E   |   සි   |  

2025-02-28

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பொரள்ளை மயானத்தின் உத்தியோகபூர்வ விடுதி மற்றும் அதற்கான காணியை 1994 ஆம் ஆண்டு முதல் மோசடியாகப் பயன்படுத்தி கொழும்பு மாநகரசபை ஊழியரொருவர் மலர்ச்சாலையொன்றை நடத்திவந்துள்ளார் – கோபா குழு விசாரணைகளில் தெரியவந்தது

  • சட்டவிரோத மலர்சாலையை தடைசெய்ய குழு அறிவுறுத்தல்
  • போலியான ஆவணங்களைக் காண்பித்து காணியின் உரிமையைப் பெறுவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததுடன், உயிர் அச்சுறுத்தல்கூட ஏற்பட்டது – கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மாநகர ஆணையாளர் விளக்கம்
  • சுற்றுச்சூழல் அறிக்கைகூட இன்றி  மலர்ச்சாலையை எவ்வாறு நடத்திச்செல்லப்படுகின்றது – கோபா குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வி
  • கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் வாகனங்களைத் தரித்து நிறுவத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் வேறு நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளது – கோபா குழுவில் வெளிப்பட்டது


கொழும்பு மாநகரசபைக்குச் சொந்தமான பொரள்ளை மயானத்தின் உத்தியோகபூர்வ விடுதியை மோசடியாகப் பயன்படுத்தி கொழும்பு மாநகரசபையின் ஊழியர் ஒருவர் மலர்சாலையொன்றை நடத்தி வந்தமை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) விசாரணைகளில் தெரியவந்தது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கடந்த பெப்ரவரி 25 மற்றும் 27ஆம் திகதிகளில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் தலைமையில் கூடியபோது இடம்பெற்ற விசாரணைகளிலேயே இந்த விடயம் வெளிப்பட்டது. இந்த இரு தினங்களிலும் கொழும்பு மாநகரசபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து ஆராய்வதற்காக அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பொரள்ளை மயானத்திற்குச் சொந்தமான காணியில் அனுமதி பெறப்படாத கட்டடத்தில் சட்டவிரோதமான முறையில் வர்த்தகச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் கொழும்பு மாநகரசபை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென கணக்காய்வாளர் நாயகம் முதலாவது நாளில் சுட்டிக்காட்டினார். 2023.07.06ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குறித்த கட்டடத்தை மீண்டும் கொழும்பு மாநகரசபைக்குப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட அறிவுறுத்தல் உள்ளடங்கலான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னர் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய கொழும்பு மாநகரசபையினால் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் கட்டடத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் முன்னேற்றம் பற்றி எதுவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

மாநகரசபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பொரள்ளை மயானத்திற்குச் சொந்தமான உத்தியோகபூர்வ விடுதி மற்றும் அதற்கான காணியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி முன்னெடுத்துவரும் வியாபார நடவடிக்கை குறித்து அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். குறித்த ஊழியர் இதற்கு முன்னர் பணியிடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட நபர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த மலர்சாலை கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள மலர்சாலையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதா என குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார். மலர்சாலையை நடத்திச் செல்வதற்கான அனுமதி பெறப்படாது சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் மலர்சாலையாக இருந்தபோதும், கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வியாபார நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பதிலளித்தனர். எனினும், சுற்றுச்சூழல் அறிக்கை இன்றி மலர்சாலையை எவ்வாறு நடத்திச் செல்ல முடியும் என குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். எனினும், அவ்வாறு அனுமதி பெறாமல் இயங்க முடியாது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனவே, சட்டவிரோதமாக நடத்திச் செல்லப்படும் இந்த மலர்சாலையைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு குழுவினால் அறிவுறுத்தப்பட்டது.

கோபா குழுவில் ஆஜராகியிருந்த கொழும்பு மாநகரசபையின் அப்போதைய மாநகர ஆணையாளர் குறித்த சட்டவிரோத மலர்சாலை தொடர்பில் தன்னிடமிருந்த தகவல்களை குழுவில் சமர்ப்பித்தார். இந்தத் தகவலின் அடிப்படையில் குறித்த மலர்சாலை 1994ஆம் ஆண்டு முதல் நடத்திவரப்படுகின்றமை புலப்பட்டது. போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து குறித்த மலர்சாலை மற்றும் அதன் காணியின் உரிமையைப் பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட ஊழியர் எடுத்த முயற்சி தோல்வியடைந்திருப்பதாகவும், இது தொடர்பில் தான் மீண்டும் மீண்டும் நடவடிக்கை எடுத்தமையால் உயிர் அச்சுறுத்தலுக்குக் கூட எதிர்கொள்ள நேர்ந்ததாகவும் அவர் குழுவில் தெரிவித்தார்.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கை பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டது எனச் சுட்டிக்காட்டிய முன்னாள் மாநகர ஆணையாளர், 1994 முதல் 2020 வரையான காலப்பகுதியில் குறித்த கட்டடம் மற்றும் காணி மோசடியாகப் பயன்படுத்தப்பட்டமையால் கொழும்பு மாநகரசபைக்கு 41 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அத்துடன், அரசாங்க ஊழியர் வியாபாரா நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டவிரோதம் என்பதால் அவ்வப்போது குறித்த மலர்ச்சாலையின் பெயரை மோசடியாக மாற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். குறித்த மலர்ச்சாலையை நடத்திச்செல்லும் கொழும்பு மாநகரசபை ஊழியர், கொவிட் தொற்றுநோய் காலப் பகுதியில் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு 6 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கேட்டமை மற்றும் பொரள்ளை பொது மயானத்தினால் வழங்கப்படும் பற்றுச்சீட்டை மோசடியான முறையில் வழங்கியமைக்காக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்றும் குழுவில் தெரியவந்தது.

நீண்ட காலமாக மேற்கொள்ளப்படும் இந்த மோசடியான நடவடிக்கை தனி ஒரு நபரினால் மாத்திர மேற்கொள்ளக் கூடியது அல்ல என்றும் இதன் பின்னணியில் பல அதிகாரிகள் இருப்பார்கள் என்றும் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். எனவே பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குழு ஆலோசனை வழங்கியது. இதற்கு அமைய குறித்த நபரினால் அரசாங்க சொத்து மோசடியாக பயன்படுத்தப்பட்டு வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் மேல்மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதேநேரம், சட்டவிரோதமாக நடத்தப்படும் இந்த மலர்ச்சாலை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய முன்னாள் மாநகர ஆணையாளருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்த குழு, இந்தப் பாராட்டு அவரின் தனிப்பட்ட கோப்புக்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது.

அத்துடன், கொழும்பு மாநகர சபையின் கீழுள்ள வாகனத் தரிப்பிட வாடகை வருமானம் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வரையில் வாகனத் தரிப்பிடத்திற்கான  ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய நிலுவைத் தொகை 580 மில்லியன் ரூபாய் என குழுவில் தெரிய வந்தது. எனினும்,  2025 ஆம் ஆண்டுக்கான வாகனத் தரிப்பிட ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்யும்போது நிலுவைத் தொகை செலுத்த வேண்டிய ஒப்பந்ததாரர்களை தெரிவு செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலுவைத் தொகையை அறவிடுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினார் மேலும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்தமை கணக்காய்வு அறிக்கையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.  இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு பாரம்பரியமாக அவர்களின் அலுவலகங்களுக்கு அருகில் வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்தனர். அதன்படி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு தரப்பினருக்கு விற்றவர்களிடமிருந்து மீட்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு குழுவின் தலைவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

கொழும்பு மாநகர சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட smart street lighting  திட்டம் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கொழும்பு மாநகர சபைக்கு எந்தப் பணமும் செலவாகாது என விவரிக்கப்பட்டபோதும், இதனால் கொழும்பு மாநகர சபைக்கு 2.45 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாக முன்னாள் ஆணையாளர் குழுவில் தெரிவித்தார். திட்டத்தை நிர்வகித்து வந்த நிறுவனத்தின் சில நிபந்தனைகளுக்கு தான் உடன்படாததால், அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தன்னை மிரட்டி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கருத்தை வெளியிட்டதாக அவர் குழுவின் முன்னிலையில் குறிப்பிட்டார். அந்தக் காலப் பகுதியில் கொழும்பில் உள்ள ஒரு பாதுகாப்பு வலயத்திற்கான வீதி விளக்குகள் குறித்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தமையால் அதைப் பற்றி சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இது பற்றிக் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்த விடயம் தீவிரமானது என்பதால் உடனடியாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபைக்கு செலுத்தப்பட வேண்டிய வரி வருமான நிலுவைத் தொகை 500 கோடி ரூபாவிற்கு அதிகமாக உள்ளது என கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். கொழும்பு மாநகர சபையின் வரி வருவாயில் ஆண்டுதோறும் அதிகரிப்பு காணப்பட்டாலும், நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான முறையான கட்டமைப்பு இ்லலாமையால், வசூலிக்கப்பட வேண்டிய வரி நிலுவைத் தொகையும் வருடாந்தம் அதிகரித்து வருவதாக  கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலுவைத் தொகை பல வருடங்களாக அதிகரித்து வருவதாகவும், இந்தச் சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு வரி செலுத்தப்பட வேண்டிய சொத்துக்கள் சரியான முறையில் அடையாளம் காணப்படுவது அவசியம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த சொத்துக்களை அடையாளம் காண ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், நிலுவைத் தொகையை செலுத்துபவர்கள் மற்றும் அந்தப் பணத்தின் அளவு குறித்து தெளிவான தகவல்கள் பெறப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்த வரி நிலுவையைச் சேகரிப்பதற்கான பொருத்தமான காலக்கெடுவை உள்ளடக்கிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு அமைய அடையாளம் காணப்பட்ட சொத்துக்கள் அமைந்துள்ள கொழும்பு கோட்டை பகுதியில் ஒரு மாதத்திற்குள் நிலுவைத் தொகையை வசூலிக்கும் திட்டத்தைத் தொடங்குமாறு குழு அறிவுறுத்தியது. கொழும்பின் பிற பகுதிகளில் உள்ள சொத்துக்களை அடையாளம் கண்டு, நிலுவையில் உள்ள தொகைகளை உடனடியாக வசூலிப்பதற்கான காலக்கெடுவுடன் கூடிய திட்டமொன்றை அறிக்கையாகத் தயாரித்து ஒரு வாரத்திற்குள் அதனைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

அதேநேரம், கொழும்பு மாநகரசபையின் கீழ் உள்ள தீர்க்கப்படாத காணிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. நில அளவைத் திணைக்களம் மற்றும் வெளித் தரப்பினரின் பங்களிப்புடன், இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளின் விடுவிப்பையும் உறுதி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நலின் ஹேவகே, அன்டன் ஜயக்கொடி, சுகத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ருவன்திலக ஜயக்கொடி,  சந்தன சூரியாராச்சி, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுட, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரட்ண, (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, தினிந்து சமன், லால் பிரேமநாத் ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-03-24

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் உள்ள நிறுவனமான இலங்கை யுத் சேர்விஸ் (தனியார்) நிறுவனம் விநியோகஸ்தராகப் பதிவுசெய்து இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு அதிக விலைக்கான கேள்விப்பத்திரத்தை முன்வைத்துள்ளது – கோப் உப குழுவில் தெரியவந்தது

ஸ்மார்ட் யூத் கண்காட்சி உள்ளிட்ட தொடர் திட்டங்கள், மதிப்பாய்வு அறிக்கையின் பின்னர் முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் தலைவர் கூறியபோதும் அவ்வாறான மதிப்பாய்வு அறிக்கைகள் எதுவும் மன்றத்தில் இல்லை – தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் தெரிவிப்பு அமைச்சரவைத் தீர்மானத்தைக் கவனத்தில் எடுக்காது, அரசியல் காரணங்களின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த அதிகாரிகளுக்கு நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொடுத்த 3 குழுக்கள் குறித்து முழுமையான அறிக்கையை வழங்கவும் – கோப் உப குழு   தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் உள்ள இலங்கை யுத் சேர்விஸ் (தனியார்) நிறுவனம் விநியோகஸ்தராகப் பதிவுசெய்து, இளைஞர் சேவைகள் மன்றத்திற்கே கேள்விப்பத்திரங்களை முன்வைக்கும்போது அதிக விலையை வழங்கியுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) உபகுழுவில் தெரியவந்தது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் 2025 பெப்ரவரி 18 மற்றும் 20ஆம் திகதிகளில் கோப் குழுவில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கில் நியமிக்கப்பட்ட உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி தலைமையில் கடந்த மார்ச் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தெரியவந்தது. ஸ்மார்ட் யூத் தொடர் நிகழ்ச்சித்திட்டத்தில் குதிரைப் பந்தயத் திடலில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்பில் காணப்படும் சகல வீடியோ பதிவுகளையும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு முன்னாள் தலைவர் பசிந்து குணவர்த்தனவுக்கு வழங்கிய அறிவுறுத்தல் குறித்தும் உபகுழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இது தொடர்பான வீடியோ பதிவுகள் தமக்குக் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர். இதற்காக 120 இலட்சம் ரூபா குறித்த வீடியோ தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்கியமை குறித்தும் குழு நீண்ட நேரம் கவனம் செலுத்தியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் உள்ள நிறுவனமான இலங்கை யூத் (தனியார்) நிறுவனம் விநியோகஸ்தர் என்ற ரீதியில் அதிக விலையில் குறித்த கேள்விப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, பிறிதொரு நிறுவனத்திற்கு அதனை வழங்கியிருப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்மார்ட் யூத் கண்காட்சி உள்ளிட்ட தொடர் நிகழ்ச்சித் திட்டங்கள் மதிப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுக் கொண்ட பின்னரே முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் தலைவர் தெரிவித்திருந்த போதும், அவ்வாறான மதிப்பாய்வு அறிக்கையொன்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திடம் இல்லையென அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், ஸ்மார்ட் யூத் தொடர் நிகழ்ச்சித்திட்டத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாகவும், இது தொடர்பில் அமைச்சு மட்டத்தில் சுயாதீன விசாரணையொன்று மேற்கொண்டு மூன்று மாதத்திற்குள் அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் விசாரணையொன்றை மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன், அரசியல் காரணங்களுக்காகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த 40 அதிகாரிகளுக்கான நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஓய்வுபெற்ற அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அமைக்குமாறு வழங்கிய அமைச்சரவைத் தீர்மானத்தைக் கவனத்தில் எடுக்காது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வேறு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு நஷ்டஈடு வழங்கப்பட்டமை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய, இவ்வாறு நஷ்டஈடு வழங்கப்பட்ட அதிகாரிகள், வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை, பதவி உயர்வு வழங்கப்பட்ட திகதி, நஷ்டஈடு வழங்கப்பட்ட திகதி, அனுமதி வழங்கப்பட்ட திகதி, தீர்ப்பு வழங்கிய அதிகாரிகள் உள்ளிட்ட முழுமையான விபரங்கள் அடங்கிய அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு, கோப் உப குழு அறிவுறுத்தல் வழங்கியது. மேலும், வரையறுக்கப்பட்ட இலங்கை தேசிய இளைஞர் சேவை கூட்டுறவு சம்மேளனத்தினால் (NYSCO) வழங்கப்பட்ட டிப்ளோமா தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்தும் குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. NYSCO ஊடாக முன்னெடுக்கப்பட்ட இந்த டிப்ளோமாவுக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பது இங்கு தெரியவந்தது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர், NYSCO நிறுவனம் தற்பொழுது இளைஞர் சேவைகள் மன்றத்தின் கட்டுப்பாட்டை இழந்திருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், NYSCO இற்கான பொது முகாமையாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வயதுக் கட்டுப்பாடு 35 ஆக இருந்தபோதிலும் அந்த வயது எல்லை தற்பொழுது 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பெயரை இவ்வாறு தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய குழுத் தலைவர், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தேவையான முடிவுகளை எடுக்குமாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கு அறிவுறுத்தல் வழங்கினார். NYSCO இன் முக்கிய அதிகாரிகளை அழைத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறும் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். இது தொடர்பான குழுவின் பரிந்துரைகளை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தலைவர் மேலும் தெரிவித்தார். அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனம் ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதி நிலை அறிக்கைகள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்தும், கணக்காய்வு மற்றும் நிர்வாகக் குழுவை உரிய முறையில் நடத்துவது குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, ஜகத் மனுவர்ண, அசித நிரோஷன எகொட விதான, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-03-24

பாராளுமன்றக் குழுக்களினால் வழங்கப்பட்ட விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு முதற் தடவையாகக் கூடியது

கோப், கோபா உள்ளிட்ட நான்கு குழுக்களால் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை ஆராய்வதற்கு முன்னுரிமை பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகள், பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களினால் அவை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாயணக்கார தலைமையில் அண்மையில் (மார்ச் 21) முதற் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாராளுமன்றக் குழுக்களினால் வழங்கப்பட்ட விதப்புரைகளில் நடைமுறைப்படுத்தப்படாதவற்றில் முன்னுரிமை அளிக்க வேண்டிய விதப்புரைகள் எவை என்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தில் குழுக்களால் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை ஆராய்வது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது. இந்தக் கலந்துரையாடலில், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (COPA), அரசாங்க நிதி பற்றிய குழு (CoPF) மற்றும் பொது மனுக்கள் பற்றிய குழு ஆகிய நான்கு குழுக்களினால் வழங்கப்பட்ட விதப்புரைகளில் நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளுக்கு முன்னுரிமை அளித்து மதிப்பாய்வை மேற்கொள்ள குழு தீர்மானித்தது. இதற்கமைய, குறித்த விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, குழுவினால் வழங்கப்பட்ட விதப்புரைகளை விரைவில் அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். இக்குழுவின் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வடகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அஜித்.பி பெரேரா, ஓஷானி உமங்கா ஆகியோரும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-03-24

201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் 296 மோட்டார் சைக்கிள்கள் உரிய தொகை அறிவிடப்படாமல் பதிவு செய்யப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 78.15 மில்லியன் இழப்பு – கோபா குழுவில் தெரியவந்தது

முன்னைய கோபா குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பற்றிய 25 கணக்காய்வு அவதானிப்புக்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏற்க முடியாதவை. சுயாதீனக் குழுவொன்றை அமைத்து மீண்டும் உரிய விசாரணைகளை நடத்தவும் – கோபா குழு அறிவுறுத்தல் பயன்படுத்தப்படாத வெற்று இலக்கங்களை உபயோகித்து வாகனப் பதிவுச் சான்றிதழ்களை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மோசடியான முறையில் வழங்கியமையால் அரசாங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா இழப்பு – கோபா குழுவில் புலப்பட்டது இரத்துச் செய்யப்பட்ட இராஜதந்திர வாகன இலக்கங்களில் வேறு வாகனங்களைப் பதிவு செய்தமையால் 122 மில்லியன் ரூபா நஷ்டம் – கணக்காய்வாளர் நாயகம்   201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் அறவிடப்பட வேண்டிய உரிய தொகையை அறவிடாது 296 மோட்டார் சைக்கிள்களைப் பதிவுசெய்தமையின் காரணமாக அரசாங்கத்திற்கு 78.15 இழப்பு ஏற்பட்டிருப்பதுடன், அமைச்சரவை அனுமதி இன்றியும், பதிவு செய்வதற்குத் தேவையான சட்டரீதியான ஆவணங்கள் இன்றியும் 3088 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரியவந்தது. மோட்டார் வாகனத் திணைக்களத்தின் 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் (மார்ச் 21) கூடிய போதே இந்த விபரம் தெரியவந்தது. இது பற்றி விசாரிப்பதற்காக கடந்த 10ஆம் திகதி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கோபா குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தபோதும், அதிகாரிகள் உரிய தயார்ப்படுத்தலில் வராமையினால் அவர்கள் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர். அத்துடன், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கோபா உபகுழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. சுங்கத்தின் கணினிக் கட்டமைப்பில் இணைவதற்கு முன்னர், இடம்பெறும் ஏனைய அனைத்து வாகனப் பதிவுகள் குறித்தும் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட 25 விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் அந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் எடுத்துள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளிட்ட தற்போதைய செயலாற்றுகை குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக திணைக்களம் எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்காமை தொடர்பில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்திய குழு, திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் திருப்தியடைய முடியாது என்றும் வலியுறுத்தியது. இதற்கு அமைய குறித்த விடயம் தொடர்பில் காலதாமதம் இன்றி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கான விசாரணைகளை சுயாதீனமான அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோபா குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார். முன்னர் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் இலக்கங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அடிச்சட்ட இலக்கங்கள் மற்றும் இயந்திர இலக்கங்களை பதிவுக் கட்டமைப்பிலிருந்து மாற்றி மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு அவற்றை வழங்கி, சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்  வெளியிட்டமை குறித்தும் கோபா குழு கவனம் செலுத்தியது. இதனால் அரசாங்கத்திற்கு 1.2 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது. மேலும், பயன்பாட்டிற்கு எடுக்கப்படாத வெற்று இலக்கங்களை மோசடியாகப் பயன்படுத்தி மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டு இராஜதந்திர வாகன இலக்கங்கள் வேறு வாகனங்களின் பதிவுகளுக்காகப் பயன்படுத்தியமையால் அரசாங்கத்திற்கு 122 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இது விடயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கணக்காய்வாளர் நாயகம்  வலியுறுத்தினார். மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி அவற்றுடன் தொடர்புபட்ட சகல அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதில் ஏற்படும் முன்னேற்றம் தொடர்பில் விசாரிக்க திணைக்களத்தை மாதம் தோறும் குழு முன்நிலையில் அழைப்பதற்கும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், இங்கு இடம்பெற்றுள்ள மோசடியான செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது. இந்தக் கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர, சுகத் திலகரத்ன, சுந்தரலிங்கம் பிரதீப், நலின் ஹேவகே கௌரவ பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி. அலவதுவல, ரோஹித அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, கவீந்திரன் கோடிஸ்வரன, மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத, ஒஷானி உமங்கா, ருவன்திலக்க ஜயகொடி, சுசந்த குமார நவரத்ன, சந்தன சூரியஆரச்சி, (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, சானக மாதுகொட, ரீ.கே. ஜயசுந்தர, தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் லால் பிரேமநாத் ஆகியோருடன் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2025-03-24

இரண்டு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் பரிந்துரை

இரண்டு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்திற்கு அண்மையில் (மார்ச் 21) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டது. அத்துடன், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் நியமனம் பற்றிய பரிந்துரைக்கும் குழு அனுமதி வழங்கியது. அதற்கமைய, கியூபா குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக திரு.ரத்னாயக்க முதியன்சலாகே மஹிந்த தாச ரத்னாயக்க அவர்களின் பெயரையும், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பிவித்துரு ஜனக் குமரசிங்க அவர்களின் பெயரையும் உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் வடஅயர்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திரு.சேனாதீர துமுன்னகே நிமல் உபாலி சேனாதீர அவர்களின் பெயரை உயர் பதவிகள் பற்றிய குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த சந்திரசிறி ஜயசூரிய அவர்களின் பெயரையும் குழு பரிந்துரைத்துள்ளது. கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில், கௌரவ அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க, குமார ஜயக்கொடி, (கலாநிதி) அனில் ஜயந்த, (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி, கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர, (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks