E   |   සි   |  

2025-03-16

செய்தி வகைகள் : செய்திகள் 

உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் மார்ச் 20ஆம் திகதி பி.ப 6 மணி முதல் 8 மணிவரை – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம்

  • பாராளுமன்றத்தை ஏப்ரல் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்கும் தீர்மானம்
  • பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த இரண்டு நாள் விவாதம் ஏப்ரல் 10ஆம் திகதி ஆரம்பம்

 

உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை மார்ச் 20ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6 மணி முதல் 8 மணி வரை நடத்துவதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (மார்ச் 15) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அத்துடன், பாராளுமன்றத்தை ஏப்ரல் 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய ஏப்ரல் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப்பகுதி குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்திற்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ஏப்ரல் 09ஆம் திகதி புதன்கிழமை 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரையான காலப்பகுதி பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரையான காலப்பகுதி வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரையான காலப்பகுதி பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் பி.ப 5.00 பி.ப 5.30 மணி வரையில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கான விவாதத்திற்கும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.

ஏப்ரல் 10ஆம் திகதி வியாழக்கிழமை, நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டறை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையில், கடந்த 14ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” குறித்த விவாதத்தை நடத்துவதற்கும், இதற்கான இரண்டு நாள் விவாதத்தில் பிறிதொரு நாளை மே மாதத்தில் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2025-03-25

இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சீன நட்புறுவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் கௌரவ அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கடந்த மார்ச் 21ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ கீ சென்ஹொங் (Qi Zhenhong)  அவர்களும் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தெரிவுசெய்யப்பட்டார். இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன,  இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்படும் இரு தரப்பு கலாசார மற்றும் அரசியல் உறவுகளை நினைவுகூர்ந்தார். இந்த உறவுகளை மேம்படுத்துவதற்குப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் முக்கியமான தளமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இரு தரப்பினருக்கும் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்காக பொருளாதாரம், வர்த்தகம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்றுவதன்  முக்கியத்தை வலியுறுத்திய சபாநாயகர், நட்புறவு சங்கத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இதற்காகப் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ கீ சென்ஹொங் (Qi Zhenhong), நட்புறவு சங்கத்தின் ஊடாக இரண்டு நாடுகளும் பரஸ்பரம் அக்கறை செலுத்தும் துறைகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், இலங்கையும் சீனாவும் தங்கள் கடினமான காலங்களில் மிகவும் நட்புடன் இணைந்து பணியாற்றியுள்ளன என்பதை நினைவு கூர்ந்த அவர், சீன-இலங்கை நட்புறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் கௌரவ அமைச்சருமான பிமல் ரத்னாயக்க கருத்துத் தெரிவிக்கையில், நீண்ட காலமாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நட்புறவைப் பாராட்டினார். குறிப்பாக கல்வி மற்றும் வணிகக் கைத்தொழில் போன்ற துறைகளில் சீனாவிடம் காணப்படும் திறன் மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை பலப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு சகல உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்தார். கடந்த இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினால் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகள் மற்றும் திட்டங்களை இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்ந்தும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் முன்வைத்தார். இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் செயற்படும் என அதன் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்தார். இந்த நிகழ்வில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2025-03-24

பாராளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டிக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது

ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் பாராளுமன்ற பிலியட் மண்டபத்தில் கடந்த மார்ச் 21ஆம் திகதி நடைபெற்றது. கௌரவ விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் தலைமையின் கீழ் பாராளுமன்ற படைக்கல சேவிதர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் போட்டிங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஏழு உள்ளக விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற போட்டிகளில் ஸ்நூகர் இறுதிப் போட்டி பிரதமர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் இடம்பெற்றது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான டி.வி.சானக்க மற்றும் ரோஹன பண்டார பங்குபற்றிய இப்போட்டியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க வெற்றிபெற்றார். இங்கு நடைபெற்ற கலப்பு இரட்டையர் மேசைப்பந்துப் போட்டியில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் எதிர்த்திசையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வருண லியனகே மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே ஆகியோர் போட்டியிட்டனர். தாம் போட்டியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம்.தர்மசேன அவர்கள்  வெற்றிபெற்றார். இரண்டாவது இடத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆரியவன்ச அவர்கள் பெற்றுக்கொண்டார். மேசைப்பந்து (ஆண்கள்) போட்டியில் கௌரவ பராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே அவர்கள் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடி பெற்றுக்கொண்டார். உள்ளக விளையாட்டுப் போட்டியின் தனிநபர்களுக்கான மேசைப்பந்து (பெண்கள்) போட்டியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி அவர்கள் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே பெற்றுக்கொண்டார்.சதுரங்கப் போட்டியில் (செஸ்) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) அர்ச்சுனா இராமநாதன் பெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார வெற்றிகொண்டார். அத்துடன், கரம் விளையாட்டில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க வெற்றிபெற்றதுடன், இப்போட்டியில் இரண்டாவது இடத்தை கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பெற்றுக்கொண்டார். பூல் (pool) விளையாட்டில் கௌரவ பாராளுமன்ற ரோஹன பண்டார வெற்றிகொண்டதுடன், இரண்டாவது இடத்தை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க பெற்றுக்கொண்டார். இதில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி உரைநிகழ்த்திய கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, மிகவும் வேலைப்பழு மிக்க காலத்தில் மனதை இலகுவாக வைத்திருக்கவும்,  உறுப்பினர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதற்கு விளையாட்டுக்கள் உறுதுணையாக இருப்பதாகக் கூறினார். அத்துடன், இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தமைக்காக கௌரவ விளையாட்டுப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற நளின் பண்டார ஆகியோருக்கும் பிரதமர் நன்றியைத் தெரிவித்தார். இந்த விளையாட்டுப் போட்டிகளின் நடுவர்களாகப் பாராளுமன்ற பணியாளர்களான தரங்க அபேசிங்கே மற்றும் சமீர சஞ்சீவ ஆகியோர் பங்களித்தனர். கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் கௌரவ பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, கௌரவ சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்னாயக்க, கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


2025-03-21

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு உறுப்பினர் ஒருவரின் நியமனத்திற்கான விதப்புரையை மேற்கொள்வதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. விண்ணப்பங்கள் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்படல் வேண்டும். உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2025 ஏப்ரில் 01 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் பின்வரும் முகவரிக்கு அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.


2025-03-21

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் (பிரதி சபாநாயகர்) இலங்கை பாராளுமன்ற சபாநாயகரை சந்தித்தார்

பிரதமர், பிரதி சபாநாயகர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் தூதுக்குழு சந்திப்பு இலங்கை - வியட்நாம் பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தல் மற்றும் விவசாயம், வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்ட ஏனைய துறைகளில் தொடர்புகளை விரிவுபடுத்தல் பற்றியும் கலந்துரையாடல்   வியட்நாம் சோசலிசக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் (பிரதி சபாநாயகர்) கௌரவ நுகுயென் டக் ஹை (Nguyen Duc Hai) தலைமையிலான வியட்நாம் பாராளுமன்றத் தூதுக்குழுவினர் இலங்கை பாராளுமன்ற சபாநாயகரை மார்ச் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தனர். மார்ச் 19 - 22 ஆம் திகதி வரை நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகைதந்துள்ள இந்தத் தூதுக்குழுவில் வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்வதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த விஜயம் இடம்பெறுகின்றது. கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் அழைப்பின் பேரில் இந்தக் தூதுக் குழு இலங்கைக்கு வருகைதந்துள்ளது. இச்சந்திப்பில், 1970 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர். இலங்கையும் வியட்நாமும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளில் வேரூன்றிய நீண்டகால, அன்பான மற்றும் நெருக்கமான தொடர்புகளை பகிர்ந்து கொள்கின்றன என கௌரவ சபாநாயகர் விக்ரமரத்ன சுட்டிக்காட்டினார். வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு வியட்நாம் ஜனாதிபதியின் அழைப்பை இலங்கையின் கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார். இந்த உத்தியோகப்பூர்வ விஜயம் 2025 மே மாதத்தில் இடம்பெறவுள்ளது. வியட்நாமின் அபிவிருத்தி அடைவுகளைப் பாராட்டிய கௌரவ சபாநாயகர் விக்கிரமரத்ன, வியட்நாமுடனான வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறை உறவுகளை அதிகரிப்பதில் இலங்கையின் அதீத ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். இலங்கை முதலீட்டாளர்கள் ஏற்கனவே வியட்நாமில் சுமார் 45 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை மேற்கொண்டு 15,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக  அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், குறிப்பாக உணவு பதப்படுத்துதல், விவசாயத்திற்கான குளிரூட்டல் சங்கிலி மேம்பாடு மற்றும் விவசாயத்-தொழில்நுட்பம் ஆகியவற்றில் இலங்கையில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறு வியட்நாம் முதலீட்டாளர்களுக்கு கௌரவ சபாநாயகர் அழைப்பு விடுத்தார். மேலும், சிறு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல், இயந்திரமயமாக்கல், குறைந்த விலையில் இயந்திரங்களை அணுகுவதை மேம்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் கவனம் செலுத்துதல் என்பன மூலம் விவசாயத்துறை மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை சபாநாயகர் சுட்டிக்காட்டினார். இங்கு கருத்துத் தெரிவித்த வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் (பிரதி சபாநாயகர்) கௌரவ நுகுயென் டக் ஹை, இலங்கையின் பொருளாதர முன்னேற்றம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பில் பாராட்டுக்களைத் தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வியட்நாமின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்களுக்கு வியட்நாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக டிஜிடல் மாற்றத்தில், சட்டவாக்க சிறந்த நடைமுறைகளில் கவனம் செலுத்தி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மூலம் இரு பாராளுமன்றங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். டிஜிடல் பாராளுமன்றங்களை உருவாக்குவதற்கும் பாராளுமன்ற செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். இரு பாராளுமன்றத் தலைவர்களுக்கும் இடையிலான உயர் மட்டப் பரிமாற்றங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன், இந்தத் தூதுக்குழுவினர் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரியவையும் பாராளுமன்றத்தில் சந்தித்து அவரது நியமனம் தொடர்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், உறவுகளை வலுப்படுத்துவதில் வியட்நாமின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் உறவுகளை மேம்படுத்தவும், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், இலவச விசா செயல்முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் நேரடி விமானங்கள் போன்ற முயற்சிகள் தொடர்பில் ஆராய்வதற்கும்  இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். இந்த முயற்சிகளை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஸ்தாபிப்பதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. தூதுக்குழுவினரின் பாராளுமன்ற விஜயத்தின் போது கௌரவ நுகுயென் டக் ஹை, இலங்கை பாராளுமன்ற கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்து, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர். ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர். அத்துடன், தூதுக்குழுவினர் வர்த்தக, வாணிப, உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, டிஜிடல் பொருளாதார கௌரவ பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோரைச் சந்தித்ததுடன், வர்த்தகம் மற்றும் டிஜிடல் பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை - வியட்நாம் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் அங்கத்தவர்களையும் தூதுக்குழுவினர் சந்தித்தனர். இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், வியட்நாம் தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர், இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் வளர்ந்துவரும் உறவுகளின் அடையாளமாக மரக்கன்றொன்றையும் நாட்டிவைத்தார். தூதுக்குழுவினர் சபாநாயகர் கலரியிலிருந்து பாராளுமன்ற அமர்வைப் பார்வையிட்டதுடன், பாராளுமன்ற சுற்றுப்பயணத்திலும் ஈடுப்பட்டனர். இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி டாம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனத்தீர, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks