பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-06-19
செய்தி வகைகள் : குழு செய்திகள்
2011ஆம் ஆண்டு வடமத்திய மாகாணசபையினால் 1170 மில்லியன் ரூபா (1.17 பில்லியன் அல்லது 117 கோடி) மிகை மதிப்பீட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 53 வீதிகள் புனரமைக்கப்பட்டிருப்பதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் அண்மையில் (ஜூன் 18) தெரியவந்தது. 2013 ஆம் ஆண்டில், பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு நடத்திய விசாரணையில் இது தெரியவந்திருப்பதுடன், குறிப்பிட் வீதிகளின் புனரமைப்புப் பணிகள் உரிய தரத்தில் இல்லையென்பதால் ஒப்பந்ததாரர்களுக்கான பணம் செலுத்துவது நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
வடமத்திய மாகாண சபை தொடர்பான 2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயற்திறன் குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் (18) கூடியபோதே இந்த விடயங்கள் தெரியவந்தன. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமத்திய மாகாண பிரதம செயலாளர் மற்றும் வடமத்திய மாகாண சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த 53 வீதிகளில் 3592 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்ட ஒரே வீதி, 5 மில்லியனுக்கும் குறைவான மதிப்பீட்டைக் கொண்ட பல திட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 741 திட்டங்களுக்காக வரையறுக்கப்பட்ட ஒப்பந்தகாரர்களிடமிருந்து விலைமதிப்புக் கோரப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. அப்போதைய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளரின் அனுமதியுடன் குறிப்பிட்ட திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்ற காரணத்தினாலேயே ரூ.5 மில்லியனுக்கும் குறைவான தொகை மதிப்பீட்டைக் கொண்ட திட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும் இங்கு புலப்பட்டது.
இந்தத் திட்டங்கள் பகிரங்க விலைமனுக்கள் எதுவும் கோரப்படாமல் ஏழு ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.2934 மில்லியன் மதிப்புள்ள 629 திட்டங்கள் (42 வீதிகள்) அவர்களில் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஒப்பந்ததாரரின் நிதி நிலைமை மற்றும் அனுபவத்தைப் பொறுத்து அவருக்கு ரூ.300 மில்லியன் முதல் ரூ.600 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மாத்திரமே வழங்கியிருக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த ஒப்பந்த நிறுவனம் அப்போது வடமத்திய மாகாணத்தில் ஆட்சியில் இருந்த ஒரு அரசியல்வாதியுடன் தொடர்புடையது என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய, ரூ.11 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட 1 கிலோமீற்றர் வீதிகளுக்கு ரூ.45 மில்லியன் வரை மிகவும் ஊழல் நிறைந்த முறையில் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இவ்வளவு அதிக செலவில் புனரமைக்கப்பட்ட வீதிகள் சரியான தரத்தைப் பூர்த்திசெய்யாமையால் குறுகிய காலத்திற்குள் பழுதடைந்திருப்பதும் குழுவில் தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய அதிகாரியான அப்போதைய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பதில் பொது முகாமையாளர் தற்பொழுது உயிருடன் இல்லையென்பதும், அவர் மகாவலி அதிகாரசபையில் பணியாற்றியபோது புதையல் தேடிய குற்றச்சாட்டுக்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அதன் பின்னர், குறித்த சம்பவத்திற்கு எதிராகச் செயற்பட்ட அதிகாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதாகவும், ஒப்பந்தகாரர்களுக்கு பணம் செலுத்துவது நிராகரிக்கப்பட்டமையால் 2015ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சரினால், பின்னர் நியமிக்கப்பட்ட வீதிப் போக்குவரத்து அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளரை ஓய்வுபெறச்செய்துள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
ஒரு மாகாண சபையின் வீதி அபிவிருத்திக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவது ஒரு பிரச்சினையாக இருப்பதாக நிதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதில் அப்போதைய பொருளாதார விவகார அபிவிருத்தி அமைச்சரின் செல்வாக்குக் காணப்பட்டதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வடமத்திய மாகாணத்தின் கடுமையாக உழைக்கும் விவசாயிகளின் வரிப் பணத்தை மோசடி செய்த சம்பவம் மிகவும் துரதிஷ்டமானது என்றும், இச்சம்பவம் நாட்டின் வீதி அபிவிருத்தி வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்ததொரு சம்பவமாக அடையாளம் காண முடியும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதனுடன் தொடர்புடைய அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து பணத்தை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. இது தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றில் முறையீடு செய்யவும், இதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குழு அறிவுறுத்தியது.
2017 ஆம் ஆண்டு பலுகஸ்தமன மகா வித்தியாலயத்திற்கு கேட்போர் கூடம் கட்டுவதற்காக ஒரு கட்டுமான நிறுவனத்துடன் ரூ. 542,019,300 (542 மில்லியன்/54.2 கோடி) தொகைக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த ஒப்பந்ததாரருக்கு ரூ. 100 மில்லியன் முற்பணம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் கட்டுமானப் பணிகள் ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டு திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரியவந்தது. எந்தவொரு சாத்தியக்கூற்று ஆய்வும் இல்லாமல் ஐநூறுக்கும் குறைவான குழந்தைகள் படிக்கும் பாடசாலைக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவது நியாயமில்லை என்றும், அப்போதைய வடமத்திய மாகாண முதலமைச்சரின் சொந்த விருப்பப்படி இது முன்னெடுக்கப்பட்டது என்பது பற்றியும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அரசியல்வாதிகளுடன் ஒப்பந்ததாரர்கள் கொண்டிருந்த தொடர்புகளே இதற்குக் காரணம் என்பதும் இங்கு தெரியவந்தது. தற்போது இழுபறியில் உள்ள இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி, பணத்தை மீட்டு, ஏதேனும் தவறு நடந்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. மேலும், இது குறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமறும் அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.
இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, சாமரச சம்பத் தசநாயக்க, சட்டத்தரணி சாகரிகா அத்தாவுட, ஒஷானி உமங்கா, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டி.கே. ஜயசுந்தர, சுசந்த குமார நவரத்ன, சுனில் ரத்னசிறி மற்றும் தினிந்து சமன் ஹென்னாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-09-15
மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தினால் தனியார் வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனை மீள் செலுத்தாதது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இலங்கை துறைமுக அதிகாரசபையின் 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த செப். 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் 2013 ஜூலை 05 ஆம் திகதி நிறுவப்பட்டது என்றும், அந்த நிறுவனம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்ற அனுமதிப்பத்திரம் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் விநியோகஸ்தராக செயற்பாடுகளை ஆரம்பித்து 2014 ஆம் ஆண்டில் தனியார் வங்கியொன்றிலிருந்து துறைமுக அதிகாரசபையின் நிறுவன உத்தரவாதத்தின் (Corporate Guarantee) மூலம் 24 மில்லியன் டொலர் கடன் பெற்றிருந்தமை இங்கு தெரியவந்தது. எனினும், இந்தத் தொகையில் 18.82 மில்லியன் டொலர்கள் (6836 மில்லியன் ரூபாய்) 2023 டிசம்பர் வரை செலுத்தப்படாமல் இருந்ததாகவும், இந்தக் கடன் தொகையை மீளப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வங்கி 2019 ஆம் ஆண்டில் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் அதிகாரசபைக்கு எதிராக இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இது தொடர்பாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன், 2022 ஜூன் மாதம் முதல் கலைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தை மூடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அதற்கமைய, இது தொடர்பாக குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இவ்விடயத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபை தனது பொறுப்பை நிறைவேற்றுவதில் திருப்தியடைய முடியாது என குழு இதன்போது சுட்டிக்காட்டியது. அத்துடன், நிறுவனத்தை மூடுவதன் மூலம் மாத்திரம் திருப்தியடைய முடியாது என சுட்டிக்காட்டிய குழு, கடன் செலுத்தும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு பரிந்துரைத்தது. அத்துடன், இது தொடர்பாக ஒரு உள்ளக விசாரணை நடத்தி அதற்குரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும், உள்ளகக் கணக்காய்வுப் பிரிவை சரியாக மேற்பார்வையிடுவதற்கான ஒரு பொறிமுறையை தயாரிக்குமாறும் குழு பரிந்துரைத்தது. அதற்கமைய, இந்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் குழுவிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, அதிகாரசபையின் கூட்டுத் திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, டி.வி. சானக்க, எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, திலித் ஜயவீர, லெப்டினன்ட் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, திலின சமரக்கோன், சமன்மலி குணசிங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-09-12
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டிற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (செப். 11) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கிக்கு நிதிச் சுதந்திரம் இருப்பதாகவும், அந்த நிறுவனங்களைப் போலவே இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும், கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்திற்கும் மிகவும் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான நிதிச் சுதந்திரம் வழங்குவது முக்கியம் என்று இங்கு குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தற்போதுள்ள அரசியல் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அந்த நிறுவனங்களால் மிகவும் சுயாதீனமாகச் செயற்பட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதனால், நிதி அமைச்சரான கௌரவ ஜனாதிபதிக்கும் இது தொடர்பாகத் தெரியப்படுத்துவதற்கு குழு இதன்போது தீர்மானித்தது. அத்துடன், ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் குழு உறுப்பினர்களின் சம்பளம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளத்திற்கு சமமாக அமைக்கப்பட வேண்டும் என்று இந்தக் குழு சுட்டிக்காட்டுவதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் சம்பளம் திருத்தப்படும் விதத்தில் இந்த அதிகாரிகளின் சம்பளமும் திருத்தப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியதுடன், அதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2025-09-12
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்கள் 2025.08.06ஆம் திகதி அப்பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்றையதினம் (செப். 12) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது. தலைவர் பதவிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல அவர்கள் முன்மொழிந்ததுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அவர்கள் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அரசியல் கருத்துவேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செற்பட்ட, சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், முன்னாள் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியை தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குறிப்பிட்டார். புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தலைவர் மேலும் தெரிவித்தார். இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சுதத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜே.சி.அலவத்துவல, ரோஹித்த அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத் தசநாயக்க, (வைத்தியர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, எம். ஏ. எம். தாஹிர், லால் பிரேமநாத், சானக மாதுகொட ஆகியோரும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025-09-11
2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் வருமானம், செலவு மற்றும் கடன் நிலவரம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் ஆராயப்பட்டது. அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கை அரசாங்கம் வலுவான நிதி செயற்திறனைப் பதிவு செய்து, அரையாண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரை ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட வருமானம் 2,241 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், மொத்தமாக சேகரிக்கப்பட்ட வருமானம் 2,318 பில்லியன் ரூபாய் எனவும், இது அரை ஆண்டு மதிப்பீட்டை விட 3% அதிகமாகும் என தரவுகளை முன்வைத்து நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவு 3,467 பில்லியன் ரூபாய் என்பதுடன், இது 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் மொத்த செலவுடன் ஒப்பிடுகையில் 367 பில்லியன் ரூபா அதிகமாகும். இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணியாக கடன் சேவைகள் அமைந்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இது 1,984 பில்லியன் ரூபாவாகும். அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியங்கள், அஸ்வெசும மற்றும் சமுர்த்தி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட அத்தியாவசிய அரச சேவைகளுக்கான மீண்டெழும் செலவுகளும் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இலங்கை சுங்கத் திணைக்களம் 2024 ஆம் ஆண்டுடன் (ஜனவரி - ஜூன்) ஒப்பிடுகையில் 47% வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 996 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. மோட்டார் வாகன இறக்குமதியிலிருந்து கிடைத்த வருமானம் இந்த வளர்ச்சிக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளதுடன், இதன் மூலம் 429 பில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 220,026 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 154,537 வாகனங்களுக்கான சுங்க விடுவிப்பு நடவடிக்கைகளை இலங்கை சுங்கம் நிறைவுசெய்துள்ளதாகவும் நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், கொள்கலன்கள் விடுவிப்பு நடவடிக்கைகளுக்காக சுங்கத்தில் 9 - 10 நாட்கள் செல்வதால் இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் குழு உறுப்பினர்கள் இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் வினவினர். அதன்படி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 2 - 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பொருட்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கி வருவதாகத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் (IRD) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மதிப்பிடப்பட்ட வருமானம் 1,022,691 மில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், 1,040,388 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1.3 மில்லியன் இலங்கையர்களுக்கு TIN (Tax Identification Number) இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய முடியுமா என்று குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார். எனினும், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் 3.1% ஆக இருக்கும் என்று அனுமானிக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் வரிக் கொள்கை தொடர்பான நிதி அமைச்சின் கொள்கை என்ன என்பது குறித்து குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பவற்றின் முன்னறிவிப்புகளுக்கு இடையிலான முரண்பாடு குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, சம்பிக்க ஹெட்டியாராச்சி, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks