E   |   සි   |  

2025-06-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

2011ஆம் ஆண்டு வடமத்திய மாகாண சபையினால் 117 கோடி ரூபா மிகை மதிப்பீட்டின் அடிப்படையில் 53 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன – அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது

  • ஒரே வீதிக்கு ரூ. 5 மில்லியனுக்குக் குறைவான திட்டங்கள் பலவற்றின் கீழ் ஒதுக்கீடு – 53 வீதிகள் 741 திட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையளிப்பு
  • ரூ. 2934 மில்லியன் மதிப்புள்ள 629 திட்டங்கள் (42 வீதிகள்) கேள்விப்பத்திரங்கள் கோரப்படாமல் ஒரு ஒப்பந்ததாரிடம் சட்டவிரோதமாக வழங்கப்பட்டமையும் தெரியவந்தது
  • ரூ. 11 மில்லியன் மதிப்பீட்டுப் பெறுமதியைக் கொண்ட 1 கிலோமீற்றர் வீதிக்கு ரூ. 45 மில்லியன் வரை செலுத்தப்பட்டுள்ளது
  • இரஜரட்டையிலுள்ள அப்பாவி விவசாயிகளின் வரிப் பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டமை துரதிஷ்டமானது – வீதி அபிவிருத்தி வரலாற்றில் மிகப்பெரிய மோசடி – கோபா குழுவின் தலைவர்
  • 500ற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலையில் 54 கோடி ரூபா பெறுமதியான கேட்போர்கூடமொன்றை அமைப்பதற்காகச் செலுத்தப்பட்ட 100 மில்லியன் ரூபா முற்பணம் விரயமானது – தற்பொழுது காடாகியுள்ளது

 

2011ஆம் ஆண்டு வடமத்திய மாகாணசபையினால் 1170 மில்லியன் ரூபா (1.17 பில்லியன் அல்லது 117 கோடி) மிகை மதிப்பீட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 53 வீதிகள் புனரமைக்கப்பட்டிருப்பதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் அண்மையில் (ஜூன் 18) தெரியவந்தது. 2013 ஆம் ஆண்டில், பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு நடத்திய விசாரணையில் இது தெரியவந்திருப்பதுடன், குறிப்பிட் வீதிகளின் புனரமைப்புப் பணிகள் உரிய தரத்தில் இல்லையென்பதால் ஒப்பந்ததாரர்களுக்கான பணம் செலுத்துவது நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

வடமத்திய மாகாண சபை தொடர்பான 2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயற்திறன் குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் (18) கூடியபோதே இந்த விடயங்கள் தெரியவந்தன. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமத்திய மாகாண பிரதம செயலாளர் மற்றும் வடமத்திய மாகாண சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 53 வீதிகளில் 3592 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்ட ஒரே வீதி, 5 மில்லியனுக்கும் குறைவான மதிப்பீட்டைக் கொண்ட பல திட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 741 திட்டங்களுக்காக வரையறுக்கப்பட்ட ஒப்பந்தகாரர்களிடமிருந்து விலைமதிப்புக் கோரப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. அப்போதைய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளரின் அனுமதியுடன் குறிப்பிட்ட திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்ற காரணத்தினாலேயே ரூ.5 மில்லியனுக்கும் குறைவான தொகை மதிப்பீட்டைக் கொண்ட திட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும் இங்கு புலப்பட்டது.

இந்தத் திட்டங்கள் பகிரங்க விலைமனுக்கள் எதுவும் கோரப்படாமல் ஏழு ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.2934 மில்லியன் மதிப்புள்ள 629 திட்டங்கள் (42 வீதிகள்) அவர்களில் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஒப்பந்ததாரரின் நிதி நிலைமை மற்றும் அனுபவத்தைப் பொறுத்து அவருக்கு ரூ.300 மில்லியன் முதல் ரூ.600 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தை மாத்திரமே வழங்கியிருக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த  ஒப்பந்த நிறுவனம் அப்போது வடமத்திய மாகாணத்தில் ஆட்சியில் இருந்த ஒரு அரசியல்வாதியுடன் தொடர்புடையது என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய, ரூ.11 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட 1 கிலோமீற்றர் வீதிகளுக்கு ரூ.45 மில்லியன் வரை மிகவும் ஊழல் நிறைந்த முறையில் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இவ்வளவு அதிக செலவில் புனரமைக்கப்பட்ட வீதிகள் சரியான தரத்தைப் பூர்த்திசெய்யாமையால் குறுகிய காலத்திற்குள் பழுதடைந்திருப்பதும் குழுவில் தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய அதிகாரியான அப்போதைய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பதில் பொது முகாமையாளர் தற்பொழுது உயிருடன் இல்லையென்பதும், அவர் மகாவலி அதிகாரசபையில் பணியாற்றியபோது புதையல் தேடிய குற்றச்சாட்டுக்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.  அதன் பின்னர், குறித்த சம்பவத்திற்கு எதிராகச் செயற்பட்ட அதிகாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதாகவும், ஒப்பந்தகாரர்களுக்கு பணம் செலுத்துவது நிராகரிக்கப்பட்டமையால் 2015ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சரினால், பின்னர் நியமிக்கப்பட்ட வீதிப் போக்குவரத்து அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளரை ஓய்வுபெறச்செய்துள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

ஒரு மாகாண சபையின் வீதி அபிவிருத்திக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவது ஒரு பிரச்சினையாக இருப்பதாக நிதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதில் அப்போதைய பொருளாதார விவகார அபிவிருத்தி அமைச்சரின் செல்வாக்குக் காணப்பட்டதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

வடமத்திய மாகாணத்தின் கடுமையாக உழைக்கும் விவசாயிகளின் வரிப் பணத்தை மோசடி செய்த சம்பவம் மிகவும் துரதிஷ்டமானது என்றும், இச்சம்பவம் நாட்டின் வீதி அபிவிருத்தி வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்ததொரு சம்பவமாக அடையாளம் காண முடியும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதனுடன் தொடர்புடைய அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து பணத்தை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. இது தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றில் முறையீடு செய்யவும், இதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குழு அறிவுறுத்தியது.

2017 ஆம் ஆண்டு பலுகஸ்தமன மகா வித்தியாலயத்திற்கு கேட்போர் கூடம் கட்டுவதற்காக ஒரு கட்டுமான நிறுவனத்துடன் ரூ. 542,019,300 (542 மில்லியன்/54.2 கோடி) தொகைக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த ஒப்பந்ததாரருக்கு ரூ. 100 மில்லியன் முற்பணம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் கட்டுமானப் பணிகள் ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டு திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரியவந்தது. எந்தவொரு சாத்தியக்கூற்று ஆய்வும் இல்லாமல் ஐநூறுக்கும் குறைவான குழந்தைகள் படிக்கும் பாடசாலைக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவது நியாயமில்லை என்றும், அப்போதைய வடமத்திய மாகாண முதலமைச்சரின் சொந்த விருப்பப்படி இது முன்னெடுக்கப்பட்டது என்பது பற்றியும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அரசியல்வாதிகளுடன் ஒப்பந்ததாரர்கள் கொண்டிருந்த தொடர்புகளே இதற்குக் காரணம் என்பதும் இங்கு தெரியவந்தது. தற்போது இழுபறியில் உள்ள இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி, பணத்தை மீட்டு, ஏதேனும் தவறு நடந்திருந்தால் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. மேலும், இது குறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமறும் அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, சாமரச சம்பத் தசநாயக்க, சட்டத்தரணி சாகரிகா அத்தாவுட, ஒஷானி உமங்கா, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டி.கே. ஜயசுந்தர, சுசந்த குமார நவரத்ன, சுனில் ரத்னசிறி மற்றும் தினிந்து சமன் ஹென்னாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-07-28

மருந்து பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள்   மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.  கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-07-28

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில்  கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-07-28

கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக செயற்குழு நியமிக்கப்பட்டது

பத்தாவது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டது. இந்நாட்டின் கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒன்றியத்தினால் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்களை மேற்பார்வை செய்வது, அதற்குத் தேவையான துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதே இந்தச் செயற்குழுவின் நோக்கமாகும். இக்குழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜூலை 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. இந்நாட்டின் கலாசாரம், இலக்கியம் மற்றும் கலைத் துறையை வளர்ப்பது, இத்துறையில் உள்ள கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் முன்னேற்றம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கலையை இரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கலைகள் மற்றும் கலாசாரம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் தொடர்பில் குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாணயக்கார, லக்ஷ்மன் நிபுனாராச்சி, சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சுகத் வசந்த.த சில்வா, சட்டத்தரணி சுசந்த தொடாவத்த, ருவன் மாபலகம மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.


2025-07-21

“அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை பாராளுமன்ற குழுக்கள் அவற்றுக்கான கடமையின் அடிப்படையில் ஆராய முடியும்” – முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், கோப், கோபா குழுக்களின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே

பாராளுமன்றக் குழுக்கள் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக் கூறலை ஆராய முடியும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகமும், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான எஸ்.சி.மாயாதுன்னே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் அதனைக் குறிப்பிட்டார். கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தின் முக்கிய கண்காணிப்பு குழுக்களான கோப் மற்றும் கோபா ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரங்கள், வகிபாகம், பொறுப்புகள் தொடர்பாக அவர் விரிவான விளக்கத்தை வழங்கியதுடன், வெளிப்படையானதும், விளைவுத்திறனான அரசாங்க நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கே இக்குழுக்கள் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார். கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர மற்றும் கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் குறித்த குழுக்களின் நோக்கெல்லையின் கீழ்வரும் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இதில் பங்கேற்றனர்.  பாராளுமன்றத்தின் பொறுப்புக் கூறல் மற்றும் மேற்பார்வை என்ற பரந்துபட்ட சூழலில் இக்குழுக்களின் பங்களிப்புப் பற்றிய ஆழ்ந்த புரிதலை வழங்குவது இதன் பிரதான நோக்கமாக அமைந்தது. பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சபுதந்திரி, பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டி.தர்மபால, பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றனர். அரசாங்க அதிகாரிகள் பாராளுமன்றக் குழுக்களுக்கு முன்னிலையாகும்போது முன்வைக்கும் தகவல்கள் துல்லியமானதாகவும், சரியானதாகவும் இருப்பதுடன், விரிவான விடயங்களை உள்ளடக்கியதாக, இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும்  இருக்க வேண்டும் என மாயாதுன்னே அவர்கள் சுட்டிக்காட்டினார்.  அத்துடன், குழுவில் கருத்துக்களை முன்வைக்கும்போது கண்ணியமான முறையில், தர்க்கபூர்வமாக மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிறைவேற்று அதிகாரத்திடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கே பாராளுமன்றத்தின் மேற்பார்வைகள் உதவுகின்றன எனவும் தெரிவித்தார். எனவே, அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தால் அழைக்கப்படும்போது பொறுப்புக்கூறத் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். திறமையான மேற்பார்வை மூலம் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் நிறுவன தயார்நிலை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் கலந்துரையாடலுடன் அவரது அமர்வு நிறைவடைந்தது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks