை உறுதிசெய்தல் என்பவற்றில் பாராளுமன்றங்களின் பங்கு குறித்து கலந்துரையாடும் வகையில் உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான சட்டவாக்க உறுப்பினர்களை இந்த மாநாடு ஒன்றிணைத்தது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதி அமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வடகல தலைமையில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஒஷானி உமங்கா, சாந்த பத்மகுமார, மொஹமட் பைசல், ஹேஷா விதானகே மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். பொது விவாதத்தின் போது உரையாற்றிய கௌரவ பிரதி அமைச்சர் சுனில் வடகல, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் நெருக்கடி முகாமைத்துவத்தில் இலங்கையின் அனுபவத்தை சுட்டிக்காட்டினார். அத்துடன், 2004 ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வை, இலங்கையின் மீள்தன்மை மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச மனிதாபிமான ஒத்துழைப்பின் இன்றியமையாத பங்கினை அடிக்கோடிட்டுக் காட்டிய ஒரு தருணமாகக் குறிப்பிட்ட அவர், தயார்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் மனிதாபிமான நெறிமுறைகளைக் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "காலநிலை மற்றும் சுத்தமான காற்றுக்காக மீத்தேன் வாயுவைக் குறைத்தலுக்கான தகுந்த கவனம் கிடைக்கிறதா?" என்ற தலைப்பிலான செயலமர்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் கலந்துகொண்டார். அவர் தனது கருத்துக்களில், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், கார்பன் பூஜ்ஜியம் 2050 வழிகாட்டி மற்றும் மூலோபாயத் திட்டம், கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் போன்ற தேசிய முயற்சிகளையும், 2050 ஆம் ஆண்டளவில் கார்பன் நடுநிலைமையை அடைவதற்கான நாட்டின் உறுதிமொழியையும் அவர் எடுத்துரைத்தார். நிலைபேறான அபிவிருத்தி மற்றும் தலைமுறைக்கு இடையேயான பொறுப்பு குறித்த தேசத்தின் நோக்கை இலங்கையின் சுற்றாடல் கொள்கைகள் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் அமர்வில் பங்கேற்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா, "பாராளுமன்றங்களும் பாலின சமத்துவமும்: சாதனைகளும் முன்னோக்கிய வழியும்" எனும் தலைப்பில் உரையாற்றினார். பாலின சமத்துவம், பெண்களை வலுப்படுத்தல் மற்றும் உள்ளடக்கிய ஆட்சிமுறையை மேம்படுத்துவதில் இலங்கையின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அவர் சுட்டிக்காட்டினார். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்த பத்மகுமார மற்றும் ஹேஷா விதானகே ஆகியோர் மாநாட்டில் நடைபெற்ற நிலைக் குழு அமர்வுகள், தொனிப்பொருள் ரீதியான அமர்வுகள் மற்றும் செயலமர்வுகளின் கலந்துரையாடல்களில் செயற்பாட்டு ரீதியாகப் பங்களித்தனர். உணவுப் பாதுகாப்பு, இடம்பெயர்வு, காலநிலை பற்றிய நடவடிக்கை மற்றும் பாராளுமன்ற மேற்பார்வை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த இலங்கையின் நிலைப்பாடுகளை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். மாநாட்டின் அங்கமாக இடம்பெற்ற பாராளுமன்ற செயலாளர் நாயகங்களின் சங்கத்தின் (ASGP) அமர்வுகள் மற்றும் தொடர்புபட்ட கூட்டங்களில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர கலந்துகொண்டார். அத்துடன், இலங்கை பிரதிநிதிகள் குழுவினர், நேபாளத்தின் தேசிய சபைத் தலைவரான கௌரவ நாராயண் பிரசாத் தஹால் தலைமையிலான நேபாளக் குழுவுடன் இருதரப்புச் சந்திப்பையும் நடத்தினர். பாராளுமன்றப் பரிமாற்றம், கல்வி, சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகள் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கைக் குழுவினர், பெலாரஸ் குடியரசின் தேசிய சபையின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கான நிலைக் குழுவின் தலைவர் கௌரவ செர்ஜி அலெனிக் அவர்களையும் சந்தித்தனர். குறிப்பாக மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட கல்வித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இரு நாடுகளினதும் பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவித்தல், உயர்மட்டப் பரிமாற்றங்களை ஏற்படுத்தல் மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துதல் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். IPU நிர்வாகக் குழுவின் இறுதி அமர்வில் முக்கிய தீர்மானங்கள் மற்றும் அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி 151வது IPU மாநாடு நிறைவடைந்தது. இது உலகெங்கிலும் உள்ள பாராளுமன்றங்கள் மனிதாபிமான நெறிமுறைகளை நிலைநிறுத்துதல், அமைதியை மேம்படுத்துதல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கான கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.
2025-10-23
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டப் பிரிவின் மாணவர்களும், இந்தியாவின் மும்பையில் உள்ள அமிட்டி சட்டக் கல்லூரியின் மாணவர்களும் அண்மையில் (ஒக். 21) இலங்கைப் பாராளுமன்றத்திற்கு ஒரு கல்விச் சுற்றுலா நோக்கமாக வருகை தந்தனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு, சுற்றாடல் சட்டம் மற்றும் கொள்கைக்கான நிலையம் (CELP) மற்றும் இந்தியாவின் மும்பையில் உள்ள அமிட்டி சட்டக் கல்லூரி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் ''இந்து - இலங்கை சுற்றாடல் சட்ட வாரம் - 2025'' ஐ முன்னிட்டு அமுல்படுத்தப்படும் கல்விசார் நிகழ்ச்சித் தொடரின் ஒரு அங்கமாகவே சட்ட மாணவர்கள் குழுவினர் இவ்வாறு பாராளுமன்றத்திற்கான கல்விச் சுற்றுலாவில் கலந்துகொண்டனர். பாராளுமன்றத்திற்கு வருகை தந்த இம்மாணவர்களுக்கு முதலாவதாக, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைப் பிரிவின் வழிகாட்டலின் கீழ் பாராளுமன்ற வளாகத்தையும் சபை மண்டபத்தையும் அவதானிக்கும் சுற்றுலாவில் பங்கேற்று அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதனையடுத்து, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா அவர்களின் தலைமையில் அவர்களுக்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன்போது, இலங்கையின் சட்டவாக்க செயன்முறை, பாராளுமன்றத்தின் பங்கு மற்றும் செயற்பாடு குறித்து அவர் விளக்கமளித்தார். அத்துடன், சட்ட மாணவர்களின் கேள்விகளுக்கும் இதன்போது பதில்கள் வழங்கப்பட்டன. கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டப் பிரிவின் தலைவர் பேராசிரியர் கோகிலா லங்காத்திலக்க கோணசிங்க உள்ளிட்ட சட்ட பீட விரிவுரையாளர்களும், இந்தியாவின் மும்பையில் உள்ள அமிட்டி சட்டக் கல்லூரியின் பணிப்பாளர் பேராசிரியர் வி.எஸ். ஜிஜிமன் உள்ளிட்ட அக் கல்லூரியின் விரிவுரையாளர்களும், இரண்டு நாடுகளின் சட்ட மாணவர்களும் அடங்கிய குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2025-10-22
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும் கைப்பட்டி அணிவிக்கும் நிகழ்வு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர, ஆளும் கட்சியின் முதற்கோலாசான், கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ, கௌரவ எதிரிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக ஆகியோருக்கு சின்னங்களும், கைப்பட்டிகளும் அணிவிக்கப்பட்டன. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் நுழைவாயில் பகுதியில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டும் வகையிலான சின்னமும், கைப்பட்டியும் அணிவிக்கப்பட்டன. அத்துடன், ஒன்றியத்தினால் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோருக்கும் சின்னமும், கைப்பட்டியும் அணிவிக்கப்பட்டன. இன்றையதினம் இந்நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி பாராளுமன்ற பணியாளர்களும் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடையணிந்து வருகை தந்திருந்தனர். அத்துடன், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மார்பகப் புற்றுநோய் ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வூட்டல் தொடர்பில் பி.ப 4.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையும் விவாதிக்கப்படவுள்ளது. உலகம் முழுவதிலும் பெண்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் காணப்படுகிறது. இதற்கு அமைய இலங்கையில் நாளாந்தம் 15 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இதில் மூவர் உயிரிழப்பதாகவும் இங்கு கருத்துத் தெரிவித்த வைத்தியர்கள் தெரிவித்தனர். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மார்பகப் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும், இதற்காக 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாதத்திற்கு ஒரு முறை சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர் அதன்படி, ஒக்டோபர் மாதத்தில் மட்டுமல்ல, இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், இந்த சமூகப் பேரழிவை ஒழிக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உள்ளது என்பதும் வலியுறுத்தப்பட்டது. பாடசாலை மட்டத்தில் இது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், இளஞ்சிவப்பு புதன்கிழமை (Pink Wednesday) என்ற பெயரில் பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைப்புடன் நாட்டில் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். பாராளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக, அனைத்துப் பாடசாலைகளினதும் காலைக் கூட்டங்களில் இவ்விடயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட பாடசாலை அதிபர்களின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒன்றியத்தினால் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஏனைய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் ஸ்ரீனி அழகப்பெரும, விசேட வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாந்து, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் லங்கா ஜயசூர்ய திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks