E   |   සි   |  

2025-02-28

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பொரள்ளை மயானத்தின் உத்தியோகபூர்வ விடுதி மற்றும் அதற்கான காணியை 1994 ஆம் ஆண்டு முதல் மோசடியாகப் பயன்படுத்தி கொழும்பு மாநகரசபை ஊழியரொருவர் மலர்ச்சாலையொன்றை நடத்திவந்துள்ளார் – கோபா குழு விசாரணைகளில் தெரியவந்தது

  • சட்டவிரோத மலர்சாலையை தடைசெய்ய குழு அறிவுறுத்தல்
  • போலியான ஆவணங்களைக் காண்பித்து காணியின் உரிமையைப் பெறுவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததுடன், உயிர் அச்சுறுத்தல்கூட ஏற்பட்டது – கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மாநகர ஆணையாளர் விளக்கம்
  • சுற்றுச்சூழல் அறிக்கைகூட இன்றி  மலர்ச்சாலையை எவ்வாறு நடத்திச்செல்லப்படுகின்றது – கோபா குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வி
  • கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் வாகனங்களைத் தரித்து நிறுவத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் வேறு நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளது – கோபா குழுவில் வெளிப்பட்டது


கொழும்பு மாநகரசபைக்குச் சொந்தமான பொரள்ளை மயானத்தின் உத்தியோகபூர்வ விடுதியை மோசடியாகப் பயன்படுத்தி கொழும்பு மாநகரசபையின் ஊழியர் ஒருவர் மலர்சாலையொன்றை நடத்தி வந்தமை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) விசாரணைகளில் தெரியவந்தது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கடந்த பெப்ரவரி 25 மற்றும் 27ஆம் திகதிகளில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் தலைமையில் கூடியபோது இடம்பெற்ற விசாரணைகளிலேயே இந்த விடயம் வெளிப்பட்டது. இந்த இரு தினங்களிலும் கொழும்பு மாநகரசபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து ஆராய்வதற்காக அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பொரள்ளை மயானத்திற்குச் சொந்தமான காணியில் அனுமதி பெறப்படாத கட்டடத்தில் சட்டவிரோதமான முறையில் வர்த்தகச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் கொழும்பு மாநகரசபை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென கணக்காய்வாளர் நாயகம் முதலாவது நாளில் சுட்டிக்காட்டினார். 2023.07.06ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குறித்த கட்டடத்தை மீண்டும் கொழும்பு மாநகரசபைக்குப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட அறிவுறுத்தல் உள்ளடங்கலான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னர் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய கொழும்பு மாநகரசபையினால் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் கட்டடத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் முன்னேற்றம் பற்றி எதுவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

மாநகரசபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பொரள்ளை மயானத்திற்குச் சொந்தமான உத்தியோகபூர்வ விடுதி மற்றும் அதற்கான காணியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி முன்னெடுத்துவரும் வியாபார நடவடிக்கை குறித்து அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். குறித்த ஊழியர் இதற்கு முன்னர் பணியிடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட நபர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த மலர்சாலை கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள மலர்சாலையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதா என குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார். மலர்சாலையை நடத்திச் செல்வதற்கான அனுமதி பெறப்படாது சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் மலர்சாலையாக இருந்தபோதும், கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வியாபார நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பதிலளித்தனர். எனினும், சுற்றுச்சூழல் அறிக்கை இன்றி மலர்சாலையை எவ்வாறு நடத்திச் செல்ல முடியும் என குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். எனினும், அவ்வாறு அனுமதி பெறாமல் இயங்க முடியாது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனவே, சட்டவிரோதமாக நடத்திச் செல்லப்படும் இந்த மலர்சாலையைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு குழுவினால் அறிவுறுத்தப்பட்டது.

கோபா குழுவில் ஆஜராகியிருந்த கொழும்பு மாநகரசபையின் அப்போதைய மாநகர ஆணையாளர் குறித்த சட்டவிரோத மலர்சாலை தொடர்பில் தன்னிடமிருந்த தகவல்களை குழுவில் சமர்ப்பித்தார். இந்தத் தகவலின் அடிப்படையில் குறித்த மலர்சாலை 1994ஆம் ஆண்டு முதல் நடத்திவரப்படுகின்றமை புலப்பட்டது. போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து குறித்த மலர்சாலை மற்றும் அதன் காணியின் உரிமையைப் பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட ஊழியர் எடுத்த முயற்சி தோல்வியடைந்திருப்பதாகவும், இது தொடர்பில் தான் மீண்டும் மீண்டும் நடவடிக்கை எடுத்தமையால் உயிர் அச்சுறுத்தலுக்குக் கூட எதிர்கொள்ள நேர்ந்ததாகவும் அவர் குழுவில் தெரிவித்தார்.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கை பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டது எனச் சுட்டிக்காட்டிய முன்னாள் மாநகர ஆணையாளர், 1994 முதல் 2020 வரையான காலப்பகுதியில் குறித்த கட்டடம் மற்றும் காணி மோசடியாகப் பயன்படுத்தப்பட்டமையால் கொழும்பு மாநகரசபைக்கு 41 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அத்துடன், அரசாங்க ஊழியர் வியாபாரா நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டவிரோதம் என்பதால் அவ்வப்போது குறித்த மலர்ச்சாலையின் பெயரை மோசடியாக மாற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். குறித்த மலர்ச்சாலையை நடத்திச்செல்லும் கொழும்பு மாநகரசபை ஊழியர், கொவிட் தொற்றுநோய் காலப் பகுதியில் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு 6 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கேட்டமை மற்றும் பொரள்ளை பொது மயானத்தினால் வழங்கப்படும் பற்றுச்சீட்டை மோசடியான முறையில் வழங்கியமைக்காக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்றும் குழுவில் தெரியவந்தது.

நீண்ட காலமாக மேற்கொள்ளப்படும் இந்த மோசடியான நடவடிக்கை தனி ஒரு நபரினால் மாத்திர மேற்கொள்ளக் கூடியது அல்ல என்றும் இதன் பின்னணியில் பல அதிகாரிகள் இருப்பார்கள் என்றும் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். எனவே பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குழு ஆலோசனை வழங்கியது. இதற்கு அமைய குறித்த நபரினால் அரசாங்க சொத்து மோசடியாக பயன்படுத்தப்பட்டு வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் மேல்மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதேநேரம், சட்டவிரோதமாக நடத்தப்படும் இந்த மலர்ச்சாலை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய முன்னாள் மாநகர ஆணையாளருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்த குழு, இந்தப் பாராட்டு அவரின் தனிப்பட்ட கோப்புக்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது.

அத்துடன், கொழும்பு மாநகர சபையின் கீழுள்ள வாகனத் தரிப்பிட வாடகை வருமானம் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வரையில் வாகனத் தரிப்பிடத்திற்கான  ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய நிலுவைத் தொகை 580 மில்லியன் ரூபாய் என குழுவில் தெரிய வந்தது. எனினும்,  2025 ஆம் ஆண்டுக்கான வாகனத் தரிப்பிட ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்யும்போது நிலுவைத் தொகை செலுத்த வேண்டிய ஒப்பந்ததாரர்களை தெரிவு செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலுவைத் தொகையை அறவிடுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினார் மேலும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்தமை கணக்காய்வு அறிக்கையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.  இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு பாரம்பரியமாக அவர்களின் அலுவலகங்களுக்கு அருகில் வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்தனர். அதன்படி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு தரப்பினருக்கு விற்றவர்களிடமிருந்து மீட்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு குழுவின் தலைவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

கொழும்பு மாநகர சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட smart street lighting  திட்டம் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கொழும்பு மாநகர சபைக்கு எந்தப் பணமும் செலவாகாது என விவரிக்கப்பட்டபோதும், இதனால் கொழும்பு மாநகர சபைக்கு 2.45 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாக முன்னாள் ஆணையாளர் குழுவில் தெரிவித்தார். திட்டத்தை நிர்வகித்து வந்த நிறுவனத்தின் சில நிபந்தனைகளுக்கு தான் உடன்படாததால், அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தன்னை மிரட்டி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கருத்தை வெளியிட்டதாக அவர் குழுவின் முன்னிலையில் குறிப்பிட்டார். அந்தக் காலப் பகுதியில் கொழும்பில் உள்ள ஒரு பாதுகாப்பு வலயத்திற்கான வீதி விளக்குகள் குறித்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தமையால் அதைப் பற்றி சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இது பற்றிக் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்த விடயம் தீவிரமானது என்பதால் உடனடியாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபைக்கு செலுத்தப்பட வேண்டிய வரி வருமான நிலுவைத் தொகை 500 கோடி ரூபாவிற்கு அதிகமாக உள்ளது என கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். கொழும்பு மாநகர சபையின் வரி வருவாயில் ஆண்டுதோறும் அதிகரிப்பு காணப்பட்டாலும், நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான முறையான கட்டமைப்பு இ்லலாமையால், வசூலிக்கப்பட வேண்டிய வரி நிலுவைத் தொகையும் வருடாந்தம் அதிகரித்து வருவதாக  கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலுவைத் தொகை பல வருடங்களாக அதிகரித்து வருவதாகவும், இந்தச் சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு வரி செலுத்தப்பட வேண்டிய சொத்துக்கள் சரியான முறையில் அடையாளம் காணப்படுவது அவசியம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த சொத்துக்களை அடையாளம் காண ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், நிலுவைத் தொகையை செலுத்துபவர்கள் மற்றும் அந்தப் பணத்தின் அளவு குறித்து தெளிவான தகவல்கள் பெறப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்த வரி நிலுவையைச் சேகரிப்பதற்கான பொருத்தமான காலக்கெடுவை உள்ளடக்கிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு அமைய அடையாளம் காணப்பட்ட சொத்துக்கள் அமைந்துள்ள கொழும்பு கோட்டை பகுதியில் ஒரு மாதத்திற்குள் நிலுவைத் தொகையை வசூலிக்கும் திட்டத்தைத் தொடங்குமாறு குழு அறிவுறுத்தியது. கொழும்பின் பிற பகுதிகளில் உள்ள சொத்துக்களை அடையாளம் கண்டு, நிலுவையில் உள்ள தொகைகளை உடனடியாக வசூலிப்பதற்கான காலக்கெடுவுடன் கூடிய திட்டமொன்றை அறிக்கையாகத் தயாரித்து ஒரு வாரத்திற்குள் அதனைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

அதேநேரம், கொழும்பு மாநகரசபையின் கீழ் உள்ள தீர்க்கப்படாத காணிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. நில அளவைத் திணைக்களம் மற்றும் வெளித் தரப்பினரின் பங்களிப்புடன், இந்த ஆண்டு இறுதிக்குள் கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளின் விடுவிப்பையும் உறுதி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நலின் ஹேவகே, அன்டன் ஜயக்கொடி, சுகத் திலகரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ருவன்திலக ஜயக்கொடி,  சந்தன சூரியாராச்சி, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுட, ஒஷானி உமங்கா, சுசந்த குமார நவரட்ண, (வைத்தியர்) ஜனக சேனாரத்ன, தினிந்து சமன், லால் பிரேமநாத் ஆகியோரும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2025-04-23

இயலாமையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவில் ஆராய்வு

இயலாமையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் போக்குவரத்துத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதன் ஊடாக சாதகமான திசையை நோக்கி போக்குவரத்துத் துறையை வழிநடத்துவது தொடர்பான இரண்டாவது உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் (ஏப். 10) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த த. சில்வா, பல்வேறு இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இயலாமையுடைய சமூகத்தினருக்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாமை அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரியதொரு பிரச்சினையாக இருப்பது இங்கு அடையளம் காணப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் முறையான அணுகல் வசதிகள் இல்லாமை காரணமாக இயலாமை உடைய நபர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் நிலை காணப்படுவதாகவும், இதற்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியிருப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். 2006ஆம் ஆண்டு 01ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் குறித்த ஒழுங்குவிதி பற்றிய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இயலாமையுடைய சமூகத்தினருக்கு உரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதன்படி, அந்தச் சட்டங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்படும்போது இயலாமையுடைய சமூகம் பெறும் நிவாரணம் குறித்தும் அவர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். சில பேருந்து நடத்துனர்களின் செயல்களால் இயலாமையுடைய நபர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதாக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவிடம் சுட்டிக்காட்டினர். இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும், இயலாமையுடைய நபர்கள் தொடர்பான அணுகுமுறைகளை மேம்படுத்தவும் சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் ஆசனங்கள், சட்டரீதியாக இயலாமையுடைய நபர்களுக்கான ஆசனங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியம், பேருந்துகளில் நிபந்தனையின்றி இயலாமையுடைய நபர்களுக்கு இடமளிக்க வேண்டியதன் அவசியம், புகையிரத நிலையங்களில் இயலாமையுடைய நபர்களுக்கான  தகவல் தொடர்பு வசதியை எளிதாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. செவிப்புலன் அற்ற சமூகத்தினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வினவப்பட்டதுடன், அவர்களுக்கு அவற்றை மீண்டும் வழங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை இரண்டு வாரங்களுக்குள் எழுத்துமூலமாக இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பெறப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பரிசீலித்த பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் உபகுழுவின் தலைவர் தெரிவித்தார்.


2025-04-23

பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து உப குழுவில் கலந்துரையாடல்

இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுகளை வழங்குமாறும் அறிவிப்பு பொதுப் போக்குவரத்து சாதனங்களின் பொருத்தப்பாட்டை ஆராய்வதற்கு சரியான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க ஒரு மாதத்திற்குள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல்   பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் அமைக்கப்பட்ட “போக்குவரத்துத் துறை தொடர்பான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் போக்குவரத்துத் துறையை நேர்மறையான திசையில் வழிநடத்துதல்" என்ற உபகுழுவில் ஆராயப்பட்டது. இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில்  2025.04.09 அன்று கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான கருத்துக்களையும் அவர்கள் குழுவிடம் முன்வைத்தனர். பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பஸ்களுக்குத் தகுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியது. மோட்டார் வாகனச் சட்டத்தின் 29வது பிரிவின் படி பஸ்கள், லொறிகள் மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இந்தத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனுமதி இன்றி மாகாண சபைகளில் பதிவுசெய்யப்பட்ட கராஜ்களினால் இந்தத் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தகுதிச் சான்றிதழ்களை வழங்கும் கராஜ்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையில் சிக்கல்கள் இருப்பதால், இவற்றை ஒழுங்குமுறைப் படுத்தவேண்டியதன் அவசியத்தை உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார். மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 19வது பிரிவின் கீழான நிர்மாணக் கட்டளைகளை  நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதன்படி, புதிய பஸ்களை இறக்குமதி செய்வதிலும், ஏற்கனவே உள்ள பஸ்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக இருக்கைகளுக்கு இடையில் பொருத்தமான இடைவெளி, தேவையற்ற உபரணங்களை அகற்றுதல் மற்றும் ஆசனப் பட்டிகளை அணிவது போன்ற விடயங்கள் குறித்தும் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, தொடர்புடைய தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகளுடன் கூடிய அறிக்கையைத் தயாரித்து, இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்குமாறும் உபகுழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. சாரதிகளின் தொழிலை தரப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஒரு மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உபகுழுவின் தலைவர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவித்தார். அத்துடன், கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் குறித்த தரவுகளை உடனடியாக குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குழு கேட்டுக் கொண்டது. தரவுகளின் அடிப்படையில் எதிர்கால பரிந்துரைகளை வகுப்பதன் முக்கியத்துவத்தை உப குழுவின் தலைவர் வலியுறுத்தினார். பஸ் சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான சட்ட விதிகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இது தொடர்பான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விதிமுறைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், சாரதிகளின் உடலில் போதைப்பொருள் இருப்பதைக் கண்டறிதல் உள்ளிட்ட தொழில்நுட்ப வழிமுறைகள் முறையாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த உபகுழு, போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் செயல்படுத்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் ஏற்படும் மாற்றங்களை முதன்மையாக ஆராய்ந்து, பின்னர் தேவையான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையைத் தயாரிக்கும். இக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த. சில்வாவும் பங்கேற்றார்.


2025-04-10

இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை ஒரு மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்தவும் - பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு

பொது மனுக்கள் பற்றிய குழுவினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட 80க்கும் அதிகமான விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை   பாராளுமன்றக் குழுக்களினால் வழங்கப்பட்டு இது வரை நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு மாதகால அவகாசம் வழங்குவதற்கு, பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகள், சம்பந்தப்பட்ட பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களினால் அவை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது. இந்தக் குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாயணக்கார தலைமையில் நேற்று (ஏப். 09) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கமைய, குழுவினால் முன்னுரிமை வழங்கப்பட்டு மதிப்பாய்வு செய்யப்படவேண்டிய, நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இதன்போது பொது மனுக்கள் பற்றிய குழுவினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட 80க்கும் அதிகமான விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டவில்லை என்பது புலப்பட்டது. அத்துடன், அரசாங்கப் பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு (COPE), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (COPA), அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) ஆகிய குழுக்களினால் வழங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதற்கு குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கடிதங்களை அனுப்புவதற்கும், ஒரு மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்த முடியாது எனின் அதற்கான காரணங்களைக் குழுவுக்கு எழுத்துமூலமாகப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் ஒஷானி உமங்கா ஆகியோரும் பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2025-04-10

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விஜயம் செய்த அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) நிலைமைகளை ஆராய்ந்தது

வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் தொடர்பான 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து அண்மையில் (2025.04.02) இடம்பெற்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதற்கு அமைய, விசாரணைகளை முன்னெடுப்பதறற்காக கோப் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் கோப் குழு நேற்றையதினம் (ஏப். 09) பண்டாநரயாக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் தொலையியங்கி ஏற்றுமிடம் மற்றும் நடையோடுபாதையின் (Remote Apron and Taxiways) நிர்மாணப் பணியின் ஊடாக விமான நிலையத்தில் நிறுத்தப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், திட்டமிடல் மற்றும் ஆலோசனை சேவையப் பெற்றுகொள்வதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனம் சேவையைப் பெற்றுக் கொண்ட ஜப்பானிய கூட்டு நிறுவனமும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனமும் எந்தவொரு தொழில்நுட்ப அல்லது செயல்பாட்டு பகுப்பாய்வும் இல்லாமல் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், எதிர்பார்க்கப்பட்ட நோக்கத்தை நடைமுறைப்படுத்துவது சவாலாக இருப்பதும் இங்கு அவதானிக்கப்பட்டது. இத்திட்டம் திட்டமிடல் கட்டத்தின் போதே பல பலவீனங்களையும் நடைமுறைச் சிக்கல்களையும் கொண்டிருந்தாலும், இதையும் மீறி பணியைப் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதையும் குழு அவதானித்தது. தற்போதைய சூழ்நிலையில், இந்த திட்டத்தின் எதிர்பார்த்த நோக்கங்களை அடைவதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தினால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட தீர்வுகளும் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இங்கு கோப் குழுவின் உறுப்பினர்கள் ஜப்பானிய கூட்டு நிறுவனத்தின் இந்நாட்டுக்கான பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் இவ்விடயம் பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடினர். இந்த கவனக்குறைவான நடவடிக்கையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து அதிருப்தி தெரிவித்த குழு உறுப்பினர்கள், எதிர்காலத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தாமல், பொது நிதியை மேலும் தவறாகப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர். அத்துடன், இது தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தை மீண்டும் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நேரடி விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம். அஸ்லம், சமன்மலி குணசிங்க, லெப்டினட் கமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, ருவன் மாப்பலகம, சுனில் ராஜபக்ஷ, திலின சமரக்கோன், சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோரும், சம்பந்தப்பட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks